சனி, 31 டிசம்பர், 2022

பாலி தீவுக்கு பயணம் போகலாமா வேண்டாமா ? பாகம் 4


பாலியில் 'லூவாக் காப்பி'

ஒன்றல்ல இரண்டல்ல, சுமார் 14 சுவைகளின் இந்தக் காப்பி கிடைக்கிறது. பாலிக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் இந்தக் காப்பியை அருந்துகிறார்களோ இல்லையோ நிச்சயமாக இந்தக் காப்பி தயாரிக்கும் இடத்திற்கு வராமல் அவர்களின் பயணம் முழுமையடையாது. காப்பி தயாரிப்பை சொல்வதற்கு முன் இந்தக் காப்பியில் கிடைக்கும் நன்மைகளை பார்த்துவிடலாம். பின் அதன் இருண்ட பக்கத்தையும் காணலாம்.

லுவாக் காபியின் 3 ஆரோக்கிய நன்மைகள்

மற்ற காப்பிகளோடு ஒப்பிடும் போது, இந்தக் காப்பி மூன்று முக்கிய அம்சங்களை அடிப்படை கொண்டதாக அடையாளப்படுத்தப்படுகிறது. மிக முக்கியமாக இந்தக் காப்பியின் மிக நீண்ட உற்பத்தி செயல்முறையின் விளைவாக மற்ற காப்பிகளிலிருந்து வேறுபட்ட குணங்கள் கொண்டுள்ளன. காப்பியின் உற்பத்திக்கு முக்கியத் தேவை புனுகு பூனையாகும். அதை இந்தோனேசிய மொழியில் kucing luwak என்றும் மலேசியர்கள் மூசாங் பூனை என்றும் சொல்கிறோம். ஆங்கிலத்தில் Asian palm civet என்றும் தமிழர்கள் புனுகு பூனை என்றும் சொல்கிறார்கள். 

லுவாக் காப்பி குறைந்த அளவு அமிலத்தன்மை மட்டுமே கொண்டிருக்கிறது. இதனால் வயிற்றில் அமில பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்தக் காப்பி எப்பிரச்னையையும் தருவதில்லை. அதோடு இந்தக் காப்பி  ஒற்றைத் தலைவலியையும் குறைக்குமாம்.

லுவாக் காப்பி சீரான செரிமானம், உடலில் புற்றுநோய் அல்லது புற்றுநோயைத் தூண்டக்கூடிய அமிலத்தையும் குறைக்க வழிசெய்கிறதாம். இதனால் லூவாக் காப்பியை புற்றுநோய் தடுப்பு காரணிகளில் ஒன்றாகவும் சொல்கிறார்கள்.


காப்பி தோட்டம்

இந்தக் காப்பி வெளிப்படையான முறையில்தான் தயாரிக்கப்படுகிறது. எந்த ஒளிவு மறையும் அதன் தயாரிப்பில் இல்லை.  மொத்தம் 14 வகையான ப்ளேவரில் தயாரிக்கும் இந்தக் காப்பியை அங்கு வரும் நமக்கு  அருந்த சிறிய கிண்ணங்களில் தருகிறார்கள். பின் நமக்கு பிடிக்கும் சுவையை நாம் பெரிய பாக்கெட்டுகளில் விலைகொடுத்து வாங்கிக்கொள்ளலாம்.   

100% ஆர்கானிக் என்றால் லூவாக்  காப்பிதான் என்று சொல்லும் அளவுக்கு இந்தக் காப்பி பிரசித்திபெற்றுவிட்டது.  மேலும் உலகிலேயே விலை உயர்ந்த காப்பியும் இதுதான்.  காப்பித் தோட்டக்காரர்கள் காப்பி மரத்தோடு புனுகு பூனையையும் சேர்த்தே பராமரிக்கிறார்கள்.

புனுகு பூனைக்கு இரவில்தான் கண் தெரியுமாம். அதனால், பகல் முழுக்க தூங்கும் அப்பூனையை கூண்டில் அடைத்து வைத்திருந்து இரவில் இரைக்காக திறந்து விடுகிறார்கள்.  பூனை தேர்ந்தெடுத்து உண்ணும் காப்பி பழங்கள்,  செரிமானம் ஆகி காப்பிக் கொட்டைகள் அது கழிக்கும் கழிவுகளில் வெளியேறும். அதை சேகரித்து பல கட்டமாக இயற்கை முறையில் கழுவப்பட்டு வெய்யிலில் நன்றாக காய வைக்கிறார்கள். 

பின், விரகடுப்பில் வறுத்து,  கல்உரலில் இடித்து காப்பி கொட்டைகளை பொடியாக்கப்படுகிறது. உலகத்தரமான காப்பி தூள்  விற்பனைக்கு இப்படித்தான் தயாரிக்கப்படுகிறது.  

லுவாக் காப்பி தயாரிப்பின் இருண்ட பக்கம்

இந்தோனேசிய சுற்றுலாத்துறை அதிக விளம்பரம் செய்யும் இந்தக் காப்பியினால், சுற்றுப்பயணிகளும் அதிகமாக ஈர்க்கப்படுகின்றனர். அதனால் வணிக ரீதியாக அதன் தேவையும், காப்பி பண்ணைகளுமே அதிகரித்திருக்கிறது. 

இதன் காரணமாக புனுகு பூனைகள் அதிகமாக சிறை வாழ்க்கைக்கு தள்ளப்பட்டிருக்கின்றன. சிறிய கூண்டில் அவை பகல் முழுதும் அடைக்கப்பட்டிருப்பதை எதிர்ப்பு தெரிவிக்கும் பொருட்டு காப்பி எக்ஸிகியூடிவ் அதிகாரியான tony wild குரல் எழுப்பினார். 

TRAFFIC Southeast Asia அமைப்பைச் சேர்ந்த  கிறிஸ் ஸ்டிப்பெர்ட்  கூற்றுப்படி, புனுகு பூனைகள் காடுகளிலிருந்து பிரிக்கப்பட்டு மிக பயங்கரமான சூழலுக்கு தள்ளப்படுவதாகவும், அவை தன் இனங்களோடு ஒன்றாக இருப்பதற்கு போராடுவதாகவும் கூறியிருக்கிறார். மேலும், அவை மிகச் சிறிய கூண்டுகளில் அடைக்கபடுவதுடன் குறைந்த அளவிலான உணவே பூனைகளுக்கு கொடுக்கப்படுகின்றன. இவ்வகை விலங்குகளின் பாதுகாப்புக்கு ஆபத்து இருப்பதாலும், விலங்குகள் தொடர்பான கட்டுப்பாடுகள் மீறப்படுவதாலும், விலங்குகளுக்கு மரணங்களும் அதிகமாகவே நிகழ்கிறது. ஆனால், மக்களுக்கு இது குறித்து எந்த விழிப்புணர்வும் இல்லை என கிறீஸ் கூறியிருக்கிறார்.  

அதே வேளையில் மனிதர்களின் நாவின் ருசிக்காக  பல்லாயிரக்கணக்கான புனுகு பூனைகள் கூட்டில் அடைக்கப்பட்டிருக்கின்றன என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். அதை மக்கள் தெரிந்துகொண்டால் அவர்கள் இந்தக் காப்பியின் மோகத்தை நிறுத்தக்கூடும் என்றும் அவர் மக்கள் அவையில் தெரிவித்தார். 

ஆனால், உண்மையில் நிலைமை மேலும் மோசமாகிதான் இருக்கிறது, PETA மற்றும் BBC போன்ற பல நிறுவனங்கள் , லூவாக் காப்பி விற்பனை நிலையங்கள் மற்றும் பண்ணைகள் மீது விசாரணை நடத்தியதில்,  சுகாதாரமற்ற நிலை மற்றும் கூண்டில் அடைக்கப்பட்ட பூனைகள் தீரா துயரத்தில் இருப்பதையும் அம்பலப்படுத்தினர்.  

லுவாக் காப்பியை மேற்கத்திய நாடுகளில் அறிமுகப்படுத்துவதற்கு பொறுப்பான காப்பி நிர்வாகியான tony wild, அக்காப்பி  தயாரிப்புக்கு எதிராக பரப்புரை செய்யும் நபராக மாறியிருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது. 

என்னுடைய நண்பர் பசுமை ஷாகுல் 14 சுவையையும் ருசி பார்த்தார். ஆனாலும்  எந்தக் காப்பி பொட்டலத்தையும்  வாங்கவில்லை. நான் கூண்டில் அடைக்கப்பட்டிருந்த அந்தக் கருத்த பூனையையே பார்த்துகொண்டிருந்தேன். 

(தொடரும்)

வெள்ளி, 30 டிசம்பர், 2022

பாலி தீவுக்கு பயணம் போகலாமா வேண்டாமா ? பாகம் 3


Pura Taman Ayun

சைலேந்திர அரசு,  ஸ்ரீவிஜயா அரசு, என மத்திய ஜாவாவை ஆக்கிரமித்த இந்திய அரசுப் பெயர்களை  பாலி தீவுகளில் காண்பது அரிது.  பாலி தீவில் புகழ்பெற்ற 7 கோயில்களில் ஒன்றான  Pura Taman Ayun மெங்வி தேசத்து ராஜகுடும்பத்தை  சேர்ந்த இந்து கோயிலாகும். பாலினீஸ் கட்டிடக்கலை வடிவமைப்பில் இந்தக் கோயிலை கட்டியிருப்பதாக கூறினாலும் நாம் அதைக் காணும்போது கேரளா கட்டிடக் கலையையே நினைவுபடுத்துகிறது. வைக்கோலால் வேயப்பட்டிருக்கும் கூரையில்  தொடங்கி, அதன் அடுக்கடுக்கான கோபுரங்கள்வரை கேரள கட்டிட வடிவமைப்போடு நிறைய ஒத்துப் போகிறது. ஆனாலும் இதன் வரலாற்றை படிக்கையில் சீன கட்டிட கலையம்சத்தில் புனரமைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. 

Mengwi  சாலையில் அமைந்திருக்கும் இந்தக் கோயிலை சுற்றி பெரிய அகழி உள்ளது. அதில் தாமரை இலைகளை காண முடிந்தது. கோயிலை சுற்றிலும் 'ஆர்கிட்' பூ மரங்கள் பல வண்ணங்களில் பூத்து, ரம்மியமான வாசத்தை பரப்பியபடி இருந்தன. 

1634- ஆம் ஆண்டில்  மெங்வி ராஜ்யத்தின் ஆட்சியாளரான  Gusti Agung Putu என்பவரால் இந்தக் கோயில் கட்டப்பட்டது. ராஜ குடும்பத்திற்கான ஆலயமாகத்தான் இதை கட்டியுள்ளார்கள். குடும்பத்தின்  முன்னோர்களை வழிபடும் பாரம்பரியத்தை மெங்வி ராஜ்யமும் பின்பற்றியுள்ளது கூடுதல் தகவலாகும். முன்னோர்களுக்காக தனி தனி சந்நிதி ஒதுக்கி கோயிலை எழுப்பியிருக்கிறார்கள் என்ற தகவல் அவர்கள் வழங்கிய கோயில்பற்றிய சரித்திரக்குறிப்பில் இருந்தது.  

கோயிலை சுற்றியெழுப்பட்டிருக்கும் மதில் சுவருக்கு அப்பாற் இருந்துதான்  கோயிலின் உட்புறத்தை காண முடிந்ததே தவிர, இங்கும் கருவறைக்குடில்கள் அமைந்திருக்கும் உட்பகுதியை காண அனுமதிக்கவில்லை. 

வருடாந்திர திருவிழாவின்போது... 

கலைநிகழ்ச்சிகள் நடத்துவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் கூடத்தில் சேவல் சண்டை நடக்கும்படியான ஒரு காட்சியை சிலை வடிவில் வைத்துள்ளனர். இஸ்லாமிய நாட்டில் சூது ஹராம் ஆயிற்றே? இன்னும் இங்கு சேவல் சண்டை நடக்கிறதா என கேட்டதற்கு, அனுமதி இல்லை. என்றாலும் திருவிழாவின்போது மட்டும் நடத்தப்படும் எனக் கூறினார்கள். விவசாய பூமி என்பதற்கு அடையாளமாக ஸ்ரீதேவி எனும் அன்ன தேவிக்கு, இந்த கோயிலுக்கு வெளியில் சிலை வைத்திருக்கிறார்கள்.  

Pura Alas Kedaton 

குரங்கு கோயில் என அறியப்படும் இந்தக் கோயிலை நாம் அனுமார் கோயில் என அழைக்கலாமா எனக் கேட்டால் தேவையில்லை என்றுதான் நான் சொல்வேன். காரணம் இதிகாச குரங்கிற்கு அங்குக் கோயில் எழுப்பவில்லை. குரங்கிற்குத்தான் அங்குக் கோயில் வைத்திருக்கிறார்கள். அதிகமான குரங்குகள் வாழும் வனத்தை ஒட்டினாற்போல் அந்தக் கோயில் அமைந்துள்ளது. ஆயிரக்கணக்கான குரங்குகள் மற்றும் நூற்றுக்கணக்கான பெரிய வௌவால்கள் அங்கு வாழ்விடம் கொண்டிருக்கின்றன. 


இந்தவனத்தில் இருக்கும் குரங்குகள் பார்ப்பதற்கு அமைதியாக இருந்தாலும் அவை சில வேளைகளில் கோபமாக தாக்கக் கூடுபவை எனக் கோயிலை பற்றிய விவரங்கள் கொடுக்கவந்தவர் சொன்னார். இந்து கோயில் என்று சொன்னதும் அதன் உட்ப்பிரகாரம் எப்படி இருக்கிறது எனக் காணும் ஆவலில் உட்புறம் செல்ல நினைத்தோம். பாரம்பரிய உடை இல்லாமல் செல்ல முடியாது என மறுத்துவிட்டனர்.

 இந்தக் கோயில்களை காண்பதற்கு மூன்று விஷயங்கள் தடையாக இருப்பதை மிக நன்றாகவே உணர்ந்துகொண்டேன். ஒன்று 6 மணிக்குள் போய்விட வேண்டும். இல்லையேல் கோயிலை அடைத்துவிடுகிறார்கள். இரண்டாவது அவர்கள் வரையறுத்து வைத்திருக்கும் பாரம்பரிய உடையில் போக வேண்டும். இல்லையேல் நேரம் இருந்தாலும் இந்தக் காரணத்தை சொல்லியே மறுக்கிறார்கள். மூன்றாவது கோயிலை அவர்கள் திறப்பதே இல்லை. பயணிகளால் அது பாழ் படாமல் இருக்கக் கோயில் திருவிழாவிற்கு மட்டும் திறக்கிறார்கள். 

இந்த விவரங்களைப் பாலி சுற்றுலா முகவர்கள் நம்மிடம் தெரிவிப்பதில்லை. அங்குப் போனதும்தான் தெரிய வருகிறது. இதை நேரிடையாக எங்கள் முகவரிடம் கேட்டதற்கு அவரிடம் பதில் இல்லை. நல்ல காடு , அதைச் சுற்றிப்பார்க்க எங்களுக்கு வாய்ப்புதான் அமையவில்லை.

(தொடரும்)


வியாழன், 29 டிசம்பர், 2022

பாலி தீவுக்கு பயணம் போகலாமா வேண்டாமா ? பாகம் 2

குட்டா கடற்கரை

பாலியுனுடைய அழகே அதன் கடற்கரையில்தான் இருக்கிறதோ என எனக்கு நினைக்கத் தோன்றியது. கண்ணுக்குக் குளிர்ச்சியாக பெண்கள் சூரிய குளியல் எடுத்துக்கொண்டிருந்தனர். கடற்கரைக்கு நுழையும் வாசலெங்கும் வாசலை இரண்டாகப் பிரித்தது போன்ற கட்டிட அமைப்பு கொண்டிருந்தது.

வந்ததிலிருந்தே என்னை எந்த வகையிலும் ஆச்சரியத்தில் ஆழ்த்தாத இந்த நகரத்தைக் கடற்கரையின் வழி வெறித்துப் பார்த்தபடியே இருந்தேன். பெரிய பெரிய அலைகள் என்னைச் சுருட்டி இழுத்துக்கொண்டு போய்விடுமோ என்று தோன்றியது. கடற்கரைகளில் குளிப்பதற்கு எனக்கு எப்போதும் ஓர் அச்சம் இருக்கும். கால்களை நனையவிட்டு பாதங்கள் பதிய நடந்து, அதைப் பின் நோக்கிப் பார்க்கவும் அலைகள் அதை அழித்துச்செல்ல வருவதைப் பார்த்து ரசிக்கவும் பிடிக்கும். அலைகள் மேலடிக்க, கரையில் அமர்ந்தபடி அந்த அணைப்பை உள்வாங்கி கிடப்பேன்.


தவிரவும் சூரியன் கடலுக்கு அப்பால் மெல்ல விழுந்து மறைவதைப் பார்ப்பது யாருக்குத்தான் பிடிக்காது. அம்மாதிரியான சூரிய உதயத்திடம் தனிமையில் எத்தனைக் கதைகளை பேசியிருப்பேன். அது ஓர் ரசனைதான். என்னையே மறக்கடிக்கும் அமானுஷ்ய நிகழ்வு ஒவ்வொரு தடவையும் நிகழ்த்திக் காட்டி விடுகிறது சூரிய அஸ்தமனம் .

கடலிலிருந்து எழுந்துவந்து பெரிய பெரிய அலைகள் மிரட்டியபடியே இருந்தன. இந்த ராட்சச அலைகளோடு surfing என்ற விளையாட்டை விளையாடுவதற்காகவே வெள்ளைக்காரர்கள் தனது சொந்த சறுக்கு பலகையைச் சுமந்துகொண்டு வருகிறார்கள். மயாமி கடற்கரையில் விளையாடும் இந்தக் காட்சிகளை தொலைக்காட்சியில் பார்த்திருக்கும் எனக்கு நேரில் பார்க்க இந்த குட்டா கடற்கரை உபாயம் செய்திருந்தது. சின்ன குழந்தைகள்கூட அவர்களுக்கு ஏற்ற மாதியான சறுக்கு பலகையை சுமந்து வந்து அலைகளை வம்புக்கு இழுத்து அதோடு போட்டி போட்டுக்கொண்டு சில முறை வெல்வதும் சிலமுறை அதனோடு தோற்பதும் பின் மீண்டும் பந்தயம் வைப்பதுமாக இருந்தனர்.


ஒரு இந்தோனேசியா அம்மா ரொம்ப நேரமாக ஒரே இடத்தில் அமர்ந்திருக்கையே உனக்கு நான் தலையை பிடித்துவிடுகிறேன். அல்லது தோளை பிடித்துவிடுகிறேன். 10 டாலர் கொடு என்றார். நான் வேண்டாம் என்று சொல்லியும் விட்டபாடில்லை . பின் ஒருவாறாக பேரம்பேசி தலையை மட்டும் பிடித்துவிட சொன்னேன். வெயிலுக்குக் கொஞ்சம் இதமாகத்தான் இருந்தது. அருகில் இளநீர் விற்றுக்கொண்டிருந்தவரிடம் நல்ல காயாக தேடிக் குடித்துவிட்டு கிளம்பும் முன் கடற்கரையை மீண்டும் பார்த்தேன். சிலர் பட்டம் விட்டுக்கொண்டிருந்தனர். சூரியன் மறைவதற்கு இன்னும் நேரம் இருந்தது. சுருண்டு வந்த அலையின் வளைவிலிருந்து வெற்றிகரமாக வெளியில் வந்த வீரன் ஒருவன் தன்னைத்தானே ஊக்கப்படுத்தியபடி கரைக்கு எறிவந்தான். நான் அவனைப் பார்த்தபடியே திரும்பி வந்தேன்.

பூரா தானா லோட்

பாலி மொழியில்  'பூரா' என்றால் கோயில் என அர்த்தம். இந்தோனேசிய மொழியில் கோயிலை சண்டி என்றும் குறிப்பிடுவார்கள். குறிப்பாக ஜோக்ஜகார்தாவில் சுற்றியிருக்கும் எந்த இந்து கோயிலையும் அவர்கள்  பூரா எனச் சொல்வதில்லை. சண்டி என்றே வரலாறு கூறுகிறது. 

இந்து கோயில் எனச் சொல்லப்படும் தானா லோட், பாலி நகரைச் சுற்றியிருக்கும் 7 கடற்கோயில்களில் ஒன்றாகும்.  16- ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவன் பக்தரான  'டாங்யாங் நிரார்த்தா' என்கிற  சைவ சமய போதகரால் இந்தக் கோயில் உருவாக்கப்பட்டதென இணையத் தகவல் கூறுகிறது.

தானா லோட் கோயில் கடலுக்கு நடுவில் இயற்கையாகத் தோன்றிய மலையில் உருவாக்கப்பட்டுள்ளது. என்றாலும் கோயில் திருவிழா காலங்களை தவிர்த்து மற்ற உபரி நாட்களில்  அதை பொது மக்களுக்குத் திறந்துவிடுவதில்லை. முட்டிவரை தண்ணீர் நிறைய அப்படியே கடலில் இறங்கித் தான் கோயிலை அடைய வேண்டும். அலைகளின் வேகம் அதிகமாகவே இருக்கிறது. கடல் நாகங்கள்தான் அலைகளாக மாறி  நம்மைத் தாக்குகிறதோ என எண்ணத் தோன்றியது. தீய சக்திகளிடமிருந்தும் கெட்ட ஆவிகளிடமிருந்தும் மக்களை   அங்கிருக்கும் கடல் பாம்புகள் பாதுகாத்து வருவதாக நம்பிக்கை கொண்டிருக்கின்றனர் பாலி வாசிகள்.  இப்போது அங்கு  எந்தக் கடல் பாம்புகளும் இல்லை.

மேலும் கோயிலின் வெளித்தோற்றத்தையும் முழுமையாகக் காண்பதற்கு வாய்ப்பு இல்லாமல் போனது. ஒரு பகுதியை மேம்பாட்டுக்காகவும் மற்றோரு பகுதியைப் பாதுகாப்பு கருதியும் முடி வைத்திருந்தனர். கோயிலின் உட்ப்பிரகாரம் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள முடியவில்லை.  

முன்னதாக கோயிலை பார்வையிடுவதற்கு முன்பு அங்கு குழாய்வழியே வரும் புனித நீரில் கைகால்களை கழுவி சுத்தம் செய்யச் சொல்கிறார்கள். பின் பூவையும் நெற்றியில் அரிசியையும் வைத்துவிடுகிறார்கள். அதன்பின்புதான் கோயிலைக் காண அனுமதிக்கப்படுகிறது.

(தொடரும்)


பாலி தீவுக்கு பயணம் போகலாமா வேண்டாமா? பாகம் 1


கொஞ்சோண்டு ரசனை, கேள்வி கேட்கும்போது முகத்தில் கொஞ்சம் கடுமை, கொஞ்சம்  புத்திசாலித்தனம்  நிறைய பணமிருந்தால் போதும்; பாலித்தீவையையும் ஒரு கை பார்த்துவிட்டு வந்துவிடலாம். 4 நாட்களுக்கு 300 டாலர் (1200 ரிங்கிட்) மற்றும் மேற்கொண்டு 300 ரிங்கிட் எனக்கு மட்டுமே அங்கே செலவாகியிருக்கிறது. இத்தனைக்கும் தங்குமிடத்தை நான் இணையத்தில் புக் செய்துக்கொண்டேன். அது போக ஏற்பட்ட செலவு இது. மேலும் இதுவரை நான் மேற்கொண்ட நிதிநிலை பயணங்களில் அதிகப் பணம் செலவாகியிருப்பது பாலியில்தான். கொஞ்சம் விவேகமுடன் நடந்துகொண்டால் பாலியில் நிதி நெருக்கடியில் பலியாகாமல் திரும்பி வந்திடலாம். பாலியல் சேவைகள் , மதுபானக் கொண்டாட்ட விரும்பிகளுக்குப் பாலி சரியான தேர்வு. தேனிலவுக்கு ஏன் பாலியை தேர்வு செய்கிறார்கள் என்ற கேள்விக்கு இன்னும் என்னால் பதில் காண முடியவில்லை.

 குட்டிக் குட்டி தீவுகளும்கடற்கரைகளும் நிறையவே  இருக்கின்றன. அதைத் தவிர தேன்நிலவு கொண்டாட்டத்திற்கு சிறந்த இடமாக என் வரையில் தோன்றவில்லை.  பாலி தீவில் நான் ரசித்தது என்ன ?

2018-ஆம் ஆண்டு நான் சென்ற பயணத்தை பதிவு செய்கிறேன்.

மிகவும் பாதுகாப்பாக உணரக்கூடிய நண்பர்களில் ஒருவரான அருமை நண்பர் சாகுல் இந்தப் பயணத்தில் என்னுடன் பயணித்தார். ஏர் ஏசியா விமானத்தில், 3 மணி நேரம் 55 நிமிடங்கள் பயணத்திற்கு பிறகு  தீவின் Ngurah Rai International விமான நிலையத்தை அடைந்தபோது இரவாகியிருந்தது. 10 டாலரில் தனியார் வாடகை வண்டி ஏற்பாடு செய்து குட்டா (KUTA) நகரை அடையலாம் என இணையத்தில் உறுதியான தகவல் இருந்தது. குட்டா நகருக்குச் செல்வதற்கு 20 நிமிடங்கள் எடுக்கும்.  அங்கே  வாடகை வண்டி ஓட்டுநர்கள் 20-லிருந்து 25 டாலர் வரை பேரம் பேசுகிறார்கள். விமானநிலையத்தை விட்டு வெளியில் வந்து விசாரித்தாலும் விலை ரொம்ப வித்தியாசமாகவே இருக்கிறது.

ஒரு வாடகை வண்டி  நிறுவனத்தில் 85,000 இந்தோனேசிய ரூபியா கேட்டார்கள்.  தெரிந்தவரை அது மட்டுமே குறைவான கட்டணம். நமது பணப்பையிலிருந்து பணம் கரையப்போகிறது என்பதற்கான பிள்ளையார் சுழியும் அங்குதான் தொடங்குகிறது.

நான் இணையத்தில் பதிவு செய்திருந்த தங்கும் விடுதி, கேளிக்கை மையம்கள் நிறைந்திருந்த மையப்பகுதியாகும். அதன் தொடக்கம் 2002 -ஆம் ஆண்டு அங்கு நடந்த குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்காக வைக்கப்பட்டிருக்கும் நினைவு தூபியிலிருந்து ஆரம்பிக்கிறது. அந்தக் குண்டு வெடிப்பில் 22 உலக நாடுகளைக் சேர்ந்த 202 பேர் பலியாகியிருந்தனர். 324 பேர் படுகாயமடைந்தனர் என்பது வருத்தமான செய்தியாகும்.

விமான நிலையத்திலிருந்து குட்டா வந்தடையும்  சாலை முச்சந்திகளில் மஹாபாரத  கதாபாத்திர சிலைகள் பிரமாண்டமாக நிறுத்தி வைத்திருக்கிறார்கள். சிலைகளில் அழகு மற்றும் நேர்த்தியைக் காண முடிந்தது. மலேசியாவில் இம்மாதிரியான சிலைகளை, இந்திய நாட்டுச் சிற்பிகளால் செய்யப்பட்டு விமானம் வழி கொண்டுவரப்படும். அல்லது சிற்பியை வரவழைத்தே இங்குச் செய்வார்கள். இந்தோனேசிய உடை, ஆயுதம் மற்றும் கலாச்சார பாணியில் சிலையை வடிவாக வடித்திருக்கிறார்கள். மஹாபாரத கதா பாத்திரங்களான அர்ஜுனனும் கடோட்கஜனும் சீதை உபதேச சிலையும் கண்கள் விரியும் ஆச்சரியத்துடன் சாலை முச்சந்திகளுக்கு அழகூட்டுகின்றன.

பாலியில் வந்திறங்கிய அன்றே ஒரு சிம் கார்டுக்கு ஏற்பாடு செய்துகொள்வது நல்லது. காரணம் எங்குப் பயணிப்பதாக இருந்தாலும் இணையம் உங்களுக்குப் பெரிய உதவியாக இருக்கும். வழி கேட்டவர்களிடத்தில் வந்த முதல் ஆலோசனையே GOOGLE MAP உபயோகியுங்கள் என்பதுதான். பரவலாக  குறைந்த விலையில் கிடைக்கும் வாடகை மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு GOOGLE MAP உதவியுடன் உணவு விடுதியிலிருந்து சுற்றிப்பார்க்கும் இடங்களுக்கு போய்வரலாம். மேலும் GRAB செயலி அங்கு உபயோகத்தில் இருக்கிறது . அதுவும் பயணிக்க உதவியாக இருக்கும்.

இந்தோனேசியா நாட்டுக்கு நான் இதற்கு முன்பு இருமுறை போயிருந்தாலும், பாலி தீவுக்கு சென்றது இதுதான் முதல் முறை. இந்தோனேசியா கொண்டிருக்கும் 33 மாகாணங்களில்,  பல அழகிய சுற்றுலாதளங்களும் தீவுகளும்  இருக்கின்றன. ஒவ்வொன்றும் தனிதனியே பல சிறப்பு அம்சங்கங்களைக் கொண்டதாக இருக்கின்றன. மேலும் சில தீவுகள்  தனி நாடுபோல செயற்படக்கூடியதாக இருக்கும். பாலியும் அவ்வாறான தீவுதான்.  கலை கலாச்சாரம், மதம், உணவு மற்றும் பணம் பட்டுவாடா வரைக்கும் மற்ற மாகாணங்களைக் காட்டிலும் அதிக வித்தியாசங்களை  பாலி கொண்டிருக்கிறது.

டென்பசார் இதன் தலைநகரமாகும். குடியரசு நாடான இந்தோனேசியா, இஸ்லாமிய சமயத்தை முதன்மையாகக் கொண்டிருக்கிறது என்றாலும் பாலி தீவை மட்டும் கணக்கெடுக்கையில் 90% இந்து சமயத்தை பின்பற்றுபவர்கள் இருக்கிறார்கள்.  நாம் பின்பற்றும் இந்து சமயத்திற்கும் அவர்கள் பின்பற்றும் இந்து சமயத்திற்கும் அதிக வேற்றுமைகளும்   சில ஒற்றுமைகளும் இருக்கின்றன. இன்னும் சொல்லப்போனால் ஜோக் ஜகார்தாவில் இருக்கும் இந்து கோயில்களுக்கும் பாலியில் இருக்கும் கோயில்களுக்கும்கூட வித்தியாசங்கள் இருக்கின்றன.

இந்தியர்கள் வாசலில் கோலம் வரைந்து, பூ வைப்பதுபோல, பாலி மக்கள்,  தென்னை ஓலையில் செய்த சிறிய கிண்ணத்தில் பூ பலகாரங்களை வைத்து வாசலில் வைக்கிறார்கள். சிலர் ஊதுவர்த்தியையும் கொளுத்தி வைக்கின்றனர்.  குறிப்பிட்ட நேரமென்று இல்லாமல் எந்த நேரத்திலும் அவர்கள் அப்படி வைக்கின்றனர் . பெண்கள் கூந்தலில் பூ சூடிக்கொள்கின்றனர் .  இறை வழிபாட்டுக்குப் பிறகு நெற்றியில் பூசிக்கொள்ளும்  விபூதியாக அவர்கள் பயன்படுத்துவது உடைத்த அரிசியை.  ஒரு கிண்ணத்தில் பிசின் மாதிரியான ஒரு திரவத்தோடு உடைத்த அரிசையை கலந்து வைத்திருக்கிறார்கள்.  நெற்றியில் இட்டுக்கொள்ளும்போது அது அப்படியே ஒட்டிகொண்டு இருக்கிறது.

பாலி மக்கள் பாரம்பரிய உடை அணியாதவர்களை  கோயில் வளாகத்திற்குள் கண்டிப்பாக அனுமதிப்பதில்லை. மேலும் வழிபாடு இல்லாத நாட்களில் அவர்கள் கோயிலையும் திறப்பதில்லை. சுற்றுப்பயணிகள் கோயிலின்  வெளித் தோற்றத்தை மட்டும் காணலாம். கோயிலை அவர்கள் 'பூரா' (PURA) என்று சொல்கிறார்கள். ஜோக்ஜகார்தாவில் சண்டி எனக் குறிப்பிடுவார்கள் .

கோழி இறைச்சி, மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சியுடன் சோறு  பிரதான உணவாக அங்கு இருக்கிறது. டீ மற்றும் காப்பி வகைகள் கடைக்கு கடை மாறுபட்ட சுவையில் இருக்கிறது.

பாலியின்  உயிர் நாடியாகப் பாலி கடற்கரை இருக்கிறது. பணம் மாற்றும்போது மிகுந்த கவனம் தேவை.  தெருவுக்குத் தெரு அதன் விலை நிர்ணய  அளவு மாறுபடுகிறது.  குறிப்பாக 1. அமெரிக்க டாலருக்கு 14,899 இந்தோனேசிய ரூபியா மாற்றுகிறார்கள். நான்கு கடை தள்ளிப்போனால் 1. அமெரிக்க டாலருக்கு 14,000 ரூப்பியவாக குறைவாக இருக்கிறது அல்லது அதைவிடக் கூடுதலாகவும் இருக்கிறது. பணம் மாற்றும் இடத்தில் எனக்கு நேர்ந்த வித்தியாசமான அனுபவத்தை பிறகு சொல்கிறேன்.   

(தொடரும்)

 

ஞாயிறு, 18 டிசம்பர், 2022

"பூமியே என்னை மன்னித்துவிடு" -சூழலியல் உரையாடல்

 

ஜொகூர், காரைநகர் நட்புறவு மையத்தில், இந்திய மாணவர்களுக்காக நடைபெற்றுக்கொண்டிருக்கும் தன்னாளுமை முகாம் பயிற்சி முகாமில்,  மூன்றாம் நாளில் (14/2/2022)  ஒரு பயிற்றுநராக நான் (யோகி)  கலந்துகொண்டேன்.

இரு வெவ்வேறு தலைப்புகளில் உரையாடிய நான், அம்மாணவர்களோடு கிட்டதட்ட  9 மணித்தியாலங்கள்  இருந்தேன். அவர்களுக்கு பயிற்சியை வழங்கிய அதே வேளையில் நானும் அவர்களிடமிருந்து பாடம் கற்றேன் என்பது மறுப்பதற்கில்லை.

இதற்கு முன் ஆரம்பப் பள்ளி மாணவர்கள் மத்தியில் சூழலியல் சார்ந்து பரவலான உரையாடலைக் கொண்டு செல்ல வேண்டும் என்று  தனிப்பட்ட முறையில் நான் எடுத்த முயற்சிகள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும், ஓரளவு அதற்கான விழிப்புணர்வை விதைக்கத்தான் செய்திருக்கிறேன்.

அந்தவகையில் இம்மாணவர்கள் மத்தியில் அவர்களிடத்திலிருந்தும், அவர்களில் ஒருவராக இருந்தும் உரையாடியது எனக்கு எந்தத் தயக்கமோ,  சிரமமோ ஏற்படவே இல்லை.  தவிர அன்று நான் சூழலியல் சார்ந்து பேசிய அனைத்தையுமே மாணவர்கள்  வியப்பாகவும் அதே வேளையில் ஒரு சிலருக்கு  குற்ற உணர்வு ஏற்படுவதையும் உணர்ந்தேன்.  50 மாணவர்களில்  10 பேருக்காவது  இந்த பூமியின் மீது அன்பும் அக்கரையும் ஏற்பட்டிருக்கும் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன். அதுவே இந்த பயிற்சியின் வெற்றியுமாகவும் கருதுகிறேன்.

உறுதியாக இந்த நம்பிக்கையை நான் கொள்வதற்கான காரணங்கள் இரண்டு.  “நாம் இஷ்டத்திற்கு  அகலும் போது,  இந்த பூமி நம்மை ஒரு போதும் இகழ்ந்ததே இல்லை, விசுவாசமற்றவர்கள் நாம்” என்று நான் கூறியபோது ஒருவரும் சில வினாடிகள் பேசவே இல்லை. “மன்னிப்புக் கேளுங்கள்” என்று நான் சொன்னதற்கு அனைவருமே ஒருசேர மன்னிப்புக் கேட்டனர். அதில் ஒருவர் பூமியை தொட்டு வணங்கி மன்னிப்புக்கேட்டதையும் நான் கண்டேன்.

இரண்டாவது அவர்களுக்கு அளித்தப் பயிற்ச்சியின் போது அவர்கள் வரைந்த ஓவியமும், அதை முன் நின்று பேசிய விதமும்  என்னை மிகவும் மகிழ்ச்சியடைய வைத்தது மட்டுமல்ல, அன்று நான் உரையாடியது பாழாகவில்லை என்பதை எனக்கே உணர்த்தியது. 

நான் கொண்டு வந்திருந்த சில சூழலியல் புகைப்படக்காட்சிகள், அதில் நம்ப முடியாத மலேசியப் புகைப்படங்கள், தண்ணீர் குறித்து அறியாத தகவல்கள், ஒலி மற்றும் ஒளி மாசு குறித்தான விஷயங்கள் அனைத்தும் அவர்களை  சிந்திக்க வைத்தன. 

இறுதியாக இனிமேல் நாங்கள் ஞெகிழி தண்ணீர் புட்டியை வாங்க மாட்டோம் என்று அவர்கள் கூறினாலும்,  அதை எந்த அளவுக்கு அவர்களால் பின்பற்ற முடியும் என்று என்னால் சொல்ல  முடியாது.  காரணம் சின்னக் குழந்தைகள் எடுக்கும் ஒரு சரியான முடிவுக்கு,  குடும்பம் மற்றும் அவர்களின் சுற்றம் ஆதரவு தரவில்லை என்றால்  அவர்கள் என்னதான் செய்வார்கள்?


ஆனாலும், நான் அந்த section-னை முடிக்கும்போது ஒரு மாணவி, “நாளையிலிருந்து நாம் வீட்டிலிருந்து  தண்ணீர் அருந்தக் குவலையைக் கொண்டு வருவோம். உயிரைக் கொல்லும் ஞெகிழியைக் பயன்படுத்த வேண்டாம்” என்று சொன்னார்.  அவரின் இந்தச் சிந்தனையை நாம் மதிக்க வேண்டும், ஆதரவு தர வேண்டும். குழந்தைகளை அதற்கு பழக்க வேண்டும். நாளை இந்த பூமிக்காகவும் இயற்கைக்காகவும் சூழலியலுக்காகவும் போராடப்போகும் தலைமுறை  காரைநகர் நட்புறவு மையத்தில் இருக்கிறார்கள்.  தொடர்ந்து அவர்களிடத்தில் இந்தச் சுற்றுச்சூழல் குறித்து உரையாடுவது மிகவும் அவசியமான ஒன்று.

எனக்கு இந்த வாய்ப்பைக் கொடுத்த சகோதரர் மோகன் , தோழர் சாந்தா பெருமாள், அன்பு பாராட்டிய  நண்பர் செல்வராஜ் ஆகியோருக்கு எனது அன்பு.  மற்றும் அங்கே பொறுப்பில் இருந்தும் கவனித்துக்கொள்ளும் சகோதர சகோதரிகள்  அனைவருக்கும் பாராட்டுக்கள்.  


மாணவர்களின் தன்னாளுமையை உயர்த்த,   இடைநிலைப் பள்ளியில் அவர்களின் பயணத்தை பாதுகாப்பானதாகவும் கவனமுடனும்  தொடர  மேற்கொண்டிருக்கும் இந்த முயற்சிக்கு என்றென்றும் தொடர வேண்டும். இந்த முயற்சியை மேலும் விரிவு படுத்த வேண்டும்.

நான் முழுமையாக அங்கிருந்து பார்த்ததில் குறை என்று சொல்ல எதுவும் இல்லை. முடிந்த அளவு ஞெகிழி பயன்பாட்டை மட்டும் கழகத்தினர் குறைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஒரே கோரிக்கையை மட்டும் தலை வணங்கி கேட்டுக்கொள்கிறேன்.

அதோடு அடுத்தடுத்த பயிற்சிகளில் மாணவர்கள் இன்னும் ஆழமாக சூழலியலைப் புரிந்துக்கொள்ள அவர்களை வெளியில் அழைத்துச் செல்லலாம். அரைநாள் பசுமை பயணத்தை மேற்கொள்வதுடன், இந்த பூமியை மனிதர்களோடு பகிர்ந்துகொண்டிருக்கும் பறவை, புழு, எறும்பு, மரங்கள், செடி கொடிகள்  முதலான உயிரிகளின் பங்கு என்ன என்பதையும் இளைய தலைமுறையினருக்கு விளக்கலாம்.  இது எனது தாழ்மையான வேண்டுகோள்.

நன்றி

யோகி

புதன், 30 நவம்பர், 2022

ஓவியர் சந்துரு


 நமது நாட்டின் இந்திய நவீன ஓவியர்கள் என்று பட்டியலிடும்போது சட்டென நினைவில் மோதும் பெயர் ஓவியர் சந்துரு. கிட்டதட்ட நாட்டில் எல்லா தமிழ்பத்திரிகையிலும், வார மாத இதழ்களிலும் இவரின் ஓவியங்கள் இடம்பிடித்திருக்கின்றன. இவரின் ஓவியங்கள் போலவே இவரின் கவிதைகளும் தனித்துவமானவை, பாராட்டுக்கள் பெற்றவை. நவீன ஓவியராகவும், கவிஞராகவும், பக்க வடிவமைப்பாளராகவும் தனது தனித்துவத்தை பதிவு செய்திருக்கும் ஓவியர் சந்துரு தனது ஓவியக் கண்காட்சியை தலைநகரில் நடத்தவிருக்கிறார்.  

நாளுக்கு நாள் மழை நம்மை தொடர்ந்து விரட்டிக்கொண்டிருக்க,

தேர்தல் புயலும் எங்கும் முகாம் கொண்டிருக்கும் இக்காலக்கட்டத்தில், art voice ஓவிய மையத்தில், கண்காட்சிக்கு ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தவரிடம் நேர்காணல் செய்தேன்..


1. இது உங்களுக்கு எத்தனையாவது கண்காட்சி?

சந்துரு: இது என்னுடைய மூன்றாவது தனித்த (solo) ஓவியக் கண்காட்சி. கூட்டு வகையில் 10-க்கும் மேற்பட்ட கண்காட்சியை முடித்திருக்கிறேன்.

என் முதல் ஓவியக் கண்காட்சி 2009-இல் தலைநகர் சோமா அரங்கத்தில் வல்லினம் குழுமத்தின் ஏற்பாட்டில் நடந்தது. எல்லா ஓவியங்களும் கருப்பு வெள்ளை கோட்டோவியங்களாகவே காட்சிக்கு வைக்கப்பட்டது. பத்தாங் பெர்ஜுந்தை சுங்கை திங்கி தோட்டத்தில் வாழ்ந்த காலத்தில்,  நான் பார்த்த தோட்ட பால் மர வாழ்க்கையை வரைந்து அப்போது காட்சிக்கு வைத்தேன். டத்தோ சகாதேவன் மற்றும் ரத்தினவள்ளி அம்மையார் அவர்களும் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர். இதே தோட்ட வாழ்க்கையை மையப்படுத்தி வரைந்த கோட்டோவியங்களே என் இரண்டாவது கண்காட்சியிலும் வைக்கப்பட்டது. 2015-இல் நடந்த இந்நிகழ்வில் தமிழ் நாட்டின் பிரபல ஓவியர் மருது அவர்கள் கலந்து சிறப்பித்து வாழ்த்திச் சென்றது என்றும் மறக்க இயலாத தருணம்.

இப்போது நடக்கவிருக்கும் இந்த  ஓவியக் கண்காட்சியில் மிக சமீபத்தில் நான் வரைந்த வண்ண நவீன ஓவியங்களை காட்சிக்கு வைக்கின்றேன். என் முந்தைய ஓவியங்களைக் காட்டிலும் இது முற்றிலும் மாறுப்பட்டிருகும். 


2. உங்களின் கண்காட்சிக்கு women in profile அதாவது சுய தோற்றத்தில் பெண்கள் என தலைப்பு வைத்திருக்கிறீர்கள். ஏன் இந்தக் கருத்தினை தேர்ந்தெடுத்தீர்கள்? 

சந்துரு: நீரின்றி அமையாது உலகு என்பார்கள், பெண்கள் இன்றி அமையாது  உலகு என்பேன் நான். அன்பை அளவில்லாமல் தரும் பெண்களை உண்மையான சுதந்திரத்தில் வாழ விடுகின்றோமா? சமயத்தின் பெயரால் குடும்பத்தின் பெயரால் கௌரவத்தின் பெயரால் அடக்கவே முயல்கிறோம். பெண்கள் ரொம்ப நாளாகவே போராடிக்கொண்டிருக்கிறாள். அவர்களை கட்டுப்படுத்துவதை நிறுத்தினாலே போதும். 

நான் பெண்களை அவர்களின் சுயத்தை  கொண்டாடுகிறேன், மதிக்கிறேன்.   அதனால்தான் இப்படியான ஒரு தலைப்பு.

3. மலேசிய சூழலில் நவீன ஓவியங்களின் புரிதலில் முன்னேற்றம் இருக்கிறதா?

சந்துரு: அபார முன்னேற்றம் இல்லைதான் என்றாலும் நல்ல முன்னேற்றம் இருக்கத்தான் செய்கிறது. மெதுவாக ரசிக்க தொடங்கியிருக்கிறார்கள், கேள்விகள் கேட்கிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாக ரசனைகள் மாறிவருகின்றன. 

4. உங்கள் ஓவியங்களின் மீது எழும் விமர்சனங்களை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?

சந்துரு: 90-களில் பத்திரிகைகளில்  நவீன ஓவியங்கள் வரையும்போது கடுமையான விமர்சனங்கள் இருந்தன. காலப்போக்கில் விமர்சனங்கள் காணாமல்போய்விட்டன. என் ஓவியங்களை ஏற்றுக்கொண்டனர். ஓவியம் புரிந்தவர்கள் வைக்கும் விமர்சனங்களை திறந்த மனதோடு ஏற்றுக்கொள்வேன். புரியாதவர்கள் வைக்கும் விமர்சனங்களை குழந்தைகள் செய்யும் தவறுகள் என்று கடந்து சென்றுவிடுவேன்.

5. தற்போது இந்த ஓவியக் கண்காட்சி தொடர்பான விவரங்களை பகிர்ந்துகொள்ளுங்கள்.

சந்துரு: ‘சுய தோற்றத்தில் பெண்கள்’ (Women in Profile) எனும் தலைப்பில் நடக்கவிருக்கும் இந்த ஓவியக் கண்காட்சியை நம் நாட்டு ஓவியர் திரு ஸ்டீபன் மேனன் தலைமையில் இயங்கும் ‘ஆர்ட் வாய்ஸ்’ (Art Voice) எனும் குழுமம் ஏற்று நடத்துகிறது. வளர்ந்து வரும் மலேசிய இந்திய ஓவியர்களுக்கு உதவும் நல்ல நோக்கத்தோடு ‘ஆர்ட் வாய்ஸ்’ எனும் இந்த குழுமத்தை தொடங்கியுள்ளார் திரு ஸ்டீபன் மேனன். ஓவியர்களுக்கு வழிகாட்டியாக பல பெரும் உதவிகள் செய்து வருகின்றார். இவருக்கு நானும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். Art Voice Gallery 28, Jalan Kovil Hilir, Sentul, Kuala Lumpur எனும் இடத்தில் 13 நவம்பர் 2022 ஞாயிறுக்கிழமை இரவு 8.00 மணிக்கு திறப்பு விழா காணும் என் ஓவியக்கண்காட்சிக்கு அனைவரும் வந்து கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றேன்.


6. ஓவியத்துறையில் நீங்கள் சாதிக்க நினைப்பது என்ன?

சந்துரு: நமது நாட்டில் ஒரு பாரபட்சம் இருக்கிறது. தேசிய கலைஞர்கள் என்று தேசியமொழி பேசும் கலைஞர்கள் மட்டுமே அங்கீகரிக்கப்படுகிறார்கள். அனைத்துக் கலைஞர்களும் தேசிய ரீதியில் அங்கீகரிக்கப்பட வேண்டும். நம் நாட்டில் தமிழ் பத்திரிகையில் வேலை செய்து காணாமல் போன தலைசிறந்த ஓவியர்களை நான் அறிவேன். நான் உட்பட அந்த தூண்டிலில் சிக்கியவர்கள்தான். ஓவியர்களாக மிளிர நினைப்பவர்கள் பக்க வடிவமைப்பில் தொலைந்து போகிறார்கள். இந்த மரபை நான் உடைத்து தாண்டிக்கொண்டிருக்கிறேன். மலேசியாவைத் தாண்டி வெளிநாடுகளிலும் என் ஓவியங்கள் அறியப்பட வேண்டும்.  அதற்கான முயற்சிகள் தீவிரமாகிகொண்டிருக்கின்றன... 

நன்றி :  தமிழ்மலர் 13/11/2022