திங்கள், 1 மே, 2023

மலேசிய சோசியலிச கட்சி ; போராட்டத்தின் வரலாறு

PSM பதிவை தாமதப்படுத்திய உள்துறை அமைச்சகத்தின்
நடவடிக்கைகள் குறித்து 5 ஆகஸ்ட் 1999 அன்று
Biro Pengaduan Awam-இல் புகார் செய்யப்பட்டபோது.
 

சோசியலிசம் என்பது நாட்டின் வளம், மக்களின் நலனுக்காக இருக்க வேண்டும் என்பதாகும். அதை முதலாளித்துவ அமைப்பின் வழி கைப்பற்றி,  உழைக்கும் மக்களை உற்பத்திக்கு தேவைபடும் ஒரு கருவியாக மட்டுமே பயன்படுத்துவதிற்கு எதிரானது என்றும் கூறலாம்.

மலேசியாவில் சோசலிசம் என்ற பேச்சு எடுத்தாலே, பெருநிருவர்களின் எதிர்ப்பு அரசியலும், அதனுடன் தேசியவாதிகளின் எதிர்ப்பும் கிளம்பிவிடுகிறது. எந்த அளவுக்கு அதன் எதிர்ப்பு இருந்திருக்கிறது என்றால்,  கட்சியை பதிவு செய்யவிடாமல் 10 ஆண்டுகளுக்கு அலைக்கழிக்கும் அளவுக்கு. 1998-ஆம் ஆண்டு தொடங்கிய கட்சியின் பதிவு போராட்டம் 2008-ஆம் ஆண்டுதான் வெற்றிக்கண்டது என்றால் அதன் எதிர்ப்பு எந்த அளவுக்கு இருந்திருக்கும் என மக்களே கணித்துக்கொள்ளுங்கள்.

மலேசிய சோசியலிச கட்சி 1998-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி, அப்போதைய அரசாங்கமான  பாரிசான் அரசாங்கத்தின் கீழ் செயற்பட்ட அலுவலகத்தில் கட்சியின் பதிவுக்கான மனுவை அதிகாரப்பூர்வமாக சமர்ப்பித்தது.  விடிந்தால் தொழிலாளர் தினம். மறுநாள், ஆங்கிலப் பத்திரிக்கை  ஒன்றுசோசலிசக் கட்சிக்கு எதிர்காலம் இல்லை”  என்பதை போல் கேள்வி எழுப்பி செய்தி வெளியிட்டிருந்தது. எத்தனை எத்தனையோ மக்கள் போராட்டங்களை களம் கண்ட இந்த இடதுச்சாரி கட்சியினர் கட்சியின், தமது சொந்த கட்சிக்கான அதிகாரப்பூர்வ பதிவுக்காக போராட்டத்தை கையில் எடுக்கும் நிர்பந்ததிற்கு தள்ளப்பட்டனர்.  

ஒன்றல்ல இரண்டல்ல சுமார் 10 ஆண்டுகள், கட்சியின் பதிவுக்காக தொடர் போரட்டம் நடந்தவேண்டியிருந்தது. அதாவது இது தொடர்பான நீதிமன்ற வழக்கை எதிர்கொண்டதில் அவர்களுக்கு இந்த வெற்றி கிடைத்தது.  கட்சிப் பதிவின் அதிகாரப்பூர்வ சான்றிதழை ROS வழங்க, அப்போது கட்சியின் செயலாளராக இருந்த அருள்செல்வன் பெற்றுக்கொண்டார் என்பது வரலாறு.

இடைப்பட்டக் காலத்தில் (9 ஆண்டுகள்) கட்சிக்கு பதிவு  இல்லை என்றாலும், கட்சியை வளர்ச்சி நோக்கிய பாதையில் கொண்டு செல்வதிலும், மக்கள் சார்ந்த போராட்டங்களை எந்த தோய்வும் இல்லாமலும் பி.எஸ்.எம் முன்னெடுத்துகொண்டே இருந்தது. மக்களோடு மக்களாக போராட்டக் களத்தில் நிற்கும் மலேசிய சோசலிசக் கட்சியின் இடதுசாரி சித்தாங்கள், வலதுசாரி தேசியவாதிகளுக்கு எப்போதும் ஒவ்வாத ஒன்றாகவே இருந்து வந்திருக்கிறது. இன்னுமும் அது தொடர்கிறது. அதற்கு சாட்சியாக கூறப்படும் சம்பவம்தான் கட்சியின் பதிவு சம்பந்தப்பட்ட விவகாரமாகும்.

அப்படி என்ன விவகாரம்? 

நாட்டின் அரசியல் அமைப்பும்,  நீதித்துறையும்,  பிஎஸ்எம் கட்சியின் பதிவு மறுப்புக்கான வேலையை ஆரம்பத்திலிருந்தே செய்த வண்ணம் இருந்தது. பொதுவாக ஒரு கட்சியையையோ அல்லது அமைப்பையோ பதிவு செய்யும்போது,  பதிவுக்கான முடிவினை பதிவு இலாகாதான் மேற்கொள்ள வேண்டும். பி.எஸ்.எம் பதிவு தொடர்பான விவகாரத்தைப் பொறுத்தவரை இந்த விவகாரத்தில் பாரிசான் அரசாங்கம் நேரடியாக  தலையிட்டு, கட்சி அமைக்கும் சுதந்திரத்திற்கு  முட்டுக்கட்டையாக இருந்தது. ஆனால், அதற்கு ஆதரவான அதாவது பாரிசான் நேஷனல் கட்சிக்கு ஆதவாக செயற்படும் கட்சிகளுக்கு விரைவிலேயே பதிவு கிடைத்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

கட்சியின் பதிவு மறுக்கப்பட்ட சிறிது நாட்களில் அரசாங்கத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது பிஎஸ்எம். ஆனாலும் அதற்கு சாதகமான முடிவு அப்போது கிடைக்கவில்லை. திரும்பவும் இந்த வழக்கு மேல் முறையீட்டு நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இறுதியில் 2008-ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் தேதி கூட்டரசு நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. ஆனால் அன்று காலையில் உள்துறை அமைச்சர் சைட் அமிட் அல்பாரிடமிருந்து  ஒரு கடிதம் வந்தது. அதில் “மலேசியா சோசலிச கட்சியின்  பதிவுக்கு தடை இல்லை”  கூறப்பட்டிருந்தது.  அதனால் அன்று நடக்கவிருந்த வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இதற்கிடையில் உள்துறை அமைச்சு சட்டத்திட்டத்திற்கு உட்பட்டு வழக்கு தொடுத்த 10 ஆண்டுகளில், பலதடவை கட்சியின் பதிவுக்கான புதிய  விண்ணப்பத்தை பி.எஸ்.எம் செய்துகொண்டே இருந்தது. அதேபோல 25 ஜூன் 2008-ஆம் தேதியும் உள்துறைஅமைச்சின் அலோசனைக்கு இணங்க பி.எஸ்.எம்-இன் புதிய விண்ணப்பத்தை டாக்டர் நசீர் தமது கட்சியின் ஆதரவாளர்களோடு ஷா ஆலாம் மாநகரமன்றத்தில் சமர்ப்பித்தார்.

இவ்விடத்தில் மற்றுமொரு முக்கியத்தகவலை பதிவு செய்திட வேண்டும். பி.எஸ்.எம் கட்சியின் பதிவு செய்யும்  இந்த 10 ஆண்டுகால சட்டவிவகாரத்தில் அக்கட்சியை பிரதிநிதித்து வழக்கறிஞர்கள் Teng Cheng Khim, Tommy Thomas, Ragu Kesavan ஆகியோர் வாதாடினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இரண்டு மாதங்கள் கழித்து செப்டம்பர் மாதத்தில் ஒருநாள், புத்ராஜெயா ஆர்.ஓ.எஸ் அலுவலகத்திலிருந்து தொலைப்பேசி அழைப்பு வந்தது. அப்போது கட்சியின் தேசிய பொதுச்செயலாளராக இருந்த தோழர் அருள்செல்வன் அந்த அழைப்பை எடுத்தார். “நீங்கள் விண்ணப்பம் செய்திருந்த கட்சியின் விண்ணப்ப பாரம் அங்கீகரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. வந்து பெற்றுகொள்கிறீர்களா? அல்லது தபாலில் அனுப்ப வேண்டுமா?” என்று தொலைபேசியில் பேசியவர் கேட்டார். “என்னால் அதை நம்பவே முடியவில்லை. நானே நேரில் வருகிறேன் என்று கூறி தொடர்பை துண்டித்தேன்” என கட்சியின் பதிவு பாரம் பெறப்பட்ட அந்த நாளை தோழர் அருள்செல்வன்,  Mengapa 10 Tahun untuk daftar PSM என்ற புத்தகத்தில் இவ்வாறு பதிவு செய்திருக்கிறார்.

“அந்தப் பதிவு பாரத்தை கண்ணால் கண்டு உறுதி படுத்தும்வரை அத்தகவலை யாருக்கும் நான் சொல்லவில்லை. அதோடு தபால் மூலமாக பாரம் வந்தடையுமா என்று எனக்கு அச்சமாகவும் இருந்தது. 10 ஆண்டுகளாக போராடிய ஒரு விஷயம் தற்போது, வெற்றியடைந்து கைக்கும் வரப்போகிறது, என் சூழலே இனம்புரியாத பதட்டமாக மாறியிருந்தது. நான் புத்ராஜெயா சென்றேன். அதிகாரி ஒருவர் வெள்ளை நிறம்கொண்ட கடித உறை ஒன்றை என்னிடம் வழங்கினார். 

நான் அதை பிரித்துப் பார்த்தபோது 19 ஆகஸ்ட் 2008 மலேசிய சோசலிசக் கட்சி அதிகாரப்பூர்வ பதிவு கண்டது என்ற பதிவு எண்ணோடு உறுதிசெய்யப்பட்ட பாரம் இருந்தது. நான் அந்த பாரத்தை கடைக்கு கொண்டு சென்று நகல் எடுத்துக்கொண்டேன். அதே கடையில் விற்பனைக்கு இருந்த புகைப்பட சட்டகத்தை வாங்கினேன். அது சிவப்பு நிறம் கொண்ட சட்டகமாகும். பதிவு பாரத்தை சட்டகம் செய்து அதை ஒரு தாளில் பரிசு பொருளை மடிப்பது போல மடித்தேன். பின் அதன் மேல் பி.எஸ்.எம் சின்னத்தை ஒட்டினேன். இன்னும் பதிவு கிடைத்துவிட்ட விஷயத்தை நான் ரகசியமாகவே வைத்திருந்தேன். என் சகாக்களுக்கு நான் இன்ப அதிர்ச்சியளிக்க நினைத்தேன்.

மூன்று மாதத்திற்கு ஒரு முறை பி.எஸ்.எம் அதன் செயற்குழு மற்றும் மாநில செயற்குழுவோடு, தேசிய குழு கூட்டத்தை (national committee meeting) நடத்தும். செப்டம்பர் மாதம் நடந்த அந்தக் கூட்டத்தில் சுமார் 43 தோழர்கள் கலந்துக்கொண்டனர். நான் கையோடு கொண்டுச் சென்றிருந்த பரிசை அப்போது கட்சியின் தலைவராக இருந்த டாக்டர் நசீரும், துணைத் தலைவராக இருந்த தோழர் சரஸ் ஆகியோரின் கையில் கொடுத்தேன். அவர்கள் இருவரும் அதைப் பிரித்தனர். டாக்டர் நசீர் “Did we get registered” என்று முதல் வார்த்தையை உதிர்த்தார். தோழர் அனைவரும் உணர்ச்சி பெருக்கெடுத்து HIDUP PSM! HIDUP PSM! என்று முழங்கினர்” என்று தோழர் அருள் அந்தப் புத்தகத்தில் மேலும் விவரித்திருக்கிறார்.  

உள்துறை அமைச்சர் கொடுத்த வாக்குறுதிக்கு ஒப்பாக அன்றைய தினம் மலேசிய சோசலிச கட்சிக்கு கிடைத்த பதிவு தொடர்பான அங்கீகாரமானது உழைக்கும் வர்க்கத்திற்கு கிடைத்த வெற்றியாகவே கொண்டாடப்பட்டு வருகிறது.  

கட்சியின் பதிவுக்கு முன் நடந்த  பொது தேர்தல்களில் எதிர்க்கட்சிகளின் சின்னத்தில் போட்டியிட்ட சோசலிச வேட்பாளர்கள், அதன் பிறகு  தனது சொந்த சின்னமான இடது கை சின்னத்திலேயே போட்டியிட்டு வருகின்றனர்  என்பது குறிப்பிடத்தக்கது.

தவிர மலேசிய சோசலிசக் கட்சியின் இந்த 25 ஆண்டுகாலப் பயணத்தில் ஏழை மக்களுக்கும், விவசாயிகளுக்கும், தோட்டப் புற மக்களுக்கும், நகர முன்னோடிகளுக்கும்  நிறைய திட்டங்களையும், ஆலோசனைகளையும் போராட்டங்களையும் முன்னெடுத்துள்ளது. நாட்டில் குறைந்தபட்ச சம்பளம் அமல்படுத்த அரசுக்கு நெருக்கடி கொடுத்ததிலிருந்து, தனியார் மயமாகவிருந்த அரசாங்க மருந்தகச் சேவையை போராடி தடுத்ததுவரை முதலாளித்துவத்திற்கு எதிரான பல போராட்டங்களை பி.எஸ்.எம் இன்றுவரை களம் கண்டு வருகிறது. 

தவிர ஒவ்வொரு ஆண்டும் தொழிலாளர்தின போரணியையும் பல சவால்களுக்கிடையில் பி.எஸ்.எம் நடத்திவருவது இங்கு குறிப்பிடதக்கது. இந்த ஆண்டு தனது 25-வது வெள்ளி விழாவைக் கொண்டாடும் பி.எஸ்.எம் கட்சி, அதன் இலக்கை அடைய வேண்டும் என நாமும் வாழ்த்துவோம்.

 வாழ்க பாட்டாளி; வளர்க வர்க போராட்டம்.

நன்றி: மலேசியாகினி 30/4/2023

பெண்கள் மீதான அடக்குமுறைகள் பேசப்பட வேண்டும்-குழலி

மலேசிய பெண் கவிஞர்களில் பூங்குழலி வீரன் தவிர்க்கமுடியாத ஆளுமையாக இருக்கிறார். பல முக்கியக் கவிதைகளை நமக்கு கொடுத்திருக்கும் இவர் இதுவரை 4 கவிதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். 10-ஆண்டுக்கும் மேலாக மின்னல் எஃ.எம்-மில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் தற்போது புத்ராஜெயாவின் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக  அமைச்சின் கீழ் சிறப்பு அதிகாரியாக பணிபுரிகிறார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட நேர்காணல். நேர்கண்டவர் யோகி.

 

1. கவிதைக்குள் நீங்கள் வந்த தருணம் எப்படி நிகழ்ந்தது?

பெரிய திட்டமிடல்களுக்குப் பிறகெல்லாம் எனது இலக்கிய ஆர்வம்  அமையவில்லை. வாசிக்கத் தூண்டிய அப்பா கண்டிப்பாக வாசித்தே ஆக வேண்டும் என்பதையும் வழக்கமாக்கினார். எனக்கு சிறுவயதில் இருந்தே வாசிப்பதில் மிகவும் ஆர்வமிருந்தது. அதுவே, எழுதுவதற்கான முதல் புள்ளியை இட்டது எனலாம். தொடக்கப்பள்ளி படிக்கும் காலம் தொட்டே நிறைய கவிதைகள்; அதாவது கவிதைகள் மாதிரி எழுதியிருக்கின்றேன். ஆனால், இப்போது அவை எதையுமே கவிதைகள் என்று சொல்ல முடியாது என தோன்றுகிறது. நாளிதழ்கள், வார மாத இதழ்களில் அவை தொடர்ந்து வெளிவந்தன. ஓர் ஆர்வத்தின் அடிப்படையில், சிக்கலுக்கு வெளியே நின்று கொண்டு அறிவுரைக் கூறும் தொனியிலான பிரச்சார கவிதைகள் அவை. கலைத்தன்மையற்ற மிக முக்கியமாக அகவயப்பட்ட அல்லது தன்வயப்பட்ட கவிதைகளாக அல்லாமல் ஒரு மூன்றாவது மனநிலையில் நின்று நான் எழுதியவையாக இன்று அக்கவிதைகள் எனக்கு தெரிகிறது. சமூகம் - சமூகப் போராட்டம் - இனம் - மொழி - சுரண்டல் - ஈழ விடுதலைப் போராட்டம் - பெண் விடுதலை என அப்போதிருந்த வாழ்வு தந்திருந்த உள்ளடக்கமே அன்று நான் எழுதிய கவிதைகளின் கருவாகவும் இருந்தது. ஆனாலும், அந்த தொடக்கம் குறித்த ஒரு மகிழ்ச்சி இன்றளவும் இருக்கிறது. ஒரு படைப்பாளனுக்கு அந்த மகிழ்ச்சி மிக முக்கியமானது. அதோடு, கவிதைகள் குறித்த புரிதலும் மிகத் தெளிவாக இல்லாத ஒரு காலக்கட்டம் அது. பின், என் தாய்மண்ணை விட்டு தலைநகருக்கு வந்தது; புதிய நண்பர்களையும் வாழ்வு குறித்த புதியதொரு புரிதலையும், முற்றிலும் புதியதொரு வாசிப்பனுபவத்தையும் தந்தது. ம.நவீன், பா.அ. சிவம், மலாயாப் பல்கலைக்கழக தமிழ் நூலகம்; காலச்சுவடு, கணையாழி, உயிர்மை இதழ்களை வாசிக்க தொடங்கிய வாசிப்பனுபவம் கவிதைக்கான புதிய தருணங்கள் எனக்குள்ளும் நிகழ சரியான காரணங்கள் ஆயின.

 

2.ஒரு வாசகனாக உங்களுக்குப் பிடித்தமான கவிதைகள் எப்படி இருக்க வேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள்?

எழுதுபவருக்கே உரிய அசலான ஒரு மொழியில்; அவருக்கான சொற்களில் கவிதைகள் இருக்க வேண்டும். அவ்வாறான கவிதைகள் எனக்கு உவப்பானவை; அவையே மனதுக்கு நெருக்கமானவையாகவும் இருக்கின்றன. சில நேரங்களில், ஏன் இவர் இந்த கவிதையை எழுதினார், எச்சம்பவம் இவரை இதை எழுத தூண்டியிருக்கும் என்றெல்லாம் சில நாள்கள் வரை கூட யோசித்திருக்கிறேன். அதற்காகவே, அந்த கவிஞர் குறித்த தேடலையும் தொடங்குவேன். அவ்வாறான ஒருவர்தான் கவிஞர் கலாப்ரியா. அன்று தொடங்கி இன்று வரை அவரின் கவிதைகள் எனக்கு மிகப் பிடித்தவை. அவரின் பல கவிதைகளை வாசித்த முதல் அனுபவமும் அது நிகழ்த்திப் போன உணர்வுகளும் இன்னும் எனக்குள் பசுமையாக இருக்கிறது. வாழ்வின் சிறு சிறு தருணங்களை இவ்வளவு நுணுக்கமான பார்வையில் அணுக முடியுமா என வியக்க வைப்பவர்.

வாசிக்கத் தொடங்கிய காலம்தொட்டு கண்டு, பார்த்த, கேட்ட களித்த விடயங்கள் சொல்வதற்கு ஒவ்வொரு படைப்பாளிக்கும் ஒரு மொழி இருக்கும். அதுவே, தனித்துவமானதும் கூட.

3. நீங்கள் எழுதிய கவிதைகளில் உங்களின் மனத்திற்கு நெருக்கமானதாக எதைச் சொல்வீர்கள்?

நிறைய கவிதைகள்  அவ்வாறு இருக்கின்றன. குழந்தைகள் குறித்தும், அப்பா - என் வீடு குறித்தும் எழுதிய கவிதைகள் அந்த நெருக்கத்தைத் தொடர்ந்து உணர்த்துகின்றன.  எனது அண்மைய தொகுப்பான அகப்பறவையில் இருந்து இந்த இரு கவிதைகள்.

கூடென்பது எதற்கு என்றேன்

உண்டு உயிர்க்க பாதுகாக்க

பிறகு வாழ்வது எங்கே என்றேன்

வேட்டையாடுதலை நிகழ்த்திக் கொண்டிருந்தவன்

திரும்பிப் பார்த்தான்

வேட்டைக்குத் தப்பிய மான்

தன் வீடு திரும்பிக் கொண்டிருந்தது

நீண்ட நேரம் வெளியில் இருந்து பணியாற்றுபவர்களுக்கு வீடு திரும்புதல் என்பது சொற்களைக் கடந்த ஒரு பேறு; நானும் அவ்வாறான ஒரு சூழலில் வாழ்ந்தபோது எழுதிய கவிதை இது. இங்கு வேட்டையாடுதல் என்பது நமது பணிச் சார்ந்த சூழல். அங்கே வாழ்தலுக்கு இடமே இல்லை. அட்டவணை வாழ்க்கையின் உச்சகட்ட அவலம் என்றுதான் அந்த வாழ்க்கையை வகைப்படுத்த வேண்டும்.

இரவு பேசிக்கொண்டிருக்கிறது

இரவின் மொழியை

இரவுக்காக விழித்திருப்பவர்கள்

யாரேனும் மொழிப் பெயர்த்துக் கொள்ளலாம்

பாகுபாட்டின்றி எல்லோரோடும்

பேசிக் கொண்டிருக்கிறது

இரவு மட்டும்…

அதிகம் களைத்து வீடு திரும்புகிற பொழுது உடனே தூங்கிப் போகிற சூழல் பெரும்பாலும் வாய்க்காது. அப்போதெல்லாம் வீட்டின் பால்கனியில் நின்று கொண்டு இரவைப் பார்ப்பது எனக்குப் பிடித்தமானது. இரவுக்கென்றிருக்கும் மொழியை உணர்ந்த தருணங்கள் அவை.

4.மலேசியத் தமிழ் கவிதை சூழல் பற்றி உங்கள் புரிதலைப் பகிருங்கள்?

எல்லாம் மிகச் சரியான தடத்தில் சென்று கொண்டிருக்கிறது என்று கூற முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? ஆனால் நெருக்கடிகளின் பெரும் பட்டியல் அல்லவா நம்மிடம் இருக்கிறது.

தற்கால தமிழ்க்கவிதை சூழலை நன்குணர்ந்துள்ள ஒரு சாராரும் அவ்வாறு உணரவே மாட்டேன் என அடம்பிடிக்கும் ஒரு சாராரும் இயங்கும் கவிதை வெளி நமக்கானது. தொடக்கத்தையே உச்சம் என கொண்டாடுவதும் அந்த கொண்டாட்டத்தை நம்பி அதையே தொடர்ச்சியாக்கி கொள்ளும் ஆபத்துமே இங்கு அதிகம் காணக்கூடியதாக இருக்கிறது. கலை இலக்கியத்தில் தீவிரமாக இயங்குபவர்கள் அவ்வாறான படைப்புகள் குறித்து ஏதேனும் விமர்சனங்கள் வைத்து விட்டால் அவர்களை வசைபாடுகின்ற பட்டியல் மட்டும் நீள்கிறது. மற்றபடி, அவர்கள் முன்வைத்த படைப்பின் போதாமையை மேம்படுத்துகின்ற உழைப்பு என்பது மட்டும் இல்லை என்பதே வருத்தமளிக்கும் விடயம். இந்தப் போக்கு மிக ஆபத்தானது. இதனால் ஒரு தீவிர கலைப் படைப்பு சமூகம் உருவாகவே முடியாது. இவ்விரு சாராருக்கும் இடையே ஓர் காத்திரமான உரையாடலைத் தொடங்குவதற்கான முன்னெடுப்பு மிக அவசியம்.

5. அகம் மற்றும் புறம் சார்ந்து பிரயோகிக்கப்படும் பெண்களின் மீதான பாலியல் வன்முறைகள்... இலக்கியப் படைப்புகளில் இப்பிரச்னைகள் எவ்வாறு பேசப்படுகின்றன? நீங்கள் அதை எவ்வாறு காண்கிறீர்கள்?

எனக்கு ஆப்பிரிக்க கவிதைகளின் மேல் மிகுந்து ஈடுபாடு உள்ளது. அகம் மற்றும் புறம் சார்ந்து ஏவப்படும் பெண்களின் மீதான பாலியல் வன்முறைகள்; கொடுமைகள்; வசைகள்; வலிகள் என படைப்புகளில் மிக நேர்த்தியாக, உண்மையாக அவை காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். தமிழ்க்கவிதைகளிலும் அவ்வாறான சூழல் காணக்கிடைக்கிறது. ஆனால் பண்பாட்டிற்கு ஒவ்வாதது என அவை புறந்தள்ளப்படுகின்ற அவலம் இங்கு இன்றும் தொடர்கிறது. வாழ்வைப் பேசுவதுதான் படைப்பு. எல்லா பிரச்சனைகளும் பேசப்பட வேண்டும். பேசப்படுவதன் மூலமே கலகம் பிறக்கும். கலகம் பிறந்தால்தான் பலரின் கண்களும் திறக்கும். எனவே, பெண்கள் மீதான எல்லாவித அடக்குமுறைகளும் எல்லா வகையாக இலக்கிய வெளியிலும் மீண்டும்  மீண்டும் பேசப்பட வேண்டும்.

 

6. ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் எழுதுகிறீர்கள்? இந்த இடைவெளி உங்களுக்குள் ஏற்படுத்திய மாற்றம் என்ன? உங்கள் எழுத்துக்கு இந்த இடைவெளி துணை புரிந்திருக்கிறதா?

 

மிக நீண்ட மௌனம்; முற்றிலும் வாழ்வின் வேறொரு தளத்தில் வாழ்ந்து மீண்டது போன்ற உணர்வு. என்னைப் பொறுத்தவரையில்  படைப்புகள் தொடர்பான ஓர் இடைவெளி ஏற்படுவது இயல்பானதும் தேவையானதும் கூட என நான் நம்புகிறேன்.  மேலும், இந்தக்கால கட்டங்களில் எனது வாசிப்பு மனநிலை படிப்படியாகக் குறைந்து இல்லாமலே போய்விட்டது. அது  மீண்டும் எழுதுவதில் பெரும் தடையை ஏற்படுத்தியிருந்தது.  வீடு முழுக்க நிறைந்திருந்த புத்தகங்கள் ஒரு பேயைப்போல எப்போதும் பயமுறுத்தியபடியே இருக்கும்.  இப்போது வழக்க மனநிலைக்கு திரும்பி மீண்டும் வாசிக்கவும் எழுதவும் தொடங்கியிருக்கிறேன்.


7. 2010-ஆம் ஆண்டுக்கு பிறகு எழுத வந்த பெண்களில் பலர் இன்று எழுதுவதிலிருந்து காணாமல் போய்விட்டார்கள். இந்த பின்னடைவு குறித்து உங்கள் பார்வை என்ன?

ஒரு படைப்பாளி எப்படி சுதந்திரமாக எழுத்தத் தொடங்குகிறானோ அதேபோல் அவன் எழுதாமல் விடுவதற்கும் அவனுக்குப் பூரண சுதந்திரம் உண்டு என  நான் நம்புகிறேன். அவர்களிடம் படைப்பு என்பது நிகழாமல் போயிருக்கலாம்; அதை அவர்கள் உணர்ந்துவிட்ட புள்ளியில் அதிலிருந்து அவர்கள் விலகியிருக்கலாம் ; ஒரு தீவிர வாசிப்பாளராக மாறியிருக்கலாம். இதை பின்னடைவு என்று சொல்லமுடியாது என்று நான் நினைக்கிறேன். எல்லா நேரத்திலும் இத்தனை பேர் எழுதியாக வேண்டும் என்று ஏதாவது விதியிருக்கிறதா என்ன?

 நன்றி தமிழ்மலர் நாளிதழ் 30/4/2023