சனி, 30 ஏப்ரல், 2022

Anarchism தோழர்களால் மலாயாவில் முதல் மே தின பேரணி நடந்தது

தொழிலாளர் தினம், உழைப்பாளர் தினம் அல்லது மே தினம் என்பது உழைக்கும் மக்களுக்காகவும், இப்படி ஒரு தினம் கொண்டாடுவதற்கு காரணமானவர்களின் வரலாற்றை நினைவுக்கூர்ந்து மனுசரிக்கும் ஒரு நாளாகும் முன்னெடுக்கப்படுகிறது. நாம் நினைத்துக்கொண்டிருப்பது போல தொழிலாளர் தினம் என்பது ஒரு நாள் பொது விடுமுறையோடு முடிவதில்லை. 8 மணிநேர வேலை, உழைப்புக்கேற்ற சம்பளம் இந்த அடைப்படைத் தேவைகாக புரட்சி வெடித்தது. அதன் காரணத்தினால் சில தொழிலாளர்களின் உயிர்களும் காவுக் கொள்ளப்பட்டது. அந்தத் தியாகத்தின் மீது நின்றுக்கொண்டுதான் நாம் உழைப்பாளர் தினத்தைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். தோழர்களே உங்களுக்கு எங்களது நாட்டில் எப்போது-எங்கு முதன் முறையாக தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது என்ற வரலாறு தெரியுமா?      

ஒவ்வொரு ஆண்டும், மே 1 ஆம் தேதி பன்னாட்டு ரீதியில் கொண்டாடும் தொழிலாளர் தினம் அல்லது மே தினம், முதன்முறையாக  மலாயாவில் 1921- ஆம் ஆண்டு பேராக் மாநிலத்தின்  ஈப்போ நகரில் இடதுச்சாரி தோழர்களால் முன்னெடுக்கப்பட்டது.  முதல் தொழிலாளர் தினம் அல்லது நாட்டின் முதல்  மே தினம் கூட்டத்தில் ஈப்போ நகரின் தொழிலாளர்களும்              மாணவர்களும்   கலந்து கொண்டனர் என்பது வரலாறு.

முதலாளித்துவத்தின் ஆதிக்கம் என்பது, உழைக்கும் மக்கள் இருக்குமிடத்தில் எல்லாம் தலைவிரித்தாடியது. பிரிட்டிஷ் பிடியில் இருந்த எங்கள் நாடு, அவர்களிடம் சிக்கியிருந்த காலத்தில் தொழிலாளர் தினமெல்லாம் சாத்தியமில்லாத ஒன்றாகவே இருந்தது. இந்தக் காலக்கட்டத்தில்தான்  1908- ஆம் ஆண்டு, மலாயாவில் சீனாவைக் அடிப்படையாகக் கொண்ட Anarchism என்கிற அரசு மற்றும் நாடு மறுப்பாளர்கள் குழு உருவானது.

கிளர்ச்சிக்காரர்களாக அறியப்பட்ட இவர்கள் புரட்சிகரமான சிந்தனைகளையும், செயல்பாடுகளையும் மக்கள் மத்தியில் பரப்பும் பணியில் ஈடுபட்டனர். 1918 ஆம் ஆண்டு, இந்த அமைப்பின் கிளைகள்  Truth Society என்ற பெயரில் சிங்கப்பூர், கோலாலம்பூர் மற்றும் ஈப்போவில் நிறுவப்பட்டு, சீன மொழியில் எழுதப்பட்டிருந்த இந்த அமைப்புச் சார்ந்த தத்துவங்களும் செய்திகளும் படைப்புகளும் மக்களிடம் விநியோகிக்கப்பட்டன.

 மலாயாவில் வெளியிடப்பட்ட Anarchism அமைப்புச் சார்ந்த சில புரட்சிகரமான புத்தகங்களின் தலைப்புகள் இவை :

"அரசின்மையும் சோசலிசமும்" (Anarchism and Socialism)

"ரசின்மை தத்துவம் மற்றும் கருத்துக்கள்" (The Philosophy and Ideas of Anarchism)

"அரசின்மை வாதத்தின் எளிய விளக்கங்கள்" (Simple Explanations of Anarchism)

"உழைக்கும் மக்களுக்கான அரசின்மை பற்றிய உரையாடல்கள்" (Conversations Regarding Anarchism for Working Men)

"உழைக்கும் ஆண்கள் சங்கங்களின் கொள்கை" (The Principle of Working Men’s Unions)

கோலாலம்பூரில் செயற்பட்ட Anarchism  தோழர்களின் தொடர் முயற்சியாக சீன மொழியில்  Yik Khuan Poh என்ற தலைப்பில் செய்தித்தாளையும் வெளியிட்டனர்.     Yik Khuan Poh   என்றால் வெகுஜனங்களுக்கு பயனளிக்க வேண்டும் என்பதாகும்.  1919 -ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் செய்தித்தாள்  வெளியிடப்பட்டது.  மலாயாவில் மிகவும் தீவிரமான செய்தித்தாள் என்று மக்களாலும் இடதுச்சாரி தோழர்களாலும் அப்பத்திரிக்கை அங்கீகரிக்கப்பட்டது. Anarchism -வாதியான கோ துன் பான், இந்தப் பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்து அவ்வமைப்பின் தத்துவங்களையும் புரட்சிகரமான கருத்துக்களையும்  விடாமுயற்சியுடன் மக்களிடத்தில் பரப்பினார்.


1919-ஆம் ஆண்டு மலாயாவில் முதன் முதலாக மாபெரும் தொழிலாளர் ஒன்றுகூடலை நடத்துவதற்கு இந்த அமைப்பு திட்டம் வகுத்தது
அதனை முன்னிட்டு மே 1, 1919 அன்று   கோ துன் பான்,     உலகளாவிய தொழிலாளர் இயக்கம் குறித்த சிறப்புக் கட்டுரையை    செய்தித்தாளில் வெளியிட்டார். அந்தக் கட்டுரைக்காக அவர்  ஜூலை 1919-  இல் கைது செய்யப்பட்டு  புடுச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.  பின்னர் அவர் கிளர்ச்சிக்காரர் என்று முத்திரைக் குத்தப்பட்டு Anarchism செயல்பாட்டிற்காக நவம்பர் 1919 இல் பிரிட்டிஷாரால் நாடுகடத்தப்பட்டார். இந்தச் சம்பவமானது Anarchism செயற்பாட்டுத் தோழர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தங்களின் அமைப்பை மேலும் பலமாக்க கோலாலம்பூர்,  பினாங்கு, ஈப்போ சிரம்பான் மற்றும் சிங்கப்பூர் ஆகி மாநிலங்களைச் சேர்ந்த தோழர்கள்  மலாயா முழுவதும் Anarchism கருத்துகளைப் பரப்பும் பரப்புரையை தொடங்கினர்.


அந்நோக்கத்திற்காக ‘’மலாயன் Anarchism கூட்டமைப்பு (MAF)  என்ற வலையமைப்பை நிறுவினர்.  ஒவ்வொரு ஆண்டும் மே 1 தொழிலாளர் தினத்தில் மே தின துண்டுப்பிரசுரங்களை வெளியிடுவது MAF இன் நோக்கங்களில் ஒன்றாகும். அவர்கள் வெளியிட்ட துண்டுப் பிரசுரங்களில் ஒன்று "பாட்டாளி வர்க்கத்தின் சக்தி" என்ற தலைப்பில் இருந்தது. இப்படியாக Anarchism தோழர்களின் செயற்பாடுகள் மக்கள் குறிப்பாக சீன மக்கள் மத்தியில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது.

1920-இதன் அடுத்தக்கட்ட முன்னேற்றமாக மே 1, 1921 அன்று, பேராக் மாநிலத்தின்  ஈப்போ நகரில், Anarchism-வாதிகள் மலாயாவின் வரலாற்றில் முதல் "மே நாள்" தொழிலாளர் தினப் பேரணியை ஏற்பாடு செய்தனர். தொழிலாளர் தினத்திற்காக  நம் நாட்டில் Anarchism  தோழர்கள் செய்த மிகப்பெரிய பங்களிப்பு இதுவாகும்.



இந்த அமைப்பில் செயற்பாடுகளைக் கண்டு பிரிட்டிஷ் காலனித்துவவாதிகளே மிரண்டு போனார்கள். Anarchism தோழர்கள் அச்சு ஊடகங்கள் வழியாக முதலாளித்துவத்தை எதிர்க்கும் ஆயுதமாக பிரசுரிக்கப்பட்ட சிற்றிதழ்கள், செய்தித்தாள்கள் மற்றும் புத்தகங்கள் அவர்களுக்கு பெரும் தலைவலியாக இருந்தது. இதனால் அச்சு பிரசுரங்களை கண்காணிக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் நோக்கில் புதியச் சட்டத்தை பிரிட்டிஷ் அரசாங்கம் கொண்டு வந்தது. இப்போது மலேசியாவில் ஊடக சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரத்தை கட்டுப்படுத்த அரசாங்கத்தால் அந்தச் சட்டம்தான் இன்னும் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடதக்கது.

உலகலாவிய ரீதியில் உழைக்கும் மக்களுக்கான போராங்களுக்கு ஆண்டுகள் 200 கடந்தாலும், உழைக்கும் பாமர மக்களுக்காக போராட்டங்களை இன்னும் முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்தில்தான் இடதுச்சாரி கட்சிகள் இருக்கின்றன. நமது நாட்டைப் பொருத்தவரை இடதுசாரி கட்சியான மலேசிய சோசலிசக் கட்சி ஒவ்வொரு ஆண்டும் உழைக்கும் மக்களுக்கான தொழிலாளர் பேரணியை முன்னெடுக்கிறது. இன்றும் நாம் குறைந்த பட்ச சம்பளத்திற்காகவும், முதலாளிகளால் சம்பளம் வழங்காத பிரச்னைகளுக்காகவும் வீதியில் இறங்கி போராடிக்கொண்டுதான் இருக்கிறோம். தொழிலாளர் உழைப்பைச் சுரண்டும் முதலாளிகள் இருக்கும் வரை அதை எதிர்க்கும் தொழிலாளர் வர்க புரட்சி நடந்துக்கொண்டே இருக்கும்.   

மூலம்: தோழர் Fahmi Reza

நன்றி தமிழ்மலர் நாளிதழ் 1/5/2022

 

 

 

வியாழன், 14 ஏப்ரல், 2022

மரணத்தை தானமாக கொடுக்கும் புட்டிநீர்



நாம் பாலர் பள்ளியிலிருந்து ஆரம்பக் கல்வி முடிக்கும்வரை தவறாமல் கையோடு கொண்டு போன பொருள்களில் ஒன்று தண்ணீர் பாட்டில். தண்ணீர் பாட்டில் என்றால் அதில் தண்ணீர்தான் இருக்கும். எப்போதாவது ஆரஞ்சு ஜூஸோ அல்லது சீராப்-கூட அம்மா கொடுத்துவிடுவதுண்டு. ஜில்லென்று குடிக்ககூடிய இந்த இனிப்பு பானங்கள்  நேரம் ஆக ஆக வெதுவெதுப்பு பானமாக ஆகியிருக்கும். அதற்கு தண்ணீரே பரவாயில்லை என்றே தோன்றும். தண்ணீர் பாட்டில்களில் தேனீர், நஸ்காப்பிக்கூடகொடுத்து விடுகிறார்களாம் இன்றையப் பெற்றோர்கள். இதன் சுகாதாரக் கேடுகுறித்து நான் இன்னொரு பதிவில் வாய்ப்பு இருந்தால் பேசுகிறேன்.

என் கேள்வி என்னவென்றால் பிள்ளைகள் தண்ணீரை அருந்துகிறார்களா? அருந்துகிறார்கள் என்றால் அதன் அளவு என்ன? இதேக் கேள்வியை உங்களை நோக்கியும் கேட்கிறேன். நீங்கள் தாகத்திற்கு தண்ணீர் அதாவது பச்சைத் தண்ணீர் குடிக்கிறீர்களா? ஆமாம் என்றால் அதன் அளவு என்ன? நீங்கள் அருந்தும் தண்ணீரை எங்கிருந்து பெறுகிறீர்கள்? குழாய் தண்ணீரா அல்லது பாட்டில் தண்ணீரா? வீட்டில் குழாய்த் தண்ணீர் அருந்துபவர்கள், வீட்டிற்கு வெளியேயும் குழாய்த் தண்ணீர்தான் அருந்துகிறீர்களா? அல்லது தாகம் எடுக்கும்போதோ - தண்ணீர் குடிக்கலாம் என்ற எண்ணம் வரும்போதோ கடையில் பாட்டில் தண்ணீரை வாங்கிகொள்கிறீர்களா? நமது நாட்டில் தண்ணீர் பாட்டில் இல்லாதக் கடையை காண முடியுமா என்ன?

50 சென்-னிலிருந்து 3.00 ரிங்கிட் வரை 500 மில்லிலிட்டர் பாட்டில் தண்ணீர் விற்பனைக்கு இருகிறது. கஷ்டப்பட்டு உழைத்தப் பணத்தில், நீங்கள் பாட்டில் தண்ணீரை  வாங்கி குடிக்கிறீர்கள், அந்தத் தண்ணீரோ கொஞ்சம் கொஞ்சமாக உங்களின் உயிரைக் குடித்துக்கொண்டிருக்கிறது. இதென்ன புதுக்கதை என்றுதானே நினைக்கிறீர்கள். அதுதான் இல்லை. கையில் இருக்கும் அந்த நெகிழி பாட்டில் தண்ணீரை கீழே வைத்துவிட்டு, ஒரு பகீர் ரிப்போர்ட் தருகிறேன். வாசிக்கத் தயாராகுங்கள்.    

தமிழ்நாட்டைச் சேர்ந்த சூழலியல் எழுத்தாளர் தோழர் நக்கீரன் அவர்கள் ‘உயிரைக் குடிக்கும் புட்டிநீர்’ என்று ஒரு புத்தகத்தையே ஆவணமாக கொடுத்திருக்கிறார். ஆதாரங்களோடு எழுதப்பட்ட அப்புத்தகத்தின் சில விஷயங்களை முதலில் உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். “கண்களை மூடி 8 வினாடிகள் அஞ்சலி செலுத்துவோம். 8 வினாடிகளுகுப் பிறகு கண்களை திறந்துவிட்டீர்களா? தூய்மையற்ற நீரை அருந்துவதால் ஏற்பட்டிருக்கும் நோயினால் உலகின் எங்கோ ஓர் மூலையில் ஒரு குழந்தை இப்போது இறந்திறக்கலாம். நாம் அஞ்சலி செலுத்தியது அந்தக் குழந்தைக்குதான். குழந்தை அருந்தியதாக நம்பப்படும் தூய்மையற்ற நீர் சுத்திகரிக்கப்படாத அல்லது தூய்மைச் செய்யப்படாத நீராக இருக்க வேண்டும் என்பதல்ல. அது கடையில் நாம் வாங்கிக் குடிக்கும் பாட்டில் நீராகக்கூட இருக்கலாம்.”  இதில் உண்மையிருக்க வாய்ப்பே இல்லை என நீங்கள் முனுமுனுத்தால் உங்களுக்கு மேலும் சில சிறப்புச் செய்திகளை இந்தப் புத்தகம் சொல்கிறது.



கடந்த 2008 மார்ச் மாதத்திலிருந்து அரசு அலுவலகங்கள் எதிலும் புட்டிநீர்ப் பயன்பாடு கூடாது என பிரிட்டன் பிரதமர் கார்டன் உத்தரவிட்டார். ஐக்கிய அமெரிக்காவின் கன்கார்ட் நகரத்தின் எந்தவொரு கடையிலும் புட்டிநீரை விற்பது சட்டவிரோதம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிற நகரங்களான சான்பிரான்சிஸ்கோ, சியாட்டில் ஆகியவற்றிலும், நியூ சவுஸ் வெஸ்ட் மாநிலத்தின் அரசுத் துறைகள் அனைத்திலும் புட்டிநீர் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. ஐக்கிய மேயர்களின் மாநாட்டில் புட்டிநீர் வாங்குவதை ஊக்குவிக்க கூடாது எனத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதுபோன்று மேலும் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன.

புட்டிநீர் பாதுகாப்பானது எனில் உலகின் முன்னணி நாடுகள் ஏன் அதைத் தடை செய்ய முனைகின்றனர் என தோழர் நக்கீரன் கேள்வி எழுப்புகிறார். புட்டிநீர் பாட்டிகளின் உறையில் பெருவாரியாக நீல நிறத்தில் தூய்மையான நீர் அல்லது பனிமலைகளின் படங்கள் அச்சிடப்பட்டிருக்கும். தூய்மையான நீர்நிலையிலிருந்து எடுக்கப்பட்ட தண்ணீர் என எண்ணம் பதியும். உண்மையில் பலநிறுவனங்கள் குழாய்நீரையே நமக்கு பாட்டிலில் அடைத்து தருகின்றன. அல்லது மலை பிரதேசங்கள் அல்லாத ஏதோ ஓர் இடத்திலிருந்து எடுக்கப்படுகிறது.

அமெரிக்கன் சொசைட்டி ஆஃப் மைக்ரோபயாலஜி (american society of microbiology) என்ற அமைப்பு 88 நிறுவனங்களின் புட்டிநீரை ஆய்வுக்கு உட்படுத்தியது. அதில் 40% புட்டிநீரில் பாக்டீரியா பூஞ்சைகள் இருந்தன. ஐக்கிய அமெரிக்காவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமையின் அளவுகோலின்படி இவை குடிப்பதற்கு பாதுகாப்பானது என்றாலும் குழந்தைகள், நோயாளிகள், முதியவர்களுக்கு இவை பரிந்துரைக்கப்படவில்லை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

இதேபொல நெதர்லான்ந்து நாட்டில் யுனிவர்சிட்டி மெடிக்கல் சென்டர் அமைப்பின் Dr.Rocuc Clant  என்பவர் 68 பிராண்டுளை ஆய்வு செய்தபோது அவற்றில் பெனிசிலியமும், நிமோனியா காய்ச்சலை வரவழைக்கும் பாக்டீரியாவும் இருந்தன.

இதைவிட ஒரு பரபரப்பான சம்பவம் 2004-ஆம் ஆண்டு நடந்தது. பிரிட்டனின் உனவுப் பாதுகாப்பு ஆணையத்தால் இப்படி ஒரு உத்தரவு இடப்பட்டது. கோக் நிறுவனத்தின் 5 இலட்சம் டாசனி நீர்ப் புட்டிகளைக் கடைகளிலிருந்து உடனே அகற்றுமாறு உத்தரவிட்டது. அந்தப்புட்டி நீரில் சிறுநீரகம், காது, வயிறு ஆகியவற்றைப் பாதிக்கக்கூடியதும், அளவு அதிகமானால் உயிருக்கே ஆபத்தை உருவாக்கும் புரோமேட் கலந்திருந்ததே அதற்கு காரணம். இதேபோல ஐக்கிய அமெரிக்காவிலும் இப்படியொரு நிகழ்வு நடந்தது. அங்குள்ள புகழ்பெற்ற புட்டிநீர் நிறுவனமான பெர்ரியர் தனது 28 கோடி புட்டிநீரில் புற்றுநோயை வரவழைக்கும் பென்சீன் அனுமதிக்கப்பட்ட அளவுக்கும் அதிகமாக இருந்ததால் ஏறத்தாழ ஏழரை இலட்சம் கடைகளிலிருந்து அவற்றை அவசரமாக திரும்பப் பெற்றது.



இதெல்லாம் வளர்ந்த நாடுகளில் புட்டிநீருக்கு எதிரான சில உதாரணங்கள். முறையான சரியான அடுக்குகளின் வழியில் புட்டிநீரை தூய்மையாக்கல் நடைமுறையை மேற்கொள்ளாமல் அவர்களுக்கு வசதியான ஒருசில நடைமுறைகளை  மட்டும் மேற்கொண்டு சந்தைக்கு கொண்டு வருவதால் அவை சுகாதாரமற்றதாக ஆகிவிடுகின்றன. தவிர புட்டிதண்ணீரின் தயாரிப்பில் கலக்கப்படுகின்ற மற்றும் மேற்கொள்கின்ற நடவடிக்கைகளால் நன்மை-தீமை இரண்டையுமே தோழர் நக்கீரன் இந்தப் புத்தகத்தில் மிகத் தெளிவாக எழுதியிருக்கிறார்.

ஒரு உதாரணத்திற்கு தண்ணீரின் ‘ஓசோனேற்றம்’.

நிறைகள்: பாக்டீரியாவை அழிக்க வழக்கமான குளோரினுக்கு மாற்றாக ஓசோன் வளி பயன்படுத்தப்படுகிறது. இது நச்சுயிரிகளைத் திறனுடன் அழிக்கும். இரும்பு, கந்தகம், மாக்கனீசுத் தாதுகளை நீக்குவதோடு, நீரின் தேவையற்ற சுவை, மணத்தையும் நீக்கும்.

குறைகள்: ஓசோனேற்றம் சரியான கட்டுப்பாட்டில் இல்லாவிடில் ஃபார்மால்டிஹைட், ப்ரோமேட் போன்ற தேவையற்ற துணைப்பொருள்களை உருவாக்கிவிடும். குளோரினைப் போல அல்லாது ஓசோன் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே நச்சுயிரி நீக்கத்திறணைக் கொண்டிருக்கும். ஏனேனில், ஓசோன் என்பது அதிக வலுவுள்ள உயிர் வளி. அது திரும்பவும் உயிர்வளியாக (ஆக்சிஜன்) மாறிவிடமுடியும். புட்டிநீர் பல வாரங்களுக்கு விநியோகத்தில் இருக்கும்போது இது நடந்துவிடுகிறது. அவற்றை அதெவெட்பச் சூழலில் வைத்திருந்தால் தரமும் மோசமாகிவிடும்.

இப்படி 6 உதாரணங்கள் ‘உயிரைக் குடிக்கும் புட்டிநீர்’ புத்தகத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்தப் புத்தகத்தின் வழி குறிப்பிட்டிருக்கும் இன்னுமொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், புட்டிநீர் குளிர்ச்சியான நீர் மட்டுமல்லாது, புவியைச் சூடாக்கும் பசுமை இல்ல வளிகளும் அடங்கியுள்ளன. அதனால், புவியை மாசுபடுத்தும் தொழிற்துறை, புட்டிநீர் தொழிற்துறை என்கிறார் நீரியல்துறை எழுத்தாளரான மாட் பார்லோ.

புட்டிநீரின் நெகிழிப் புட்டிகளே அதற்குக் காரணம். அவற்றைத் தயாரிக்க ஆண்டுக்கு 250 கோடி நெகிழி தேவைப்படுகிறது. நெகிழியின் மூலப்பொருள் பெட்ரோலியம். ஒரு இலட்சம் நெகிழிப் புட்டிகள் மூலம் மட்டுமே ஏறத்தாழ 1800 கிலோ கரிக்காற்று வெளியாகிறது. 1 லிட்டர் அளவுள்ள நெகிழிப் புட்டியை உருவாக்க 162 கிராம் பெட்ரோலியம் தேவை. உதிலிருந்து வெளியாகும் கரிக்காற்றின் அளவு 100 கிராம். மேற்கொண்ட பத்தியைப் படிக்க உங்களுக்கு 10 நொடிகள் தேவை. அதற்குள் ஐக்கிய அமெரிக்காவில் மட்டும் பத்தாயிரம் நீர்ப் புட்டிகள் தூக்கியெறியப்பட்டுவிட்டன.

காலிப்புட்டிகளால் உருவாகும் குப்பைகள் மாபெரும் சிக்கல். அவை மறுசுழற்சி செய்யப்படுகின்றன என்பது பொய். முன்னேறிய நாடுகளான ஐக்கிய அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளிளேயே 88%, 86%  புட்டிகள் மறுசுழற்சி செய்யப்படுவதில்லை. எனில் பிற நாடுகளைப் பற்றிச் சொல்ல என்ன உள்ளது. நெகிழிப் புட்டிகளை தயாரிப்பது மற்றும் மறுசுழற்சி காரணத்தினால் அதிலிருந்து வெளியேறும் மாசுகள் காரணமாக அமிலமழை ஏற்படும் சாத்தியம் உள்ளது. அது நிலத்தையும் எதிர்காலத்தலைமுறையும் பாதிக்கும். இத்தகைய கேடு நிகழ்வில் இன்றைக்கு புட்டிநீர் அருந்துபவர்களின் பங்கு இருக்கிறது என்று நம்மை எச்சரிக்கிறார் தோழர் நக்கீரன்.

நமது நாட்டில் புட்டிநீர் பயன்பாடு என்பது கட்டுகடங்காமல் போய்கொண்டிருக்கிறது. பேரிடர் காலத்தில் மற்றும் வேறு வழியே இல்லாத இக்கட்டான ஒரு நேரத்தில் புட்டிநீர் பயன்படுத்துவது தேவையாக இருக்கலாம். ஆனால், விழாக்காலங்கள், அல்லது இலவசமாக உதவி செய்கிறோம் அல்லது தானம் செய்கிறோம் எனும் பேரில் பெட்டி பெட்டியாக நெகிழிபாட்டில் தண்ணீரை கொடுக்கும் நாம் இனி சிந்தித்து செயல்பட வேண்டும். மரணத்தை தானமாக கொடுத்துக்கொண்டிருக்கிறோம் என்ற குற்ற உணர்வு நமக்கு வரவேண்டும். புட்டிநீர் உற்பத்தி செய்து 6 மாதமாகிவிட்டால் 90% நச்சுக்கள் அதன் நெகிழியிலிருந்து வெளியேறுகிறதாம்.

நமது நாட்டிலும் புட்டிதண்ணீர் முறைக்கேடு நடந்த சம்பவங்கள் இருக்கின்றன. வழக்கம்போல சுலபமாக நீங்கள் மறந்திருப்பீர்கள், தயவு செய்து அதை அடுத்த தலைமுறைக்கும் ஞாபகப்படுத்துங்கள். நமக்கு அரசாங்கத்திடமிருந்து நல்ல சுகாதாரமான நீர்தான் கிடைக்கிறது. நாம் அதை கொதிக்க வைத்து அல்லது வெயிலில் ஒரு மணிநேரம் வைத்திருந்து அப்படியே குடிக்கலாம். அல்லது ‘Filter’ பொருத்திக்கொண்டு நாம் தண்னீரை குடிக்கலாம். கண்ணாடி பாட்டிகளை நமது தண்ணீர் பாட்டிகளாக பயன்படுத்துவது என்றைக்குமே ஆரோக்கியமாக இருக்கும். எல்லா பிரச்னைகளும் நாம் தொடங்கியதுதான். தீர்வையும் நம்மாள் கொண்டு வர முடியும். உலகை குப்பையாக்கும் புட்டிநீர் மனித உடலையும், கால்நடைகளின் உயிரையும், பூமியின் உயிரையும் சேர்த்தே அழித்துக்கொண்டிருக்கிறது. புட்டிநீர் வியாபாரிகள் இதை உங்களுக்குச் சொல்ல மாட்டார்கள், ஒவ்வொரு மாநிலத்திலும், கேளிக்கை நிறுவனங்கள்கூட விதவிதமான லேபில்களில் புட்டிநீர் விற்பனைக்கு கொண்டு வருகின்றன. நாம் மரணத்திற்கு விலை கொடுத்துகொண்டிருக்கிறோம்.

 நன்றி : தமிழ்மலர் 17/4/2022

 

வெள்ளி, 8 ஏப்ரல், 2022

நெகிழியை விதைத்தோம்! அதையே அறுவடை செய்கிறோம்

 

நாம் வெளியில் இருக்கிறோம்; அல்லது ஒரு பயணத்தை மேற்கொள்ளப்போகிறோம். திடீரென வயிறுக்குப் பசிப்பதுபோல் உள்ளது. அவசரத்திற்கு ஒரு தண்ணீர் பாட்டில் அல்லது பழச்சாரை வாங்கிக்கொள்கிறோம். கூடவே கிரீம் ரொட்டி, நொறுக்கு தீனி, அல்லது வெட்டி வைத்திருக்கும் பழங்கள் இப்படி ஏதாவது வாங்கிக்கொண்டு பயணித்துக்கொண்டே சாப்பிடுகிறோம். அப்பாடா பசி தீர்ந்தது என நிம்மதியடைகிறீர்கள் தானே...

வேலைக்குச் செல்லும் தாய்மார்களே, வீட்டுக்கு வந்து சமைப்பதற்காக போலிஸ்ரின் தட்டுகளில் நேர்த்தியாக வெட்டி அடுக்கி அதை மெல்லிய பிலாஸ்டிக் பையினால் மூடியிருக்கும் காய்க்கறிகளையும், மீன், கோழி, பழங்களையும் வாங்கி வந்து சமைத்து குடும்பத்திற்கு உணவளிக்கிறீர்களா? இந்த வயிற்றுக்காகத்தானே உழைக்கிறோம் என என்றாவது நீங்களும் சொல்லியிருப்பீர்கள் தானே. அதில் உண்மையில்லாமல் இல்லை.

வீட்டிற்கு வரும் விருந்தாளிகள் நிறைய தீனிப் பண்டங்களை வாங்கி வருவார்கள். விதவிதமான வண்ண நெகிழிக் கவர்களில் அடைக்கப்பட்ட தின்பண்டங்கள், சுவையான பலகாரங்கள், பழரச பாட்டில்கள். நாமும் அப்படித்தானே அவர்களின் வீட்டிற்கு செல்லும்போது வாங்கி போயிருப்போம். இதெல்லாம் உபச்சாரங்கள், பண்பாடு என்று அழகாக பெயரும் வைத்திருக்கிறோம். 

நண்பர்களே, இந்த உணவுப் பொருள்களை நாம் எப்படி பிரித்து பயன்படுத்துகிறோம்? சிறுபிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை நெகிழிக் கவரில் அடைப்பட்டிருக்கும் அந்த உணவுப் பொருளை எப்படி பிரித்து விடுதலை செய்கிறோம்? பற்களாலேயே ஒரு முனையில் கவரை கடித்து இழுத்து துண்டாக்கி,  பிள்ளைகள் உள்ளே இருப்பதை சாப்பிட தொடங்குவார்கள். பெரியவர்கள், கத்தரி அல்லது கத்தியால் ஒரு பகுதியை வெட்டி போட்டுவிட்டு உணவை பயன்படுத்த தொடங்குவார்கள்.

நெகிழிப் பையினால் ஏற்படும் விளைவுகள் நாம் அறிந்ததுதான். ஒரு நெகிழிப் பை மக்குவதற்கு 500 ஆண்டுகள் ஆகும் அல்லது சில நெகிழிப் பைகள் மக்கவே மக்காது. இந்த மாதிரியான பல விவரங்களுக்கு நாம் யாருக்கும் பாடம் நடத்தத் தேவையும் இல்லை. ஆனால், இந்தப் பெரிய நெகிழிப் பையைவிட, நாம் கத்திரிக்கும், அல்லது பற்கலால் கடித்துத் துப்பும் மைக்ரோ பிளாஸ்டிக் (MICRO PLASTICS) அல்லது நுண் நெகிழிகளினால் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் பாதிப்புகளை நமது நாட்டைப் பொருத்தவரை நாம் உணருவதுமில்லை; பேசுவதும் இல்லை. மிக சிறிய அளவிளான இந்த நெகிழிகள் மிக வேகமாக அதன் தொடர்சங்கிலி வேலையை முடித்துக்கொண்டு நம் உடலுக்கு வந்துவிடுகிறது. ஆச்சரியமாக இருக்கிறதா? மனதை இரும்பாக்கிக் கொள்ளுங்கள். உங்களுக்கு நான் சில அதிர்ச்சியான விஷயங்களை சொல்ல வந்திருக்கிறேன்.  

2008-ஆம் ஆண்டு எரிக்சன் மற்றும் பிரவுனி ஆகியவர்களின் ஆய்வின் முடிவில், நுண் நெகிழிகள் எப்படி பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன என்பதை இந்த உலகிற்கு தெரிவித்தனர். அதுவரை பெரிய அளவில் பேசாப் பொருளாகவே இந்த நுண் நெகிழிகள் தொடர்பான பாதிப்புகள் இருந்தன. இன்னும் சொல்லப்போனால் அதனால் பாதிப்பு ஏதும் வராது என்றுதான் நம்பிக்கொண்டிருந்தார்கள். வடக்கு பசிபிக் கடல் பகுதியில் இருந்து பிடிக்கப்பட்ட மீனின் உடலுக்குள் 18 வகையான நுண் நெகிழிகள் இருந்ததை எரிக்சன் படம் பிடித்து உலகை அதிர வைத்தார்.


சென்னையில் தேசிய கடலோர ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில் பட்டினப்பாக்கத்தில் விற்கப்பட்ட ஏழு மீன் வகைகளில் நுண் நெகிழிகள் கலந்து இருப்பதை கண்டறிந்தனர். நெதர்லாந்தில் 22 பேரிடம் இருந்து எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகளில் 17 பேரின் ரத்தத்தில் நுண் நெகிழிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

‘அறிவியல் பலகை’ எனும் மாதந்திர இதழில் இது தொடர்பாக வெளிவந்திருந்த சில தகவல்களைத்தான் மேலே உங்களோடு பகிர்ந்துக்கொண்டேன். ரத்த அணுக்களில்கூட மைக்ரரோ  பிளாஸ்டிக்குகள் காணமுடிகிறது என்றால் நாம் இந்தச் சூழலை எங்கு கொண்டுவந்து விட்டிருக்கிறோம் என்பதை உணர வேண்டும். நமது நாட்டில் இம்மாதிரியான ஆய்வுகள் பெரிய அளவில் செய்யப்படுவதில்லை. அப்படியே செய்தாலும் அது பெரிய அளவில் மக்களிடத்தில் கவன ஈர்ப்பு ஏற்படுவதில்லை.

சினிமாவும், கேளிக்கைகளும், இலவசப் பொருள்களும் கொடுக்கின்ற போதையில் நம்மவர்கள் சிக்கிக்கொண்டு மயங்கியிருக்கும்போது உணவோடு நெகிழிகளையும் வாங்கி சாப்பிடுகிறீர்கள் என்று கூறும் என் போன்றவர்கள் மனநோயாளிகளாகத்தான் தெரிகிறோம்.

பிறந்தக் குழந்தையின் தொப்புல் கொடியில், குழந்தைகளின் மலத்தில் மைக்ரோ பிளாஸ்டிக்குகள் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர்.  பால் பாட்டில்களில் இருந்து நுண் நெகிழிகள் உணவுக் குழாய்க்குள் சென்றிருக்கலாம். அவை இரத்தத்தில் கலக்காமல் மலத்தில் வெளியேறிவிடும் என்பது நம்பிக்கையாக முன்பு இருந்தது. அது உண்மையல்ல என்று ஆய்வுலகம் நம்மை இப்போது எச்சரித்திருக்கிறது. 

கடல், நிலம் தொடங்கி காற்றில் கூட நுண் நெகிழிகள் கலந்திருப்பதை நாம் உணர வேண்டும். இதை தவிர்ப்பதற்கான வேலைகளை ஒவ்வொருவரும் செய்ய வேண்டும்.  குழந்தைகளிடம் இதுகுறித்து பேச வேண்டும். பள்ளியிலும் இதற்கான பயிற்சியினை வழங்க வேண்டும். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர்களின் ஆரோக்கியமான வாழ்விற்கு நாம் இதை செய்தேஆக வேண்டும்.

நெதர்லாந்தில் மனிதர்கள் மீது நடத்தப்பட்ட ஆய்வில் ரத்த அணுக்களில் மைக்ரரோ  பிளாஸ்டிக்குகள் இருந்தது என்றேன் அல்லவா? அது எந்த வகை பிளாஸ்டிக் தெரியுமா? Polyethylene Terephthalate (PET). இது பெரும்பாலும் தண்ணீர் பாட்டில் தயாரிக்க உதவும் பிளாஸ்டிக் ஆகும். ‘மினரல் வாட்டர்’ அல்லது ‘டிரிங்கின் வாட்டர்’ என்று ‘லேபில்’ செய்திருக்கும் தண்ணீர் பாட்டில் தானே நமக்கு வசதியாக வாங்கி ஸ்டைலாக அருந்துகிறோம். தண்ணீரோடு நெகிழித் துகள்களையும் நமது வயிற்றுக்கொண்டு போகிறோம் என்பது அறிக.

கொதிக்க வைத்த தண்ணீரை கண்ணாடி பாட்டில்களில் கொண்டு போவதால் நாம் எதை இழந்துவிடுவோம்? தினமும் கடையில் ஒரு வேளையாவது உணவு வாங்கும் நபராக இருந்தால், சாப்பாட்டிற்கான பாத்திரத்தை நாம் வீட்டிலிருந்தே கொண்டு போகலாம். நம் பிள்ளைகளுக்கும் இதையே நாம் பழக்கப்படுத்தலாம். கடந்த சில ஆண்டுகளாக என் பழக்கங்களில் இதுவும் ஒன்று. கடையில் தேனீர் வாங்கி வருவதாக இருந்தாலும் என் சொந்த பாட்டிலைத்தான் கொண்டுபோய் வாங்கி வருகிறேன். என் இந்தியப் பயணங்களில்கூட என் தேனீர் பாட்டில் என்னோடு பயணம் வரும்.

இதனால் இழப்பதற்கு ஒன்றும் இல்லை. ஆனால், சுற்றுச்சூழல் மற்றும் உடல்நலப் பாதுகாப்பிற்கு நமது பங்களிப்பை இதன்வழி வழங்க முடியும்.

ஒரு புள்ளி விவரப்படி குறைந்தது எட்டு மில்லியன் டன் நெகிழிக் கழிவுகள் ஒவ்வொரு ஆண்டும் கடலில் கலக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.  கடலில் கலக்கும் நெகிழிகளால் ஆண்டிற்கு 10 லட்சம் கடல்வாழ் பறவைகளும், 1 லட்சம் கடல்வாழ் உயிரினங்களும் உயிரிழப்பதாக கணக்கிடப்படுகின்றன. நுண் நெகிழிகளை உண்ணும் மீன்களை அதிக விலை கொடுத்து வாங்கி நாம் தான் உண்கிறோம். வினை விதைத்தவன் வினை அறுப்பான் என பெரியவர்கள் சொன்ன வார்த்தைக்கு உண்மை விளங்குகிறதா? நமது அழகான இந்த பூமியில் எதை நாம் விதைத்தோமோ, இப்போது அதைத்தான் அறுவடை செய்துக்கொண்டிருக்கிறோம்.

மிக அண்மையில் நான் கடல் மக்கள் என்று கூறக்கூடிய செலெத்தார் பழங்குடி மக்கள் கிராமத்திற்கு சென்றிருந்தேன். கடலிலேயே வீடு கட்டிக்கொண்டு வாழும் மக்கள் அவர்கள். அவர்களின் வாழ்வாதாரமும் அந்தக் கடல்தான். மிக அழகான அந்தக் கிராமம் பிளாஸ்டிக் கழிவுகளால் நிரம்பி வழிகிறது. கடலிலும் அள்ளப்படாத குப்பைகள் கடைலையே மூடும் அளவிற்கு இறைந்துக்கிடக்கிறது.

பெண்கள் துணிவைக்கவும், பாத்திரங்கள் கழுவவும் அந்தத் தண்ணீரைத்தான் பயன்படுத்துகிறார்கள். காரணம் தண்ணீர் வசதியில்லாத கிராமம் அது. சிறுகுழந்தைகள் குப்பைகளுக்கு நடுவே குதித்து குளித்து மகிழ்கிறார்கள். இயற்கையை நேசிக்கிறேன் என்று சொல்லிக்கொண்டிருக்கும் என்னால் இந்தக் கட்டுரையைத்தான் எழுத முடிகிறது.  கிராமத்தை தூர்வாறி சுத்தம் செய்ய நடந்துக்கொண்டிருக்கும் பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இதுவரை இல்லை. காலதாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் நுண் நெகிழிக்கும், நொகிழிகளின் ஆதிக்கத்திற்கு நாம் நம்மைத்தான் பணையம் வைத்துக்கொண்டிருக்கிறோம்.

-யோகி     

நன்றி தமிழ்மலர் 10/4/2022