செவ்வாய், 18 ஏப்ரல், 2023

தேடப்பட்ட குற்றவாளி குருதேவனும் விடுதலை திரைப்படமும்

                                       
அண்மையில் திரைக்கண்ட “விடுதலை” திரைப்படம் பலதரப்பட்ட விஷயங்களால் மக்களிடத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. தொடக்கமாக அதன் மூலக்கதை எழுத்தாளர் ஜெயமோகனின் ”துணைவன்  சிறுகதையை தழுவியது என்று கூறப்பட்டது. படத்தைப் பார்த்த பலர், அது எழுத்தாளர் ச.பாலமுருகனின் சோளகர் தொட்டி நாவலை தழுவியதாக இருக்கிறது என்று விமர்சித்தனர்.  நவீன இலக்கிய வட்டாரத்தில் இது மிகப் பெரிய சலசலப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்திய வண்ணமே இருந்தது.

இதுபோக,  கடைநிலை மக்களுக்காக களத்தில் நிற்கும் தோழர்களோ,  கேராளாவில் நடந்த மக்கள் புரட்சிகளையும், கர்நாடகாவில் நடந்த மக்கள் புரட்சிகளையும், நக்சல்பாரி போராட்டங்களையும்  நினைவு கூர்ந்து பதிவிட்டனர். 

கடந்த வாரம் “விடுதலை படத்தைப் பார்த்த  எனக்கு, அதுகுறித்த  எண்ணங்களும்,  நம் நாட்டின் வரலாற்று பதிவோடு ஒத்துப்போகும் சில சம்பவங்களையும் பதிவிடுவதற்கு   ஒரு தருணமாக அமைந்தது. அதை தமிழ்மலர் வாசகர்களோடும் பகிர்ந்துகொள்கிறேன். 

கிளர்சிக்காரர்களால்   விபத்துக்குள்ளாக்கப்பட்ட ரயில்  காட்சியிலிருந்து “விடுதலை படம் தொடங்குகிறது. கிளர்ச்சிக்காரர்கள் என்று காட்டப்பட்டவர்கள்  “தொண்டர் படையை சேர்ந்தவர்கள் என்று அதிகார வர்கத்தினர் கூறுகின்றனர். பத்திரிக்கைகளிலும் செய்திகள் அவ்வாறே அச்சிடப்பட்டன.   அங்கிருந்தே அப்படம்  என்னை ஈர்க்க தொடங்கியது. காரணம் அந்த  “தொண்டர் படை தான். 

மலேசிய வரலாற்றில் இடம்பிடித்திருக்கும்  தொண்டர் படையைச் சேர்ந்தவர்களும்  கிளர்ச்சிகள் செய்வர்கள் என்றே பிரிட்டிஷ் அரசு முத்திரை குத்தியிருந்தது.  நாட்டு விடுதலைக்காக பிரிட்டிஷாரையும், முதலாளித்துவத்தை எதிர்த்து நடந்த தொழிற்சங்க புரட்சிக்காகவும்  “தொண்டர் படையினர்  கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.  குறிப்பாக 1940-களில் கெடாவில் நடந்த கள்ளுக்கடை போராட்டத்தில்  தொண்டர் படையின் பங்கு  முக்கியமாக பேசக்கூடியதாகும்.  1946-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தொண்டர் படை இயக்கம் 1948-ஆம் ஆண்டு பிரிட்டிஷாரால் தடை செய்யப்பட்டது குறிப்பிடதக்கது. 

தொடந்து பிரிட்டிஷ்  அரசாங்கத்தையும் முதலாளித்துவத்தையும் எதிர்த்து வந்த 'மலாயா தேசிய விடுதலைப் படை'யை சேர்ந்தவர்களை  ஒழித்துக்கட்டும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.  இவ்விஷயத்தில் பிரிட்டிஷார் சந்தேகம் கொண்ட ஒருவரையும்  தயவு  தாட்சண்யம்  பார்க்கவில்லை. 

'மலாயா தேசிய விடுதலைப் படை' யின் தேடப்பட்டு வந்து முக்கிய குற்றவாளியாக குருதேவன் என்பவர் இருந்தார். அவர் யார்? எப்படி இருப்பார் என்பது யாராலும் சொல்ல முடியவில்லை. கண்டுபிடிக்கவும் முடியவில்லை. அவரை உயிருடனோ அல்லது பிணமாகவோ கொண்டு வருபவர்க்கு சன்மானத்தை அறிவித்தது பிரிட்டிஷ் அரசு.  அவருடைய அடையாளம் தெரியாததால் அவர் மாயாஜாலங்கள் தெரிந்தவர் என்றெல்லாம்  கட்டுக்கதைகள் உலாவியது.  உண்மையில் போலீசின் கழுகுப்பார்வையிலிருந்த தப்பிப்பதற்காக அவர் மாறுவேடத்திலேயே இருந்திருக்கிறார். குருதேவன் மலாயா கம்யூனிஸ்ட் கட்சியின் இந்தியப் பிரிவின் புலனாய்வுப் பிரிவின் தலைவராக இருந்தார் என்றும் கூறப்பட்டாலும், அதற்கான தெளிவான ஆதாரங்கள் இல்லை.

                                

அப்போது காவல் துறையின் சிறப்புப் பிரிவின் முன்னாள் அதிகாரியான  அகமது கான் என்பவரிடம்  சிங்கப்பூரில் வாய்வழி நேர்காணல் ஒன்று செய்யப்பட்டது.  அகமது கான்-தான் குருதேவனை தேடிப்பிடிப்பதற்காக  நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரியாவார்.  அந்த நேர்காணலில், இடது சாரி சித்தாந்தங்களை கற்ற  ஒரு  தேர்ந்த சித்தாந்தவாதி என்று குருதேவனை குறிப்பிடுகிறார். மிகவும் மூளைக்காரராக செயல்பட்ட குருதேவன் மாறுவேடத்திலேயே இருந்ததால் அவரை அடையாளம் காண்பது மிகவும் சிரமமாக இருந்ததாக கூறியிருக்கிறார். அதோடு குருதேவன் என்று பெயர்கூட அவரின் இயற்பெயராக இருக்காது என்று தெரிவித்திருக்கிறார். 

குருதேவன்  போலீசிடம் மாட்டிகொண்டதும் ஒரு விபத்துபோலவே நடந்தது. ரிச்சர்ட் கொரிண்டன் எனும் பிரிட்டிஷ் அதிகாரிதான் சிரம்பானில்  குருவை கைது செய்தார். அவர் அது குறித்து பதிவும் செய்திருக்கிறார். சம்பவத்தன்று, அங்கு  கோவில் பூசாரி போல் இருந்த ஒருவரின் மீது சந்தேகம் ஏற்படவே அவர் யார் என்று தெரியாமல் விசாரணைக்காக  காவலில் வைத்திருக்கிறார் ரிச்சர்ட். பின், அகமது கான் அந்த இடத்திற்குத் திரும்பியபோதுகுரு கைவிலங்கிடப்பட்டு போலீஸ் வண்டியில் அமர்ந்திருப்பது குருதேவந்தான் என்பதை உறுதிபடுத்தியுள்ளார்.

இது அகமது கானுக்கும் ஆச்சரியத்தையே கொடுத்தது. காரணம் குரு எப்போதும் உன்னிப்பாகவும் இருக்ககூடியவர். இப்படி சாதாரணமாக சிக்கிகொண்டது அவருக்கு ஆச்சரியத்தையே கொடுத்தது.

முன்னதாக குருதேவன், சிங்கப்பூரில் தொலைபேசி நிறுவனத்தில் ஒரு சிறிய அறையில், தொலைபேசி நிறுவன ஊழியர் சங்கத்தில் அலுவலகப் பொறுப்பாளராக இருந்திருக்கிறார். தான் கற்றுதெளிந்த சித்தாந்தக் கல்வியையும், மார்க்சிய வகுப்புகளையும் ஒத்த சிந்தனையுடைய தனது சகாக்களுக்கும் அறிவார்ந்த இடதுசாரி  குழுக்களுக்கும் போதித்தார். 

''அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனம் என்ற தொழிற்சங்கம் செய்த சாதனைக்குப் பின்னால் தொண்டர் படை, குருதேவன் ஆகியோர் மறைமுகமாக இருக்கின்றனர். இந்த சாதனையை வளரவிடக்கூடாது என்று பிரிட்டிஷ் ஏகாதிபத்திய சதியால் கொல்லப்பட்ட,  தொழிற்சங்க போராட்டவாதிகளான  மலாயா கணபதி, வீரசேனன் உள்ளிட்ட தோழர்களுக்கு பின்னால்  ஓர் ஊக்கியாகவும்  குருதேவன் இருந்திருக்கிறார்.

பிரிட்டிஷுக்கு எதிரான பல போராட்ட வீரர்கள் கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டனர். பலர் நாடுகடத்தப்பட்டனர். சிலர் சுட்டுக்கொல்லப்பட்டனர். குருதேவன் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். மலாயா கணபதி புடு சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டார். வீரசேனன் துப்பாக்கிச் சூட்டுக்கு இறையானார்.

திரையில் பெருமாள் என்பவர் தேடப்படும் முதன்மை குற்றவாளியாக இருக்கிறார். அவர் எப்படி இருப்பார் என்று தெரியாத பட்சத்தில் போலீஸ் அதை கண்டுபிடிக்க சிறப்பு பிரிவுகளை அமைத்து செயற்படுவதுடன், சந்தேகம் என்ற பெயரில் மக்களையும் சித்திரவதை செய்கிறது. இங்கே இன்னொரு விஷயத்தையும் சொல்ல நினைக்கிறேன். நமது நாட்டில் (மலேசியா) காட்டுப் பெருமாள் என்ற போராட்ட வீரரும் தேடப்பட்ட குற்றவாளியாக தலைமறைவாக இருந்து, பின் பிரிட்டிஷாரால் கைது செய்யப்பட்டார் என்பதை ஒரு தகவலாக கூறிக்கொள்கிறேன்.

"விடுதலை" திரைக்கதையை   நான்  நமது நாட்டுக் கதை என்று சொல்லவில்லை.  மக்கள் போராட்டங்கள் எங்கு நடந்தாலும், வெவ்வேறு தனி இயக்கங்களாக செயற்பட்டாலும், முடிவில் அது ஒன்றுபோலவே இருப்பதை சொல்ல வருகிறேன்.

இரண்டாம் பாகம் வந்தால்தான் இன்னும் தெளிவாக பேச முடியும். தவிர நமது நாட்டில் நடந்த போராட்டங்களை பேசுவதற்கு இதுவும் ஒரு வாய்ப்புதானே.

நன்றி: மலாயா கணபதி இணையத்தளம் மற்றும் தோழர் சாமிநாதன்.  

நன்றி தமிழ்மலர் நாளிதழ் 23/4/2023

நிலத்தை மீட்டெடுக்க போராடும் பூர்வக்குடி மக்கள்

 மனிதர்கள் அல்லாத உயிரினங்கள் எல்லாமே, யாருடைய அனுமதியும் அதிகாரமும் இன்றி, தம் இருப்பிடத்தை தாமே அமைத்துகொள்கின்றன.  ஏகப்பட்டச் சட்டங்களையும் திட்டங்களையும் கொண்டிருக்கும் மனிதன் ஆதிக்கம் மற்றும்  முதலாளித்துவ சிறையில்  சுக்கிக்கொண்டு மீளமுடியாத சிறைவாசியாகவும், தமக்கான ஒரு கூடு அமைக்க முடியாமலும்  தவிக்கிறான்.

உலகம் முழுக்கவே இதுதான் நிலை என்றாலும், பூர்வக்குடிகளுக்கென்று ஒரு வரையரை உள்ளது. பன்நெடுங்காலமாக காடுகளையே தங்களின் வாழ்விடமாக அவர்கள் கொண்டிருக்கிறார்கள். எந்தச் சட்டத்திட்டத்திற்குள்ளும் அடங்காதவர்கள் என்றும், காட்டுவாசிகள் என்றும் அடையாளம் கொண்டிருக்கும் அவர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பது, உலக சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் உலக மனித உரிமை ஆணையத்தின் வேண்டுகோளாக உள்ளது.

மலேசியாவைப் பொருத்தவரை காடுகள் அழிப்பு என்பது ஒவ்வொருநாளும் கண்மூடித்தனமாக நடைபெற்றுகொண்டிருக்கிறது. இதனால், வனவிலங்குகளும், இயற்கைசூழலும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. இதில் வனவாசிகள் குறித்த பாதுகாப்பும் காடுகளோடு அவர்களுக்கிருக்கும் உயிரோட்டமான உறவையும் யாரும் புரிந்துகொள்வதாக இல்லை. பொறுப்பற்றவர்களால் வனத்தில் மேற்கொள்ளப்படும் இயற்கை சுரண்டல்களுக்கு, தடையாக இருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் பூர்வக்குடி மக்கள், தங்களின் வசிப்பிடம் வரைக்கும் வந்துவிட்ட வன அழிப்பை, பூர்வக்குடிகளின் பிரச்னையாக அல்லாமல், சூறையாடப்படும் வனம் எல்லாருடைய நல்வாழ்வுக்கானது என்பதை உணரும்படி நாட்டுமக்களை கேட்டுகொள்கின்றனர்.  

இதில் புளுகுமூட்டை என்னவென்றால், வசதியாக வாழவைக்கிறோம் என, காடுகளில் வசித்த மக்களை, மாநில அரசாங்கங்கள் சாலையோர குடியிருக்குக்கு மாற்றியமைத்ததுதான். காடு கொடுத்த கொடையில் செழித்து வாழ்ந்த பழங்குடிகள், தற்போது காடுகளை இழந்துவிட்டு, முதலாளிகளுக்கு கூலிகளாக வாழபழகிகொண்டிருக்கிறார்கள்.

இதிலிருக்கும் அரசியலை அறிந்துகொண்ட போராட்ட குணம் கொண்ட சிலர் மட்டும், காடுகளே எங்கள் வீடுகள்; அதை எங்களிடமே கொடுத்துவிடுங்கள் என்று மாநில அரசாங்கத்திடமும் மத்திய அரசாங்கத்திடமும் போராடிகொண்டிருக்கின்றனர். அந்த வகையில், பகாங் மாநிலத்தில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்துவரும், செமாய் சமூகத்தைச் சேர்ந்த போஸ் லானாய் கிராம மக்கள்,  அவர்களின் பாரம்பரிய  நிலத்தை மீட்டெடுக்க, நீதி கேட்டு சட்டத்தை கையில் எடுத்திருக்கின்றனர்.

சட்டத்தை நாடுவதற்கு என்னக் காரணம்?

நூறு ஆண்டுக்கும் பழைமையான இந்தக் கிராமம், பலவரலாற்றுப் பதிவுகளையும், வரலாற்று எச்சங்களையும் இன்னும்கூட கொண்டிருக்கிறது. குறிப்பாக பிரிட்டிஷ் காலணியாதிக்கத்தில், பிரிட்டிஷ்காரர்களோடு இவர்களுக்கிருந்த நட்புறவையும், பகாங் அரசக்குடும்பத்தோடு இம்மக்கள் கொண்டிருந்த நல்லினக்கத்தையும் சிலவற்றை வாய்மொழி பதிவுகளாகவும், புகைப்படங்கள் மற்றும் எழுத்துப்பூர்வ பதிவுகளாகவும் இவர்கள் கொண்டிருக்கின்றனர்.

இம்மாதிரியான வரலாறுகளைக் கொண்டிருதாலும், இந்தக் கிராமமானது ஒரு பாதுகாப்பு இல்லாத சூழலையே இன்றுவரை எதிர்கொண்டுவருகிறது. நல்ல மண் வளமும், நீர் வளமும் கொண்டிருக்கும் பகாங் மாநிலத்தில் சட்டப்பூர்வமாகவும், சட்டத்திற்கு புறம்பாகவும் இயற்கையைச் சுரண்டும் நடவடிக்கைகள் நடந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில் தங்களின் பாரம்பரிய வனப்பகுதிக்கு பேராபத்து வரும்போதெல்லாம் அங்கிருக்கும் பூர்வக்குடி மக்கள் போராட்டத்தை கையில் எடுக்கின்றனர்.

அதற்கு சில சம்பவங்களை சொல்லலாம். உதாரணமாக 2011-ஆம் ஆண்டின் முற்பகுதியில் வனத்திலிருந்த எங்களை Sg Koyan நகருக்கு அருகில் உள்ள Pembangunan Bersepadu Desa Terpencil (PROSDET) கம்போங் பந்தோஸ் என்ற கிராமத்திற்குச் செல்லுமாறு JAKOA வலியுறுத்தியது. உண்மையில், இந்த இடமாற்றம் அரசு மற்றும் TNB நிறுவனத்தால், மின்சார தேவைக்காக ‘தெலோம் அணையை’ கட்டுவதற்காக மேற்கொள்ளப்பட்டது. இவ்விவரத்தை அவர்கள் 2013-ஆம் ஆண்டுதான் எங்களுக்கு தெரிவித்தார்கள். எங்கள் கிராமம் ஆபத்தில் இருப்பதை உணர்ந்து, பழங்குடி மக்கள் மேற்கொண்ட சட்டநடவடிக்கையில், 2019-ஆம் ஆண்டு பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கம் கிராமத்திற்கு எதிரான இந்த திட்டத்தை ரத்து செய்தது. அதை தொடர்ந்து, லந்தனைடு சுரங்க திட்டத்தை 2021-ஆம் ஆண்டு கொண்டு வந்தார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு நடக்ககூடிய இந்த சுரங்கதிட்டம், மாநிலத்திற்கு மட்டுமல்ல, தீபகற்பத்திற்கே மிகப்பெரிய இயற்கை மாசுபாட்டை ஏற்படுத்தக்கூடியதாகும். இதனால், ஒட்டுமொத்த கிராமமும் இந்தச் சுரங்கத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததில், தற்போது அத்திட்டம் ஒத்திவைப்பட்டுள்ளது. இருந்தாலும், அங்கு சட்டவிரோத நடவடிக்கைகள் சில நடப்பதை நாங்கள் கவனிக்கவே செய்கிறோம் என போஸ் லானாய் மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கார்ப்ரேட் நிறுவனங்களின் பல்வேறு இலாபம் ஈட்டும் திட்ட அச்சுறுத்தலை தவிர்ப்பதற்கும், பல ஆண்டுகளாக வசித்து வரும் அக்கிராமத்தை, தங்களுக்கே உரிமையாக்கும்படியும் நீதிமன்ற உதவியை பழங்குடிமக்கள் நாடியுள்ளனர்.

இதுதொடர்பாக கடந்த ஆகஸ்ட் 2021,  பழங்குடிகள் மக்களின் சார்பில், வழக்கறிஞர் ஹர்னேஷ்பால் சிங் புல்லர்  இவ்வழக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதியிலிருந்து தொடந்து  4 நாட்கள் நீதித்துறை ஆணையர் ரோஸ்லான் மாட் நோர் முன்னிலையில் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டிருக்கிறது. 147 பேரை பிரதிநிதித்து 8 பழங்குடிகள் முதல்முறையாக சொந்த நிலத்தை போராடி மீட்கும் வழக்கில் களமிறங்கியுள்ளனர்.

இன்று நாம் அனுபவிக்கும் சுதந்திரம் போராடி பெற்றதுதான். அதில் பூர்வக்குடிகளுக்கும் பங்கு இருக்கவே செய்கிறது. இன்று சொந்த நிலத்து சுதந்திரத்திற்காக அவர்கள் சொந்த நாட்டிலேயே போராடிகொண்டிருக்கின்றனர். நாம் அவர்களுக்கு என்ன பதில் வைத்திருக்கிறோம்.

நன்றி தமிழ்மலர் நாளிதழ் 16/4/2023