வியாழன், 9 டிசம்பர், 2021

'ஜெய்பீம்' படம் அல்ல பாடம்


கடந்த ஞாயிற்றுக்கிழமை அண்மையில் மனதை வெகுவாக பாதித்த சிலத் திரைப்படங்கள் குறித்து உரையாடப்பட்டது. அந்த உரையாடலுக்கான நோக்கம் என்ன? ஏன் ஜெய்பீம், அசூரன், கர்ணன் மற்றும் பரியேறும் பெருமாள் மாதிரியான திரைப்படங்களை படமாக மட்டும் அல்லாமல் ஒரு பாடமாக பார்க்க வேண்டும்? என்றக் கேள்விகளுக்கு விடைக்காணும் நோக்கத்தில் அந்த உரையாடல் கூகை பதிப்பக நிறுவனம் மேற்கொண்டது. 

ஜாதிக் குறித்த உரையாடலை தொடங்கினாலே “நமது நாட்டில் யாருங்க ஜாதி பார்க்குரா?” என்ற  இந்த வார்த்தை ஒரு முறையாவது நமது வாழ்க்கையில் சந்தித்து கடந்திருப்போம். ஆனால், ஜாதியை ஏதாவது ஒரு வகையில் ஒவ்வொருவரும் ஏதாவது ஒருவகையில் சந்தித்துக்கொண்டே இருப்போம். சிலருக்கு அது ஜாதி பெருமையாகவும் சிலருக்கு அது சங்கடம் ஏற்படுத்தும் வகையிலும் இருந்திருக்கலாம். எது எப்படி இருந்தாலும் யாருங்க நம்ம நாட்டில் ஜாதியை பார்க்கிறா என்பவர்களுக்கான பதில் ஊமையாக இருக்கும் இம்மாதிரியான நேரடி சாட்சிகள் தான்.

பரியேறும் பெருமாள் திரைப்படம் நேரடியாக ஜாதி அடுக்குமுறையை பேசும்போது ஜெய்பீம் பூர்வக்குடிகளின் நிரந்தரமற்ற வாழ்க்கையை பேசுகிறது. எனக்கு இந்த இரண்டு விஷயங்களிலும் நேரடியாகவே பல அனுபவங்கள் இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் நிறைய பூர்வக்குடிகளின் பிரச்னைகளை நான் நேரடியாகவும் தகவல்கள் சேகரித்தும் எழுதியிருக்கிறேன், பாதிக்கப்பட்டிருக்கும் பூர்வக்குடிகளை நேரடியாகவும் சந்தித்து பேசியிருக்கிறேன். பெருவாரியாக மலேசிய பூர்வக்குடிகள் எதிர்கொள்ளும் மிகப் பெரிய பிரச்னை அவர்களின் வனத்தை ஆக்ரமிப்பதுதான். போலீஸ் கஸ்டடியில் பூர்வக்குடிகள் இறந்த பதிவுகள் குறித்து பெரியதாக அறிய முடியவில்லை என்றாலும்  துஷ்பிரயோகம், துன்புறுத்தல் நடந்ததற்கான பதிவுகள் இருக்கிறது. அதுவும் தீபகற்பத்தைவிட சபா-சரவாக் மாநிலங்களில் அது மிகுதியாகவே இருக்கிறது.


பூர்வக்குடிகள் விவகாரத்தை மட்டும் தனியே எடுத்து பார்க்கும்போது மாநில அரசாங்கமோ, அல்லது மத்திய அரசாங்கமோ அவர்களை அவர்களின் சுயத்தை இழப்பதற்கான வேலையைத்தான் செய்கின்றன. அவர்களின் காடுகளை பிடுங்குவதிலிருந்து, அவர்களின் வாழ்வாதாரத்தை நசுக்குவதிலிருந்து, அவர்கள் பூர்வக்குடிகள் என்ற அடையாளத்தை மறக்கடித்து மதச்சாயத்தை பூசி அவர்களுக்கு பண ஆசையை ஏற்படுத்தி அரசாங்கம் எஜமானர்களாகவும் சில சமையம் கடவுகளாகவும் நடந்துக்கொள்ளும்போது ஒவ்வொரு பூர்வக்குடியின் நிலை சொல்லில் விவரிக்க முடியவில்லை.

உயிரை பறிப்பதும், அடித்து காயத்தை ஏற்படுத்துவதும் மட்டும் கிரைம் அல்ல என்பது பலருக்கு புரிவதும் இல்லை. காடுகளை அழைப்பது, ஓராங் அஸ்லியின் (பூர்வக்குடியின்) வாழ்வாதாரத்தை பறிப்பது, அவர்களின் அசல் வாழ்க்கையை பிடிங்குவது இதெல்லாம் கிரைம் இல்லையா? 

பரியேறும் பெருமாள், அசூரன் உள்ளிட்ட திரைப்படங்களில் வைக்கப்படும் மிக வலிமையான செய்தி கல்வியாகும். ஒடுக்கப்படும் சமூகத்திற்கான ஒரே வலூவான ஆயிதமாக இருப்பது கல்விதான். அந்தக் கல்வி பூர்வக்குடிகளுக்கும் அவசியமானது. மலேசிய பள்ளிக்கூடங்களில் பகடிவதைக்கு ஆளாகும் பூர்வக்குடி குழந்தைகளை மலேசிய சமூகம் கண்டுக் கொள்வதே இல்லை. அதன் காரணத்தினால், கல்விக்கு முடிவு கட்டிவிட்டு கூலி வேலைக்குச் செல்லும் மாணவர்கள் ஏராளம் உண்டு. மூடப்படும் பூர்வக்குடி மாணவர்கள் கற்கும் பள்ளிக்கூடங்கள் அதற்கு சாட்சியாகும்.


நாடோடிகளாக வாழவேண்டிய பூர்வக்குடி சமூகம், பின்னாளில் ஒரே இடத்தில் தேக்கமடையும் சூழல் ஏற்பட்டது. அதை அவர்கள் ஏற்றுக்கொண்டு தங்களின் இனக் குழுவினரோடு பல ஆண்டுகள் வாழ்ந்த நிலப்பரப்பை பூர்வீக நிலமாக வரையறுக்கிறார்கள். முன்னோர்களின் ஆவி மற்றும் ஆவி வழிபாடுகளில் நம்பிக்கைக்கொண்டிருக்கும் பூர்வக்குடி மக்கள், அந்த நிலப்பரப்பை கைவிடுதல் என்பது கனவிலும் நினைத்துப் பார்க்கமுடியாத ஒரு விஷயம். ஆனால், நமது நாட்டில் அது சர்வசாதாரண ஒரு விஷயம்.

2020 முதல் மிகக் கடுமையாக இருந்த கோவிட் பெருந்தொற்று நெருக்கடியிலும் காப்ரேட் நிறுவனங்களின் ஆதிக்கத்தில் தன் சொந்த நிலத்திலிருந்து விரட்டப்பட்ட பூர்வக்குடிகள்

கதைகள் வெறும் கதைகள் அல்ல. தன் பூர்வீக நிலத்தை விட்டுத்தர முடியாமலும், காப்ரேட் நிறுவனங்களிடமிருந்து மீட்கவும் முடியாமலும், போராட்டம் நடத்தி இறுதியில் கைது செய்யப்பட்டு போலீஸ் நிலையம் கொண்டுச் செல்லப்பட்ட ஓராங் அஸ்லியின் சோகக் கதைகள் ஏராளம். மலேசிய மக்கள் ஒரு செய்தியாகக்கூட அவற்றை அறிந்திருக்கவில்லை.

ஜெய்பீம் திரைப்படத்தில் சந்துரு என்கிற ஒரு வக்கீல் சட்டரீதியாக நீதிக்காக போராடுவதைப் பார்த்தோம். ஆனால், சந்துரு ஒருவரால் மட்டுமே நீதிக் கிடைத்ததா என்றால் இல்லை. கம்யூனிஸ் தோழர்கள் போராட்டம், வினியோகிக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்கள், பண ஆசைக்கு மயங்காத செங்கேனி, ராஜக்கண்ணுவை கொன்று புதைத்த இடத்தில் தேனீர்கடை வைத்திருந்தவர் என சில முக்கியசாட்சிகளால்தான் இந்த வழக்கை வெற்றிக்கொள்ள முடிந்தது. நீதிகிடைப்பதற்கும் துணையாக இருந்தது.

மலேசிய சூழலில் இம்மாதிரியான களப்பணியை பி.எஸ்.எம் கட்சி மட்டுமே முன்னெடுக்கிறது. வாதியிடம் அவர்கள் பணத்தை கேட்பதில்லை. பரிசாக கொடுக்கிறேன் என்றாலும் அதை அவர்கள் ஏற்பதில்லை. வழக்குக்கு அல்லது அந்தக் களப்பணிக்கு தேவையான செலவுகளை அவர்களே ஏற்றுக்கொள்கிறார்கள். வாதிக்கு வசதியில்லாத பட்சத்தில் அவர்களின் செலவையும் கழகமே ஏற்கிறது. தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட தொழிலாளர் வழக்குகளை முன்னெடுக்கும்போதும் இதே நிலையைத்தான் கட்சி/கழகம் கையாள்கிறது. வழக்குகளில் வெற்றி பெற்றால், தொழிலாளர்களே அன்பளிப்பாக ஒரு சிறுதொகையை அளிக்கிறேன் என முன்வந்தாலும் கழகம் அதை ஏற்பதில்லை, இன்னும் சொல்லப்போனால் தேனீர் செலவைக்கூட வாதியை ஏற்கவிடுவதில்லை. என்றால் இடதுச்சாரி தோழர்களின் நிலைப்பாட்டை நீங்களே அறிந்துக்கொள்ளுங்கள்.

உலகம் முழுக்க செங்கொடியை ஏற்றுக்கொண்டவர்களின் நிலைப்பாடு ஒரேநேர்கோட்டில் பயணிப்பதும், அதன் தார்மீகக் கடமை மற்றும் பொறுப்பிலிருந்து அவர்கள் மீளாததும் செங்கொடியின் பலத்தை நமக்கு உணர்த்துகிறது.

எழுத்தில் ஒருசிலருக்கு புரியவைக்க முடியாத சத்தியத்தை, அறத்தை, தத்துவத்தை, படிப்பினையை, காட்சிகளால் புரியவைக்க முடியும் என்பதற்கும் பேசுபொருளாக ஆக்க முடியும் என்பதற்கும் இம்மாதிரியான திரைப்படங்கள் உதாரணமாக இருக்கின்றன. மலேசிய மண்ணிலும் இம்மாதிரியான திரைப்படங்கள் வரவேண்டும் என்பது நமது ஆவலும் கூட.

கலந்துரையாடலில் அனைவரும் அவர் அவர் அனுபவத்தோடு கலந்துரையாடியது மிகச் சிறப்பாக இருந்தது. கிட்டத்தட்ட அனைவருமே ஒத்த சிந்தனையோடு இருப்பதும் மாற்றுச் சிந்தனைக் குறித்த கருத்துப் பகிர்வுகளை வெளிப்படுத்தியதும் சிறப்பாக அமைந்ததோடு ஒடுக்குமுறையை அவரவர் எப்படி எதிர்கொள்கின்றனர் மற்றும் அதில் அவர்களின் புரிதலையும் விவாதிக்க முடிந்தது. மொத்ததில் விவாதத்திற்கு எடுத்துக்கொண்ட திரைப்படங்கள் மலேசிய சூழலோடு எப்படி பொருந்தி போகிறது என்பதையும் அவதானிக்க முடிந்தது.  

-யோகி    

நன்றி: மலேசியாகினி இணையசெய்தி   

 

புதன், 24 நவம்பர், 2021

நாகேந்திரனுக்கு தூக்குக்கயிறிலிருந்து கருணை கிடைக்காதா?

 

கருணை மன்னிப்பு கோரி தூக்குக்கயிறுலிருந்து விடுதலை கொடுக்க வேண்டும் என நாட்டில் பரபரப்பாக பேசப்பட்டும் விவாதிக்கப்பட்டும் வரும் ஒரு வழக்கு நாகேந்திரன் என்ற இளைஞர் சம்பந்தப்பட்ட போதைபொருள் கடத்தல் வழக்காகும். போதை பொருள் சம்பந்தப்பட்ட குற்றங்களுக்கு மிகக் கடுமையான தண்டனையை கொடுக்கும் ஒரு நாடாக சிங்கப்பூர் இருந்து வருகிறது. தவிர அதிகமாக தூக்கு தண்டனை வழங்கும் நாடுகளில் சிங்கப்பூரும் மலேசியாவும் முன்னணியில் இருப்பது கவலையளிக்கும் ஒரு விஷயமும்கூட. 

 நாகேந்திரன் தூக்குக்கயிற்றில் எப்படி சிக்கினார்?

2009 ஆம் ஆண்டில், அப்போது நாகேந்திரன்  தர்மலிங்கத்திற்கு  21 வயது. எல்லா இளைஞர்களையும் போல இவர் இயல்பானவர் அல்ல. அவருடைய யோசிக்கும் திறன் (IQ)  இயல்பைவிட  69  குறைவாக இருப்பதாக மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.  இப்படி இருக்கும் பட்சத்தில் இது சர்வதேச அளவில் அறிவுசார் குறைபாடு என அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஊனமுற்றவராக இருந்தாலும் நாகேந்திரன்  ஜோகூர் பாருவில் பணிபுரிந்துவந்திருக்கிறார்.       

இந்தச் சூழலில் உடல்நிலை பாதிக்கப்பட்ட அவரின்  தந்தைக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய காரணத்தினால், பணத் தேவை இருந்திருக்கிறது.   இதனால் அவர்  “மிஸ்டர்  கே"  என்பவரிடமிருந்து  RM500 கடன் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நாகேன் சிங்கப்பூருக்கு "ஏதாவது" கொண்டுவர வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் கடனை வழங்க   “மிஸ்டர்  கே"   ஒப்புக்கொண்டார். ஆனால், இந்த நிபந்தனையை  நாகேன் மறுத்துவிட்டார். இதனால் அவர் தாக்கப்பட்டதோடு அவரது காதலிக்கும் கொலை மிரட்டல் போயிருக்கிறது. மிகவும் நெருக்கடியில் சிக்கிய அவர் இறுதியாக மிஸ்டர் கே-யின் நிபந்தனையை ஒப்புக்கொள்ள வேண்டியிருந்தது.

நாகேன் இறுதியில் சிங்கப்பூருக்குள் நுழைந்தார். அவரது காலில் 42.72 கிராம் (3 டீஸ்பூன்களுக்கும் குறைவான)  'Diamorphine' 'டயாமார்ஃபைன்' (இதிலிருந்து ஹெராயின் தயாரிக்க முடியும்) என்ற தடை செய்யப்பட்ட  

 போதைப்பொருள்  கட்டி  இருந்ததை சிங்கப்பூர் அமலாக்க அதிகாரிகள் கண்டுபிடித்து நாகேனை  கைது செய்தனர்.  இதன் விளைவாக அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இது தொடர்பான விசாரணையின் போது

தனியார் மருத்துவ மனநல மருத்துவரான டாக்டர்  உங் எங் கேன், நாகேந்திரன் கைது செய்யப்படும் போது பகுத்தறிவுத் தீர்வுகள் மற்றும் முடிவுகளை எடுக்க இயலாத அளவுக்கு மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார் என்று மருத்துவ அறிக்கையை கொடுத்திருந்தார். 69 புள்ளிகள் மட்டுமே அவருக்கு சிந்திக்கும் ஆற்றல் உள்ளது. இந்தப் 10 ஆண்டுகள் சிறை தண்டனையில் அது இன்னும் மோசமான நிலைக்கு போய்விட்டிருக்கிறது.  சிங்கப்பூர் சட்டத்தின்படி, இந்த அறிக்கை அவரை தூக்கு கயிற்றிலிருந்து விடுவிக்க போதுமானதாக  இருந்திருக்க வேண்டும்.  ஆனால், அப்படி நடக்கவில்லை. உண்மையில் அவர் இந்தக் குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் அல்லது விடுவித்திருக்க வேண்டும்.  ஆனாலும் சிங்கப்பூரின் பிடிவாதக் குணமானது 10 ஆண்டுகள் கடந்தபின்னும் நாகேந்திரன் மீது எந்த இரக்கத்தையும் கொண்டுவரவில்லை. அவருக்கு கடந்த 2019-ஆம் ஆண்டு தூக்குதண்டனை உறுதிசெய்யப்பட்டது.  

அக்டோபர் 2021-ல் தூக்கு தண்டனை நிறைவேற்றும் தேதியை குடும்பத்தாரிடம் தெரிவிக்கப்பட்டது. கடந்த நவம்பர் 10-ஆம் தேதி நாகேனுக்கு தூக்குதண்டனை நிறைவேற்ற இருந்த வேளையில், அவருக்கு ‘கோவிட் 19’ பெருந்தொற்று கண்டிருந்த காரணத்தினால் அத்தண்டனையை தற்காலிகமாக நிறுத்திவைக்க சிங்கப்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 


மலேசிய பிரதமர் உட்பட பல சமூக அமைப்புகளும் கருணையின் அடிப்படியின் நாகேந்திரனை தூக்குக்கயிறிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று தொடர்ந்து சிங்கப்பூர் அரசாங்கத்திடம் கேட்டுவருகிறார்கள். இதற்கிடையில் கடந்த நவம்பர் 18-ஆம் தேதி மலேசிய சோசலிசக் கட்சியின் ‘வெட்டிப்பேச்சு’ என்ற இணைய கலந்துரையாடலில் “போதை பொருள் கடத்தலுக்கு தூக்கு தண்டனைதான் சரியான தீர்வா?” என்ற தலைப்பில் பேசப்பட்டது. அந்தக் கலந்துரையாடலில் தூக்குதண்டனை மற்றும் போதைபொருள் கடத்தலில் சிக்கிக்கொள்பவர்கள் தொடர்பாக பல தகவல்கள் பகிர்ந்துகொள்ளப்பட்டன. சிங்கப்பூர் சாங்கிச் சிறைச்சாலையில் இருக்கும் நாகேந்திரனுக்காக சட்ட உதவி மேற்கொள்ளும் மலேசிய வழக்கறிஞர் சுரேந்திரன் மற்றும் சிங்கப்பூர் சமூக ஆர்வளரான வி.ராஜாராம் அந்தச் சந்திப்பில் பேசினர்.

சிங்கப்பூர் சட்டப்படி 15 கிராம் போதைப்பொருளை நாட்டிற்குள் கொண்டு வந்தது நிறுபிக்கப்பட்டால் கட்டாய மரணதண்டனையை விதிக்க சட்டம் வகை செய்கிறது. தற்போதுதான் அதில் சிறுதிருத்தம் செய்திருக்கிறார்கள். என்றாலும் போதைப்பொருள் கடத்தும் கழுதைகளாக  ஏழைகளையும், பணத் தேவை உள்ளவர்களையும், அப்பாவிகளையும் ஒரு கும்பல் குறிவைத்து, மிக சாமர்த்தியமாக அவர்களின் உயிரை பணையம் வைப்பதுடன், இதில் சிக்ககொண்டால் அக்கும்பல் தப்பிகொள்வதுடன், மாட்டிகொண்டவர் தூக்குகயிறுக்கு இரையாகிடுகிறார். இந்தப் பிரச்னையை ஆராய வேண்டும் என சிங்கப்பூர் ஆர்வளரான வி.ராஜாராம் பேசியது கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

தூக்குதண்டனையை நிறைவேற்றும் நாடுகள்..


போதைப் பொருள் கடத்தலுக்கு 32 நாடுகள் மரணதண்டனையை நிறைவேற்றுகின்றன. என்றாலுகூட அமெரிக்கா, கியூபா உள்ளிட்ட 14 நாடுகளில் அத்தண்டனை அமலில் இருந்தாலும் நடைமுறைபடுத்தவில்லை. சீனா, ஈரான், சவூதி, அரேபியா, வியட்நாம், மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய 6 நாடுகளில் மிக அதிகமாக போதைபொருள் கடத்தல் குற்றவாளிகளை வழக்கமாக தூக்கில்போடுகிறார்கள். 2020-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி ஆக அதிகமாக தூக்குதண்டனை கொடுத்த நாடாக வியட்நாம் இருக்கிறது. சுமார் 79 பேருக்கு இரக்கமே இல்லாமல் தூக்குதண்டனையை அந்த நாடு விதித்திருக்கிறது. அடுத்த நிலையில் இந்தோனேசியா 77 பேருக்கும் அதற்கு அடுத்த நிலையில் மலேசியா 25 பேருக்கும், லாவுஸ் 13 பேருக்கும் தாய்லாந்து 8 பேருக்கும் தூக்குதண்டனையை விதித்திருக்கிறார்கள்.

ஆனால்,ஒவ்வொரு ஆண்டும் வெளிநாடுகளில் குறிப்பாக சிங்கப்பூரில் போதைப் பொருள் கடத்தல் குற்றத்திற்காக மலேசியர்கள் அதிகமானோர் கைதுசெய்யப்படுகின்றனர். சிலரின் கவனக்குறைவை பயன்படுத்தி அவர்கள் அறியாமலேயே போதைபொருளை அவர்களின் கைப்பையிலோ அல்லது வாகனத்திலோ வைத்துவிட்டு, அதிர்ஷ்டத்தின் அடைப்படையில் பொருளை கடத்துவது. சிலரின் குடும்ப சூழல் வறுமையை பயன்படுத்தி சூழ்நிலை கையாக்குவது. இவ்வகைக் கடத்தல்காரர்களைதான் போதைபொருள் கழுதை என்று உவமை சொல்கிறார்கள். துரதுஷ்டவசமாக இவ்வாறுறான குற்றவாளிகளில் மலேசியா சிங்கப்பூர் நாடுகளில் அதிகமாக இந்தியர்களே சிக்கிகொள்கிறார்கள்.

அதேவேளையில் உலகம் முழுவதுமே ஆயிரங்கணக்கான மக்கள் போதைப்பொருள் குற்றங்களுக்காக மரண தண்டனையை எதிர்கொண்டிருக்கின்றனர். போதைப்பொருளை பயன்படுத்துபவர்களோ மிக அதிகமாக ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவது அதிர்ச்சியளிக்கும் வேளையில் 2030- ஆம் ஆண்டை எட்டும்போது உலக மக்களிடையே போதைப்பொருளை பயன்படுத்துவது 11 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டிருக்கும் என்று ஓர் ஆய்வு சொல்கிறது. போதைப்பொருள் பயன்பாட்டினால் அதிகமாக பரவும் நோயாக எச்.ஐ.வி-யும், ஹெபடைடிஷ் சி-யும் இருக்கிறது.  

நாகேந்திரன் வழக்கை பொறுத்தவரை அவருக்கு தூக்கு தண்டனை வழங்குவது ஞாயம் இல்லாத ஒன்று என்றும் சட்டத்திற்கு புறம்பானது என்றும் சிங்கப்பூர் - மலேசிய மனிதாபிமானிகள் குரல் எழுப்பிவருகிறார்கள். சுயநினைவோடு இல்லாத ஒருவரை தனக்கு என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ளாத ஒருவரை தூக்கிலிடக்கூடாது என்று  மலேசியர்கள் மட்டுமல்ல சிங்கப்பூர் மக்களும் நாகேந்திரனுக்காக  குரல் எழுப்பிகொண்டிருக்கின்றனர். அவருக்காக பணம் வசூல் செய்து அதை இந்த வழக்குக்காக பயன்படுத்தியும் வருகின்றனர். ஆனாலும், தூக்கில் ஏற்றியே தீருவோம் என பிடிவாதத்தை கடைப்பிடிக்கும் சிங்கப்பூர் அரசாங்கம், மனிதாபிமான அடிப்படையில் கொஞ்சம் மனது இறங்க வேண்டும் என இருநாடுகளின் மனித உரிமை ஆர்வளர்கள் காத்திருக்கிறார்கள். நாமும் அதையே வேண்டுகிறோம்…

நன்றி தமிழ்மலர் 28/11/2021

செவ்வாய், 16 நவம்பர், 2021

இளம் தேசிய போராட்டவாதி ரோஸ்லி டோபி (Rosli Dhoby)

 

ரத்தம் சிந்தாமல் பெறப்பட்ட சுதந்திரம் என்று மலேசிய சுதந்திரம் குறித்து நான் படித்ததுண்டு. உண்மை அப்படியல்ல என்பது நான் சில கேள்விகளுக்கு விடைகண்டதின் மூலமாக அறிந்துகொண்டேன். சில சரித்திரங்களை நம்மால் வெளிப்படையாக பேசமுடிகிறது. சில சரித்திரங்களுக்கு பேச்சு சுதந்திரங்கள் மறுக்கப்படுகிறது. ஊடக சுதந்திரமும் சில வேளை மறுக்கப்படும் பட்சத்தில் நான் என் எழுத்து சுதந்திரத்தை சரியாக பயன்படுத்திகொள்ள நினைக்கிறேன்.

இந்தக் கட்டுரையை கடந்த வாரக் கட்டுரையின் தொடர்ச்சியாக கொள்ளலாம். பில்லா அரண்மனை குறித்தக் கட்டுரையில் 2009-ஆம் ஆண்டு அந்த அரண்மனையில் தொடராக எடுக்கப்பட்ட “வர்க்கா தெராகிர்தொலைக்காட்சி நாடகம் குறித்து கூறியிருப்பேன். அந்த தொடர் நாடகம் சரவாக் மாநிலத்தின் தேசிய போராட்டவாதியான ரோஸ்லி டோபியின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஒரு உண்மை சம்பவமாகும். 

யார் அந்த ரோஸ்லி டோபி?

18 மார்ச் 1932-ஆம் ஆண்டு சிபுவில் உள்ள கம்போங் பூலோ எனும் இடத்தில் ரோஸ்லி டோபி பிறந்தார். உடன்பிறப்புகள் 4 பேரில் இவர் இரண்டாவது குழந்தை. இவரின் தந்தை டோபி இந்தோனேசியாவின் ரேடன் வம்சாவளியைச் சேர்ந்தவர் என்றும் இவரின் தாயார் ஹபிபா முகா வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. ரோஸ்லி டோபிக்கு ஃபாத்திமா என்ற தமக்கையும், ஐனி என்ற தம்பியும் இருந்தனர்.

யாரையும் எளிதில் அனுகக்கூடியர் என்று ரோஸ்லி டோபியின் குணாதிசயம் குறித்து அவர்கள் நண்பர்கள் கூறினாலும், அதிகம் பேசாதவர்; அமைதியானவர் என்றும் அவரைக் குறித்து கூறுகிறார்கள்.


ரோஸ்லி டோபியின் தொடக்க காலம்

ரோஸ்லி சுயமாக இயங்ககூடியவர். பெற்றோரை மதித்து நடப்பவர்.  யாரையும் கஷ்டப்படுத்தமாட்டார். அவர் ஒரு கவிஞரும் கூட. அவரின் கவிதைகள் சரவாக் இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. எப்போதும் சிரித்தமுகத்துடன் இருப்பவரான ரோஸ்லி ஓர் ஆசிரியராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். முன்னதாக அவர் சரவாக் பொதுப்பணிதுறையிலும் உத்துசான் சரவாக் பத்திரிக்கை துறையிலும் பணிபுரிந்தார். இந்தக் காலக்கட்டத்தில்தான் அவர் ஒரு தேசியவாதியாகவும் கவிஞராகவும் தன்னை உயர்த்திக்கொண்டார். லிட்ரோஸ் எனும் புனைப்பெயரில் சில புரட்சிமிகு கவிதைகளை எழுதியவாரன ரோஸ்லி 28/2/1948 அன்று உத்துசான் சரவாக் இதழில் வெளியிடப்பட்ட ‘panggilan mu yang suci' ' என்ற தலைப்பில் எழுதிய கவிதை அவரை பெரிய அளவில் பேச வைத்தது. அதோடு அக்காலக்கட்டத்தில் புனைப்பெயர்களின் பயன்பாடு பரவலாக இருந்தது, ஏனெனில் பிரிட்டிஷ் காலனித்துவ அதிகாரிகள் அவர்களுக்கு எதிராக வார்த்தைகளை பரப்புவதற்கான எந்தவொரு முயற்சியையும் தீவிரமாக கண்காணித்தனர்.

இந்தக் காலக்கட்டத்தில்தான் சிரத் ஹாஜி யமன் என்பவரின் தலைமையில் இயங்கிக்கொண்டிருந்த சிபு மலாய் இளைஞர் இயக்கத்தில் ரோஸ்லி சேர்ந்தார். 1948-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13-ஆம் தேதி ‘ருக்கூன் 13’ இயக்கத்தில் தன்னையும் ரோஸ்லி இணைத்துக்கொண்டார். ‘ருக்கூன் 13’ இயக்கம் ஒரு ரகசிய இயக்கமாகும். ரோஸ்லியின் நீண்ட நாள் நண்பரான ஆவாங் ரம்லி மூலம் அவ்வியக்க செயல்பாடுகள் குறித்து ரோஸ்லி அறிந்துக்கொண்டார். அன்றிலிருந்துதான் பிரிட்டிஷ்-க்கு எதிரான அவரின் போராட்டம் மேலும் தீவிரமடைந்தது.


‘ருக்கூன் 13’ ரகசிய இயக்கம் உருவானது எப்படி?

ப்ரூக்ஸ் அரச குடும்பம் 1841 முதல் சரவாக்கை கைப்பற்றி நீண்ட நாள் ஆட்சி செய்து வந்தது. இந்த குடும்பம்தான் 1941-ல் சரவாக் அரசியலமைப்பின் மூலம் சரவாக்கிற்கு சுதந்திரமும் அளித்தது. இருப்பினும், சார்லஸ் வைனர் ப்ரூக்ஸ் 1946 பிப்ரவரி 8 அன்று ஆங்கிலேயரிடம் சரவாக்கை காலனியாக ஒப்படைக்க அரசியலமைப்பை மீறி செயல்பட்டார்.

ப்ரூக்ஸ் குடும்பத்தால் சரவாக்கை மேம்படுத்த முடியவில்லை, அதே வேளையில் சரவாக்கும் சுயராஜ்யத்திற்கு தன்னை தயார்படுத்தியது; இந்நிலையில் சரவாக்கை கைப்பற்றுவதற்கு ஆங்கிலேயர்களின் அழுத்தம் ப்ரூக்ஸ் குடும்பத்தினருக்கு அதனை அவர்கள் கையில் ஒப்படைக்க ஒரு காரணமாக இருந்தது.

இந்த நடவடிக்கையானது சரவாக் சரணடைதலை கடுமையாக எதிர்க்கும்  எதிர்வினைக்கு வழிவகுத்தது. இந்த நடவடிக்கையை எதிர்க்கவே உள்ளூர்வாசிகளால் ‘சரவாக் சரணடைதல் எதிர்ப்பு இயக்கம்’ தொடங்கப்பட்டது.

பிரிட்டிஷ்காரர்களின் நடவடிக்கையாலும் ஆதிக்கத்தாலும் கொதிப்படைந்திருந்த ரோஸ்லி டோபி, ‘சிபு மலாய் இளைஞர் இயக்கம்’ எனப்படும் சரணடைதலுக்கு எதிரான குழுவில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

இந்த இயக்கத்தில் இருந்து, 13 உறுப்பினர்கள்தான் இறுதியில் ‘ருக்கூன் 13’ என அழைக்கப்படும் ஒரு இரகசிய குழுவை உருவாக்கினர். ஆரம்பத்தில் அப்போதைய பிரிட்டிஷ் கவர்னரான Charles arden-chake-கை படுகொலை செய்ய அவர்கள் திட்டமிட்டனர், ஆனால் இந்தத் திட்டம் செயலாக்குவதற்கு முன்பே அவர் கானாவுக்கு மாற்றப்பட்டார்.


Duncan Stewart படுகொலை

Charles arden-chake-கை அடுத்து சரவாக்கின் இரண்டாவது கவர்னராக Sir Duncan Stewart 3.12.1949 அன்று பதவிக்கு வந்தார். அவர் பதவி ஏற்று முதல்முறையாக சரவாக் மக்களை பார்வையிட அதிகாரப்பூர்வ வருகையை மேற்கொண்டார். அன்றைய தினம் ருக்கூன் 13 இயக்கத்தின் தோழர்களான ரோஸ்லி டோபி, மோர்ஷிடி சிடேக், அவாங் ரம்லி மற்றும் புஜாங் சொத்தோங் ஆகியோர் களத்தில் நின்றனர். பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு எதிரான அவர்களின் திட்டம் தொடங்கியிருந்தது.

பதிவின் படி, புகைப்படம் எடுப்பதற்காக ரோஸ்லி கவர்னரோடு நிற்க மோர்ஷிடி சிடேக் புகைப்படம் எடுப்பது மாதிரி கவனத்தை தம் பக்கம் ஈர்க்கும் தருணத்தில், சந்தர்ப்பம் பார்த்து, விஷம் தடவிய கத்தியை ரோஸ்லி கவர்னரின் வயிற்றில் குத்திவிடுகிறார். இரண்டாவதாக கத்தியால் குத்துவதற்கு முயற்சிக்கும்போது அருகில் இருந்த போலீஸ் அதிகாரி அம்முயற்சியை தடுத்துவிடுவதோடு களத்திலேயே கொலை முயற்சயில் ஈடுபட்ட இருவரையும் போலீஸ் களத்திலேயே கைது செய்கின்றனர். மோசமான நிலையில் Sir Duncan Stewart கூச்சிங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறார். பின்பு தீவிர சிகிச்சைக்கு அவர் சிங்கப்பூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாளும் அவரை காப்பாற்ற முடியவில்லை. மரணமடைந்துவிடுகிறார்.


சம்பவத்திற்கு பிறகு…

ரோஸ்லி டோபி, மோர்ஷிடி சிடேக் ஆகியோரின் கைதுக்குப் பிறகு ‘ருக்கூன் 13’ இயக்கம் குறித்து பிரிட்டிஷ் அதிகாரிகள் விசாரனையை தொடங்கினர். அதன்பிறகு அவாங் ரம்லி மற்றும் புஜாங் சொத்தோங் இருவரும் கைது செய்யப்பட்டார்கள். Sir Duncan Stewart படுகொலையை மிகவும் கடுமையாக பார்த்த பிரிட்டிஷ் அதிகாரிகள் ‘ருக்கூன் 13’ இயக்கத்தினர் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இந்தத் திட்டத்தில் ஈடுபடும்போது ரோஸ்லிக்கு வயது 17-தான் என்றாலும் அவரை வயது குறைந்தோர் குற்றவாளியாக பிரிட்டிஷ் அதிகாரிகள் விசாரிக்கவில்லை. விசாரணைக்குப் பிறகு Sir Duncan Stewart கொலையில் தொடர்பு இருக்கும் அனைவருக்கும் தூக்கு தண்டனையை கொடுத்தது. கூச்சிங் சிறைச்சாலையில் சில மாதங்கள் தண்டனையை அனுபவித்து மார்ச் 2, 1950 இல் ரோஸ்லி தூக்கிலிடப்பட்டார்.


அவர் சிறைவாசம் அனுபவித்த காலத்தில்தான் தனது பெற்றோருக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில் அவர் எழுதிய ஒரு வரிதான் ‘வர்க்கா தெராக்ஹிர்’ (கடைசி கடிதம்). இந்த வார்த்தையைத்தான் 2009-ஆம் ஆண்டு போராட்டவாதி ரோஸ்லி டோபி குறித்து எடுக்கப்பட்ட தொலைக்காட்சி தொடருக்கும் வைக்கப்பட்டது. குறிப்பிட்ட தொடரில் 60 சதவிகிதம் மட்டுமே துல்லியமானது என்றும் கவர்னரின் வயிற்றில் குத்திவிட்டு  ரோஸ்லி தப்பி ஓடுவதைக் காட்டும் காட்சி உள்ளிட்டது வரை கிட்டதட்ட  40% உண்மைக்கு புறம்பாக காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கிறது என்று இன்றும் உயிரோடு இருக்கும் ரோஸ்லியின் சகாக்கள் கூறியிருக்கின்றனர். அவர்களின் கூற்றுக்கு ஆதாரங்களையும் அவர்கள் கையில் வைத்திருக்கின்றனர் என்பதும் குறிப்பிடதக்கது.


ரோஸ்லி டோபி தூக்கில்போடுவதற்கு முன்பு, தூக்கிலிடுவதற்கான தேவையான பொருட்கள் அனைத்தும் சிங்கப்பூரிலிருந்து வரவைக்கப்பட்டிருந்தன. அப்போது கூச்சிங் சிறைச்சாலையில்  தூக்கிடுவதற்கான வசதியில்லை. மேலும் தூக்கில் போடுபவரும் சிங்கப்பூர் Changi சிறைச்சாலையிலிருந்துதான்  அழைத்துவரப்பட்டார். தூக்கிலிடப்பட்ட போராட்டவாதியான ரோஸ்லியின் உடல் அவரின் குடும்பத்தாரிடம் கொடுப்பதற்கு பிரிட்டிஷ் அரசாங்கம் மறுத்துவிட்டது. அவரின் உடல் கூச்சிங் சிறைச்சாலை வளாகத்திலே புதைக்கப்பட்டது.

புதைக்கப்பட்டு 46 ஆண்டுகளுக்கு பிறகு, சிறை வளாகத்திலிருந்து  ரோஸ்லி டோபியின் உடல்  மார்ச் 2, 1996 அன்று தோண்டி எடுக்கப்பட்டு அவரது சொந்த ஊரான சிபுவில் உள்ள கம்போங் சிபு மசூதிக்கு அருகில் உள்ள சரவாக் மாவீரர்களின் கல்லறையில் சரவாக் அரசாங்கத்தால் உரிய மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. ஓர் இளம் போராட்டவாதியாகவும் தனது நாடு மற்றும் நாட்டு மக்களின் விடுதலைக்காகவும் தன் உயிரையே பணையம் வைத்ததோடு உயிரையே கொடுத்த போராட்டவாதி ரோஸ்லி  டோபியின் பெயரில் சிபுவில்  ஒரு தேசிய  உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது.  

நன்றி தமிழ்மலர் : 21/11/2021  

பில்லா அரண்மைனையைக் குறித்து தெரிந்துக்கொள்ள 

  

 

வியாழன், 11 நவம்பர், 2021

அமானுஷ்யமும் பில்லா அரண்மனையும்…

 

அண்மையில் ஒரு செய்தி காதில் எட்டியது. தெலுக் இந்தானில் உள்ள பேராக் சுல்தானின் பாழடைந்து பழுதடைந்து கிடந்த பழைய அரண்மைனை தனியாருக்கு விற்கப்படபோகிறது என்று. அது வதந்தியாககூட இருக்கலாம். ஆனாலும் அது உண்மையென்றால்? நான் என்னையே கேட்டுகொண்டேன். சில நண்பர்களிடம் விசாரித்துப் பார்த்தேன். உண்மையை அறிய முடியவில்லை. இஸ்தானா ராஜா மூடா என்று அழைக்கப்படும் பழைய அரண்மனை பாழடைந்து இருந்தாலும், அதன் எச்சம் இருக்கும் வரை வரலாறு பேசும் தானே? சில முக்கிய வரலாறுகளை தமிழில் கொண்டு வரவேண்டும் என்று எங்களின் சிறிய குழு எடுத்திருக்கும் முயற்சியை இன்னும் துரிதப் படுத்த வேண்டும் என நான் முனைப்போடு இருக்கிறேன். அழிப்பது ரொம்ப சுலபம். ஆனால், படைத்தல் அப்படி இல்லையே.

இஸ்தானா ராஜா மூடா  அரண்மனையை போன்றே பேராக்கில் வரலாறு பேசும் மற்றுமொரு அரண்மனைக் குறித்து நிறையபேர் அறியவில்லை. அது  பில்லா அரண்மனையாகும். உண்மையில் பில்லா அரண்மனை என்பது ஒரு மாளிகை. ராயல் மாண்டெய்லிங் குடும்பமான  ராஜா பில்லாவைச் சேர்ந்தது. பில்லா அரண்மனை மாண்டேலிங் கட்டிடக்கலை கருத்தின் அடிப்படையில் கட்டப்பட்டது. இது "மாண்டேலிங் மேன்ஷன்" என்றும் அழைக்கிறார்கள். மாண்டேலிங் என்பது இந்தோனேசியாவின் சுமத்ராவின் வடக்குப் பகுதியிலிருந்து வரும் ஒரு பாரம்பரிய கலாச்சாரக் குழுவாகும். அங்கிருந்து புலம்பெயர்ந்து வந்த தொழில் முனைவர்களும் புலம்பெயர்ந்தோரும் சிலாங்கூர் மற்றும் பேராக் பகுதிகளில் குடியேறினர்.

ராஜா பில்லா ஒரு 'பணக்கார மற்றும் செல்வாக்கு மிக்க நபர்'. பேராக்கின் பாப்பானில் 1896 இல், ஒரு மலையின் உச்சியில் அவர் இந்த மாளிகையின் கட்டுமானத்தை நிறைவு செய்தார்.  இந்த மாளிகை அவரது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக கட்டப்பட்டது. அந்த அரண்மனையின் பிரமாண்டம், சுமத்ராவின் அரச குடும்பத்துடன் ராஜா பில்லாவின் தொடர்புக்கு சாட்சியமாகும். பிரிட்டிஷ் காலக்கட்டத்தில் கட்டப்பட்ட பெருவாரியான அரண்மைனைகள்  பிரிட்டிஷ் கட்டிட கலையின் பாணியோடு கலந்துதான் இருக்கிறது. மேல்நாட்டு பாணியோடு இருக்கும் அரசர்களின் அரண்மனைகளோடு பில்லா அரண்மனை சற்றுமாறுபட்டு இருப்பதை பார்த்த மாத்திரத்திலேயே உணரவும் முடியும்.  

பலகை மாளிகையின் வடிவமைப்பைக் கொண்டுள்ளதும் பில்லா அரண்மனையின் சிறப்புகளில் ஒன்றுதான். தரை தளத்தில் 8 மூலைகள் மற்றும் ஒரு மண்டபம் மாதிரியான தளம் உள்ளது. மாடியில் பெரிய  அறையும் ஒரு வரவேற்ப்பு அறையும் இருக்கிறது.  இந்த அரண்மனை மன்னன் பில்லாவால் திருமணங்கள், கூட்டங்கள், சந்திப்புகள் மற்றும் சுற்றியுள்ள குடியிருப்பாளர்களின் எந்தவொரு கொண்டாட்டத்திற்கும் பயன்படுத்தப்பட்டது என்று கூறப்படுகிறது. மிக முக்கியமாக, இந்த அரண்மனை சுற்றியுள்ள குடியிருப்பாளர்கள் ராஜா பில்லாவை சந்தித்து பிரச்சனைகள் மற்றும் கருத்துகளை பரிமாறிக்கொள்ள ஒரு தளமாக இந்த அரண்மனை இருந்திருக்கிறது. பொதுவாக பாப்பான் நகரில் இருந்த பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு குடியிருப்பாளர்கள் அவரைப் சந்திக்க வருவார்களாம்.

மாண்டேலிங் வரலாற்றில் நிபுணரான அப்துர்-ரசாக் லூபிஸின் கூற்றுப்படி, ராஜா பில்லாவும் அவரது ஆதரவாளர்களும் பேராக்கில் குடியேற முடிவு செய்திருந்தனர். அதன் காரணமாகதான் அந்த அரண்மனையும் கட்டப்பட்டிருக்கிறது. பாப்பான் நகரில் மிகப்பெரிய கட்டிடமாக அந்த அரண்மனை புகழ்பெற்றிருக்கிறது. இருந்தபோதிலும் ஏதோ காரணத்தினால் அவரது சந்ததியினர் பலர் பாப்பானை விட்டு வெளியேற தொடங்கியிருக்கின்றனர் என்கிறார் அவர்.

2009-ஆம் ஆண்டு தொலைக்காட்சி தொடரான “வர்க்கா தெராகிர்இந்த அரண்மனையில்தான் படமாக்கட்டது. அரண்மனை தளத்தில் பணிபுரிந்த படக் குழுவினர் அந்த இடத்தில் படப்பிடிப்பை மேற்கொண்டபோது பயங்கரமான ஆமானுஷ்யங்களை அனுபவித்ததை பகிர்ந்திருந்தனர். அவர்கள் படப்பிடிப்பின்போது தனியாக இல்லை என்பதை குழுவினர் உணர்ந்ததாகவும் படப்பிடிப்பின் முதல் நாளிலிருந்தே ஏதோ அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்ததை உணர்ந்ததாகவும் கூறியிருந்தனர். பில்லா அரண்மனையில் நடக்கும் அமானுஷ்ய சம்பவங்களை பாப்பான் நகரின் குடியிருப்பாளர்கள் கற்பனையாக கூறவில்லை என்றும் அவை உறுதிப்படுத்தப்பட்ட சம்பவங்கள் என்பதால் அந்த அமானுஷ்ய சம்பவங்களை அப்படியே “வர்க்கா தெராகிர்” தொடரில் பதிவு செய்துள்ளனர் என்றும் சிலர் இணையத்தில் விமர்சனம் எழுதியிருப்பதையும் காண முடிகிறது.  “வர்க்கா தெராகிர்” தொடரின் கதாநாயகர் சரவாக் மாநில போராட்டவாதியான ரோஸ்லி டோபி (Rosli Dhoby) குறித்ததாகும். ரோஸ்லி டோபி யார் என்ற வரலாற்றை வேறொரு பதிவில் சொல்கிறேன்.  “பெனுங்கு இஸ்தானா என்ற ஆவணப்படமும் இந்த அரண்மையில்தான் பதிவு செய்தார்கள் என்பதும் குறிப்பிடதக்கது.



131 ஆண்டு பழமையான மர வீடுபோல் காட்சியளிக்கும் இந்த அரண்மனைக்கு அண்மையில் போயிருந்தேன். மௌனத்தில் மூழ்கியிருக்கும் இந்த அரண்மைக்கு சுற்றுலாத்துறையின் அங்கிகாரம் கிடைத்திருக்கிறது. அதோடு பாதுகாக்ககூடிய பட்டியலிலும் இந்த அரண்மனை இடம் பிடித்திருக்கிறது. என்றாலும், பார்வையாளர்கள் கண்களில் படாத இந்த அரண்மனை மேலும் அமானுஷ்யங்களை மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறது.    

நன்றி தமிழ்மலர் 14/11/2021

“வர்க்கா தெராகிர்'' தொடர் நாடகத்தின் வரும் அந்த தேசிய போராட்டவாதியின் வரலாறு அறிய...  ஸ்கேன் செய்யுங்கள்...




புதன், 27 அக்டோபர், 2021

யஸ்மின் அஹ்மாட்டும் பெட்ரோனாஸ் தீபாவளி விளம்பரங்களும்

 

மலேசியர்கள் மத்தியில், தீபாவளி மத்தாப்பை கொழுத்தி போடுவதாக இருந்தது தீபாவளி விளம்பரங்கள்தான். பெருவாரியாக உணவு பொருள்களான Planta, பால் மாவு, மிளகாய்த்தூள், நல்லெண்ணை உள்ளிட்ட நிறுவனங்கள், தீபாவளிக்கான விளம்பரங்களை வியாபார நோக்கத்தோடு வெளியிட்டாலும், அவை பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை இன்னும் சில நாட்களில் நாம் பெருவிழாவை கொண்டாடப்போகிறோம் அல்லது அதற்கு தயாராகிகொண்டிருக்கிறோம் என்பதை நினைவு படுத்தும்படியே இருந்தது. அந்த நினைவூட்டல் உண்மையில் மகிழ்சியான சூழலையும் மலேசிய மக்கள் மத்தியில் கொடுத்தது உண்மைதான்.



ஆனாலும், மலேசியர்கள் மத்தியில் ஒரு விளம்பரம் எப்படி சொல்ல வேண்டும் என்று நமக்கு பாடம் எடுக்காமல் கற்று கொடுத்தவர் நிச்சயமாக மறைந்த யஸ்மின் அஹ்மாட் மட்டும்தான். மலேசிய கலாச்சாரத்தோடு பிணைந்திருக்கும் நமது பாரம்பரியத்தை, கொஞ்சம்கூட பிசகாமல் ரசிக்கும்படி கொடுத்தவர் இயக்குனர் யஸ்மின். அதுவும் 1990-ஆம் ஆண்டுகளுக்கு மத்தியில் பெட்ரோனாஸ் நிறுவனம் வெளியிடும் ஒவ்வொரு பெரிய பண்டிகைகளின் விளம்பரங்களை யஸ்மின் அஹ்மாட் இயக்கினார். அனைத்து விளம்பரங்களும் இனம் மொழி பாராமல் மலேசியர்கள் மத்தியில் பாராட்டை பெற்றதோடு பேசுபொருளாகவும் மாறியது.

பெட்ரோனாஸ் நிறுவனத்தினோடான இயக்குனர் யஸ்மினின் முதல் தீபாவளி விளம்பரம் 1996-ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது. ‘Duelling Masseurs’ என்ற தலைப்பில் எடுக்கப்பட்ட அந்த 1 நிமிட விளம்பரம், தீபாவளி அன்று காலையில் இரு பையன்களுக்கு எண்ணை தேய்துவிடுவது தொடர்பாகவும், பின்னணியில் பாரம்பரிய இசையோடு அவர்கள் மகிழ்ந்திருப்பதையும் காட்சி போகும். இடையில் நவீன இளைஞர் அந்த இசையை மாற்றி வைக்கும்போது இந்த ரம்மியமான காட்சியை ரசித்துக்கொண்டிந்த வீட்டின் மூத்த அம்மா, கையில் வைத்திருந்த பேப்பரில் ஒரு அடி கொடுப்பார், நவீன இளைஞர் மீண்டும் ஒலியலையை மாற்றிவிட்டு பழைய சூழலை மீண்டும் கொண்டு வருவார். பெட்ரோனாஸ் நிறுவனம் கிட்டதட்ட மூன்று ஆண்டுகள் தீபாவளிக்கு இந்த விளம்பரத்தையே பயன்படுத்தியது.

1998-ஆம் ஆண்டு யஸ்மீன் இயக்கத்தில் You Are My Universe  என்ற தீபாவளி விளம்பரத்தை பெட்ரோனாஸ் நிறுவனம் தயாரித்தது. பாட்டியும் பேத்தியும் தீபாவளி ரங்கோலி கோலம் வரைந்துகொண்டிருப்பார்கள். ஒரு மாம்பழத்திற்காக மயிலோடு உலகைச் சுற்ற கிளம்பிய முருகன் மற்றும் தாய் தந்தையைச் சுற்றிவந்து அந்தக் கனியைப் பெற்றுகொண்ட வினாயகன் குறித்த கதையை விளக்கும் கோலத்தை வரைந்துகொண்டே பாட்டி கதையைச் சொல்லி முடிப்பார். ''நீங்கள் கூட என் உலகம்தான்'' என பேத்தி சொல்லிமுடிய விளம்பரமும் முடியும்.


2000-ஆம் ஆண்டு I See என்ற தீபாவளி பெட்ரோனாஸ் விளம்பரம் வெளிவந்தது. ஏற்றி வைத்த தீபங்களை விளையாட்டுத்தனமாக குறும்புக்கார சிறுவர்கள் அணைத்து இருளாக்கிவிடுவார்கள். கண் தெரியாத ஒரு முதயவர் சிமினி விளக்கோடு வந்து தன்னை பரிகாசம் சிறுவர்களிடம் பேசுவார். அவரின் அறிவுரையை கேட்டு சிறுவர்கள் மீண்டு விளக்கை ஏற்றுவது அந்த விளம்பரம் அமைந்திருந்தது. இந்த விளம்பரம் பெரிய அளவில் மக்கள் மத்தியில் பேசப்படவில்லை, என்றாலும் யஸ்மினுடைய அந்த பாணி கவனிக்ககூடிய ஒன்றாக இந்த விளம்பரம் அமைந்திருக்கும்.


2002-ஆம் ஆண்டு பெட்ரோனாஸ் வெளியிட்ட தீபாவளி விளம்பரத்தின் தலைப்பு Light ஆகும். யாஸ்மின் தயாரித்த 4-வது தீபாவளி விளம்பரம் அது. மலேசிய மக்களிடத்தில் குறிப்பாக இந்திய சமூகத்தில் நல்ல வரவேற்பு பெற்றது அந்த தீபாவளி விளம்பரம். இசை பின்னணிக்கொண்ட ஒரு குடும்பத்தில் பிறந்த ஓர் இளைஞன், தன் தாய் தந்தையை இழந்த பிறகு, உடன் பிறந்த 4 உடன்பிறப்புகளுக்காக தன்னை தயார் படுத்திகொள்வதை விளக்கும் காட்சிகளை கொண்டது. வாழ்க்கையோடு முட்டிமோதி, தன்னுடைய இசை ஆர்வத்தையும் வளர்த்துகொள்ளும் ஒரு சராசரி இளைஞனை ஒளிவுமறைவு இல்லாமல் வெளிகாட்டியிருப்பார் யஸ்மின். அந்த காட்சியில் வரும் ராஜூ அண்ணன்களைப்போல நம்மில் எத்தனை அண்ணன்களும் அக்காக்களும் வாழ்ந்திருக்கிறார்கள்? இரண்டு நிமிடத்தில் ஒரு குறும்படத்தையே காட்டியிருப்பார் யஸ்மின். நிச்சயமாக அதில் மலேசிய பண்பாடோடு நாம் இணைந்திருப்பதையும் உயிர்ப்போடு சொல்லியிருப்பார்.


2003- ஆம் ஆண்டு பெட்ரோனாஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட Boys In The Hood- தீபாவளி விளம்பரம் இதுவரை மலேசியாவில் வந்த தீபாவளி விளம்பரங்களிலேயே பெரும் புகழ்பெற்றதாகும். அதன் புகழை முறியடிக்க வேறு எந்த விளம்பரத்தாலும் முடியவில்லை. 4 நவீன இளைஞர்களின் நவீன உடல்மொழி தனது பாட்டியைப் பார்த்ததும் அடங்கிபோகும். முனியாண்டி சின்னத்துறை என்று பாட்டி தனது பேரனை அழைக்கும்போதும் என்னப்பா.. சேம்..சேம் வேற நல்ல பேரு இல்லையா என்று பாட்டி கேட்கும்போதும் நகைச்சுவையாக இருந்தாலும், அந்த இளைஞர்கள் பாட்டிக்கு கொடுக்கும் மரியாதைதான் முக்கியமாக கவனிக்க கூடியதாக இருக்கும். என்னப்பா.. நெஞ்சு சளியா என்று பாட்டி கேட்கும் காட்சியை இப்போது பார்த்தாலும் சிரிப்பு பொத்துக்கொண்டு வரும். அனைத்து இன மக்களிடமும் பாராட்டைப் பெற்ற அந்த விளம்பரத்தைபோல இன்னொரு விளம்பரத்தை யஸ்மின் அஹ்மாட்-டால்கூட கொடுக்க முடியவில்லை.

யஸ்மின் அஹ்மாட் தீபாவளி விளம்பரத்தில் கவனமாக கவனித்தால் அதில் அவர் மூத்தவர்களுக்கும் இளையர்வர்களுக்கும் சிறுவர்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து விளம்பரத்தை இயக்குவது புலப்படும். அவர் காட்டிய பெரியவர்களிடம் இளைஞர்கள் மதித்து நடக்ககூடியவர்களாக இருந்தார்கள். மலேசியாவில் இந்தியர்களின் வாழ்க்கை வாழ்கிறபடியே காட்டப்பட்டிருக்கும். கேமரா ஒளிப்பதிவுகள் ஒவ்வொன்றையும் தனித்தனியே பிரித்து பேசலாம். அந்த அளவுக்கு நுட்பமாக இருக்கும்.

இன்று பெட்ரோனாஸ் நிறுவனத்தின் விளம்பரங்கள் எடுபடுவதே இல்லை. குறிப்பாக தீபாவளி விளம்பரங்கள் வருகிறதா என்று கேட்கும் அளவுக்கு பின் தங்கிவிட்டது. 2012-ஆம் ஆண்டு பெட்ரோனாஸ் கொண்டுவந்த டப்பாங்குத்து தீபாவளி விளம்பரம் பலரின் கண்டனத்திற்குள்ளானது குறிப்பிடதக்கது.

அதனைத் தொடர்ந்து 2013, 2014 மற்றும் 2016-ஆம் ஆண்டுகளில் வந்த பெட்ரோனாஸ் விளம்பரங்கள் கொஞ்சம் கவனிக்ககூடியதாக இருந்தது. இருந்தாலும் அது பெரிய அளவில் வரவேற்ப்பு பெற்றதா என்பது சந்தேகம்தான்.

இன்று தீபாவளி விளம்பரங்கள் குறித்து யாரும் பேசுவதே இல்லை. மலேசிய மக்களுக்கு, விளம்பரங்கள் வழி வாழ்த்து சொல்ல எந்த நிறுவனங்களும் மெனக்கெடுவதுமில்லை. அவசர காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிற நமக்கு பண்டிகைகளும் அவசர அவசரமாகவே முடிந்துபோய் விடுகிறது.

இந்தக் கட்டுரையை எழுதும்போது மீண்டும் ஒருமுறை யஸ்மின் அஹ்மாட்  இயக்கிய எல்லா பெட்ரோனாஸ் தீபாவளி விளம்பரங்களையும் பார்த்தேன். கடந்துபோன எனது தீபாவளி நினைவுகள் அந்த விளம்பரங்களில் ஒளிந்திருந்தன. உங்கள் நினைவுகளும் அதில் இருக்கலாம்.