வியாழன், 21 மே, 2020

வீரமரணத்தை தழுவும் யோரூம் குழுவினர்




"யோரூம் குரூப்’’ (GroupYorum ) வுடைய மேலும் ஓர் இசைக்கலைஞர் உண்ணாநிலைப் போராட்டத்தில் வீர மரணமடைந்திருக்கிறார். முஸ்தாபா கோசெக், அவருடைய சகாக்களுடன் ஜூன் 2019-ல் தொடங்கிய உண்ணாநிலை போராட்டம், துருக்கியின் ரெசெப் தயிப் ஏர்டோகன் அரசாங்கத்தின் மனக் கதவுகளை திறக்கவே இல்லை.

தவிர சுதந்திரமாகப் பாட வேண்டும் என்ற கோரிகையை முன்வைத்து தொடங்கிய இந்த இடதுசாரி குழுவின் போராட்டத்தை, தீவிரவாதிகள் என்றும் தேச துரோகிகள் என்றும் துருக்கிய அரசு குற்றம் சாட்டியது. மேலும், ஆதாரமற்ற பல குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது பதியப்பட்டது. இன்னும் அந்த நிலைப்பாட்டிலிருந்து அவர்கள் மாறவும் இல்லை. 

யோரூம் குரூப் எனும் குழுவுடைய தொடக்கம்
 


 1985-ம் ஆண்டு நிறுவப்பட்ட இக்குழு, துருக்கிய மற்றும் குர்திஸ்தான் நாட்டுப்புற இசையை, இடதுசாரி அரசியல் கண்ணோட்டத்துடனும் , முதலாளித்துவ எதிர்ப்பு, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான முற்போக்கான பாடல்களை உருவாக்கியும் வந்தது. யோரும் என்றால் துருக்கி மொழியில் கருத்து என்று பொருள்.
அவர்களின் பாடல்கள் இளைஞர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்த தொடங்கியதுடன், ஏழைகளை ஒடுக்கும் துருக்கிய அரசாங்கத்தின் கொள்கையை விமர்சிப்பதற்கும் வகையில் அவர்களின் பாடல்கள் இருந்ததால், அரசாங்கத்திற்கு இது தலைவலியைக் கொடுத்தது. அதன் உச்சக்கட்டம் அந்தக் குழுவை சேர்ந்த ஐவரை கடந்தாண்டு சிறைபிடித்தார்கள்.

இந்த குழு 1985 இல் நிறுவப்பட்டதிலிருந்து பல நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளனர். அதோடு 23 ஆல்பங்களையும் வெளியிட்டுள்ளனர். சிறையில் இருந்தபோது அவர்கள் நிரபராதிகள் என்றும் அரசாங்கத்தை விமர்சிக்க உரிமை உண்டு என்றும் காட்ட உண்ணாவிரதத்தைத் தொடங்கினர்.


தோழர் ஹெலின் பெலெக் மற்றும் முஸ்தாபா கோசெக்

 கடந்த ஏப்ரல் 3-ஆம் தேதி, இந்தக் குழுவைச் சேர்ந்த தோழர் ஹெலின் பெலெக், இந்தப் அறப் போராட்டத்தில் பலியானார். 297 நாட்கள் உண்ணாநிலை போராட்டத்தில் தோழர் முஸ்தாபா கோசெக், 25/4/2020 நேற்று சிறையிலேயே பலியானார். தோழர் இப்ராஹிம் கோசெக் இன்னும் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொன்டிருக்கிறார்.

 
வலது சாரிகளை எதிர்த்தால், போராட்டவாதிகளுக்கு கிடைப்பது மரணம்தான் பரிசுபோல...

புதன், 20 மே, 2020

முதலாளித்துவ எஞ்சினை செயலிழக்கச் செய்யவதே நமது பணி – அருந்ததி ராய்

மலேசிய சோசலிசக் கட்சியின்  தொழிலாளர்கள் செயற்பாட்டுகுழுவில்  நானும் உள்ளதால் சில விஷயங்களை அதன் ஆணிவேர் வரை உடுருவி பார்க்க முடிகிறது.  கிழிந்து தொங்கிக்கொண்டிருக்கும் முதலாளிகளின் முகதிரைகளில் மேலும் மேலும் கிழிசல்கள் விழுந்துக்கொண்டே இருக்கிறது. இந்த இக்கட்டான காலக்கட்டத்தில் கூட  மனிதாபிமானத்தை தொழிலாளிகளிடம்  விலைபேசிக்கொண்டிருக்கும் முதலாளிகளை நமது நாட்டிலும் பார்க்க முடிகிறது. இந்த காலக்கட்டத்தில் அருந்ததிராயின் இந்தக் கட்டுரை மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது. அதற்காகவே   நான் எனது அகப்பக்கத்தில் இதை பதிவு செய்கிறேன். நன்றி.


-யோகி



முதலாளித்துவ எந்திரத்தின் ஓட்டத்தை மடக்கி நிறுத்தியிருக்கிறது கொரோனா வைரஸ் பெருந்தொற்று.

மனித இனமே தற்காலிகமாக சிறை வைக்கப்பட்டுள்ள சூழலில், ஆர்டிக் பகுதியின் ஓசோன் படலத்தின் மீது பிரம்மாண்டமானதொரு துளை விழுந்திருக்கும் சூழலில், தன்னைத்தானே குணப்படுத்திக்கொள்ளும் ஆற்றல் தனக்குண்டு என்பதை இந்த பூமி நமக்குக் குறிப்பால் உணர்த்தியிருக்கிறது. நோயும் இழப்புகளும் நம்மை வாட்டுகின்ற இந்தச் சூழலிலும், இயற்கைத்தாய் அரங்கேற்றியிருக்கும் இந்தக் காட்சியைக் கண்டு ஆச்சரியத்தில் நாம் விக்கித்து நிற்கிறோம்.

ஆனால் இச்சூழலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான திட்டங்கள் விரைந்து தயாராகி வருகின்றன. இந்தியாவில், ஒரு புலிகள் சரணாலயத்தின் பெரும்பகுதி, பல்லாயிரக்கணக்கான இந்து பக்தர்கள் கூடுகின்ற  கும்பமேளா என்ற நிகழ்ச்சிக்காக ஒதுக்கப்படவிருக்கிறது. அசாமில், ஒரு யானைகள் சரணாலயம், நிலக்கரிச் சுரங்கமாக மாறவிருக்கிறது. அருணாசலப் பிரதேசத்திலுள்ள தூய இமயமலைக்காடுகள், ஒரு நீர்மின்சக்தி திட்டத்தின் பொருட்டு மூழ்கடிக்கப்படவுள்ளது. டிரம்ப், ஒரு படி மேலே சென்று சந்திரனிலிருந்து கனிம வளங்களை வெட்டியடுக்க உத்தரவு பிறப்பிக்கிறார்.

மனித உடலுக்குள் நுழைகின்ற கொரோனா வைரஸ், ஏற்கனவே உடலில் உள்ள நோய்களை எப்படிப் பெரிதாக்குகிறதோ, அதேபோல, தான் நுழைந்த நாடுகள் மற்றும் சமூகங்களில் ஏற்கனவே நிலவும் கட்டமைப்பு ரீதியான ஊனங்களையும் நோய்களையும்கூட கொரோனா பெரிதாக்கி விடுகிறது. அநீதி, குழு மனப்பான்மை, நிறவெறி, சாதிவெறி அனைத்துக்கும் மேலாக வர்க்க ஏற்றத்தாழ்வு ஆகிய அனைத்தையும் இந்த வைரஸ் ஒரு பூதக்கண்ணாடியைப் போலப் பெரிதாக்கிக் காட்டியுருக்கிறது.

அரசு அதிகாரத்தின் உறுப்புகள், இதுகாறும் ஏழைகளின் பால் அலட்சியம் காட்டியவை. ஏழைகளுடைய துன்பத்தை அதிகப்படுத்தும் திசையிலேயே செயல்பட்டவை. அவை இன்று ஒரு புதிய எதார்த்தத்தை சந்திக்கின்றன.  ஏழைகள் நோயில் வீழ்வது இப்போது செல்வந்தர்களுக்கு அச்சுறுத்தலாகிவிட்டது. இந்த நிலைமையை அரசுகள் சமாளிக்க வேண்டியிருக்கிறது. இந்தத் தீயிலிருந்து அவர்களைக் காப்பாற்றும் தடுப்புச்சுவர் ஏதும் இப்போதைக்கு இல்லை. சீக்கிரம் வந்து விடும். அது தடுப்பு மருந்து என்ற வடிவத்தில் வரலாம். ஆதிக்க சக்திகள், தாங்கள் பிழைத்திருப்பதற்கான பாதுகாப்பை எப்படியோ தேடிக்கொள்வார்கள்.  அப்புறம் மறுபடியும் பழைய ஆட்டம் தொடங்கும் – “பணமிருப்பவனே வாழ்வான்” என்ற சமூக டார்வினிய விதிப்படியான ஆட்டம்.

ஏற்கனவே உலகம் கற்பனைக்கெட்டாத அளவில் வேலையிழப்புகளை சந்தித்து வருகிறது. சிகாகோ ஹே மார்க்கெட் படுகொலை நடந்த 131 ஆண்டுகளுக்குப்பின், 8 மணி நேர வேலை என்ற கோரிக்கைக்காக தொழிலாளி வர்க்கம் போராடிய நாளான சர்வதேசத் தொழிலாளர் தினத்தன்று இதை நான் எழுதிக் கொண்டிருக்கிறேன். தொழிலாளர்கள் உரிமை என்பதில் மிச்சமிருப்பதையும் ஒழித்துக் கட்டும் நோக்கத்தில், 12 மணி நேர வேலைநேரத்தை அனுமதிக்குமாறு இந்திய தொழில்துறை முதலாளிகள், அரசை நிர்ப்பந்தித்து வருகின்றனர்.

இப்போது நாமெல்லாம் அடைபட்டிருக்கிறோம். அவர்களோ வெகு வேகமாகத் தங்கள் காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். எதேச்சாதிகார அரசுகளைப் பொறுத்தவரை, கொரோனா வைரஸ், அவர்களுக்குக் கிட்டியிருக்கும் ஒரு பரிசு.  பொலிவியா, பிலிப்பைன்ஸ், ஹாங்காங், துருக்கி, இந்தியா – என அடுத்தடுத்து ஒவ்வொரு நாட்டிலும், அரசுகள் தங்களை விமர்சிப்போரை நசுக்குவதற்கு இந்த ஊரடங்கு சூழலைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன. இந்தியாவில் மாணவர்கள், செயல்பாட்டாளர்கள், கல்வியாளர்கள், வழக்கறிஞர்கள் என்று யாரெல்லாம் அரசு எதிர்ப்புப் போராட்டங்களில் முக்கியமானவர்களாகத் தென்பட்டார்களோ, அவர்களெல்லாம் ஆண்டுக்கணக்கில் சிறை வைக்கப்படக் கூடிய கொடிய பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ்  கைது செய்யப்படுகிறார்கள். யாரெல்லாம் இந்த அரசின் இந்து தேசியவாத நிகழ்ச்சி நிரலுக்கு சேவை செய்கிறார்களோ அவர்கள், எத்தகைய வன்முறையில் ஈடுபட்டிருந்தாலும், அதிர்ச்சி தரத்தக்க குற்றங்களை இழைத்திருந்தாலும், அவர்கள் சீராட்டப்படுகிறார்கள், பதவி உயர்வு அளிக்கப்படுகிறார்கள்.

மனிதகுலத்துக்குப் பெருந்தொற்றுகள் புதியவை அல்ல. ஆனால் இந்த டிஜிட்டல் யுகத்தில் இதுதான் முதன்முறை. தேசிய அளவிலான எதேச்சாதிகாரிகள், பேரழிவில் லாபம் பார்க்கும் சர்வதேச முதலாளிகள், தரவுகளைச் சலித்து ஆய்வுக்குள்ளாக்கும் நிறுவனங்கள் – ஆகிய சக்திகளின் நலன்கள் ஒருமுகப்படுகின்ற சூழலை நாம் காண்கிறோம். இந்தியாவில் இது வெகு வேகமாக நடக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய மொபைல் வலைப்பின்னலான ஜியோ நிறுவனத்துடன் ஃபேஸ்புக் நிறுவனம் ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறது. இதன் மூலம் தன்னிடமிருக்கும் 40 கோடி வாட்ஸ் அப் பயனாளிகளின் தரவுகளை அது ஜியோ வுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறது. கிடைக்கிற வாய்ப்பு எதுவானாலும், அதில் லாபத்தைக் குவிக்கலாம் என்ற நோக்கத்துடன் பிரதமர் மோடிக்கு புகழாரம் சூட்டுகிறார் பில் கேட்ஸ்.

சுகாதாரப் பராமரிப்பு என்ற பெயரில், மோடி பரிந்துரைத்த ஆரோக்ய சேது என்கிற வேவு பார்க்கும்  செயலியை, 6 கோடி மக்கள் தரவிரக்கம் செய்திருக்கின்றனர். இது அரசு ஊழியர்களுக்கு கட்டாயமாக்கப் பட்டிருக்கிறது. பொது தணிக்கைக்கு உட்படுத்தப்படாத பி.எம்.கேர்ஸ் என்ற மர்மமானதொரு நிதிக்கு அரசு ஊழியர்கள் அனைவரும் தமது ஒருநாள் ஊதியத்தை அளிக்க வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப் பட்டிருக்கிறது.
கொரோனாவுக்கு முன் ஒரு கண்காணிப்பு அரசினை நோக்கி நாம்  தூக்கத்தில் மெல்ல நடந்து சென்றோமெனில், இன்று ஒரு மீப்பெரும் கண்காணிப்பு அரசின் கைகளுக்குள் நம்மை ஒப்படைப்பதற்காக, பீதியில் ஓடிக் கொண்டிருக்கிறோம். நம்முடைய தனியுரிமை, கவுரவம், சுதந்திரம் ஆகிய அனைத்தையும் கைவிடுமாறும், தனது நுண் நிர்வாகத்துக்கும் கட்டுப்பாட்டுக்கும் நம்மை ஒப்புக்கொடுத்து விடுமாறும் அந்த அரசு கோருகிறது. ஊரடங்கு நீக்கப்பட்டு விடலாம்.  ஆனால் விரைந்து செயலாற்றத் தவறினால், நாம் நிரந்தரமாகச் சிறை வைக்கப்படுவோம்.
இந்த எஞ்சினை செயலிழக்கச் செய்வது எப்படி? இதுதான் நம் முன் உள்ள சவால்.

00000

புரொகிரசிவ் இன்டர்நேசனல் என்ற அமைப்பால் வெளியிடப்பட்டிருக்கும் அருந்ததி ராயின் அறிக்கை, https://progressive.international/wire/2020-05-02-arundhati-roy-our-task-is-to-disable-the-engine/en   நாள் 11.5.2020

மொழியாக்கம் – மருதையன்

ஞாயிறு, 3 மே, 2020

Quarantine நினைவுகள்...


மார்ச் 18 தொடங்கப்பட்ட மக்கள் கட்டுப்பாட்டு ஊரடங்கு கிட்டத்தட்ட 46 நாட்களுக்குப் பிறகு நாளையோடு எங்களுக்கு முடிவுக்குப் வரப்போகுது. கோவிட் 19 வைரஸ் தொற்று இன்னும் ஒரு முடிவுக்கு வராவிட்டாலும்கூட அரசு எந்த நோக்கத்திற்காக இந்த தளர்வை கொடுத்திருக்காங்க என்று முடிவுக்கு ஒரு வரமுடியவில்லை.
இனி காலத்தின் கையில் அனைத்தையும் ஒப்படைத்துவிட்டு வருவது வரட்டும் என உடலை நகர்த்துவதைவிட வேறுவழியில்லை. வாழ்ந்து சாதிக்க ஏதும் இருப்பதாகவும் எனக்கு தோணல..
இந்த quarantine நாட்களில், என் நேரத்தை பல விஷயங்களுக்கு பெருமளவு செலவழித்திருக்கிறேன். என்னை அமைதியில் ஆழ்த்தி பரவசப்படுத்திய நேரங்கள் என் வீட்டுப் பின்கட்டில் இருக்கிறது. 2×2 அடி அளவு இருக்கும் அந்த இடத்தில் ஒரு வாளியை கவுத்துப்போட்டு வைத்திருப்பேன். சலவை இயந்திரம் இருக்கிறது. அந்த வாளிமீது நின்றுப்பார்த்தால் குப்பை கொட்டும் கிடங்கைப் பார்க்கலாம்..
அங்கே ஒரு தூங்கு மூஞ்சி மரம் இருக்கிறது. சில வேளை நான் அதை இலையுதிர் மரம் என்றும் சொல்வேன். பல ஆண்டுகாலமாக இலைகளை உதிர்ப்பது மட்டுமே அதன் வேலையாக இருந்தது. கொஞ்சம்கூட சிரிக்காத மரம் அது. அதில்தான் என் சாம்பல் பறவையும் எதையோ இழந்ததுபோல அமர்ந்துவிட்டுப்போகும். 

கடந்தாண்டு என நினைக்கிறேன். எப்போதுமே இலையை மட்டுமே உதிர்த்துவிட்டுப் போகும் அந்த மரத்தில் சரம்சரமாக அரும்புகள் காணமுடிந்தது. அடுத்த சில நாட்களில் அழகான ஊதா பூக்கள் மரம் முழுவதும் இருந்தது. அட இந்த மரத்திற்கு வாழவும் தெரிகிறதே என ஆச்சரியப்பட்டேன். அதன் பிறகு அந்த மரம் பூக்கவே இல்லை. உனக்கு என்னதான் பிரச்சினை என அதை கேட்டாலும், அசையாது அது.
Quarantine தொடங்கிய இரண்டு வாரங்களில் ஊரே அடங்கிப் போயிருக்க, மரத்தில் ஊதா பூக்கள் மீண்டும் பூக்க தொடங்கியது. இதுவரை காணாத அளவுக்கு கொண்டாடியது மரம்.

அடுத்த சில நாட்களில் விருந்தாளிகளைப் பார்க்கனுமே!! இதுவரை வராத பலர், மரத்தைத் தேடி வந்து உரையாடிச் சென்றனர். தொடக்கத்தில் சலவை இயந்திரம் மீது உட்கார்ந்து அவைகளின் விளையாட்டை பார்த்துக்
கொண்டிருப்பேன். பின்புதான் ஏன் அவர்களை புகைப்படங்கள் எடுக்கக்கூடாது என தோன்றியது...
விருந்தாளிகள் மரத்திடம் விட்டுச்சென்ற இருப்பை நான் பத்திரப்படுத்த தொடங்கினேன்….


இந்தப்  படத்தில் உள்ளவர் , தொடக்க இரு நாட்களுக்கு மட்டும் வந்தார். விரல் அளவுதான் இருந்தார். ஆனால், கரு நிறத்தில் அந்த ஆறஞ்சு நிறம் ரொம்ப அழகு.
எனக்கு பிடித்த ஒருநாள் அலைபேசியில் வெளியே நோட்டமிட்டப்படி பேசிக்கொண்டிருந்தபோது, இவர் வந்துவிட்டார். பேசிக்கொண்டே இவரை புகைப்படம் எடுத்தேன். அவரின் தோற்றத்தை என்னால் முழுமையாக புகைப்படம் எடுக்க முடியவில்லை. அவருடைய துறுதுறுப்பு மற்றும் போஸுக்கு நிற்கவே கூடாத என்ற அவருடைய திமிர் இரண்டுமே அதற்கு அனுமதிக்கவில்லை. ஆனாலும் அது எனக்குப் பிடித்திருந்தது.
இவருக்காகவே நான் சும்மா சும்மா அடுப்பாங்கறையை நோக்கி ஓடிக் கொண்டிருந்தேன். ஆனால், அவர் தரிசனம் இன்றுவரை இல்லை. எனக்கு இது ஏமாற்றமில்லை. காத்திருப்பு..



இவர், தொடக்க இரு நாட்களுக்கு மட்டும் வந்தார். விரல் அளவுதான் இருந்தார். ஆனால், கரு நிறத்தில் அந்த ஆறஞ்சு நிறம் ரொம்ப அழகு.
எனக்கு பிடித்த ஒருநாள் அலைபேசியில் வெளியே நோட்டமிட்டப்படி பேசிக்கொண்டிருந்தபோது, இவர் வந்துவிட்டார். பேசிக்கொண்டே இவரை புகைப்படம் எடுத்தேன். அவரின் தோற்றத்தை என்னால் முழுமையாக புகைப்படம் எடுக்க முடியவில்லை. அவருடைய துறுதுறுப்பு மற்றும் போஸுக்கு நிற்கவே கூடாத என்ற அவருடைய திமிர் இரண்டுமே அதற்கு அனுமதிக்கவில்லை. ஆனாலும் அது எனக்குப் பிடித்திருந்தது.

இவருக்காகவே நான் சும்மா சும்மா அடுப்பாங்கறையை நோக்கி ஓடிக் கொண்டிருந்தேன். ஆனால், அவர் தரிசனம் இன்றுவரை இல்லை. எனக்கு இது ஏமாற்றமில்லை. காத்திருப்பு..


சிரிக்காத அந்த இலையுதிர் மரம் வசந்தக்காலத்தில் தன்னைத் தேடி வந்த விருந்தாளிகளுக்கு இடம்மட்டும் கொடுக்கவில்லை கொஞ்சம் மழைச்சாரல்களையும் கொடுத்தது..
அழகிய மழைநேரத்தில் தனியாக வந்து ஈரத்தை அனுபவித்துப்போன விருந்தாளிகள் இவர்கள்தான்.
என் நல்ல நேரம், சந்தேகமாக குப்பைக் கிடங்கை நோக்கியபோது அருகில் இருந்த மரத்தில் இவர்களின் வருகையை அனுமானிக்க முடிந்தது. ஆனால், எத்தனை பேரை தவற விட்டேன் என மரத்திற்குதான் தெரியும்.. என்னைப் பார்த்து முதல் முறையாக மழையை அனுபவித்தபடியே சிரித்தது அந்த மரம் ...

சித்திரையின் வசந்த காலம் முடிகிறது என்பது மரத்தில் பூத்திருந்த ஊதா மலர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்தபோதுதான் எனக்கு விளங்கியது. பறவைகள் வருவது குறைந்துக்கொண்டே வந்தது. கிட்டதட்ட இரண்டு வாரங்களுக்கு முன்பு வந்த பறவைகள் யாரும் திரும்ப வரவே இல்லை. மைனா ஒன்று அவ்வப்போது கூப்பிடுவதுபோல இருக்கும். ஆனால் கண்ணில் காண முடியவில்லை. புளியங்கொட்டைகளை புளியங்கொட்டைகளின்மேல் கொட்டினால் வரும் சத்தத்தைபோல ஒருவர் கத்துவார், அவரையும் நான் கண்டதில்லை.
தூக்குமூஞ்சி மரம் ச

ிரிப்பதை நிறுத்தி 10 நாட்கள் ஆகிவிட்டது. ஆனால், நான் கெமராவோடு விருந்தாளிகளை வரவேற்க காத்துக்கொண்டே இருக்கிறேன். மரம்
மீண்டும் சிரிக்குமா என்றும் காத்திருக்கிறேன்.
என் எதிர்பார்ப்புக்கு ஆயுள் இன்னும் ஒரு நாள்தான். இதோ என் Quarantine நாட்கள் முடிவுக்கு வரப்போகிறது. கொரானா தொற்று அபாயம் முழுதாக தீராவிட்டாலும், சில காரியங்களுக்காக நான் வெளியேற நினைக்கிறேன்.
இலையுதிர் மரத்து விருந்தாளிகள் வரலாம் - போகலாம். நான் அவர்களுக்கு தெரியாமல் சேமித்து வைத்திருக்கும் அவர்களின் நினைவுகள் என் Quarantine நாட்களை எப்போதும் பேசும்...