வெள்ளி, 31 அக்டோபர், 2014

கட்டங்களில் அமைந்த உலகு 3

ஆண்களின் உலகம்

'ஒப்புர ஒழுகு' என்று ஔவையாரின் ஆத்திச் சூடியில் ஒரு வரி வரும். செய்வதை ஒழுங்காகச் செய் அல்லது ஒழுக்கமாகச் செய். இதுதான் எனக்கு தெரிந்த விளக்கம். பள்ளியில் இதன் அர்த்ததை என் வசதிக்குப் பயன்படுத்திக் கொண்டதுண்டு. உழைப்பு என்று வரும் போது இதன் அர்த்தத்தை வேறெதற்கு பயன்படுத்தினாலும் சரிவராது. உழைப்புக்கேற்ற ஊதியம் எனும் போது கண்ணையும் கருத்தையும் மட்டுமல்ல உள்ளத்தையும் எண்ணத்தையும் சேர்த்து நிறுத்த வேண்டும். அப்போதுதான் வேலையைத் திருந்தச் செய்யவும் சம்பளத்தைப் பெறும்போது அதில் ஒரு திருப்தியும் கிடைக்கும்.
நேர்மையைச் சம்பளமாக பெறும் போது ஏற்படுகிற மனநிறைவை சொல்வதற்கு எனக்கு சரியான வார்த்தை தெரியவில்லை. அதை நான் உணர்ந்தது அந்தக் கையுறை (glove) தொழிற்சாலையில்தான். கையுறை தொழிற்சாலை பேராக்கில் சித்தியவான் செல்லும் பாதையில் அமைந்திருந்தது. அவ்விடத்தில் அதுதான் பெரிய தொழிற்சாலை. கையுறை தயாரிப்புக்கு மட்டும் 2 கட்டடங்கள் இருந்தன. ஒன்றில் மலிவான powder கையுறையும் மற்றொன்றில் உயர் தர வகையைச் சேர்ந்த PUD கையுறையும் தயாரிக்கப்பட்டன. கையுறைகளை பரிசோதிப்பதற்கு ஒரு கட்டடம், பரிசோதித்ததைக் காகித பெட்டிகளில் அடைத்து பொட்டலம் கட்ட ஒரு கட்டடம் என பரந்த வெளியில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட சாம்பல் நிற தொழிற்சாலை.

சுமார் நான்காயிரம் தொழிலாளர்கள் இரவு பகல் ஷிப்ட்களில் வேலை செய்தார்கள். இதில் வங்காளதேசத் தொழிலாளர்கள் மட்டும் 500-க்கும் மேற்பட்டவர்கள் இருந்தார்கள். அந்தக் காலக்கட்டத்தில் வங்காளதேசிகள் கூட்டங் கூட்டமாகத் தொழிற்சாலைகளுக்கும் கூலி வேலைகளுக்கும் மலேசியாவுக்குள் கொண்டு வரப்பட்டனர். அவர்கள் குறைந்த சம்பளத்தில் மாடாய் உழைத்தார்கள். இவர்களின் கடின உழைப்பு முதலாளிகளுக்கு பெருத்த லாபத்தைக்கொடுத்தது. அதே வேளையில் மலேசியர்களைப் போல் சேமநிதி மற்றும் போனஸ் போன்றவற்றைப் பற்றி வங்காளதேசிகள் கேள்வி எழுப்பாதது அவர்களுக்கு வசதியாகவும் இருந்தது.
நிர்வாகம் தொழிற்சாலைக்கு வழக்கிய இலவச பேருந்தில் நான் மட்டும்தான் புதியவள் என்று நினைத்தேன். ஆனால், பேருந்தில் இருந்த அனைவருமே நேர்முகத் தேர்வு முடிந்து புதிதாக வேலையில் சேர்ந்திருந்தவர்கள்தான். அனைவரும் புதியவர்கள் என்றபடியால் இயல்பாக எல்லோரிடமும் பேசவும் பழகவும் முடிந்தது. பழையவர்களாக இருப்பின் அவர்களுக்குத் தெரிந்ததை வைத்து புதியவர்களிடம் ஆதிக்கம் செலுத்தலாம். இதுவே அவர்களை நெருங்குவதற்கு ஒரு மனத்தடையை ஏற்படுத்தியது. நல்ல வேளையாக எனக்கு இடம் புதிது, தொழிற்சாலை புதிது, வேலை புதிது, நண்பர்களும் புதிது. ஆதலால் எவ்வித சங்கடத்திலும் நான் மாட்டிக் கொள்ளவில்லை.

எனக்கு அங்கே கையுறையை இழுக்கும் வேலை கிடைத்தது. அதாவது முழங்கை வரையிலான மாதிரி கைகளில் ஒட்டிக் கொண்டு வரும் கையுறைகளை கழட்டி அல்லது உரித்து எடுப்பதையே கையுறையை இழுத்தல் என்று பேச்சு மொழியில் கூறுவார்கள். அது பனிரெண்டு மணி நேரம் செய்யக் கூடிய வேலை. மூன்று வாரம் விடுமுறையின்றி வேலை செய்ய வேண்டும். பிறகு ஒரு நாள் விடுமுறை கிடைக்கும். ஷிப்டை மாற்றிக் கொள்ள வேண்டியதுதான். அதிலிருந்து 3 வாரம் வேலை. பிறகு ஒரு நாள் விடுமுறை. இதற்கிடையில் ஏதேனும் விடுமுறை எடுத்துக் கொண்டால் சம்பளத்தில் சிறு தொகையைப் பிடித்து விடுவார்கள்.
இப்படித்தான் தொழிலாளர்களுக்குக் கால அட்டவணையை வரைந்திருந்தார்கள் அந்தத் தொழிற்சாலையின் நிர்வாகத்தினர். கையுறையை இழுக்கும் வேலை சற்று சிரமமான வேலைதான் என்றாலும் அதற்கு ஏற்றமாதிரி சம்பளமும் லாபகரமாகவே இருந்தது. நான் அந்த வேலைக்கு ஏற்றமாதிரி மனதளவில் என்னை தயார் படுத்திக் கொண்டேன்.
1. முதலில் 12 மணி நேரம் வேலை செய்வதற்கு
2. இரண்டாவதாக இரவில் கண்விழிப்பதற்கு.
3.இறுதியாக தூக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு

பழக்கமில்லாத இவற்றோடு சவால் விட்டு வெற்றிக் கண்டால் வாழ்க்கையையே வெற்றிக் கண்டமாதிரி என நான் என்னையே ஊக்கப்படுத்திக் கொண்டேன். விடுமுறை இன்றி வேலை செய்தால், தூக்கம் கெட்டால், அதிக நேரம் வேலை செய்தால், என்னென்ன பாதிப்பு வரும், அதனால் ஏற்படக் கூடிய கஷ்ட நஷ்டங்கள் என்ன என்பதை எல்லாம் யாரும் என்னிடம் சொல்லவில்லை. நானும் அதைப்பற்றி யோசிக்கவும் இல்லை.

புத்திக்குத் தெரிந்ததெல்லாம் வேலையும்  மாதச் சம்பளமும் அதற்காக காத்திருக்கும் செலவுகள் மட்டும்தான். பயிற்சிக்காக என்னை உற்பத்தி அறையில் அமர்த்திய நாளை என்னால் மறக்கவே முடியாது.
எப்போதோ கனவில் கண்டதை போன்று இருந்தது அந்த இடம். சுமார் 100 மீட்டர் தொலைவிற்கு முழங்கை வரையிலான மாதிரிக் கைகள் ஓடிக் கொண்டே இருந்தன. அவை கையுறைகளை அணிந்துக் கொண்டு வருவதும் அதற்கு எதிர் எதிர் அமர்ந்திருக்கும் பெண்கள் லாவகமாக கையுரைகளை கழட்டி போடுவதுமாக இருந்தார்கள். அந்த உற்பத்தி அறையினுள் சுமார் 10-க்கும் மேற்பட்ட மாதிரி கை வரிசைகள் ஓடிக் கொண்டிருந்தன. என்னையும் என்னுடன் புதிதாக வந்திருந்த வேறு சிலரையும் பிரித்து பிரித்து மாதிரி கைகளின் வரிசையில் அமர்த்தினார்கள். வெண்மை நிறத்தில் மாதிரி கைகள் கையுறையை அணிந்து கொண்டு அழகாக வந்து கொண்டிருந்தன. நான் கையுறையை உரிப்பதற்கு முயற்சி செய்தேன். அறுந்து விட்டது. மீண்டும் மீண்டும் முயற்சித்தேன். கையுறை அறுந்து கொண்டே வந்தது. விரல்களில் மிதமான சூடு ஏறி ஏறி வலி ஏற்பட்டது. அரைமணி நேரத்துக்குள் விரல்களில் நீர் கோர்த்து வீக்கம் உண்டானது. பிறகுதான் எங்களின் பயிற்சியாளர்கள் விளக்கினார்கள்.
இப்படி சூடுகட்டி வந்து வெடித்து, புண்ணாகி விடும் போது விரல்கள் மறுத்துவிடும். அதோடு தொடர்ந்து கையுறைகளை இழுக்கும் போது சூட்டைத் தாங்கிக் கொள்ளும் வலிமையை விரல்கள் ஏற்று கொள்ளுமாம். நான் சவாலுக்குத் தயாராக இருந்தேன். 'மற்றவர்களால் முடியும் என்றால் என்னாலும் முடியும்' என்று மனதை வலிமை படுத்திக் கொண்டேன்.

வங்காளதேச தொழிலாளர்களும் சிலர் கையுறைகளை இழுத்தனர். அவர்களின் மாதிரிகைகளின் வரிசை இரு மடங்கு வேகமாக ஓடும். பெண்கள் வரிசையில் 8 பேர் இழுத்தால் அவர்களின் வரிசையில் 6 பேர்தான் ஆனால் எங்களுக்கு வழங்கப்பட்ட சம்பளம்தான் அவர்களுக்கும் வழங்கப்பட்டது. சில வங்காளதேசிகளுக்கு கையுறை உற்பத்தியாகின்ற ரப்பர் பாலில் அமிலங்களையும் இராசயனங்களையும் கலக்கின்ற வேலை கொடுக்கப்பட்டது. கையுறை தரமாக வருவதற்கு ஏதேனும் பிரச்னையாக இருந்தால் சரி செய்வதும் இவர்களின் கையில்தான் இருந்தது. கையுறையின் இராசயணங்கள் மிகவும் ஆபத்தானவை.

இந்த வேலைகள் மலேசிய இளைஞர்களுக்கு வழங்கப்படவில்லை. மேலும் சில வங்காளதேசிகள் படித்து பட்டம் பெற்றவர்களாக இருந்தனர். அலுவலகத்தில் வேலை என்று தப்பான தகவலை கூறி இந்த வேலைக்கு ஏஜன்டுகள் தள்ளி விட்டிருந்தனர். மலேசிய பெண்கள் சூப்பர்வைசர்களாகவும், ஸ்டோர்களிலும் வேலை செய்துக் கொண்டிருந்தனர். வேலைகளையெல்லாம் விட நம் இன இளைஞர்கள் தீவிரமாக பெண்களை கண்காணிப்பதிலேயே முழுகவனத்தையும் செலுத்தினார்கள். அவர்களின் முக்கிய குறிக்கோள் இந்தியப் பெண்கள் வங்காளதேசிகளிடம் எந்த சவகாசத்தையும் வைத்துக் கொள்ளக் கூடாது. அவர்களைப் பார்த்து சிரிப்பதைக் கூட ஒரு குற்றமாக நினைத்தார்கள். அப்படி ஏதேனும் ஒரு சகவாசத்தைப் பார்த்து விட்டால் அவர்களின் பாணியிலேயே தண்டனை வங்காளதேசிகளுக்கு வழங்கப்பட்டது.

அவர்களின் பணத்தை பிடுங்குவது, சிகரெட் அல்லது வேறு ஏதேனும் பொருளை பறிமுதல் செய்வது, தேவைப்பட்டால் உதைப்பது போன்ற தண்டனைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்பட்டன. வங்காளதேசிகள் வாயில்லா பூச்சிகளாக வலம் வந்தனர். இவர்களை எதிர்த்தாலோ அல்லது புகார் தெரிவித்தாலோ என்ன நடக்கும் என்று வங்காளதேசிகள் அறியாமல் இல்லை. அதற்கு காரணம் அந்த காலகட்டத்தில் வங்காளதேசிகளிடம் நம் இனப்பெண்கள் காதல் வயப்பட்டு பெரும்பான்மையோர் ஏமாந்து போயிருந்தனர். நம் இனப்பெண்களில் சிலரும் பொழுதுபோக்குக்காக இவர்களிடம் பழகி காதலிப்பதைப் போன்று நடித்து அவர்களின் பணத்துக்குக் குறிவைத்தனர். ஊர்விட்டு பஞ்சம் பிழைக்க வந்த இவர்களிடம் அப்படி என்ன இருக்கிறது, தங்களிடம் இல்லாதது என்ற காத்திரமும் ஒருவகையான பொறாமை குணமும் அவர்களை தாக்கும் அளவுக்கு தூண்டி இருக்கலாம். இது நம் பெண்களின் பாதுகாப்புக்குதான். நம் சமுதாயத்திற்குச் செய்யும் மிக பெரிய தொண்டு இது என்று சில பெருசுகள் இளைஞர்களை ஊக்கப்படுத்தினார்கள்.

நான் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் ஒரு வங்காளதேசியிடம் பேசுவேன். கொஞ்சம் வயதானவர். அவர் குடும்பத்தைப் பற்றியும், நாட்டைப் பற்றியும் கலாச்சாரத்தைப் பற்றியும் கேட்பேன். பயந்து பயந்து பேசுவார். அவரின் பாதுகாப்புக்கு என்னை பேத்தி என்றே அழைத்தார். கையுறையை இழுக்கும் எளிய முறையை அவர்தான் எனக்குக் கற்றுக் கொடுத்தார். நம் இளைஞர்கள் நாளுக்கு ஒரு பிரச்னையை கண்ணில் விளக்கெண்ணை விட்டு தேடினர். நல்ல வேளையாக நான் எதிலும் சிக்கிக் கொள்ளவில்லை.
 
இன்று கேள்விப்படக்கூடிய ஆணாதிக்கம் அந்தத் தொழிற்சாலை முழுவதும் பரவியிருந்தது. அங்கே வேலை செய்யும் பெண்கள் திருமணமானவராக இருந்தால் கூட ஏதோ ஒரு வகையில் யாருக்காகவோ கட்டுப்பட்டிருந்தார்கள். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் நிறைய பிரச்சனைகளை தொழிலாளர்கள் எதிர்நோக்கியபடி இருந்தனர். ஒரு வருஷத்தில் குறைந்தது 3 தற்கொலை முயற்சிகள் பதிவு செய்யப்பட்டன. ஓர் உயிர் இழப்பாவது ஏற்பட்டிருக்கும். அத்தகையதொரு மன உளைச்சலில் அங்கே வேலை செய்யும் சூழல் இருந்தது. பாதுகாப்பு என்ற பெயரில் சிலர் தானாக அதிகாரத்தைக் கையிலெடுக்கும் உரிமையால் அது பெரும்பான்மையோரை பாதித்திருந்தது. இந்த அதிகாரத்தின் பிடிதான் சராசரி குடும்பத்தலைவனிலிருந்து நாட்டுத் தலைவர்கள்வரை சுழன்று கொண்டிருப்பதை என்னால் உணர முடிந்தது.


இந்தக் காலக்கட்டத்தில் கணினி கல்வி குறித்த அவசியமும் பரவலாகப் பேசப்பட்டுக் கொண்டிருந்தது. எனது ஆர்வம் சட்டென கணினி மீது திரும்பியது. தோள்கள் தடித்த என் விரல்களைப் பார்த்தேன். அவை கணினியை இயக்கக் கூடுமென நம்பிக்கை ஏற்பட்டது. ஆணாதிக்கம் அங்கும் பரவிகிடக்கும் என மனம் சொன்னாலும் வேலை நிறுத்தக் கடிதத்தில் கையொப்பம் இடுவது தொடங்கி விரல்கள் வாழ்வை தேடித்தான் பயணிக்க முனைகின்றன. சில நம்பிக்கைகளோடு!






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக