புதன், 29 ஜூலை, 2015

அப்துல் கலாமிற்கு முன்பும் பின்பும்


ஏ.பி.ஜே டாக்டர் அப்துல் கலாமிற்க்கு அறிமுகம் தேவையில்லை. விஞ்ஞானி, குடியரசு தலைவர், எழுத்தாளர் என பலவகைகளில் அடையாளப்படுத்தப்படுபவர்.
2002- ஆம் ஆண்டு இந்தியாவின் 11-வது குடியரசுத் தலைவராக ஜூலை 25-ஆம் தேதி 2002-ல் பதவியேற்றார். ஐந்து ஆண்டுகள் மட்டுமே அப்பதவியில் இருந்த அவர் 2007-ஆம் ஆண்டு அவர் அப்பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். ஆனால், அவர் 'மக்களின் ஜனாதிபதி' என்று அன்போடு அடையாளமாகியுள்ளார் மக்களின் மனதில்.
இந்தியாவில் இதற்கு முன்பு அப்துல்கலாம் உட்பட10 குடியரசு தலைவர்கள் இருந்திருக்கிறார்கள். கலாம் ஓய்வு பெற்ற பிறகு பிரதீபா பாட்டில், அதன்பிறகு  குடியரசு தலைவராக பிரணாப் முகர்ஜி அப்பதவிக்கு வந்தார். ஆனால், அப்துல் கலாமை தவிர, அவர் அளவுக்கு யாரும் பிரபலமாகவில்லை? அதற்கு கலாமின் தனிப்பட்ட ஆளுமை ஒரு காரணமாக இருந்தாலும், என்னை பொறுத்தவரையில் சினிமாவும் ஒரு காரணம் என கூறுவேன்.

‘எதிர்கால இந்திய இளைஞர்கள் கையில்’
“கனவு காணுங்கள்! அந்த கனவை நினைவாக்க
பாடுபடுங்கள்”
 என்னும் வாக்கியத்தை அப்துல் கலாம் கூறியிருந்தாலும், சின்ன கலைவாணர் என அழைக்கப்படும் நகைச்சுவை கலைஞர் விவேக் திரைப்படங்களில்தமது நகைச்சுவை காட்சிகளில் அதை பயன்படுத்தினார். அப்துல் கலாம் என்ற பெயர், கல்வியறிவு இல்லாத பாமர மக்களையும் சென்றடைந்தது. அதுமட்டுமல்லாமல், இந்தியாவைத் தாண்டி உலகமுழுதும் பரவிக்கிடக்கிற தமிழ் மக்களிடத்தில் கலாம் மிக இலகுவாக அறிமுகமானார். அதற்கு சினிமா எனும் ஊடகம் பெரிய அளவில் அவருக்கு விளம்பரம் கொடுத்தது என்பதையும் மறுக்க முடியாது.

கலாமின் தாரக மந்திரங்கள் இளைஞர்களின் மனதிலும், மாணவர்கள் மனதில் வலுவாக வேரூன்ற கலாமின் தோற்றமும் ஒரு காரணம் எனக்கூறலாம். மிக மிகஎளிமையான அவரின் உடையலங்காரம் மட்டுமல்ல அவரின் சிகையலங்காரமும் தனி பாணியிலானது.
இந்தியா எனும் ஜனநாயக நாட்டை வல்லரசு நாடாக மாற்ற வேண்டும் என்று பல தலைவர்கள் முயற்சி எடுத்திருந்தாலும் அதற்கான செயல்களில் இறங்கியவர் அப்துல் கலாம் என இந்திய மக்களாம் வர்ணிக்கப்படுகிறார். அதை செயல்படுத்த தொலைநோக்கு பார்வையுடனும்,
திட்டங்களுடனும் 'இந்தியா-2020' என்ற புத்தகத்தை அப்துல் கலாம் எழுதினார். அவரின் திட்டங்கள் அனைத்தும் மாணவர்களை நோக்கிய இலக்கை கொண்டதாக இருந்ததற்கு இந்த தொலைநோக்கு சிந்தனையும் ஒரு காரணம் என்று தாராளமாக சொல்லலாம்.

இளைய சமூதாயம் மட்டுமே வளமான இந்தியாவை மீட்டுக்கொடுக்கும் என்று அசைக்க முடியாத நம்பிக்கையாக அவருக்கு இருந்தது. அதனால்தான்
என் கடைசி நிமிடம் மாணவர்களுடன்தான் என்று கூறியிருந்தார். அவரின் எண்ணம் போல்தான் அமைந்தது அவரின் கடைசி நிமிடமும்.

எனக்கு அப்துல் கலாம் மீது மிக பெரிய மரியாதை இருந்தாலும், அவரின் மீது விமர்சனமும் இருக்கிறது. டாக்டர் அப்துல் கலாம் மீது உலக மக்கள் அல்லது ஈழஆதரவாளர்கள் வைக்கும் முக்கிய விமர்சனம் மீனவர்களுக்கும், ஈழத்தமிழர்களுக்கு அவர் ஆதரவாக ஒன்றுமே செய்யவில்லை என்பதுதான். ராமேஸ்வரத்தில் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்ட மீனவர்கள், அவர் பிறந்த சொந்த மண்ணைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடததக்கது. என்னைப் பொறுத்தவரையில், தமது சொந்த நாட்டில், சொந்த நாட்டு மக்களுக்கு நடந்த கூடங்குளம் அணுவுலை பிரச்னை வந்தபோது அவர் ஒரு விஞ்ஞானியாக மட்டுமே நடந்துக்கொண்டார். தம்மக்களின் கண்ணீரும் கோரிக்கையும் மனிதாபிமான ரீதியில் எந்த ஒரு இரக்கமும் அவருக்கு ஏற்படவே இல்லை. அதனால் ஏற்படப்போகும் சுற்றுச்சூழல் பேராபத்துக் குறித்தும் அவருக்கு எந்த வருத்தமும் இல்லை. மேலும், அது சார்ந்த குரலை கேட்கவும் கலாம் மறுத்துவிட்டார் என்று அங்கிருந்து கிடைப்பெற்ற பத்திரிகை செய்திகள் என் வரையில் பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியது. ராணுவ துறையின் மேம்பாட்டுக்கு மட்டுமே அவரின் முழு ஆராய்ச்சியும் உழைப்பும் இருந்தது. அவர் அக்னி பறவையாகவும், ஏவுகணைகளின் மன்னனாகவும் இருந்துவிட்டு போகட்டும். அதற்காக,காட்டை வேக விடுவதற்கும், வெந்து தனிப்பதற்கும் விளிம்பு நிலை மக்களின் உயிர் அத்தனை மலிவானதா? இந்த ஆதங்கம், பெரும் ஏமாற்றத்தை என்னில் ஏற்படுத்தியிருந்தது.

நான் அப்துல் கலாமின் சுயசரிதையை தனியாக படிக்கவே இல்லை. தும்பி எனும் சிறுவர் அறிவியல் இதழுக்காக சந்துரு அப்துல் கலாமின் ஓவியங்கள் வரைய வேண்டியிருந்தது. அதில் ராமேஸ்வரத்தில் கலாம் பிறந்தது முதல், அவர் அடைந்த சாதனை வரை சில படங்களை வரைய வேண்டும். வரைந்த ஓவியங்களை என்னிடம் காட்டியபோது அதில் கலாமுடைய மாணவர் பருவம்தான் என்னை மிகவும் ஈர்த்தது. காரணம், கலாமும் என்னைப் போல் மாணவர்ப் பருவத்தில் குழந்தைகளின் இயல்பு நிலையை தொலைத்தவராக இருந்திருக்கிறார். ஆனால், அவரின் விளையாட்டு மொத்தமும் கல்வியாகவே இருந்தது.
கலாமின் வாழ்க்கை மொத்தமும் சில ஓவியங்களில், மாணவர்களை கவரும் வகையில் சந்துரு வரைந்திருந்திருந்தது அவருக்கு மட்டுமல்ல எனக்கும் கலாமோடு ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

இன்று அப்துல் கலாம் என்ற சாதனையாளர் நம்மோடு இல்லை என்பது வருத்தமாகத்தான் இருக்கிறது.  இந்த நூற்றாண்டில் நாம் என்னென்ன இழக்கப்போகிறோம் என்பதுதெரியாது.
ஆனால், இந்த இழப்பை யார் கொண்டும் ஈடுச் செய்ய முடியாது.
டாக்டர் அப்துல் கலாம் 'எண்ணத்தில் நலமிருந்தால் கனவு தமிழகம் உருவாகும்' என்ற தலைப்பில் ஒரு படைப்பை எழுத்திக்கொண்டிருந்தார் என்றும் அந்தப் புத்தகத்தை முழுமையாக எழுதி நிறைவு செய்யாமலேயே இப்பூவுலகை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார் என்ற தகவல் உலக மக்களை வேதனையில்ஆழ்த்தியுள்ளது.

'ஒரு முறை வந்தால் அது கனவு,
இரு முறை வந்தால் அது ஆசை
பலமுறை வந்தால் அது லட்சியம்'

 -அப்துல் கலாம்

(நன்றி, 28.7.2015 தினக்குரல் மலேசியா)

புதன், 15 ஜூலை, 2015

சாவுகளால் பிரபலமான ஊர் (புத்தக விமர்சனம்)

சில புத்தகங்கள் முதல் வாசிப்பிலேயே அதிர்வலைகளை ஏற்படுத்தும். தொடர்ந்து அந்தப்புத்தகம் நம்மை நிலைக்கொள்ளாமல் செய்யும்போது, அந்த தாக்கத்தையும்- மனதில் ஏற்படுத்தும் தாக்குதலையும் ஒரு வாசகம் பதிவாக எழுதியோ, நண்பர்களுடன் விவாதித்தோ, குறைந்த பட்சம் முகநூலில் பதிவேற்றம் செய்தோ அதன் தீவிரத்தை தனிக்க முயல்கிறான். அதே புத்தகம் இரண்டாவது முறையாக வாசிக்கப்படும்போது ஏற்படும் புரிதலும், மீண்டும் மீண்டும் அலைகளைந்து கவிஉருவம் கொடுக்கும் படைப்பாளனின் கவிநிலையையும் உணர்ந்துகொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது. அடுத்தடுத்த வாசிப்புகளில் கவனிக்க தவறிய மற்ற விஷயங்களும் நமக்கு கண்ணுக்கு தெரியலாம். 

மிக அண்மையில் நான் மேற்கொண்ட இலங்கைப்பயணத்தில் சில இலங்கை தமிழ் பெண் எழுத்தாளர்களின் புத்தகங்கள் சில கிடைக்கப்பெற்றேன். இலங்கை எழுத்துகளும் புத்தகங்களும் எனக்கு அப்போதுதான் பரிட்சயம் என்று இல்லை. அது என்ன இலங்கை எழுத்து? என்று கேட்கலாம். உண்மையில் அப்படி சொல்வது ஒரு தவறான கண்ணோட்டமும்கூட. அது தமிழ் எழுத்துதானே? இன்னும் சொன்னால், அது இன்னும் தீவிர எழுத்து இல்லையா? ஆனால், சொற்களை பிரயோகிக்கும் விதத்தில் அவர்களின் சொல்லாடல்கள் கொஞ்சம் மாறுபடத்தானே செய்கிறது?

ஓர் உதாரணம் சொல்கிறேன். “நீங்கள் இன்று இங்கு நிற்கவில்லையா?” என்றால் “நீங்கள் இன்று இங்கு தங்கவில்லையா?” என்று அர்த்தமாகிறது. இப்படியான சின்ன சின்ன மொழிபுரிதல் எனக்கு இலங்கை தமிழின் வித்தியாசத்தை உணர்த்தியதோடு புதிய அனுபவத்தையும் கொடுத்தது.
நான் முதல் முதலில் படித்த இலங்கை படைப்பு எது என்று கேட்டால், எனக்கு கொஞ்சமும் ஞாபகமில்லை. அதோடு இதுவரை எத்தனை படைப்புகள் படித்திருக்கிறீர்கள் என்று கேட்டாலும் என்னால் சட்டென பதில் சொல்ல முடியாது.

ஆனால், தர்மினியின் ‘சாவுகளால் பிரபலமான ஊர்’ என்ற புத்தகம்தான் நான் முதன் முதலில் படித்த இலங்கை அல்லது புலம்பெயர்ந்தவர்களின் கவிதை தொகுப்பாகும். அந்த கவிதை தொகுப்புக் குறித்து நான் சில வருடங்களுக்குமுன் வல்லினம் இணைய இதழில் எழுதியிருக்கிறேன்.
தற்போது, இலங்கை பெண் எழுத்தாளர்களின் கவிதை தொகுப்புகளை வாசித்து ஒரு பதிவு எழுதலாம் என்று நினைக்கையில், தர்மினியின் ‘சாவுகளால் பிரபலமான ஊர்’ கவிதை தொகுப்பை மீண்டும் மறு வாசிப்பு செய்தேன்.

போர் சூழல் இப்போது இலங்கையில் இல்லாவிட்டாலும்கூட, அதன் தீ அணைந்துவிட்டது என்று என்னால் முழுதாக நம்பமுடியவில்லை. அதன் தொடர் போராட்டம், நடந்த அநீதிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை நோக்கி திரும்பியிருக்கிறது. தர்மினியின் இந்த கவிதை தொகுப்பு, போர் நிறுத்தத்திற்கு முந்தியவையாக இருந்தாலும், அவரின் எழுத்துகள் பல இடங்களில் போருக்கு சாட்சியம் கூறுவதைப் போன்றே உள்ளது. தொகுப்பிலுள்ள சில கவிதைகள் இன்னும் உயிர்ப்புடன் உள்ளன.

2011-ஆம் ஆண்டில் தர்மினியின் புத்தகத்திற்கு நான் எழுதிய விமர்சனம்... 

‘சாவுகளால் பிரபலமான ஊர்’ பற்றி எழுதுவதே எனக்கு பெரிய சவாலாக இருக்கிறது. முதலில் தொகுப்பின் தலைப்பே என்னை அதனுள் நெருங்க விடாமல் பயமுறுத்தியது. ஒவ்வொரு முறையும் எப்படித் தொடங்கலாம் என்று தொடங்கி தொடங்கியே பல காகிதங்கள் கசக்கி எறியப்பட்டன. கவிதைப் பற்றிய விமர்சனத்தை எழுதுவது இது எனக்கு முதல் முறை இல்லை. எனினும் தர்மினியின் கவிதைகளை அத்தனை சுலபமாக என்னால் விமர்சித்து விட முடியவில்லை. அதை எழுதுவதற்கு சரியான சொற்கள் தேவைபடுகிறது. அவ்வாறான சொற்களை சரியான இடத்தில் பயன் படுத்திக்கொள்ள எனக்கு பொறுமை தேவைப்படுகிறது. அனைத்துக்கும் மேலாக அக்கவிதைகளை கிரகித்துக்கொள்ள எனக்கு வலிமை தேவைப்படுகிறது.

'சாவுகளால் பிரபலமான ஊர்', இதை விவரித்து சொல்வதென்றால் பிணங்களால், மரணங்களால் பிரசித்திப்பெற்ற நகரம். அல்லது மாநிலம் அல்லது நாடு. எவ்வாறான மரணங்கள்? நோயால் அல்லது விபத்தால் அல்லது இயற்கையால் ஆன மரணமா? இல்லை. எப்படியெல்லாம் நிகழக்கூடாதோ அப்படியெல்லாம் நிகழ்ந்த மரணங்கள். எப்படியெல்லாம் பிணமாகக்கூடாதோ அப்படியெல்லாம் நிகழ்த்திக்காட்டிய கொடூரங்கள். அதற்குப் பெயர் போன ஊர் அது. வன்கொடுமையையும், வக்கிரத்தையும் அப்பாவி பொதுமக்கள் மீதும் போராளிகள் மீதும் பிரயோகித்து,  பிணங்களை சம்பாதித்து பிரசித்திப்பெற்ற ஊர்.

அந்த ஊரில் பிறந்து வளர்ந்து போரின் கசப்பான அனுபவங்களோடு பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்துகொண்டிருக்கும் தர்மினி தன் இறந்த காலங்களுக்கு உயிர் கொடுக்கும் விதத்தில்,  கவிதை தொகுப்பின் வடிவில் நமக்கு உருவம் தந்திருக்கிறார். போரின் ஆறாத காயங்கள், நட்பு, காதல், ஆணாதிக்கம், அரசு திட்டங்கள் என அதனதனில் பட்ட காயங்களை கவிதையாக சமைத்து நமக்கு உண்ண கொடுத்திருக்கிறார். 50 கவிதைகள் கொண்ட இந்தத் தொகுப்பில் பக்கத்துக்கு பக்கம் வெறுமையும், துயரமும் அவரின் கோபமும் போர் சூழலையே பேசிக் கொண்டிருக்கின்றன.

யுத்தத்தில் பாதிக்கப்படும் உடைமைகளையும் சொத்துக்களையும் உயிரைக்கொண்டு மதிப்பிட முடியாது. ஆனால்யுத்தங்கள் தின்று தீர்க்கும் வீடுகளைப் பற்றிய கவலையோடு ஓடுபவர்கள் நத்தையின் கூடு போன்ற வீடொன்று முதுகில் இருந்தால் எளிதாக இருக்கும்’ என்று வெம்புகிறார்கள்.

“குண்டுகள், துப்பாகிகள்,
வேவுக்கண்கள் சொல்லுகின்றன
வீடுகள் பாதுகாப்பற்ற மரணக்கிடங்குகள்என்றும்
“நத்தையின் கூடு போன்ற
வீடொன்றை நினைத்து வெதும்பியபடியே
ஏதோ ஓரிடத்தை நோக்கி ஓடிக்கொண்டிருப்பார்கள்
 

என்று முடிவடையும் கவிதை கையறுநிலையாய் ஏற்படும் தவிப்பையும் நமக்கும் ஏற்படுத்துகிறது.

வீடுகளில் சுகமாக வாழ்ந்து பழகி விட்ட, சுகபோக நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு நத்தை போன்றதொரு வீட்டையெல்லாம் நினைத்துக்கூட பார்க்க முடியாது அல்லவா?  ஆனால் பாதுகாப்புக்கூட துணை நில்லாத வீடுகளைப் பற்றிய துயரத்தை என்றாவது நாம் நினைத்து பார்த்திருப்போமா?

அடக்கம் செய்ய முடியாமல் வாழ்ந்துகொண்டிருக்கும் பிணங்களை தூக்குவதற்கு ஆட்களை எதிர்பார்த்து காத்திருக்கும் பெரியவர்களின் குமுறல்களை வார்த்தையால் சொல்லிவிட முடியாது. ஆனால் கவிதையாய் சொல்கிறார் தர்மினி இப்படி. 

“சுடுகாற்றுத் தாழைகளிலிருந்து
நாகங்கள் தப்பித்தோடியிருக்க
கல்லறைப் பூவரசுகளின் நிழலில்
அடையாள அட்டைகளைக் கைகளிற் பொத்தியபடி

பிணந்தூக்க எவருமற்று
கிழவர்களும் கிழவிகளும் கால் நீட்டிக்காத்திருப்பர்.

சிதைவடைந்த ஊரில் செழித்துக்கிடைப்பவையே சுடுகாடும்
இடுகாடும்”

இந்த கவிதைத்தொகுப்பில் என்னை மிகவும் பாதித்த வரியே இதுதான். ஆனால், சுடுகாடும் இடுகாடும்கூட வீரத்தின் அடையாளம் என இடித்து, இல்லாமல் செய்த சிங்கள அரசின் தார்மீகத்தை, எப்போதும் வரலாறு தன்குறிப்பிலிருந்து அகற்றிக்கொள்ளாது.

பெண்ணியம் பேசும், பெண்கள் எழுதும் கவிதைகள் அவர்களின் உறுப்பைக் கொண்டாடியபடியே இருக்கிறன. அதைத்தாண்டி இங்கொன்றும் அங்கொன்றுமாக ஒரு சிலர் வெவ்வேறு பாடுபொருள் கொண்டு கவிதை வரைந்தாலும் ஒட்டுமொத்தமாகத் தன் சுயத்தைதான் பாடுகிறார்கள் என்ற பொது கருத்து ஒன்று பெண் கவிகள் மீது உண்டு. தொகுப்பில் தர்மினியும் உறுப்பை பேசுகிறார் இப்படி...

“சொறி பிடித்த தொடைகள்
மலமாய் நாறும் வாய்கள்
அழுக்காக மடிந்த வயிறுகள்

நெளிந்த குறிகள்
உங்கள் நிர்வாணங்களை ஒரு தடவை பார்த்து வெட்கி
மற்றுமொருத்திக்குக் காட்டாது
பொத்தி வையுங்கள்...”


என்று முடிகிறது கவிதை. இராணுவச் சிப்பாய்கள் ஈழத்து சகோதரிகளுக்கு செய்த வன்கலவிக்கும், சித்திரவதைகளுக்கும் கொடூரக் கொலைகளுக்கும், அழிக்கமுடியாத சாபத்தைச் சுமந்துக்கொண்டுதான் வாழ நேர்ந்திருக்கிறது. செத்துப்போன கன்றைச் சுற்றி நின்று பிய்த்து தின்னும் ஓநாய்களாகவும் மரபு அற்றவர்களாகவும் அவர்களை கவிதையின் வழியாக சீறுகிறார் தர்மினி.
 சிங்கள சிப்பாய்களின் குடும்பத்துப் பெண்கள் தன் வீட்டு ஆண்களின் வருகையை எதிர்ப்பார்ப்பதை இப்படி விவரிக்கிறார்...

ஒருத்தி தன் சகோதரனின் நலம்விசாரித்து கடிதம் எழுதுகிறாள்.
பிரிவை தாங்க முடியாமல் காதலி கண்ணீர் வடிக்கிறாள்.
தன் காதலைச் சொல்வதற்காக மற்றொருத்தி சிப்பாயின் விடுமுறையை எண்ணி வாசலையே பார்த்துக்கொண்டிருகிறாள்.
அவனின் மகள் அப்பன் கொண்டு வரும் பரிசு பொருட்களையே நினைத்துக்கொண்டிருக்கிறாள்.
மனைவி நித்திரையற்ற தன் இரவுகளுடன் போராடிக்கொண்டிருக்கிறாள்.
அவனின் தாய் சாவுக்காவது வருவானா என்று கலங்கிய படி இருக்கிறாள்.

அந்தச் சமயத்தில் அவன் போரில் ஏதோ ஒரு பெண்ணை வன்கலவிச் செய்து, கொன்று மண்ணை போட்டு மூடிக்கொண்டிருக்கிறான். அல்லது அந்த நிர்வாண உடலை புகைப்படமெடுத்து வஞ்சம் தீர்த்துக்கொண்டிருப்பான். உண்மையில் சிங்களச் சகோதரிகளின் அன்புக்கும் நேர்மைக்கும் பாத்திரமற்றவர்கள் இந்தச் சிங்களச் சிப்பாய்கள். நம்பிக்கை துரோகிகள் என்றும் இவர்களை தாராளமாக சொல்லலாம்

ஈழப் போர் ஆரம்பித்த நாள் முதற்கொண்டு மற்றவர்களை விட அதில் பெரும் பாதிப்படைந்தவர்கள் குழந்தைகள்தான். அவர்களின் சிரிப்பும், குழந்தை தனமும், குழந்தை பருவமும் அநியாயமாகப் பறிக்கப்பட்டிருக்கிறது அல்லது சிதைக்கப்பட்டிருக்கிறது. அவர்களின் விளையாட்டுகள் பலவந்தமாக களவாடப்பட்டிருக்கிறது. புத்தகம் ஏந்தும் கைகளில் ஆயுதங்கள் திணிக்கப்பட்டிருக்கின்றன. கருவறையில் வளரும் குழந்தைக்கும் போர் பற்றிய பயம் அல்லது எதிர்காலத்து போராளி நீ என ஆருடம் ஊட்டப்படுகிறது. இந்த விடயத்தை பேசுகிற கவிதை தர்மினியின் இந்தத் தொகுப்பில் மிக முக்கியமானதாகும்.

“ஐந்து மாதக் கருவும் போருக்குத் தேவையாம்
இனி எம் கர்ப்பங்கள் கண்காணிக்கப்படும்

சில மாதங்களான குழந்தைகளை நோக்கியும் 
சில வருடங்களான சிறுவர்களைக் குறிவைத்தும்
தாயின் கதறலை வென்ற 
துப்பாக்கிகளின் ஓசைகள்”


என்று தொடர்கிறது கவிதை. அதிகாரம் கொண்ட வெறி கொண்டவர்கள் கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் தீவின் திசை எங்கும் வெறி கொண்டவர்களாகவே அலைவதை கவிதையில் காணப்படுகிறது. “ஓடி விளையாடுப் பாப்பா” என்று பாரதி சொன்ன கவிதைக்கெல்லாம் அங்கே வேலை இல்லை. “செய்து முடி. அல்லது செத்து மடி” என்பதுதான் எழுதாத 
விதியாக உள்ளது

கடிதம் எழுதாத நண்பனுக்கு முகவரி கொடுக்கும் கவிதையும் (பக்கம் 26), தீர்ந்து போகாத காதலைப்பற்றி பேசும் பெண்ணின் மனநிலையிலான கவிதையும் (பக்கம்30) மீண்டும் மீண்டும் போரினால் மாறிப்போன பிம்பங்களையே நம் கண்முன் நிறுத்துகிறது. இவரது கவிதைகள் ஆதங்கங்களை மட்டும் அல்ல வரலாற்று பதிவுகளும் அவற்றுடனான அவரின் இருப்பையும் இணைத்திருக்கிறார்.

கணவனின் ஆணாதிக்கத்தை ஆற்றாமையுடன் தனக்குள்ளோ அல்லது பயந்து பயந்து மற்றவருடமோ கேள்விக்கேட்கும் பெண்கள் எங்கும் உண்டு. எல்லாரது பெண்கள் வாழ்க்கையிலும் சர்வ சாதாரணமாக நடக்கும் நிகழ்வுதான் இது. மேலோட்டமாக இதை பார்க்கும் போது சாதாரணமாகத்தான் தெரியும். ஆனால் அதனால் ஏற்படும் மனஉளைச்சலையும், மனஅழுத்தத்தையும் திரண் இல்லாத அல்லது பலவீனமான பெண்களால் எங்கு கொண்டுபோய் கழுவ முடியும்? 

“சுற்றியிருக்கின்ற நான்கு வீடுகளும்
சற்றுக் கதவு திறந்து பார்த்தன.
கணவன் என்னைத் திட்டிக்கொண்டிருக்கிறான்
காதடைக்க வாயடைத்து நின்றேன்.

மறுநாள் மெதுவாக வந்தானவன்

இன்று உரத்துக் கத்திட முடியாதவன் போல
மெல்லச் சொன்னான்
"மன்னித்து விடு"
என் ஒரு காதுச்சவ்வும் அதிராத அவ்வசனம்
எட்டிப் பார்த்த அத்தனை வீடுகளுக்கும் எப்படி கேட்கும்?”


என்று முடியும் இந்த கவிதை தர்மினியின் துல்லியமான பெண்ணியப் பார்வையை காட்டுகிறது. இது ஆண்களிடத்தில் இன்றும் தொடரும் அதிகாரமல்லவா? இந்தக் கவிதையை எப்போது படித்தாலும் கொஞ்சமாவது குற்ற உணர்ச்சி ஏற்படுத்திவிடும்.  

இந்தத் தொகுப்பில் என்னை பாதித்த மற்றுமொரு கவிதையாக 'அகமும் புறமும்'  (பக்கம் 37) என்ற கவிதை உள்ளது. நான் எத்தனை பலவீனமானவள் என்று என்னை சுட்டிய கவிதை அது. மன்னித்தலும் மறத்தலும் மனித மாண்பு எனப் படும்போது, மறக்கவும் முடியாமல் நினைக்கவும் முடியாமல், சதாக் கொல்லும் போரின் நினைவுகளை எப்படி உரித்துப்போடுவது? எங்கு போனாலும் எப்படி இருந்தாலும் சாவுகளால் பிரபலமான ஊரில் இருந்து வந்தவர்கள் என்ற அடையாளம் பின்தொடர்வதை யாராலும் அறுத்துப்போட முடியாது இல்லையா?

“எம் நிலமெங்கும் பிணங்கள் கிடக்குது
நானுணர்வேன்
நிணமும் பிணமும் உண்ணும் பேய்கள் உலாவழும்
நானறிவேன்
ஆயினும் நானின்று உயிரோடுள்ளேன்

நீரால் நிலத்தால் பிரிந்த துயரில்
வேலை முடிந்து வெந்நீரிற் குளித்து
நேரம் ஒதுக்கிப் பேச
மதுவை ஊற்றி மேசை நிறைத்து
மசாலாவுடன் மாமிசங்கள் மற்றும் மலர்க்கொத்துக்களுடன்
அவ்வப்போது வாதங்களைக் குரோதங்களை வீசி
முடிவிற் சில பாடல்களாற் தீர்ந்திடும்

எம் நிலமெங்கும் பிணங்கள் கிடக்குது
நானுணர்வேன்
நிணமும் பிணமும் உண்ணும் பேய்கள் உலாவழும்
நானறிவேன்
ஆயினும் நானின்று உயிரோடுள்ளேன்...” 


ஈழத்துப்போரின் அவலங்களை விதவிதமாக பேசியாகிவிட்டது. பக்கம் பக்கமாக எழுதியாகியும் விட்டது. நாளுக்கொரு காணொளியாக வந்த வண்ணமே உள்ளது. பாதிப்படைந்தவர்களை விட மற்றவர்க்கு அது ஒரு சேதிதான். “அச்சச்சோ” என்று வேதனையைத் துப்பிவிடும் சேதிகள். அதிக பட்சமாக பண உதவியோ அல்லது இலங்கை அரசுக்கு எதிராக இணையத்தில் வாக்குகளோ.... அல்லது.... இங்கிருந்தபடி விடுதலை போராளிக்கான நியாயங்களை கூட்டம் போட்டு பேசவோ மட்டும்தான் எங்களால் முடியும். சாவுகளால் ஓர் ஊர் பிரபலமாகிக்கொண்டிருக்கும் போது நாங்களும் திராணியற்று சுடச்சுடச் சேதிகளை எதிர்பார்த்துக்கொண்டு உயிரோடுதான் இருந்தோம்.

தர்மினியின் இந்தப் புத்தகம் 2010-ஆம் ஆண்டு, கருப்பு பிரதிகளால் பதிப்பிக்கப்பட்டது.