திங்கள், 26 ஏப்ரல், 2021

வீடு என்பது வியாபார பண்டமா அல்லது அடிப்படை உரிமையா?

சஞ்சிக்கூலிகளாக  அப்போது மலாயா என்று அடையாளைப்படுத்தப்பட்ட மலேசியாவுக்கு  அழைத்துவரப்பட்ட தமிழர்களின் வரலாறு இருநூறு ஆண்டுகளுக்கும்  மேலாக ஆகிவிட்ட நிலையில் இன்னும்  தனக்கென ஒரு சொந்த வீட்டை வாங்க முடியாத ஏழைகளின் பட்டியல் அதிகம்.

 அதற்கு பல்வேறு காரணங்களை பட்டியலிட முடியும். பொதுவாகச் சொன்னால், தோட்டத்தில் கூலி வேலை செய்தவர்களுக்கு அவர்கள் தோட்டத்தில் வேலை செய்யும் காலம் காலம் வரைக்கும் தோட்ட வீட்டில் தங்கிக்கொள்ள முடியும். அவர்கள் ஓய்வு பெறும் காலத்தில் வாரிசு யாரும் தோட்டத்தில் வேலை செய்தால் அந்த வீட்டில் அவர்கள் தொடர்ந்து தங்குவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அப்படி யாரும் தொடர்ந்து தோட்டத்தில் வேலை செய்ய முடியாத வேலையில் அவர்கள் நிச்சயமாக தோட்டத்தை விட்டு வெளியேறியே ஆக வேண்டும்.  தோட்டத்து ஊதியத்தை சேமித்து சொந்த வீடு வாங்குவதெல்லாம் முடவன் கொம்பு தேனுக்கு ஆசைப்பட்டக் கதைதான்.

 ஓய்வு ஊதியப்பணம், சேமநிதிப்பணம் இவைகளைக் கொண்டு சொந்த வீடு வாங்குவதற்கு ஒரு சிலர் முயற்சி செய்வர். குழந்தைகள் மேற்கல்வி, பிள்ளைகளுக்கு  திருமணச் செலவு, மருத்துவ செலவு என்று அந்தப் பணத்திற்கு வேறு பல கூடுதல் பொறுப்புகள் இருக்கும்.  பலரின் சொந்த வீட்டுக் கனவு கனவாகவே போய்விட்ட கதைகள் மலேசியாவில் ஏராளம் ஏராளம்.  

இந்த மாதிரியான சூழலிலும் 1990-களிலும் அதற்கு முந்திய ஆண்டுகளிலும்  மலேசிய அரசு  ஏற்படுத்தியிருந்த  மலிவு விலை வீடு வாங்கும் திட்டத்தில் சிலர் வீடுகளை வாங்கினர்.  FELDA போன்ற வீடமைப்பு  திட்டத்தில் சிலர் நிலமும் வீடும் சேர்ந்து வாங்குவதற்கு முதலீடு செய்தனர்.   சொந்த வீட்டை வாங்கும் கனவின் முதல் படியை எடுத்து வைப்பது என்பது மலேசிய தமிழர்களுக்கு  சுலபமான விஷயமல்ல. முன்பணம் கட்டுவதற்கு நகைகளை அடகுவைப்பது-விற்பது, கடனை வாங்குவது, பிள்ளைகளின் மேற்படிப்பை காவு கொடுத்து வேலைக்கு அனுப்புவது உள்ளிட்ட எல்லா சோகங்களும் நடக்கும்.

இப்படி வாங்கப்படும் வீடு சில அல்லது பல ஆண்டுகள் கழித்து  உரிமையாளருக்கு இல்லை என்று ஆனால், அந்த ஏழையின் மனநிலை எப்படி இருக்கும்? அந்த மனநிலையை பணம் படைத்தவர்களாலும், வங்கி முதலைகளாலும் புரிந்துக்கொள்ள முடியுமா?  பணம் இல்லாத  அவர்களால் ஒரு வழக்கறிஞரை நியமித்து வழக்காடதான் முடியுமா?  இந்நிலையில்தான் சில ஏழைகள் தாம் வாக்களித்த அரசியல்வாதிகளை நாடி போவார்கள். எல்லா அரசியல்வாதியும் ஏழையின் கூட்டாளி இல்லையே.  அதிகமானவர்கள் காப்ரெட் கைக்கூலிகளாகத்தானே இருக்கிறார்கள்?  விளம்பரத்திற்காக சில அரசியல்வாதிகள் இந்த பாட்டாளி மக்களை பயன்படுத்திக்கொள்ளும் கதையெல்லாம் மலேசியாவில் எக்க சக்கம் நடந்திருக்கிறது.  அதைப்பற்றி பேசுவதாக இருந்தால் ஒரு புத்தகத்தையே எழுதலாம்.

 

ஏப்ரல் மாதத்தில் மட்டும்  வெவ்வேறு வீட்டுப் பிரச்னைகள் மலேசிய மக்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. அதில் இரண்டு பிரச்னைகள் தனியார் வங்கி சம்பந்தப்பட்டதுதாகும். இந்நிலையில் ஏப்ரல் மாதத்தில் மட்டும் இந்திய மக்கள் எதிர்கொண்ட சில வீட்டு பிரச்னைகளை இங்கு பார்க்கலாம்.  


சம்பவம் 1 (7/4/2021)

2001-ஆம் ஆண்டில் லட்சுமி என்பவர்  ஒரு வீட்டை வாங்கினார்.  தனியார் வங்கியில் வீட்டுக்காக பெற்ற வங்கிக் கடனை மாதந்தோறும் RM268-ஆக, 20 ஆண்டுகளில் RM31,500  ஆட்டோ டெபிட் மூலம் செலுத்தியிருக்கிறார்.  நிலுவைத் தொகை எதுவும் அவர் வைக்கவில்லை.  இந்நிலையில் வீட்டு உரிமையாளருக்கு தெரியாமல்  வங்கிக்கடனை செலுத்தும் தொகையை உயர்த்தியிருக்கிறது சம்பந்தப்பட்ட தனியார் வங்கி.   வீட்டு உரிமையாளர்களுக்கு இவ்விவரம் தெரிய வரும்போது  நிலுவைத்தொகை RM 975 ரிங்கிட் ஆகியிருந்தது. இது கட்டவே முடியாத ஒரு பெரிய தொகை என்று சொல்லிவிட முடியாது.  ஆனால், வெறும் RM 975 நிலுவை தொகைக்காக அந்த தனியார் வங்கி கொஞ்சம்கூட மனசாட்சியே இல்லாமல் அந்த வீட்டை ஏலம் விட்டது.  அந்த வீட்டிற்கு உரிமை கொண்டாடிக்கொண்டு புது உரிமையாளர் வரும்வரை, தனது வீடு ஏலம் போனது  அசல் உரிமையாளர்களுக்கு  தெரியாது. இன்னும் மூன்றே ஆண்டுகளில் அந்த வீட்டின் கடன் முடியப்போகும் நிலையில் வீடே இல்லை என்று சொல்வது மிகப் பெரிய மோசடி, என் பரம்பரையின் ஒரே சொத்தை மீட்டுக் கொடுங்கள் என தனியார் வங்கிக்கு எதிராக தேசிய வங்கியிடம் முறையிட்டு கதறி நிற்கிறார் லட்சுமி.

 


சம்பவம் 2 (8/4/2021)

 புக்கிட் பெருந்தோங்  எனும் தோட்டத்தில் ரப்பர் செம்பனை தோட்ட தொழிலாளர்களாக சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்தனர். அந்தத்  தோட்டத்தை மேம்பாடு செய்வதற்கு மேம்பாட்டு நிறுவனம் ஒன்று வாங்கியது. அப்போது மேம்பாட்டு நிறுவனத்துடன் தேசிய தொழிலாளர் சங்கம் நடத்திய பேச்சுவார்த்தையில் 54 தோட்டப்பாட்டாளிகளுக்கு  25,000 வெள்ளி மதிப்புள்ள தரைவீடுகளை கட்டிகொடுக்கும் ஒப்பந்தத்தில் மேம்பாட்டு நிறுவனத்துடன் தோட்டப்பாட்டாளிகள் ஒப்பந்தம் செய்தனர். இது நடந்தது 1999-ஆம் ஆண்டு ஆகும்சொந்த வீடுகளை வாங்கும் மகிழ்ச்சியில் தோட்டப்பாட்டாளிகளும் தனியார் வங்கியில் கடன் பெற்று பணத்தை செலுத்தியுள்ளனர். ஆனால், 20 ஆண்டுகள் ஆகியும் இன்னும் அந்த 54 தோட்டப்பாட்டாளிகளுக்கு வீடுகள் உறுதியிள்ளாமல் இருக்கிறது. பலர் வங்கியில் பெற்ற கடனைக்கூட கட்டி முடித்துவிட்டனர்தரைவீடுகள் கட்டிக்கொடுப்பதாக  கூறிய மேம்பாட்டு நிறுவனம் இவர்களுக்கு மாபெறும் துரோகத்தை இழைத்துவிட்டு இன்னும் அந்த தோட்டத்திலேயே, தொழிலாளர்கள் வீட்டுமனைமீது செம்பனை நடவு செய்து  லாபம் ஈட்டிக்கொண்டிருக்கிறது. இது தொடர்பாக மாநில அரசுக்கும், நில அலுவலகத்திற்கும் பல ஆண்டுகளாக புகார் அளித்து நடையாக நடந்துக்கொண்டிருக்கிறார்கள்  அந்த மூத்த பாட்டாளி மக்கள்.



சம்பவம் 3

குப்பம்மா என்பவர்  1982-ஆம் ஆண்டு நிலம் வாங்கி, தரைவீடு கட்டிக்கொண்டு 1983-ஆம் ஆண்டிலிருந்து வாழ்ந்து வருகிறார். முதுமைக் காரணமாக அந்த வீட்டை தன் மகனுக்கு பெயர் மாற்றியிருக்கிறார். மகன் வங்கியில் கொஞ்சம் கடன் பெற்று வீட்டை புணரமைத்திருக்கிறார். இதற்கிடையில் மகன் கடந்த ஆகஸ்ட் மாதம் 2020ல் மரணமடைத்துவிட்டார். அவருக்கு மூன்று குழந்தைகள். மருமகள் சிங்கப்பூரில் கூலி வேலை செய்து இவர்கள் நான்கு பேருக்கும் பணம் அனுப்பிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் கோவிட்  பெறுந்தொன்று பொன்ற பல்வேறு காரணங்களாலும்மகனின் இறப்புக்கு பிறகு வங்கியிலிருந்து அதிகாரப்பூர்வ கடிதத்திற்காக காத்திருந்ததாலும் மாத தவணையை சரியாக  கட்டமுடியாமல் போனது. இதற்கு வங்கி செய்த உபகாரம் என்னவென்றால் வீட்டை அடுத்த வாரம் ஏலத்தில் விடுவதற்கு நோட்டிஸ் அனுப்பியது. குப்பம்மா குடும்பத்தினர் வங்கியில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அனுமதி கேட்டும், மாதம் 500 ரிங்கிட் வீதம் செலுத்தி கடனை சமன் செய்வதாக கூறியும் வங்கி அதை மறுத்ததுஇனி பேசுவதால் எந்த பலனும் இல்லை என்று புரிந்தக்கொண்ட அந்த 73 வயது பாட்டி தனது பேரக்குழந்தைகளோடு தலைநகரில் இருக்கும் தனியார் வங்கியின் தலைமையகத்தின் வாசலில் மகஜரைப் பிடித்து ஞாயம் கேட்டார்சுமார் மூன்று மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு வீடு ஏலம் விடப்படாது என்ற உத்தராவதத்தை அந்த தனியார் வங்கி அளித்ததப் பிறகு அந்தப் பாட்டி தன் பேரக்குழந்தைகளோடு   தன் கிராமத்திற்கு புறப்பட்டார்.



சம்பவம் 4 (15/4/2021)

2016-ஆம் ஆண்டு, சுங்கை சிப்பூட்டில் 200 குடும்பங்களைச் சேர்ந்த பி40 மக்கள் வீட்டுவசதி திட்டத்தை செயல்படுத்துவதற்கான விண்ணப்பங்களை பேராக் வீட்டுவசதி மற்றும் சொத்து வாரியத்திடம்  (LPHP) சமர்ப்பித்தனர். இருப்பினும், இன்று வரை, அந்த குடியிருப்பாளர்களுக்கு எந்தவொரு வீட்டுத் திட்டத்தையும் செயல்படுத்த பேராக் மாநில அரசு முடிவு செய்யவில்லை. வீடு கட்டுவதற்கு அங்கு பொருத்தமான அரசு நிலம் இல்லை என்று கோல கங்சர் மாவட்டமும் நில அலுவலகமும் கூறுகிறது. 

இது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது, ஏனெனில் சுங்கை சிபுட் பகுதியில் பத்து 1, ஜலான் லிண்டாங் போன்ற இடங்களில் டஜன் கணக்கான ஏக்கர் அரசு நிலங்கள் உள்ளன. இந்த நிலத்தின் ஒரு பகுதி 33 முன்னாள் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் Dovenby தோட்டத்தில் வசிப்பவர்களுக்கு வீட்டுத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பிபிஆர் திட்டத்திற்கு பயன்படுத்தக்கூடிய அரசு நிலங்கள் மிச்சம் இன்னும் உள்ளன, என்று முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயகுமார் கூறியிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. தங்களுக்கான மலிவு வீடு தொடர்பான கடிதத்தை ஏப்ரல் 15-ஆம் தேதி, பேராக் மாநில அரசிடம் சமர்பித்து காத்திருக்கின்றனர் ஏழை மக்கள். 

 

சம்பவம் 5 (23/4/2021)

நெகிரி செம்பிலான், கிர்பி தோட்ட குடியிருப்பாளர்கள் நெகிரி செம்பிலான் அலுவலகத்தின் முன்பு அமைதியான ஆர்ப்பாட்டத்தை நடத்தி, வீடு தொடர்பான  தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.  முன்னாள் கிர்பி தோட்டத் தொழிலாளர்களான 20 குடும்பங்களைச் சேர்தவர்களுக்கு சொந்த வீடு தொடர்பான எந்த ஒரு உத்தரவாதத்தையும் தராமல், அவர்களை வெளியேற்றி தற்காலிகமாக தங்குவதற்கு இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தோட்ட குடியிருப்பாளர்களின் எந்தவொரு ஆலோசனையும் அனுமதியும் பெறாமலே இந்த தற்காலிக குடியிருப்புகளுக்கு செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு அம்மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். மாநில அரசின் இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்க மக்கள் ஒன்று கூடினர். முன்னதாக அவர்கள் கடந்த டிசம்பர் 10 மற்றும் ஜனவரி 20-ஆம் தேதி 2021 ஆகிய தேதிகளில் நெகிரி செம்பிலான்  மந்திரி பெசாருக்கு கடிதங்களை அனுப்பியிருந்தனர், அதில் அவர்கள் மந்திரி பெசாருடன் கோரி விண்ணப்பம் செய்யப்பட்டிருந்தது.  அவை முற்றிலும் புறக்கணிக்கப்பட்டதோடு,நெகிரி செம்பிலான் அரசாங்கத்திடமிருந்து எந்த பதிலும் பெறாத நிலையில் இடத்தைக் காலி செய்வதற்கான கட்டளை மட்டுமே வந்துள்ளது. 

 இந்தச் சம்பவங்களுக்கு ஆதரவாக பொது மக்களும், சோசலிச இடது சாரி கட்சியும், மனித உரிமை சார்ந்த அமைப்புகளும் துணை நிற்கிறார்கள், என்றாலும் சில சம்பவங்கள் தொடங்கிய இடத்திலேயே இன்னும் நகராமல் நிற்பது மிகுந்த  மன உளைச்சலை ஏற்படுத்துவதாக இருக்கிறது.  குருவிக்கும் ஒரு கூடு இருக்கு; நமக்கு ஒரு வீடு இருக்கா? என்பது வெறும் வார்த்தையில்லை. வீடு  ஒரு வியாபார பண்டமாக பார்க்கும் காப்ரெட் நிறுவனங்களுக்கு ,  பல ஆண்டுகளாக தொடரும் ஏழைகளின் இந்த  வலியும் ஏமாற்றமும் புரியபோவதில்லை.

 

-யோகி


ஞாயிறு, 11 ஏப்ரல், 2021

லந்தனைடு சுரங்க திட்டத்தை அனுமதிக்க கூடாது!

 

 நம்முடைய அழகிய மலேசியா, அதன் இயற்கை வளம் இன்னும் சில ஆண்டுகளில் அதன் உயிரை விட்டுவிடுமோ என்ற அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நம் குழந்தைகள் கூட்டாஞ்சோறு செய்து விளையாடுவதற்கு கூட புல் பூண்டு முளைகாமல் போய்விடுமோ என்று பயமாக இருக்கிறது. இந்த பயமானது சாதாரணமாக கலைந்துபோகும் மேகம் போல அல்ல. இது உயிர் பயமாகவும் அழிவின் பயமாகவும் வளர்ந்து வருகிறது

பஹாங் போஸ் லானாய், பழங்குடிகள் கிராமத்தை ஒட்டி இருக்ககூடிய ஜெலாய் நதி மற்றும் அதை சுற்றியிருக்ககூடிய கிளை நதிகளும் தற்போது  அந்த மாதிரியான அபாயத்தைதான் எதிர்நோக்கியிருக்கிறன. போஸ் லானாய் எனும் இடத்தில் செமாய் இன பூர்வக்குடிகள் வசிக்கும் வனமானது அங்கு வசிக்கும் பூர்வக்குடிகளுக்கு மட்டுமல்ல நாட்டிற்கும் மிக முக்கியமான வனமாக திகழ்கிறது. தீபகற்பத்தின் 'மத்திய வன முதுகெலும்பு' என்று அதை வன ஆர்வளர்கள் வர்ணிக்கிறார்கள். தற்போது அந்த வனத்தில் லந்தனைடு கனிமத்தை தோண்டி எடுக்கும் சுரங்கவேலை செய்வதற்கான அனுமதியை மாநில அரசாங்கம் கொடுத்திருப்பதற்கு எதிராக இயற்கை ஆர்வலர் இயக்கங்களும், அங்கு வசிக்கும் பழங்குடி மக்களும் குரல் கொடுத்து வருகின்றனர். இது தொடர்பான ஒரு பத்திரிகையாளர்கள் சந்திப்பு ஒன்றினை மலேசிய சோசலிசக் கட்சி நடத்தியது.



அந்தச்
சந்திப்பில் மீனா ராமன் (Sahabat Alam Malaysia), காளிதாசன் (global environment centre), பூர்வக்குடியான ஃஜெப்ரி ஆகியோர் இணையம் வழியாகவும், மலேசிய சோசலிசக் கட்சியின் தேசிய பொது செயலாளர் .சிவராஜன், மலேசிய சோசலிசக் கட்சியின் சுற்றுச்சூழல் பிரிவைச் சேர்ந்த சியோங் ஆகியோர் நேரடியாகவும் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினர்.

லந்தனைடு (Lanthanide) சுரங்கவேலையை முன்னெடுக்கும் தொடர்புகொண்ட 3 சுரங்க குத்தகை நிறுவனங்கள் இணைந்து இந்த வேலையை தொடங்கவுள்ளன. லந்தனைடு என்பது அருங்கனிமமாகும். Nadir bumi என்று மலாய் மொழியிலும் rare earth என்று ஆங்கிலத்திலும் சொல்வார்கள்.  லந்தனைடு  உலோக வேதியியல் கூறு 57 முதல் 71 வரையிலான அணு எண்களுடன் பூமியிலிருந்து எடுக்கப்படவுள்ளது. இந்த லந்தனைடு, கிட்டத்தட்ட மோனாசிட்டி இரசாயன பண்புகளைக்  கொண்டிருக்கின்றன என்று கூறப்படுகிறது. சுறுக்கமாக சொன்னால் அரிதாகக் கிடைக்கக் கூடிய கனிம பொருளாகும்.  



இந்த சுரங்க வேலை, சுமார் 2 ஆண்டுகளுக்கு ஏறக்குறைய 660 ஹெக்டேர் நிலபரப்பில் நடைபெறவிருக்கிறது. தவிர இதுவரை மலேசிய நாட்டில் மேற்கொள்ளாத ஒன்றாகவும் இது காணப்படுகிறது. இதற்கு முன்பு தோண்டி எடுக்கப்பட்ட நிலக்கரி மற்றும் தங்கம் மாதிரியான சுரங்க வேலையில்லை இது. முழுக்க ரசாயனம், நச்சு சம்பந்தப்படதாகும். அவர்கள் தோண்டி எடுக்கப்பொகும் லந்தனைட் உடன் வெறெந்த  கனிமங்கள் வெளியேற்றப்படும் என்று முழுமையாக அறிய முடியவில்லை. நிரந்தரமாக பாதுகாப்பட வேண்டிய வனத்தின் நிலத்தில் ஆழ்துளையிட்டு, அதன் வழி ரசாயனத்தை உள்செலுத்தி, கனிமங்களை வெளியெடுப்பார்கள். பின் அவை அடுக்குமுறையில் சுத்திரிகரிப்பு செய்யப்பட்டு, கிடைப்பெறும் கனிமப்பொருளை வெளிநாட்டிற்கு ஏற்றுமதிசெய்வார்கள். ஊசி செலுத்தும் முறையில், பூமியின் ஆழத்தில் செலுத்தும் ரசாயனமானது 100 சதவிகிதம் வெளியேற்றப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

தவிர இம்மாதிரியான ஒரு சுரங்கவேலை தொடங்கினால், ஜெலாய் நதி மிக மோசமாக பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் இருப்பதோடு, அதையே நம்பியிருக்கும் செமாய் பூர்வக்குடிகளுக்கு வாழ்வாதார சிக்கல் ஏற்படும். அதோடு இந்த சுரங்கவேலை நாட்டிற்கும் பூமிக்கும் கூட நல்லதில்லை. தீபகற்ப  மலேசியாவை சுற்றியிருக்கும் தித்திவாங்சா மலைதொடர், தாமான் நெகாரா உள்ளிட்ட இயற்கை வளங்கள் மிக மோசமாக பாதிக்கப்படும் என இயற்கை ஆர்வளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.




லந்தனைடு தோண்டி எடுக்கும், சுரங்க வேலை இரண்டு ஆண்டுகள் மட்டுமே நடைபெறுவதாக இருந்தாலும், பல ஆண்டுகள் அல்லது தீரவே முடியாத அளவுக்கு பாதிப்பாக அமைவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இம்மாதிரியான பாதுகாக்கப்பட வேண்டிய வனத்திற்கு எப்படி மாநில அரசாங்கள் சுரங்கவேலையில் ஈடுபட அனுமதி அளித்தது என்பது கற்பனைக்கு  எட்டாத ஒன்றாக இருக்கிறது?

குறிப்பிட்ட போஸ் லானாய் பூர்வக்குடி நிலத்தில் 80 லிருந்து 90 குடும்பங்கள் வசிக்கிறனர். அவர்களின் வாழ்க்கையும் வாழ்வாதரமும் ஜெலாய் நதியை அடிப்படையாக கொண்டதாகும். அவர்கள் வனத்திலிருந்து வெளிவந்து பொருள்களை வாங்குவதற்கு ஒரு போக்குவரத்து, நதி மார்கம்தான். தவிர விவசாயம் செய்யவும் மீன் பிடிக்கவும் குளிக்கவும்கூட அவர்கள் அந்த நதியையே நம்பியிருக்கின்றனர். தற்போதுகூட ஜெலாய் நதி மிகவும் மோசமான தூய்மைக்கேட்டை எதிர்நோக்கியிருக்கிறது. கேமரன் மலைதொடரிலிருந்து, வெளியேற்றப்படும் விவசாயக் கழிவுகள், ரசாயன எச்சங்கள், குப்பைகள் அனைத்தும் இந்த நதியில் கலந்து வருகிறது. இதனால், மீன் வளம் கணிசமாக குறைந்துவிட்ட வேளையில், பயன்படுத்துவதற்கு சுகாதரமற்ற நிலையை அந்த நதிகொண்டிருக்கிறது.


   
 

தோல்வியாதி மற்றும் காரணமே இல்லாமல் மீன்கள் மடிவது தொடர்பாக கூட பூர்வக்குடி மக்கள் அரசாங்கத்திடம் புகார் அளித்திருக்கிறார்கள். தற்போது இந்தப் புதிய பிரச்னை அவர்களை மேலும், பதற்றத்திற்கு உள்ளாக்கியிருப்பதுடன், ஒட்டுமொத்த கிராமமே இந்த சுரங்கவேலையை எதிர்ப்பதாக கூறியிருக்கின்றனர்.   

நடந்த இந்த பத்திரிக்கை சந்திப்புக்கு சில நாட்களுக்கு முன்பாக, பூர்வகுடிகளை நேரில் சந்தித்து அவர்களின் மனநிலையையும் நிலைபாட்டையும் கேட்டறிந்து பதிவு செய்யப்பட்டது இங்கு குறிப்பிடதக்கது.


இந்த சுரங்க வேலை நடைபெறுவது தொடர்பான சம்பந்தப்பட்ட நிறுவனம், இயற்கை ஆர்வலர்கள், மனித உரிமை சார்ந்த அமைப்பு உள்ளிட்ட அமைப்புகளிடம் ஒரு கலந்துரையாடலை கடந்த மார்ச் மாதம் மேற்கொண்டது. அந்தக் கலந்துரையாடலில் பலவாரான கேள்விகள் அந்நிறுவனத்திடம் முன்வைக்கப்பட்டது. பலகேள்விகளுக்கான பதிலை கொடுக்கமுடியாத அந்நிறுவனம், அவற்றுக்கான பதிலை அளிக்க இரண்டாங்கட்ட பேச்சுவார்த்தையை கூடிய விரைவில் நடத்தவுள்ளது.


ஆனால், எந்த வகையான நிபந்தனையுமின்றி இந்த லந்தனைடு சுரங்க திட்டம் நிறுத்தப்பட வேண்டும். அரசு ஒருபோதும் இதற்கு அனுமதிக்ககூடாது என பத்திரிகையாளர் சந்திப்பில் நம் நாட்டின் மீதும் இந்தப் பூவுலகின் மீதும் விசுவாசமுள்ள இயற்கை ஆர்வளர்கள் கேட்டுக்கொண்டிருக்கின்றனர்.   

-யோகி

-நன்றி தமிழ் மலர் 11/4/2021