செவ்வாய், 17 ஜனவரி, 2023

மியன்மாரில் பொங்கல் விழா 2023

 மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்காடும்                       உடையது அரண், என்கிறார் வள்ளுவர்.

வள்ளுவர் எழுதியிருக்கும் 1330 திருக்குறள்களில் எனக்கு இந்தக் குறளின் மீது மட்டும் ரொம்பவே மயக்கமும் காதலும் உண்டு. தெளிந்த நீரும், பரந்த நிலமும்,உயர்ந்த மலையும் அடந்த காடும் இயற்கை அரண்களாகும் என்பது இக்குறளின் அர்த்தமாகும். இயற்கைக்கு நன்றி சொல்ல நாம் வைக்கும் பொங்கல் பண்டிகைக்கு இக்குறள் பொருத்தமான ஒன்று என்பது என்னுடைய நீண்ட நாளைய நினைப்பு. 

முதல் முறையாக மியன்மார் தமிழர்கள் கொண்டாடும் பொங்கல் பண்டிகை குறித்தான புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை அங்கே பிறந்து வளர்ந்தவரான தோழர் ரேவதி என்னிடம்  பகிர்ந்துக்கொண்டார். இடதுசாரி சிந்தனைக் கொண்டவருமான அவர்,  மூன்று நாட்கள் கொண்டாடப்படும் பொங்கல் விழாவினை மிகத் தெளிவாக புரிந்துக்கொள்ளும் பொருட்டு எனக்கு விளக்கம் கொடுத்ததோடு, மியன்மாரில் சிறுபான்மை இனமான மியன்மார் தமிழர்களோடு இணைய காணொளிவாயிலாக உரையாடுவதற்கு வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்தார்.  

மியன்மார் பாகோ மாகாணத்தில் ‘நாக காக்கும்’ எனும் கிராமத்தில் சுமார் 200 தமிழ்நாட்டு வம்சாவளியைச் சேர்ந்த தமிழர்கள் வசிக்கிறார்கள். அவர்களில் பலர் நன்றாக தமிழ்பேசக்கூடியவர்களாகவும்  பொங்கல், தீபாவளி, தைப்பூசம் உள்ளிட்ட பெருவிழாக்களை தவறாமல் கொண்டாடக்கூடியவர்களாகவும் இருக்கிறார்கள்.

கருமாரியம்மன் கோயில், பொங்கல் பானை,  ஊர் சாப்பட்டுக்கு மிளகாய் அரைக்கும் ஆண்

அந்தக் கிராமத்திற்கென்றே ஊர் கோயிலாக கருமாரியம்மன் கோயில் இருக்கிறது. அந்தக் கோயில்தான் எல்லாரும் ஒன்றுகூடும் இடமாகவும் இருக்கிறது. குறிப்பிட்ட கிராமம் விவசாயக் கிராமமாக இருப்பதால் கிட்டதட்ட பொங்கல் அன்று எல்லா வீடுகளிலும், வாசலில் வண்ணக் கோலம் போட்டு நாளை தொடங்குகிறார்கள். கோயிலில் மட்டும் பொங்கல் வைப்பது மட்டுமல்லாமல் ஒவ்வொரு வீட்டிலும் பொங்கல் வைக்கிறார்கள். அலுமனிய சட்டியில் கோலம் வரைந்து, அதில் மஞ்சல், மாவிலைக் கட்டி பொங்கல் வைக்கிறார்கள்.

ஆண்களும் பெண்களும் மியன்மார் மக்கள் உடுத்தும் கைலி சட்டையையே பெருவாரியாக உடுத்துகின்றனர். பர்மா கலாச்சாரப்படி முகத்தில் தனகா தடவிக்கொள்ள ஒருவரும் மறக்கவில்லை. புடவை அல்லது வேஷ்டி சட்டையையும் யாரும் அணியவில்லை என்றாலும் பெண்கள் பொட்டு வைத்து சிலர் பூவும் வைத்திருந்தனர்.   

எலவக்கா,                         தனகா தடவிய சிறுவர்கள்,          தோழர் ரேவதி 

நான் கவனித்த வரையில் இரண்டாம் நாளான மாட்டுப் பொங்கல் அன்றுதான் கிராமமே மிக மிக கோலாகலமாக இருக்கிறது. விவசாயத் தோழனான காளை மாட்டை அவர்கள் மிக ஜோராகவே அலங்கரித்து கோயிலுக்கு அணிவகுத்து கொண்டு வருகிறார்கள். காளைகளை அடக்கும் விளையாட்டுகளை மியன்மார் அரசு தடை செய்திருப்பதால் அதை அவர்கள் செய்வதில்லை. என்றாலும் காளைகளின் கொம்புகளில், அல்லது கழுத்தில் மாலை அணிவித்து திடலில் ஓடவிடுவார்களாம். அதை போட்டியாக அல்லாமல் சாமர்த்தியமாக கிளட்டிவிடும் வீரர்களுக்கு பரிசு பொருள்கள் கிடைக்குமாம்.  மாடுகளை கொண்டிருக்கும் விவசாயிகளை உற்சாகப்படுத்தவே இம்மாதிரியான விளையாட்டுகளை கிராமத்திற்குள்ளேயே செய்வதாகவும் நிச்சயமாக அரசு ஆணைக்கு நாங்களெல்லாம் கட்டுப் படுகிறோம் என்றும் ரேவதி தெரிவித்தார்.

முன்னதாக மாடுகளை திடலுக்கு கூட்டி வரும் வீரர்கள் கோயிலில் பொங்கல் வைக்க வேண்டும். பொங்கல் வைக்கும் ஆண்கள்தான் மாடுகளை திடலில் இறக்குவதற்கு அனுமதிக்கப்படுவதோடு,   மாடு கழுத்தில் இருக்கும் மாலையை கிளட்டும் விளையாட்டுகளில் பங்குபெறவும்   முடியும்.  விவசாய மாடுகள் என்பதால் அது ஒன்றும் ஆபத்து  இல்லை என்றும் ரேவதி கூறினார். காணும் பொங்களுக்கு பெண்கள் பொங்கல் வைப்பது போல,  ஒரே வரிசையில் ஆண்களும் பொங்கல் வைப்பது பார்க்க அழகாகவே இருக்கிறது.

காணும் பொங்கல் அன்று திருமணம் ஆகாத இளம் பெண்கள் பொங்கல் வைக்கிறார்கள். குளவி சத்தம் போட்டு, கும்மி பாட்டு பாடி ரொம்பவும் கோலாகலமாக இருக்கிறது அக்காட்சி. அதையும் தாண்டி இந்த மூன்றாம் நாளில் கிராம மக்கள் கூடி ஊருக்கு அன்னதானம் போடுவார்கள். அன்றைய நாளில் சாம்பார், பொறியல் என்று சைவ சாப்பாட்டை ஊர் மக்களே ஆக்கி ஊருக்கு போடுவார்கள். சாமிக்கு உணவு படைக்கும்போது குளவியிட்டு, உருமி- மேளம் வாசித்து  பெரிய விஷேசமாகவே இருக்கிறது மூன்றால் நாள் பொங்கல். 

பரமக்குடியை பூர்வீகமாக கொண்ட எலவக்காவிடம் பேசும்போது தமக்கு 67 வயது என்றும் அவர் பர்மாவில் பிறந்தவர் என்றும் ஒருமுறைகூட தமிழ்நாட்டிற்கு போகவில்லை என்றும் கூறினார். பிறந்ததிலிருந்தே பர்மாவில் வசிக்கும் அவர் தமிழ் கலாச்சாரத்தை மறக்கவில்லை என்று கூறியதோடு வழிவழியாக பாடப்பட்டு வரும் கும்மி பாடலை பாடியும் காட்டினார். இப்படி அந்தக் கிராமத்தைச் சேர்ந்த மூத்த பெண் கருப்பி, 24 வயது அஞ்சலை ஆகியோரிடம் சில நிமிடங்கள் பேசக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அனைவரும் தமிழ்மொழியை மிக அழகாகவே பேசுகிறார்கள் என்றாலும், பர்மா மொழியையே அவர்கள் தொடர்பு மொழியாக கொண்டிருப்பது நன்றாகவே தெரிந்தது.

                                                                  

எங்களின் இணைய காணொளி உரையாடலை முடிக்கும்போது ரேவதி சொன்னார், சில தினங்களுக்கு முன்பு மியன்மார் அரசாங்கம் எங்களிடம் இப்படியான ஒரு கேள்வியை முன்வைத்தது. “உங்களுக்கு உங்கள் பூர்வீக நாட்டுக்கே போக விருப்பம் இருந்தால் போய்விடலாம்.  ஊருக்கு அனுப்பிவிட நாங்கள் ஏற்பாடு செய்கிறோம்” என்று. ஊர் மக்கள் யாரும் அதற்கு உடன்படவில்லை என்று தோழர் ரேவதி சொல்லும்போது பிறந்த நாட்டின்மீது அவர்கள் கொண்டிருக்கும் அன்பும் விசுவாசமும் மலேசியாவில் வசிக்கும் என்னால் உணர முடியாமல் இல்லை. தவிர இரண்டு மூன்று தலைமுறைகளாக வாழ்ந்ததில் அவர்களில் சிலர் வீடு நிலம் என்று கொஞ்சமாக சொத்தும் சேர்ந்த்து வைத்திருக்கின்றனர்.

ஊர் விருந்து
“நம்மவர்கள் புலம் பெயர்ந்து வேறுவேறு நாடுகளில் வாழலாம். ஆனால், போராட்டம் ஒன்றுதான்; மரபு ஒன்றுதான்; வாழ்க்கை ஒன்றுதான் இல்லையா” என்றேன். ஊர் பெண்கள் குளவையிட ஆண்கள் பொங்கலோ பொங்கல் என்று கத்தத் தொடங்கினர்.    

கட்டுரை : யோகி                                                                                                                                                                                                           
தகவல் : தோழர் ரேவதி (மியன்மார்)

திங்கள், 9 ஜனவரி, 2023

மற்றுமொரு பூர்வக்குடி வனவிலங்கு தாக்கி மரணம்

 ஜனவரி 9-ஆம் தேதி,  காலை 10 மணியளவில் பஹாங், லிப்பிஸ், கம்போங் துவால், போஸ் செண்டருட் பூர்வக்குடி கிராமத்தில் காட்டு யானை தாக்கியதில், ஆண்டி யோக் மன் எனும் 15 வயது பழங்குடிச் சிறுவன்  உயிரிழந்தான். ஆண்டி, தனது சகோதரன் மற்றும் நண்பனோடு காட்டில் பெத்தாய் பறிக்க சென்றிருந்தபோது இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது. இது குறித்த வாக்குமூலத்தை இறந்தவரின் சகோதரரான போர்ஹான் பதிவு செய்திருக்கிறார்.

காலை 8 மணிமுதல் இம்மூவரும் காட்டில் பெத்தாய்-யை தேடி அலைந்திருக்கிறார்கள். சுமார் ஐந்து மணி நேரத்திற்குப் பிறகு, திடீரென காட்டு யானை ஒன்று புதரிலிருந்து ஆவேசமாக தோன்றி அவர்கள் திசை நோக்கி வருவதை கவனித்திருக்கிறார்கள். அதிர்ச்சியடைந்தவர்கள் ஒளிந்து கொள்ள ஆளுக்கு ஒரு திசை நோக்கி ஓடியிருக்கிறார்கள்.

"நான் மலைப் பகுதியை நோக்கி ஓடினேன். அந்த நேரத்தில் ஆண்டி கீழே விழுந்ததை நான் பார்த்தேன். யானை என் சகோதரனை பந்தைப் போல் உதைப்பதைப் எங்களின் நண்பனான அபின் பார்த்தான்.  பின் அந்த விலங்கு ஆண்டியின் இறந்த உடலை உலர்ந்த இலைகளால் மூடியதாகவும், கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் காட்டு யானை ஆண்டியின் உடல் அருகே அமர்ந்திருந்து,  மெதுவாக பின்னர் வெளியேறியது  என்றும்  போர்ஹான்,  ஒராங் அஸ்லி மேம்பாட்டுத் துறையை (JAKOA) சந்தித்தபோது கூறினார். 

தன்னைக் காப்பாற்றிகொள்ள ஒரு மரத்தில் ஏறிய அவரது நண்பர் அபின், நடந்த அனைத்தையும் பார்த்ததாகத் தெளிவுபடுத்திய போர்ஹான், யானை அங்கிருந்து சென்ற பிறகு, தானும் அபினும் தனது சகோதரனின் உடலை வீட்டிற்குக் கொண்டு வந்ததாகக் கூறினார்.

பகாங், லிபிஸ் மாவட்ட காவல்துறைத் தலைமை கண்காணிப்பாளர் அஸ்லி முகமது நூர் இதுகுறித்து கூறுகையில், தொடக்கத்தில் யானை கம்போங் ரெகாங்கில் நுழைந்தது என்றும் கிராமத்து மக்கள் விரட்டியதில் அது டுரியான் பழத்தோட்டப் பகுதிக்கு  நுழைந்தது என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருப்பதாக கூறினார்.

யானையின் இந்தத் திடீர் தாக்குதலால் உயிர் இழப்பைச் சந்தித்திருக்கும் பூர்வக்குடி கிராம மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டியதும், இம்மாதிரியான தாக்குதலிலிருந்து அவர்களைக் காப்பாற்ற வேண்டியதும் மாநில அரசு, மத்திய அரசு, வனத்துறை உள்ளிட்ட அனைத்து மக்கள் பிரதிநிதிகளின் கடமையாகும்.

அதே கடமை யானைகளைக் காப்பாற்றுவதிலும் அவர்களுக்கு இருக்க வேண்டும். இதுவரை கிராமத்திற்குள் நுழையாத காட்டு யானைகள் இப்போது நுழைய தொடங்கியிருக்கிறது என்றால் காடு அழிப்பு ஒன்று மட்டுமே அதன் காரணமாக இருக்க முடியாது.

யானை இதுவரை வாழ்ந்த இடத்தில் அதன் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் ஏதாவது ஒரு சக்தி உள்ளே நுழைந்திருக்கலாம். தன்னைத் தற்காத்துக்கொள்ள வேண்டுமென்ற எண்ணமும், அதனால் ஏற்படும் கோபமும் யானைகள் மனிதர்களைத் தாக்க காரணமாக இருக்கலாம். இவையெல்லாம் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய விஷயங்களாகும்.

காட்டிற்குள் சட்டப்பூர்வமாக நடக்கும் விஷயங்களோடு, சட்டத்திற்கு விரோதமாக ஏதும் நடக்கிறதா என்பதையும்  ஆராய வேண்டியிருக்கிறது. யானை ஆய்வாளர்களுடன் இணைந்து, இதுக்குறித்து கலந்தாலோசிப்பது நல்ல தெளிவினைக் கொடுக்கும்.

மனிதர்களும் மிருகங்களும் இந்தப் பூமியின் வாழ்வுக்குத் தவிர்க்க முடியாத உயிரிகள். மிருகங்களின் வாழ்விடத்தைப் பிடுங்கிக்கொள்ளும் சுயநலமான மனிதர்கள், அதனால் உண்டாகும் பாதிப்பை வனம் சார்ந்த மக்களின் தலையிலேயே போட்டுவிட்டு, யானையைக் கூண்டில் அடைக்க வேண்டும் என்று நியாயம் பேசிக்கொண்டிருப்பது என்ன ஒரு நீதி என்று புரியவில்லை.

மேலே உள்ளச் செய்தியில், இறந்த உடலை, காட்டு யானை உலர்ந்த இலைகளால் மூடியதாகவும், கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஆண்டியின் உடல் அருகே அமர்ந்திருந்து, பின்னர் மெதுவாக அங்கிருந்து நகர்ந்ததாகவும் கூறப்படுகிறது.

இது யானைகளுக்கே உள்ள பிறவி குணமாகும். தமிழ்நாட்டில் யானைகள் இவ்வாறு நடந்துக்கொள்வதைத் தோழர் கோவை சதாசிவம் “ஆதியில் யானைகள் இருந்தன” என்ற புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

யானையின் இந்தக் குணத்தை அறிவியல் ரீதியில் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய தேவையும் இருக்கிறது. இம்மாதிரியான ஆய்வுகளும் கலந்துரையாடல்களுமே மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கான போரை நிறுத்துவதற்குத் துணை புரியும்.

சமீபத்திய ஆய்வு ஒன்று, 1970-ஆம் ஆண்டிலிருந்து இதுவரை, மொத்த வனவிலங்குகளில் 69 விழுக்காடு அழிந்துவிட்டதாகச் சொல்கிறது. விலங்குகள் அழிந்தால் மனிதனும் சேர்ந்தே அழிவான் என்பது இயற்கையின் விதியாகும்.

நன்றி : மலேசியாகினி https://malaysiaindru.my/210432 

புதன், 4 ஜனவரி, 2023

தேக்கடிக்கு ஒரு அத்தியாயம்

உங்களால் ஒருநாள் முழுக்க மின்சாரம் மற்றும் மின்னியல் சாதனங்கள் பயன்படுத்தாமல் இருக்க முடியுமா? இப்பரீட்சையோடு இயற்கை அழகு கொட்டிக் கிடக்கும் ஒரு காட்டில், உங்களை விட்டுவிட்டால், “இயற்கையை ரசித்துவிட்டு வருவேன்” என்று உங்களால் உறுதியாகக் கிளம்பிப்போக முடியுமா?

அப்படி இருக்கத்தான் முடியுமா? அதை முயற்சி செய்துதான் பார்த்துவிடலாமே? என்று புறப்பட்ட ஒரு பயணத்துக்குதான் இந்த கட்டுரையில் உங்களை அழைத்துச் செல்லவிருக்கிறேன்.

தமிழ்நாட்டிலிருந்து மூணாறு – தேக்கடி செல்வதற்குச் சாலை மார்க்கமாக இருவழிகள் இருக்கின்றன. பொதுவாகப் பயணிகள் மதுரையிலிருந்து தேனி – கம்பம் – கூடலூர் – தேக்கடி வந்து மூணாறு இப்படிதான் திட்டமிடுவார்கள். இரண்டாம் வழி, தேனி – போடிநாயக்கனூர் – போடிமேடு வழியாக மூணார் – தேக்கடி.

தேக்கடி என்றாலே கேரளா, தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலங்கள் பங்கு போட்டுக்கொள்ளும் எல்லைப் பகுதியாகவும், கேரளா மாநிலத்தின் சுற்றுலாத்துறை, வனத்துறை இரண்டுமே இணைந்து செயலாற்றும் படகுத்துறை, படகு பயணம்தான் அனைவருக்கும் ஞாபகம் வரும். அதோடு பெரியாறு புலிகள் சரணாலயம். யானைகள், மான்கள், மிளா, காட்டு மாடுகள்,செந்நாய்கள் உள்ளிட்ட ஆபத்தான வன விலங்குகளும் பலவிதமான பறவைகளும் இந்த தேக்கடி வனத்தைப் பிறப்பிடமாகக் கொண்டிருக்கின்றன. இதெல்லாம் இணையத்தில், தேக்கடி என்று தேடினாலே நம் கண்முன் காட்சிகளாகவே திரையில் வந்துவிடுகின்றன. அக்காட்சிகள் கொக்கி போட்டு நம்மை தேக்கடிக்கே இழுத்து செல்லவும் செய்கிறது.

காடு, மலைகள், நீர்ச்சுனைகள், பள்ளத்தாக்குகள் உள்ளிட்ட அனைத்தும் ஒரே இடத்தில் அமைந்தது தேக்கடி. கேரளா வனத்துறையினர் ஏற்பாடு செய்திருக்கும் இரண்டடுக்கு மோட்டார் படகில் இயற்கையை ரசித்தபடி, அங்கே நீர் குடிக்க வரும் வன விலங்குகளை நாம் பார்க்கலாம், எப்போதும் காணக் கிடைக்கக்கூடிய விலங்காக யானையும் மானும் இருக்கின்றன. நாரை, காட்டு வாத்து உள்ளிட்ட பறவைகள் இளைப்பாறுவதைப் பார்க்கவும் மிகவும் அழகாகவே இருக்கிறது. புலி, காட்டுமாடு உள்ளிட்ட விலங்குகள் கால நேர நிர்ணயம் இல்லாமல் நமது அதிர்ஷ்டத்தைப் பொறுத்தே தரிசனம் கொடுக்கின்றன.

ஆனால், படகு போக்குவரத்துக்குக் கால அட்டவணை இருக்கிறது. ஒரு மணி நேரத்திற்கு ஒரு படகு கிளம்புகிறது. ஏறக்குறைய ஒரு மணிநேரம் வரையில் படகுச்சவாரி போகலாம். சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்கக் கண்காணிப்பாளர்களால் கவனமாகப் பயணிகள் கண்காணிக்கப்படுகின்றனர்.

எனது நண்பர் பசுமை ஷாகுல் உதவியோடு வனத்தில் தங்குவதற்கு வனத்துறையில் அனுமதி வாங்கியிருந்தேன். படகுச் சவாரியின் போது நான் உட்பட வனத்தில் தங்குவதற்கு அனுமதி பெற்றிருந்த பயணிகள் சிலரை ஏடப்பாளையம் அரண்மனை அருகே அதிகாரிகள் இறக்கிவிட்டனர். அதில் நான் அங்கிருந்து இன்னும் சில கிலோமீட்டர் தொலைவில் வனத்தின் உள்ளே கட்டப்பட்டிருக்கும் ஏடப்பாளையம் கண்காணிப்பு கோபுரத்தில் தங்குவதற்காக அனுமதி பெற்றிருந்தேன். அதற்கு நடந்துதான் செல்ல வேண்டும். பாதுகாப்புக்குத் துப்பாக்கி ஏந்திய பயிற்சிபெற்ற ஒரு வன அதிகாரியும், ஒரு நாளுக்குச் சமையல் செய்து தருவதற்கு வனத்துறையைச் சேர்ந்த ஒருவரும், மேலும் ஒரு வனத்துறையைச் சேர்ந்தவரும் இந்தப் பயணத்தில் உடன் வந்தனர். மலையாளிகளான அவர்கள் தமிழ் பேசக் கூடியவர்களாக இருந்தது எனக்குப் பேருதவியாக இருந்தது.


ஏடப்பாளையம் கண்காணிப்பு கோபுரத்தில் எனக்குக் கிடைத்த அனுபவத்தை பகிர்வதற்கு முன் ஏடப்பாளையம் அரண்மனை குறித்துச் சொல்லிவிடுகிறேன். இந்த அரண்மனை 1927ஆம் ஆண்டு சிறுவயதிலிருந்த பலராம வர்மா காலத்தில் சேது லக்ஷ்மி பாயின் ஆட்சியின்போது கட்டப்பட்டிருக்கிறது. இந்த அரண்மனைக்கு கோடைக்கால அரண்மனை என்ற பெயரும் உண்டு.

ஒவ்வொரு வருடமும், குறிப்பாகக் கோடைக் காலத்தில் அரசு குடும்பத்தினர் இளைப்பாற இந்த ஏரி அரண்மனைக்கு வருகை தருவார்களாம். அதோடு அவர்களின் பிரத்தியேக விருந்தினர்களுக்கு இயற்கையுடன் கூடிய விருந்து படைக்கவும் இந்த இடத்தை அவர்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

தற்போது அந்த அரண்மனை சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்குச் சொகுசு மாளிகையாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.

நான் அரண்மனையின் உட்புறம் சென்று பார்த்தேன். மன்னர் காலத்துப் பழைய தளவாடப் பொருள்கள் சில இருக்கின்றன. அதையும் தாண்டி அங்கே மாட்டப்பட்டிருக்கும் மன்னர் காலத்துப் பழைய புகைப்படங்கள் இன்னும் கூடுதல் வரலாற்றை நம்மோடு பேசுகிறது. அலங்கரித்த யானைகளின் படைசூழ மன்னர் பெருவாழ்வு வாழ்ந்திருக்கிறார்.

அந்த அரண்மனையிலிருந்து கால்நடையாக கிட்டதட்ட இரண்டு கிலோமீட்டர் நடந்துசென்றால் காட்டின் மையப்பகுதியை அடைந்துவிடலாம். அங்குதான் ஏடப்பாளையம் கண்காணிப்பு கோபுரம் இருக்கிறது. 1970களில் கட்டப்பட்ட கோபுரம் என்றாலும் தேவைக்கருதி பழுதான பாகங்களைச் சரி செய்து இன்னும் கோபுரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கிறார்கள். வனவிலங்குகளிடமிருந்து பாதுகாப்பாக இருக்கக் கோபுரத்தைச் சுற்றி அகழி வெட்டப்பட்டுள்ளது.

நாங்கள் கோபுரத்தை அடைந்த நேரம் மதியம் கடந்திருந்தது. படியேறிப் போய் நான் கோபுரத்தின் மேலிருந்து காட்டைப் பார்த்தேன். சூடான தேநீர் தயாராகிக் கொண்டிருந்த வேளை, தூரத்தில் ஒரு புறம் மான்கள் கூட்டத்தையும், மறுபுறம் காட்டு மாடுகள் கூட்டத்தையும் காண முடிந்தது. அறையில் மெத்தையுடன் கூடிய ஒரு கட்டில், சின்ன தேநீர் மேஜை ஒன்றும் இருந்தது. சுவரில் கண்காணிப்பு கோபுரத்தின் பழைய புகைப்படம் ஒன்று மாட்டப்பட்டிருந்தது. அறைக்கு வெளியில் இரண்டு நாற்காளிகள்; தேனிக் கூட்டம் ஒன்று கதவருகில் அடைக்கலம் கொண்டிருந்தது.

மின் வசதி இல்லை. கீழ்த்தளத்தில் கிணறு வெட்டி குழாய் வழியாக இணைப்பு கொடுத்து தண்ணீர் பயன்பாட்டுக்கு வசதி செய்திருந்தார்கள். குளிப்பதற்கும் கழிப்பறையில் பயன்படுத்திக்கொள்ளவும் அந்த தண்ணீர்.

மெல்ல இருட்டத் தொடங்கியதும் கலைப்பு மிகுதியாக இருந்தாலும், இன்று என்னென்ன வனவிலங்குகளை வனம் கண்முன் கொண்டு வரப்போகிறதோ என்ற எதிர்பார்ப்புதான் அதிகமாகிறது. கண்காணிப்பு கோபுரத்திலிருந்து வனவிலங்குகளைப் பார்ப்பதற்கு வசதியாக ‘கை லாம்பு’ (டார்ச் லைட்) ஒன்றை  வனத்துறையினர் கொடுத்திருந்தனர். வனவிலங்குகளை காண்பதற்கு வசதியாக இருந்ததோ இல்லையோ, இரவில் என் பயன்பாட்டுக்கு அந்த கை லாம்பு உற்ற தோழனாகவே இருந்தது.

சுவையான கோழி கறி சமையல், கூடவே எனக்குப் பிடித்த தேநீருமாக என் ஒருவளுக்கான விருந்து தடபுடலாகவே இருந்தது. வனத்துறை அதிகாரிகளிடம் மலேசிய வன அரசியலைப் பேசிக்கொண்டு இருக்கும்போது, அதிகாரி சொன்னார், “புலி மிக அருகில் எங்கேயோ இருப்பதாகத் தகவல் கிடைத்திருக்கிறது. கோபுரத்தை விட்டு தனியே எங்களுக்கு தெரியாமல் போக வேண்டாம்.” அவர்களின் துணையில்லாமல் கண்காணிப்பு கோபுரத்தை தாண்டவே கூடாது என்று அங்கு வருவதற்கு முன்பே என்னை எச்சரித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தேவைக்கு ஒரு மெழுகுவர்த்தி கொடுத்திருந்தனர். கூடவே ஒரு கொசு வர்த்தியும். மெழுகுவர்த்தியின் உதவியோடு கொண்டு வந்திருந்த நாவலை சிறிது நேரம் வாசித்தேன். மனம் வனத்தை நோக்கியே இருந்தது. கை தொலைப்பேசி, மடிக் கணினி, தொலைக்காட்சி, ஒளி – ஒலி மாசு எதுவும் இல்லாத ஓர் அற்புதமான இரவு. கண்காணிப்பு கோபுரத்திற்கு நேர் எதிரே நெட்டையான ஒரு மரத்தில் இரட்டைவால் குருவி ஒன்று விட்டு விட்டு ஏதோ பாடிக்கொண்டிருந்தது. உடலும் மனமும் கனமிழந்து காற்றைப்போல லேசாகியிருந்தது. மான் மற்றும் காட்டுமாடுகள் கூட்டத்தைத் தவிர வேறு எந்த வனவிலங்கையும் என்னால் அன்று காண முடியவில்லை.

மறுநாள் காலையில் வனத்திற்குள் செல்வதற்கான திட்டத்தை அதிகாரி முன்கூட்டியே என்னிடம் கலந்தாலோசித்திருந்தார். அதன்படி விடியற்காலையில் (கடுங்குளிர்) எழுந்து வனவாசியாக வலம் வருவதற்குத் தயாரானேன். மொத்தமான ஒரு ஜீன்ஸ் காற்சட்டையும், இரண்டு முழுக் கை சட்டையும் அணிந்துகொண்டேன். கைக்கு கையுறை, முழங்கால்வரை காலுறைபோல ஒரு காக்கி துணியைக் கொடுத்து அதை இறுக்கமாகக் காலோடு சேர்த்து கட்டிக்கொள்ளச் சொன்னார்கள்.

துப்பாக்கிய ஏந்திய அதிகாரி முன்னே செல்ல, நான் அவர் பின்னாலும் எனக்குப் பின்னே மேலும் இருவரும் வனத்திற்குள் சென்றோம். நீர்நிலையை ஒட்டியே எங்களின் பயணம் இருந்தது. கிட்டதட்ட 3இலிருந்து 4 மணி நேரப் பயணம் அது. இரண்டடி எடுத்து வைத்தால் குறைந்தது 5 அட்டையாவது பிடுங்கிப் போட வேண்டிருந்தது. எதற்காக வனத்துறையினர் காக்கி துணியைக் கொடுத்தார்கள் என்பது அப்போதுதான் விளங்கியது. அட்டைகளைப் பிடுங்கிப் போடுவதில் என் கவனம் இருந்தாலும், இந்தப் பயணத்திலிருந்து பின்வாங்க எனக்குக் கொஞ்சம்கூட எண்ணம் வரவே இல்லை.

சுமார் ஒரு மணிநேரத்தில் பூர்வக்குடிகள் சிலர் மீன் பிடித்துக் கொண்டிருப்பதை வன அதிகாரி காண்பித்தார். அவர்களிடத்தில் மலிவான விலையில் மீன் வாங்கிக்கொள்ளலாம். அதை வனத்துறையை சேர்ந்த சமையல் செய்யும் சகோதரர் சமைத்துக் கொடுக்க தயாராக இருந்தார். மிக அருகில் இருவாச்சி கத்தும் சத்தம் கேட்டது, சாம்பல் நிற இந்தியன் இருவாச்சியைக் கண்டோம். தெளிவாக இல்லை என்றாலும் ஒரு புகைப்படத்தை எடுக்க முடிந்தது. மேலும், சில பெயர் தெரியாத பறவைகள், காட்டு மாட்டினுடைய மண்டை ஓடு என்று புதியதாக சில காட்சிகளையும் அந்த வனம் எனக்குக் காட்டி கொடுத்தது.

அதிகாரிகள் நிர்ணயித்திருந்த நேரம் முடியவே நாங்கள் திரும்பவும் கண்காணிப்பு கோபுரத்திற்குச் சென்றோம். ஆடை முழுக்க அட்டை ஊர்ந்து கொண்டிருந்தது. இப்போது நினைத்தாலும் உடல் கூசத்தான் செய்கிறது. அனைத்தையும் பிடுங்கி எறிந்துவிட்டு, நான் குளித்து தயாரானேன். பூர்வக்குடிகளிடம் வாங்கிய மீனைக் குழம்பும் பொறித்தும் இருந்தனர். ருசி என்றால் இதுவரை சாப்பிடாத ருசி. மதியம் 2 மணியளவில் பால் இல்லாத டீ அருந்திவிட்டு, மனமே இல்லாமல் நான் அங்கிருந்து புறப்பட்டேன்.

என்னுடைய வன அனுபவத்தில் ஒரு அத்தியாயம் நிச்சயமாக இந்த தேக்கடிக்கு உண்டு.

நன்றி : வாவ் தமிழ்  https://wowtam.com/ta_in/3-a-day-in-thekkady-forest/15774/  (4/1/2023) 


ஜனவரி 3, ரோஹிங்கியா தேசிய தினம்


ரோஹிங்யா அகதிகள் அவர்களின் தேசிய தினத்தை ஜனவரி 3 கொண்டாடுகிறார்கள்; அந்நிகழ்ச்சிக்கு போய் வரலாம் என்று தோழர் சிவரஞ்சனி என்னை அழைத்தபோது, ஒரு கேள்விக்குறியோடு எனது நெற்றி கொஞ்சம்  சுறுக்கவே செய்தது. 

அவர்களின் சொந்த நாடான மியன்மார், இராணுவ ஆட்சியில்  மனிதாபிமானமற்று இவர்களின் உயிரை காவு எடுத்தது. இன்னும்கூட  இவர்களின் போராட்டம் ஓய்ந்தபாடில்லை. இப்போதும்கூட  உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு அண்டை நாடுகளில் அடைக்களம் தேடுகிறார்கள்  ரோஹிங்கியா மக்கள்.  தேசிய தினம் என்று  நமக்கு தெரிந்ததெல்லாம் அந்நாட்டினுடைய சுதந்திரநாள்தான். மியன்மார் சுதந்திரநாடுதான் என்றாலும் ரோஹிங்கியா மக்களின் சுதந்திரத்தை அந்நாடு பறித்துவிட்டது என்பதுதான் நிதர்சனம். மலேசியாவில் இவர்கள் நல்வாழ்வு வாழ்கிறார்கள் என்றால் நமது நாடே கூட சிரிக்கும். 

மியன்மார்  நாட்டின் சிறுபான்மை மக்களான இந்த ரோஹிங்யா மக்களுக்கு சொந்த நாட்டில் மட்டுமல்ல புலம் பெயர்ந்த நாட்டிலும் அவர்களுக்கு  இழைக்கப்படும் கொடுமைகள் கொஞ்ச நஞ்சமல்ல. இப்படியிருக்க இவர்களின் தேசிய தினம் எதை மையமாக கொண்டிருக்கிறது என்ற தகவலை தெரிந்துகொள்ளும் நோக்கத்தில் நான் அந்த விழாவிற்கு செல்ல முடிவெடுத்தேன். 

மியான்மாரில் 1990-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ரோஹிங்கியா மக்களுக்காக  பதிவு செய்யப்பட்ட முதல் அரசியல் கட்சியை நினைவுகூரும் வகையில், உலகம் முழுவதும் உள்ள ரோஹிங்கியா புலம்பெயர் சமூகங்கள் ரோஹிங்கியா தேசிய தினத்தை கொண்டாடுகின்றன.  

இவ்விவகாரத்தை, அவர்கள் சம்பந்தமான மற்ற விவகாரத்தை மறுப்பது போலவே, பர்மிய அரசாங்கம் இந்த வரலாற்றையும் மறுக்கிறது. 

இந்த காரணத்திற்காகவே, நாங்கள் இந்த நாளை ரோஹிங்கியா தேசிய தினமாக கொண்டாடி வருகிறோம் என்று அதன் வரலாற்றை விளக்கினார் ரோஹிங்யா சமூகத்தைச் சேர்ந்த வழக்கறிஞரும் சமூக ஆர்வளருமான தோழர் Sujauddin. 

மியான்மாரில் 1989-1990 நாடாளுமன்றத் தேர்தலில் ரோஹிங்கியா மக்களுக்கென்று ஓர் அரசியல் கட்சி பதிவு செய்யப்பட்டது.  உலகம் முழுவதும் உள்ள ரோஹிங்கியா புலம்பெயர் சமூகங்கள் ரோஹிங்கியா தேசிய தினத்தை இன்றைய நாளில் கொண்டாடுகின்றனர்.  

மலேசியாவைப் பொருத்தவரை 200,000 ரோஹிங்கியா அகதிகள் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்களில் கோலாலம்பூர் வட்டாரத்தில் மட்டும் 40,000 அகதிகள் வசிக்கிறார்கள் என்று மேற்கொண்ட கணக்கெடுப்பு சொல்கிறது. 

நான் வசிக்கும் செலாயாங் பாரு பகுதியில் ரோஹிங்கியா மக்கள் மிக அதிகமாக அடைக்களம் கொண்டிருக்கின்றனர். சுமார் 763 குடும்பங்களில் மொத்தமாக 2,092 அகதிகள் இங்கே வசிக்கின்றனர். இவர்களில் 700-க்கும் அதிகமானோர் குழந்தைகளாவர். இந்த சமூகத்திற்கு ஆதரவாக இயங்குகிறது  ELOM INITIATIVES  என்ற அமைப்பு. மலேசியாவில் உள்ள அகதிகள், முறையான சட்ட ஆவணங்கள் இல்லாததால், தங்கள் சமூகத்தை தாங்களே ஆதரிப்பதில் மிகுந்த சிரமங்களை எதிர்கொள்கின்றனர். சட்டப்பூர்வ அகதி அந்தஸ்து பெற்றவர்களும்,   முறையான கல்வி, தொழில் பயிற்சிகள் மற்றும் சுகாதார சேவைகளுக்கு மிகக் குறைந்த வாய்ப்புகளையே பெருகின்றனர்.

மனிதாபிமானம் கொண்ட  சில தன்னார்வ அமைப்புகளும் இவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டுகின்றனர். மலேசிய சமூகம் பாராமுகம் காட்டும் இந்த சமூக மக்களுக்கு,  உதவும் பொருட்டு ELOM  அமைப்பு பல திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. ரோஹிங்கியா அகதிகளில் அதிகமானவர்கள் முஸ்லிம்கள் என்றாலும் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்களும் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர்களும் இருக்கவே செய்கின்றனர்.  அனைவருக்குமாக இந்த அமைப்பு செயற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.  இந்த அமைப்புக்கு ஆதரவு கொடுப்பதோடு அகதி மக்களுக்கு ஆதரவு அளிக்க விரும்பும்  தொண்டூழிய அமைப்புகளின் ஆதரவு இவர்களுக்கு தேவையாக இருக்கிறது.  

நாங்கள் இந்த விழாவில் கலந்துக்கொண்டதில் இப்படியான பல தகவல்களை தெரிந்துகொண்டோம்.  புலம்பெயர்ந்த சமூகமாக இருந்தாலும், ரோஹிங்கியா  பெண்களுக்கு குடும்ப வன்முறை நிகழாமல் இல்லை. அப்பெண்களுக்கு உதவுவதற்காக அவர்களுக்குள்ளே Rohingya women development network என்ற பெண்கள் அமைப்பும் செயற்பட்டு கொண்டிருக்கிறது. 

குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை மீட்டெடுக்கவும், குழந்தை திருமணங்களுக்காக குரல் கொடுக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பொருளாதார ரீதியில் பெண்களை பலப்படுத்தவும் அந்த அமைப்பு வேலை செய்துக்கொண்டிருக்கிறது.

இந்த விழாவில் ரோஹிங்கியா பாரம்பரிய உணவு சுவைப்பதற்கான ஒரு வாய்ப்பு எங்களுக்கு அமைந்தது. நிறைய மஞ்சளையும் கூடவே அதிகக் காரத்தையும் இவர்கள் உணவில் சேர்த்துகொள்கிறார்கள். ருசியாகவே இருக்கிறது இவர்களின் உணவு.   

ஜனவரி மூன்று ரோஹிங்கியா தேசிய தினம் கொண்டாடும் அதே வேளை, ஜனவரி 4, 1948 -ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து மியான்மர் சுதந்திரம் பெற்றது குறிப்பிடதக்கது. 

திங்கள், 2 ஜனவரி, 2023

மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமான போர்… யார்தான் தீர்ப்பது?

சாலையோரங்களால் அல்லாத சற்று உட்புறமாக அமைந்திருக்கிறது செமாய் இன பூர்வக்குடிகள் கிராமமான சிமோய் குடியிருப்பு. பூர்வக்குடிகளின் பாரம்பரிய பாணியில் அமைக்கப்பட்டிருக்கும் வீடுகள்; கடுமையான மழையின் காரணமாக சாலைகள் சேறும் சகதியுமாக இருந்தாலும், நடப்பதற்கு சிரமம் ஒன்றும் இல்லை; கிராம மக்களுக்கோ அது ஒரு விஷயமே இல்லை. ஆனால், தம் வாழ்நாளில் இதுவரை சந்தித்திடாத ஒரு துயரத்தை அந்த அழகிய கிராமம் சமீபத்தில் சந்தித்திருக்கிறது.

கடந்த 6/12/2022 அன்று விடியற்காலை 3 மணியளவில், வீட்டில் தனது கணவர் மற்றும் 7 குழந்தைகளுடன் உறக்கத்தில் இருந்த வாக் எனும் பூர்வக்குடி பெண்மணியை காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவமானது அங்கிருக்கும் மக்களுக்கு துயரத்தை மட்டுமல்ல, அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. காரணம், காட்டுயானைகள் இதுவரை அக்கிராமத்திற்குள் நுழைந்ததே இல்லை. அவை மலைமேடுகளில் சுற்றிதிரிந்துவிட்டு போய்விடுவதுண்டு. எனவே இப்படியான ஓர் அசம்பாவிதத்தை அம்மக்கள் நினைத்துப் பார்த்ததும் இல்லை.

யானையின் இந்தத் தாக்குதலுக்கு என்னக் காரணம் என்பதை கொஞ்சம் ஆராய்ந்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. யானைகளுக்கு இதுவரை இல்லாத இந்த ஆவேசமும், என்றும் இல்லாத வகையில் மனிதர்கள் மீது தாக்குதல் தொடுப்பதற்கும் என்னக் காரணமாக இருக்கும் என்பதை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய விஷயங்களாகும்.

அதற்கு முன், மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமான போர் குறித்து நாம் அறிந்துக்கொள்ளுதல் அவசியம். இப்போரானது தொடந்து உலகில் நடந்துக்கொண்டுதான் இருக்கிறது. வாழ்நாளில் என்றாவது ஒருநாள் மிருகக் காட்சி சாலையில் டிக்கெட் வாங்கி கூண்டில் இருக்கும் மிருகங்களை பார்த்து ரசிக்கும்  மலேசியர்களான நமக்கு அதுகுறித்து எந்த தெளிவும் இருப்பதில்லை.

முழுமையாக நமது (மனிதர்களின்) ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரத் துடிக்கும் இந்த பூமியானது, மரங்களுக்கும் மிருகங்களுக்கும்கூட சொந்தமானது என்பதை மனிதர் மறந்துவிடுகிறான். அந்நாட்டு மக்களுக்கு பாதுகாப்பும் சேவையையும் வழங்கும் அரசாங்கம்தான் அந்நாட்டு மிருகங்களுக்கும் இயற்கை வளங்களுக்கும் பாதுகாப்புகொடுக்க வேண்டும் என்பதை மறந்துவிடுகிறான்.

சகமனிதர்களையும் மிருகங்களையும் மரங்களையும் ஈடு இணையில்லாத இயற்கையையும் நேசிக்கும் ஒரு மனிதாபிமானமுல்ல மனிதன் மரித்துக்கொண்டே வருகிறான். போட்டியும் பொறாமையும் பேராசையும் இயற்கையை சுரண்டி பணம் பார்க்கும் வன்முறையாளர்களுமே பெருகி வருகிறார்கள்.

இந்நிலையில், தமக்கான இருப்பிடத்தை அழிக்கும்போதும், தம்மை தாக்கும்போதும், உறவுகள் கொல்லப்படும்போதும் மனிதனைப் போலவே மிருகங்களும் எதிர்வினை காட்டுகின்றன. மறைந்திருந்து தாக்குகின்றன.

மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் நடக்கும் போர் இவ்வாறே தொடங்குகிறது. ஒரு போரில் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதைப் போலத்தான், தற்போது இந்தப் பூர்வக்குடி மக்கள் பலியாகத் தொடங்கியிருக்கிறார்கள். வெறும் பார்வைக்கு கொஞ்சம் மரங்களை விட்டுவிட்டு, உட்பகுதிகளெல்லாம் மரங்களும் வளங்களும் பணத்திற்காக அழைக்கப்பட்டு வருவதின் விளைவு, யானைகள் உணவுக்காகவும் உரிமைக்காகவும் மனிதர்கள் வசிக்கும் இடங்களுக்கு இறங்க தொடங்கி விட்டன.

அதிகாலையில், வீடு உடைப்படுவதுபோல நடுக்கம் காணவே கண்விழித்த ‘வாக்’கின் கணவர், யானைதான் வீட்டை உடைக்கிறது என்பதை அனுமானித்து, மையிருட்டில் அனைவரையும் காப்பற்ற முயற்சி செய்திருக்கிறார். அனைவரையும் அழைத்துக்கொண்டு கிராம மக்களின் உதவியை நாடியவர், பின்புதான் தனது துணைவி இல்லாததை கவனித்திருக்கிறார். கிராம மக்களின் உதவியோடு யானையை காட்டிற்குள் விரட்டிவிட்டு, மனைவியை தேடியவர் வீட்டிற்கு அருகில் பிணமாகத்தான்  அவரை கண்டெடுத்திருக்கிறார். அவர்களின் வீடும் முழுமையாக பழுதடைந்துவிட்டது. தற்போது அவர்கள் அருகில் இருக்கும் உறவினர் வீட்டில் தஞ்சம் அடைந்திருக்கிறார்கள்.


கடந்த வாரம் பாதிக்கப்பட்ட அக்குடும்பத்தையும், கிராம மக்களையும் சந்திப்பதற்காக பி.எஸ்.எம் தோழர்களோடு சென்றிருந்தேன். இன்னும் துயரில் இருந்து அவர்கள் யாரும் மீளவில்லை. இந்த இழப்புக்குப் பிறகு அவர்களை JAKOA (ஓராங் அஸ்லி மேம்பாட்டுத்துறை) மட்டுமே விசாரித்துவிட்டு சென்றிருக்கிறது. ஆனால், அதன் பிறகு எந்த நடவடிக்கையும் அவர்கள் மேற்கொள்ளவில்லை. வனத்துறையோ அவர்களைக் கண்டுக்கொள்ளவும் இல்லை. இந்நிலையில், அங்கிருக்கும் மக்கள் யானைகளிடமிருந்து தங்களை தற்காத்துக்கொள்ளவும், வனத்தில் நடமாடவும் ஒரு பாதுகாப்பற்ற சூழலில் சிக்கியிருக்கின்றனர்.

உடனே பூர்வக்குடிகளை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என்றும், யானைகளை அங்கிருந்து விரட்டியடிக்க வேண்டும் என்றும் யாரும் கேட்கவில்லை. வனம் மிருகங்களுக்கும் பூர்வக்குடிகளுக்கும் பொதுவானது. மனிதர்களின் பேராசையின் காரணங்களால் நடந்த இந்தக் மாற்றத்தை சரி செய்ய வேண்டும். அதை சட்டப்பூர்வமாக செய்வது அவசியமாகும். பூர்வக்குடிகளுக்கு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்துவதோடு,  யானைகளின் வழித்தடம் மாற்றப்பட்டுள்ளதா? அவைகளின் கோபத்திற்கும் இந்த சீற்றத்திற்கும் என்னக் காரணம் என்பதை தேசிய வனவிலங்குத் துறை ஆராய்ந்து தீர்வுக்கான வேண்டும். மேலும், காப்ரேட் நிறுவனங்கள் சுயலாபத்திற்காக மரங்கள் மற்றும் வளங்களை சுரண்டும் போக்கை மாநில அரசாங்கம் கட்டுப்படுத்த வேண்டும்.

அங்கிருந்து நாங்கள் கிளம்பும்போது, பூர்வக்குடி குழந்தைகள் மழையில் பந்து விளையாடிக்கொண்டிருந்தனர். பெருமழை அந்தக் கிராமத்தையே கழுவிக்கொண்டிருந்தது. அவர்களின் துயரமும் பயமும் அதோடு கரைந்து ஓடிவிடக்கூடாதா என்று எனக்கு தோன்றாமல் இல்லை.


                                                                                சிமோய் வனகிராமத்தில் நடமாடும் யானை

நமது நாட்டில் ஓராங் அஸ்லிக்கான தேசிய சட்டங்கள்  

1) தேசிய வனவியல் சட்டம் 1984. அது 1993 இல் திருத்தம் செய்யப்பட்டது.  சமீபத்தில் மீண்டும், தேசிய வனவியல் சட்டம் 2022 திருத்தம் செய்யப்பட்டு மாற்றப்பட்டது. இது 20 செப்டம்பர் 2022 அன்று அரசிதழில் வெளியிடப்பட்டது, ஆனால் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. அதனால், மாற்றங்கள் குறித்து நமக்கு சரியாக தெரியவில்லை.

2) Aboriginal Peoples Act 1954. இது 1974-ஆம் ஆண்டு திருத்தப்பட்டது.

நன்றி மலேசியாகினி 3/1/2023


ஞாயிறு, 1 ஜனவரி, 2023

பாலி தீவுக்கு பயணம் போகலாமா வேண்டாமா ? பாகம் 5

ஓரிரு நாள் பாலி பயணத்தில் நிறைய காட்சிகளும் அனுபவங்களும் எனக்கு கிடைத்தது. அனைத்தையும் பதிவு செய்வது என்பது சாத்தியமாகாத ஒன்று. ஆனால், விடுப்படகூடாத ஒரு சில சம்பவங்களை சுறுக்கமாக இந்த 5 பாகத்தில் பதிவு செய்து தொடரை நிறைவுச் செய்து விடுகிறேன்.  

பாலியின் பயணக் கட்டுரையின் முதல் பாகத்திலேயே அங்கே நடந்த குண்டு வெடிப்பு பற்றி கூறியிருந்தேன். அதை இன்னும் கொஞ்சம் தெளிவாக பதிவு செய்து விடுவது நல்லது என நினைக்கிறேன்.  2002-ஆம் ஆண்டு பாலியில் குதா நகரில் நடந்த குண்டு வெடிப்பு ஜாமயா இஸ்லாமியா அடிப்படைவாதிகளால் நடத்தப்பட்டது என்பதை அந்த அமைப்பே ஒப்புக் கொண்டது. வெளி நாட்டினரை குறிவைத்து நடத்திய தீவிரவாதத் தாக்குதல் என்பது ஒருபுறம் இருந்தாலும்  பாலித் தீவில் வாழும் உள்நாட்டு மக்கள் பெரும்பான்மையாக இந்துக்களாக இருப்பதை எதிர்க்கும் அல்லது எச்சரிக்கும் விதமாக இந்த குண்டு வெடிப்பு நடத்தப்பட்டிருக்கிறது.   

தவிர, குண்டுவைக்க பாலியைத் தேர்ந்தெடுக்க மற்றொரு காரணம், குஜராத்தில் நரேந்திர மோடி ஆட்சியின் போது நடந்த இஸ்லாமிய படுகொலைக்கு பழிவாங்குவதற்குத் தானாம். தேதிகளைப் பார்க்க குஜராத் படுகொலைகள் பாலி குண்டு வெடிப்பிற்கு முன்பு நடந்தவை என்று அறியும் போது அவனுடைய வாக்குமூலம் உண்மை தான் என்றும் தோன்றுகிறது, பாலியில் குண்டு வைத்த கும்பலில் ஒருவன் அளித்திருக்கும் வாக்குமூலத்தின் சுறுக்கத்தை இணையப் பதிவர் ஒருவர் இவ்வாறு பதிவு செய்திருக்கிறார்.  உண்மையில் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.

இரவு நேரங்களில் இந்தச் சாலையை பாதச் சாரிகளின் சாலையாக மாற்றிவிடுகிறார்கள். வாகனங்களை அனுமதிப்பதில்லை. தவிர முழுக்க கேளிக்கை மையமாகவே அந்தச் சாலை மாறிவிடுகிறது. இறந்தவர்களுக்கான நினைவுத் தூபி அங்கே அமைத்திருக்கிறார்கள். இறந்தவர்களின் பெயரும், எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதும் அந்த தூபியில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

கோப்பு படம்

பாலி இதிகாச மேடை நாடகங்கள்

பாலி பயணத்தில் நான் பதிவு செய்ய உத்தேசிப்பது அங்கு நான் பார்த்த நாடகமாகும். இந்தோனேசியாவில் உள்நாட்டு மக்களால் நடத்தப்படும் மகாபாரத மேடை நாடகம் உலகப் பிரசித்திபெற்றது என்பது பலருக்கு தெரிந்ததுதான். மகாபாரதம் அல்லாத கூத்து வகை வேஷம் கட்டி  செய்யப்படும்  இதிகாச மேடை நாடகங்களும் பாலியில் நடத்தப்படுகிறது. இந்த வகை நாடகங்கள் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்தே பெருவாரியாக நடத்தப்படுகிறது. கதையும் கரு என்ன என்பது புரிந்துகொள்ள முடியவில்லை என்றாலும், அவர்களின் உடை மற்றும் முக அலங்காரங்களும் நகை ஆபரணங்களும் அந்நாட்டு பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தையும் பேசுகின்றன. 

அதோடு முகமூடிகள் கொண்ட கூத்துவகை ஆபரணங்கள், பாலி நாடகத்துறை ஆய்வுக்கு ஒரு பேச்சுபொருள் ஆக்கலாம். இந்த நாடகங்கள் அரங்கேற்றம் காணும்போது இந்தோனேசிய பாரம்பரிய இசைக்கருவிகளால் live இசை இசைக்கப்படுவது. மலேசியாவிலும் மலாய்க்காரர்கள் இந்தவகை இசைக்கருவிகளையே அவர்களின் பாரம்பரிய இசைக்கருவியாக பயன்படுத்துவதால் எனக்கு அது பரிச்சயமான இசையாகவே இருந்தது. எனக்கு இந்த மேடை நாடகத்தில் பிடிக்காத விஷயமாக இருந்தது அதில் ஆபாசத்தை கலந்ததுதான். இதிகாச நாடகத்தின் இடையில் கேலிசெய்யும் பாத்திரம் ஏற்ற இருவர் ஆபாச செய்கைகளை  நகைச்சுவையாக அரங்கேற்றியது முகம் சுழிக்கும் படியாகவே ‘எனக்கு’ இருந்தது.


எரிமலை

உயிருடன் மற்றும் இறந்த எரிமலை இரண்டையுமே சுற்றுப்பயணிகள் காண்பதற்கு இந்தோனேசியா சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்து தருகிறது. மொத்தம் 130 எரிமலைகளை இந்தோனேசியா கொண்டிருக்கிறது.

பாலித்தீவை பொறுத்தவரை ஆகங் எரிமலை முக்கியமானதாக கருதப்படுகிறது. எங்களுடைய பாலி பயணத்தில் இந்த எரிமையை காண்பதற்கான திட்டம் வரையப்பட்டிருந்தது. ஆனாலும் எங்கள் பாலி பயணித்தின் சில நாட்களுக்கு முன்தான் (ஜூன் 30 2018)  இந்த எரிமலை புகையத் தொடங்கியிருந்தது.  கற்றில் பயங்கரமான மாசு ஏற்பட்டதாலும், பாதுகாப்பு கருதியும் பாலித் தீவுக்குச் செல்லும் பயணங்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன. இந்நிலை இரண்டு நாட்களில் சீரானதை தொடர்ந்து ஜுலை 2 ம் தேதியிலிருந்து பாலிக்கான விமான சேவை சுமூக நிலைக்கு திரும்பியது. எனது பயணம் ஜூலை 4-ஆம் தேதி என்பது குறிப்பிடதக்கது.

நாங்கள் தங்கியிருந்த குதா நகரிலிருந்து சுமார் 70 கிலோ மீட்டர் தொலைவில்தான் ஆகங் எரிமலை இருந்தது. அங்குச் செல்வது பாதுகாப்பு இல்லாத காரணத்தினால், சுற்றுப்பயணிகளுக்கு மறுப்பு சொல்லியிருந்தார்கள். அதனால், நாங்கள் 'Kintamani valcano'  எரிமலை காணச் சென்றோம். மலைக்கு நேர் எதிரே, கிண்டாமணி மலையை முழுமையாக காண கூடிய அளவுக்கு கொஞ்சம் தொலைவில் மலை உச்சியில் சுற்றுலாவாசிகளுக்காக உணவு விடுதி இருக்கிறது. ஒரு டீ அல்லது காப்பியை சுவைத்துக்கொண்டு குளிர் காற்றை அனுபவித்தபடியும் எரிமலையை ரசித்தபடியும்  இருப்பது புது அனுபவத்தை கொடுக்கும். தவிர வாழ்க்கையில் மறக்க மூடியாத காட்சியாகவும் அது அமையும்.

 ஆகங் எரிமையை பார்க்கவில்லையே என்ற குறை பாலியிலிருந்து மலேசியாவுக்கு விமானத்தில் திரும்பும்போது தீர்க்கப்பட்டது. காரணம் அந்த எரிமையை கடந்துதான் விமானம் வந்தது. பயணிகள் அறிந்துக்கொள்வதற்காக விமான ஓட்டி அதை அறிவிப்பு செய்தது எல்லாரும் அதைக் கண்பதற்கு வாய்ப்பாக அமைந்தது.  

 குட்டித் தகவல்

50 வருடங்களுக்கு பிறகு 2017-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்த ஆகங் எரிமலை அதன் சீற்றத்தை கக்கியிருக்கிறது. முன் எச்சரிக்கையாக கிட்டத்தட்ட ஒன்றரை இலட்சம் மக்கள் அங்கிருந்து வெளியற்றப்பட்டனராம்.

மந்திரமா ? தந்திரமா?

கட்டுரையை தொடங்கும்போதே ‘கேள்வி கேட்கும்போது முகத்தில் கொஞ்சம் கடுமை’ என்று எழுதியிருப்பேன். அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அந்த அனுபவம் எனக்கு பணம் மாற்றும் நிகழ்ந்தது. முன்னூறு மலேசிய ரிங்கிடை இந்தோனேசிய ரூபியாவாக மாற்றுவதற்கு குதா நகரில் இருக்கும் பணம் மாற்றும் நிலையங்களில் ஒற்றை ஆளாக சுற்றிக்கொண்டிருந்தேன். மூன்று கடைகளில் விசாரித்தப்பிறகு ஒரு கடையில் நல்ல ரேட் கிடைத்தது. பணத்தை மாற்றியும் விட்டேன். பின் நடந்த கண்கட்டி வித்தையில் மலேசிய ரிங்கிடை திரும்ப கொடுங்கள் என வாங்கிகொண்டு வந்தேன். நடந்தது இதுதான்.

மலேசிய ரிங்கிட் 300-க்கு அவர்கள் ஒரு தொகையை சொன்னார்கள். அது திருப்திகரமாக இருக்கவே சரி என பணத்தை மாற்ற சொன்னேன். அவர்கள் நான் கொடுத்த பணத்தை கையில் தொடவே இல்லை. கவுண்டரில் ஒவ்வொரு நூறு ரிங்கிட்டையும் பிரித்து வைக்க சொன்னார்கள். வைத்தேன். அந்த ரேட்டுக்கு உண்டான இந்தோனேசியப் பணத்தை ஒவ்வொரு தாளாக அவர்கள் எண்ணி என்னிடம் காண்பித்து கவுண்டரில் வைத்தார்கள். என்னை தொட அனுமதிக்கவில்லை. சரியா என்று என்னிடம் கேட்கிறார்கள். நான் சரி என்றதும் அப்படியே பணத்தை மொத்தமாக கொடுத்துவிடுகிறார்கள். கண் முன்னே எண்ணியதில் என்ன பிழை இருக்கப் போகிறது. அப்படியே பண பையில் வைத்தேன். அப்போதுதான் ஷாகுல் அங்கு வந்து சேர்ந்தார்.

 அவர் வேறு எங்கோ பணம் மாற்றியிருந்தார்.  நானும் பணத்தை மாற்றிவிட்டதாக சொன்னேன். சரியாக இருக்கிறதா? எண்ணிப் பார்த்தீர்களா என்றார். சரியாகத்தான் இருக்கும் என்றேன். எதற்கும் எண்ணிப் பாருங்கள் என்று அவர் சொன்னதும் பார்த்தால் அதில் 100 ரிங்கிட்டுக்கான பணம் உண்மையில் குறைவாகவே இருந்தது.  இவ்வளவும் பணம் மாற்றும் இடத்திலேயே நடந்ததால் பணம் மாற்றுபவர்களிடம் போனேன். அவர்கள் அப்பணத்தை வாங்கிகொண்டு அவர்களின் பாணியில் எண்ணும்போது மீண்டும் சரியாக இருந்தது. எனக்கும் ஷாகுலுக்கும் இது என்ன வித்தை என்பதுபோல இருந்தது. பணத்தை இம்முறை ஷாகுல் வாங்கி எண்ணினார். 100 ரிங்கிட்டுக்கான பணம் குறைவாக இருந்தது.

இது மந்திரமா தந்திரமா அல்லது மேஜிக்-கா என்றெல்லாம் ஆராய்ச்சி செய்வதற்கு தோன்றவில்லை. அதிக பணம் அங்கு தண்ணியாக செலவு ஆகிறதை என்னால் உணர முடிந்தது. 100 ரிங்கிட் பற்றாக்குறையை எல்லாம் என்னால் சமாளிக்க முடியாது என்பதால் நான் வேறு கடைக்கு நடையை கட்டினேன்.

இறுதியாக, 

பாலியில் நான், அவர்களின் பாரம்பரிய விவசாய முறையையும் கேட்டு தெரிந்துகொண்டேன். அவர்களின் உணவு முறை, இந்தியர்கள் என்றாலும் இனத்தால் நம்மிடமிருந்து வேறு பட்டிருக்கும் அவர்களின் இந்திய பாரம்பரியத்தை ஓரளவு பார்த்தும் கேட்டும் உரையாடியும் அறிய முடிந்தது. இந்த அனுபவங்களோடு நாங்கள் விடைபெற்றோம்...

முற்றும்