வெள்ளி, 6 மார்ச், 2026

“பெண்கள் நன்னாள்: கொண்டாட்டமல்ல… இன்னும் முடியாத போராட்டம்!

 இதோ வந்துவிட்டது இவ்வாண்டுக்கான பெண்கள் நன்னாள்.



என் சிந்தனையில் இருந்து கடந்த 13 அல்லது 14 ஆண்டுகளாக இந்த நாளைக் குறித்து நான் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறேன். இந்நாளைப் பற்றி ஏறத்தாழ 5–6 பதிவுகள் எழுதியிருப்பேன். அந்த எழுத்துகளில் நான் தொடர்ச்சியாக எழுப்பும் சில கேள்விகள் உள்ளன.

“பெண்களுக்கு இன்னும் ஏன் பெண்கள் தினம்? அவர்களுக்கு என்ன குறை இருக்கிறது?” என்று கேட்கும் ஆண்களுக்கு, என் பதிவுகளில் பொதுவான பதிலை அளித்திருக்கிறேன். அதேபோல், “பெண்கள் நாள் ஏன் அவசியம்?” என்று தெளிவில்லாமல் கேட்கும் பெண்களுக்கும், அந்த நாள் எப்படி உருவானது, ஏன் அது தேவையானது என்பதையும் என் எழுத்துகளின் மூலம் விளக்கியிருக்கிறேன்.

ஒரே விஷயத்தை திரும்பத் திரும்ப சொல்லுவது சில நேரங்களில் அலுப்பைத் தரலாம். எனினும், ஒரு கொண்டாட்டத்தின் தேவையை ஏற்கவோ மறுக்கவோ ஒரு தனிநபரின் நிலைப்பாட்டில் என்ன நியாயம் இருக்கிறது என்பதைச் சொல்லுவதில் எந்தத் தவறும் இல்லை என்பதே என் கருத்து. அதிலும், நாட்டில் அறியப்படும் எழுத்தாளராக இந்த நாளில் எனது நிலைப்பாட்டைப் பதிவு செய்வது ஒரு கடமை என்றும் நான் நினைக்கிறேன்.

பெண்கள் நன்னாள் என்பது மலர்களும் வாழ்த்துச் செய்திகளும் பரிமாறிக்கொள்ளும் ஒரு சாதாரண நாள் அல்ல. அது விடுதலைக்காகவும் சம உரிமைக்காகவும் போராடிய பெண்களின் குருதி மற்றும் உயிர்ப்பலியின் நினைவுநாள். இன்று நாம் “பெண்கள் தினம்” என்று கொண்டாடும் இந்த நாள், எண்ணற்ற பெண்களின் போராட்டங்களின் சாட்சியாக உருவானது.

அதன் வரலாறோ அதன் தாத்பரியமோ தெரியாமல் சில பெண்கள் அந்த நாளை ஒரு சாதாரண கொண்டாட்ட நாளாகவே அனுபவிக்கிறார்கள். என்னைப் பொருத்தவரையில் அதுவும் தவறு அல்ல. நாள் முழுவதும் குடும்பப் பொறுப்புகள், வேலைச்சுமைகள், சமூக அழுத்தங்கள் ஆகியவற்றுக்குள் வாழும் பெண்களுக்கு ஒரு நாள் சற்றே சுவாசிக்கவும் தங்களைத் தாங்களே கொண்டாடிக்கொள்ளவும் தோன்றினால் அது அவர்களின் உரிமை.

ஆனால் உண்மையை அறிந்த பெண்களே சில நேரங்களில் அந்த உண்மையை மறந்துபோய் நடப்பது தான் சங்கடமாக இருக்கிறது. குறிப்பாக, பொது வெளியில் அறியப்படும் பெண்களுக்கு சில சமூகப் பொறுப்புகள் இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன்.

எங்கோ ஓர் இடத்தில் ஒரு பெண்ணுக்கு நடக்கும் அநீதியை நீங்கள் இங்கிருந்து கண்டிக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. உலகில் எங்காவது ஒரு பெண் துன்பப்படும்போது அதில் நீங்கள் கட்டாயமாக பங்கெடுக்க வேண்டும் என்றும் நான் கூறப்போவதில்லை. அப்படி நீங்கள் செய்தாலும் அது அதிகப் பிரசங்கித்தனம் அல்ல. யாராவது அப்படிச் சொன்னாலும் அதற்கு நீங்கள் எதிர்வினையாற்றத் தேவையில்லை. பேசுபவர்கள் பேசுவதைத் தவிர நமக்காக வேறு எதையும் செய்யப் போவதில்லை.

ஆனால், நமது நாட்டிலேயே நாம் எதிர்வினையாற்றக்கூடிய பல விஷயங்கள் இருக்கின்றன. குறைந்தபட்சம் நம்முடைய சமூகத்தில் நடக்கும் அநீதிகளைப் பற்றிக் கூட நாம் ஏன் பேசுவதில்லை?

ஒரு பெண்ணுக்கோ, பெண் குழந்தைக்கோ பாலியல் வன்புணர்வு நேர்ந்துவிட்டால் தமிழ் ஊடகங்கள் கொஞ்சம்கூட கூச்சமின்றி பெண் கற்பழிக்கப்பட்டாள்; சொந்த தந்தையே கற்பழித்தார், சகோதரனே கற்பழித்தார் என எழுதுகிறார்கள். இப்படி சொல்வதுகூட பெண்களுக்கு எதிரான வன்முறை என்று பலமுறை கூறியாகிவிட்டது. ஒரு பெண்ணின் கற்பை அழிக்க முடியுமா? அவளுக்கு நடந்த கொடுமைக்கு நீதி கிடைக்கிறதோ இல்லையோ ஊடகங்கள் அவளின் கற்பை அழிப்பதில் தீவிரம் காட்டுவது ஏன் என புரியவில்லை. இதை களப்பெண்கள், பெண்கள் அமைப்புகள் கேள்வி கேட்க வேண்டாமா?

மேலும், பெண்களுக்கு எதிரான சட்டங்கள் — குறிப்பாக குடும்ப வன்முறை முதல் பாலியல் பலாத்காரம் வரை — இன்னமும் முழுமையான பாதுகாப்பை அளிக்கும் வகையில் செயல்படுகின்றனவா என்ற கேள்வி இருக்கிறது. இதை யார் கேட்க வேண்டும்? நமக்காக நாம் கேட்காமல் வேறு யார் கேட்பார்கள்?

கடந்த வாரம் இஸ்ரேல் தாக்குதலில் 6 முதல் 12 வயதுக்குள் உள்ள 150 மாணவிகள் உயிரிழந்ததாகவும், மேலும் தேசிய விளையாட்டு வீராங்கனைகள் 40 பேர் கொல்லப்பட்டதாகவும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. அந்த உயிர்கள் பற்றிய வேதனை எத்தனை பேரின் மனசாட்சியைக் குலைத்தது? இதைப் பற்றி யார் பேசினார்கள்? பன்னாட்டு ஊடகங்கள் அது ஒரு சாதாரண செய்தியாகவே கடந்து சென்றுவிட்டது என்பதை நாம் பார்க்கிறோம் அல்லவா? அல்லது நமது நாட்டில் யாராவது அந்த உயிர்களுக்காக ஞாயம் பேசினார்களா?

 


பெண்கள் நன்னாள் என்பது மலர்களும் வாழ்த்துச் செய்திகளும் பரிமாறிக்கொள்ளும் ஒரு விழாவாக மட்டும் மாறிவிடக் கூடாது. அது ஒரு நினைவூட்டல் — பெண்கள் இன்னும் சமத்துவத்திற்காக, பாதுகாப்பிற்காக, மரியாதைக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதைக் நினைவூட்டும் நாள். இந்த நாள் ஒரு கொண்டாட்டமாக இருப்பதற்கும் முன், அது ஒரு கேள்வியாகவும் ஒரு சிந்தனையாகவும் நமக்குள் எழ வேண்டும். அந்த சிந்தனை தான் சமூகத்தில் மாற்றத்தை உருவாக்கும் முதல் படி.

இப்போது சொல்லுங்கள், பெண்கள் நன்னாள் கொண்டாட்டத்தை நாம் எப்படி கொண்டாட வேண்டும், சகோதரிகளே…?

-யோகி

 

ஞாயிறு, 12 அக்டோபர், 2025

வீடு – என் கனவு அல்ல, என் மகனுக்கு கொடுக்கும் சின்னக் கூடு

தனக்கான கூட்டைத் தனக்குப் பிடித்த இடத்தில், யாருடைய அனுமதியோ எதிர்ப்போ இன்றி கட்டிக்கொள்ளும் சுதந்திரம் பறவைகளுக்கே உரியது. ஆனால், மனிதனுக்கு அந்த சுதந்திரம் இல்லை. குறிப்பாக, தன்னுக்கென ஒரு இல்லம் அமைத்துக்கொள்ளும் முயற்சியில், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், பண ரீதியாகவும் மனிதன் கடுமையாக உழைக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படுகிறான்.

பி40 அல்லது வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் ஏழைப் பகுதிகளுக்கான மக்களுக்கு வீடு அமைப்பது கனவுக்குப் புறம்பானது. ஏதேனும் வாய்ப்பைப் பயன்படுத்தி ஒரு இல்லத்தை வாங்கிய பின்னரும், அதன் வங்கிக் கடனை அடைத்து முடிப்பதற்குள் மரணம் வாசலில் காத்திருக்கிறது. அல்லது பண நெருக்கடியால் சிக்கி, திவாலான நிலைமை உருவாகிறது.

இந்தியத் தோட்டப் பாட்டாளிகள், மலாயாவிற்கு பாட்டாளிகளாக வந்து, மூன்றுநான்கு தலைமுறைகளாக இந்நாட்டில் வாழ்ந்தும் இன்னும் பாட்டாளிகளாகவே திகழ்கிறார்கள். நாட்டில் சிறுபான்மை இனமாக மாறிய துயரத்திற்கு மேலாக, அவர்களில் பலருக்கு இன்னும் தங்களுக்கென ஒரு இல்லம் கூட இல்லாத நிலைமை வலியை அதிகரிக்கிறது. மிக அண்மையில், தோட்டப் பாட்டாளிகளுக்கான மலிவு வீடுகள் கட்டித் தர வேண்டும் என்ற கோரிக்கை பார்லிமென்டிலும் ஒலித்ததுஅந்தக் குரல் இவ்வளவு சீக்கிரத்தில் யாராலும் மறக்க முடியாது.

இந்த நிலையில் நானும் எனது இணையர் ஓவியர் சந்துருவும் வீடு குறித்த எந்த ஓர் ஆவலும் ஆசையும் கொள்ளாமலே இருந்தோம்.

வீடு வாங்குவது என் கனவும் அல்ல. என் தேவை ரொம்பவும் எளிமையானது. தேவைக்கு அதிகமாக உணவைக்கூட நான் உண்ண மாட்டேன் என்றால் என் எளிமையை புரிந்து கொள்ளுங்கள். வாழ்க்கையில் பெரிதாகப் பிரபஞ்ச ஆசைகள் எதுவும் வைத்துக் கொள்ளாதவள் நான்.

குழந்தை இல்லாததால், “எங்களுக்கு வீடு தேவையில்லைஎன்ற முடிவில் நானும் சந்துருவும் உறுதியாக இருந்தோம். அந்த முடிவு எங்களுடன் 17 ஆண்டுகளாக உடன் வந்தது. மாதந்திர சம்பளம் ஒரு மாதத்திற்கு அவரவருக்கு போதுமானதாக இருக்க வாழ்க்கையை எந்த சேமிப்பும் இல்லாமல் நிம்மதியாகவே ஓட்டிக்கொண்டு இருந்தோம். அதில் நான் மட்டும், வருடத்துக்கு ஒருமுறை விமானப் பயணம் செய்துவிடுவேன்அதுவே எனது சிறிய ஆடம்பரம்.



2023 நவம்பர் மாதம் மகன் பிறந்தான். ஒருகாலத்தில் வேண்டாம் என்று எண்ணிய வீடு, அவனுக்காகதேவையானதுஎன்று

முடிவு செய்தோம். வயதின் மறுபக்கத்தில் நிற்கும் எங்களுக்குப் பெரிய சவாலான முடிவு இது. இன்றைய முதலாளித்துவச் சூழலில், வாழ்க்கைச் செலவுகள் ஏற்கனவே கழுத்தை நெருக்கிக் கொண்டிருக்கின்றன.

மகனுடைய காலம் எப்படி இருக்குமோ? ங்களால் அவனுடைய  பயணத்தில் நீண்ட நாள் செல்ல முடியாது. எந்த நேரமும் நின்றுபோகக்கூடிய கடிகாரம் போலத்தான் நாங்கள். இந்நிலையில் வீடு வாங்குவது மிகப் பெரிய முடிவு. என்றாலும் மகனுக்காக இந்த சுமையை ஏற்றிருக்கிறோம்.

எங்கள் நிலையில், வாங்கியிருக்கும் வீடு கொஞ்சம் அதிகமான பொறுப்பு தான். ஆனால், மூன்று தலைமுறையாக வீடு வாங்க முடியாத குடும்பத்தைச் சேர்ந்த எங்களைப் பொறுத்தவரைஅந்த வரலாற்றை உடைத்துப் புதிய பாதை திறந்திருக்கிறவன் என் மகன்.

2024-ஆம் ஆண்டு ஜனவரி 20-ஆம் தேதிஅந்த வீட்டுக்காக கையெழுத்திட்டோம். சகல வசதிகளுடன் கூடிய ஒரு மாடர்ன் கான்டோமினியம் வீட்டை நாங்கள் வாங்கியுள்ளோம்.  19/8/2025 அதன் சாவி எங்கள் கைகளில் கிடைத்தது. அந்தச் சாவி, ஒரு கதவை மட்டும் அல்ல; எங்கள் மகன் அவனுக்காக திறக்கப்போகும் புதிய எதிர்காலத்தின் கதவாகும்.

செவ்வாய், 3 செப்டம்பர், 2024

மைத்திரேயனின் உண்ணாநிலைப் போராட்டம்


BLOCKROCK நிறுவனத்தை எதிர்த்தும் மறுத்தும் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டிருக்கும் சமூக ஆர்வளர் மைத்ரேயன் அவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் நாட்டு மக்களின் கவனத்தைப் பெற்று வருகிறது. அதே வேளையில், மலேசிய இந்திய மக்கள் இந்தப் போராட்டத்தைப் எப்படி பார்க்கின்றனர் என்பது இங்கு விவாததிற்கு உட்படுத்த வேண்டியதாகும். சமூக வலைத்தளங்களில் இந்தப் போராட்டத்தை கொச்சப் படுத்தும் விதத்தில் நிறையவே பகடிப் பதிவுகளை காண முடிந்தது.

 மைத்தேரேயனின் இந்தப் போராட்டத்தைப் பார்ப்பதற்கு முன்பாக ‘பிளேக்ராக்’ என்பது என்ன என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். ரொம்பவும் சுலபமாக ஊதித்தள்ளும் வெண்சுறுட்டு விவகாரம் இல்லை இது. இரத்தத்தை உரிஞ்சும் அட்டை பூச்சியால்கூட இந்த பூமிக்கு நண்மை உண்டு. உயிரையே உறிஞ்சி ஏப்பம் விடும் ஒரு சொத்து மேலாண்மை நிறுவனம்தான் இந்த ‘பிளேக்ராக்’. மேலும், உலக நாடுகளின் தேசிய வங்கிகளையே தன் கட்டுக்குள் கொண்டுவரும் வல்லமை கொண்டது இந்த நிறுவனம் என்றால் அது மிகை இல்லை.

இந்த உலகத்தையே கட்டுப்படுத்தக்கூடிய சக்தி கொண்ட ஒரு நிறுவனம் என்றால் அது ‘பிளேக்ராக்’.நிறுவனம்தான். இன்னும் எளிமையாக சொல்வதென்றால் உலகியே தன் கட்டுக்குள் வைத்திருக்கும் அமெரிக்கா நாளையே திவாலாகிறது என்றால் அதை மீட்க கடன் கொடுக்கும் திறன் கொண்டதும் தேவையென்றால் அந்த அமெரிக்காவையே விலை கொடுத்து வாங்கும் சக்தி கொண்ட ஒரு நிறுவனம்தான் இந்த ‘பிளேக்ராக்’. இத்தனைக்கும் இந்த நிறுவனம் 1988-ஆம் ஆண்டுதான் தொடங்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடதக்கது.

அது தவிர, உலகப் புகழ்பெற்ற பல முதன்மை நிறுவனங்களில் குறிப்பாக ஆப்பில், ஃபாக்ஸ், அமெசோன், கொக்கோ கோலா இப்படி பெரிய பெரிய நிறுவனங்களின் முதல் 5 நிறுவனங்களுக்கு உள்ளாக Vanguard Fiduciary Trust Co, BlackRock Advisors LLC, Berkshire Hathaway INC, State Street Corporation ஆகிய நிறுவனங்கள் வந்துவிடும் என்றால் இந்த நிறுவனங்களின் பலத்தை நீங்களே அனுமானித்துக் கொள்ளுங்கள்.

நிறுவன மேலாண்மை குறித்து ஆலோசனை வழங்கக்கூடியதான் இந்த ‘பிளேக்ராக்’ நிறுவனத்தின் பணியாகும். எப்படி ஒரு நிறுவனத்தை வழி நடுத்துவது, பண முதலீடுகளை மேற்கொள்வது, அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்துவது, எம்மாதிரியான மாற்றத்தை தன் நிறுவனத்தில் கொண்டு வருவது என இந்த ‘பிளேக்ராக்’. நிறுவனம் தனது அலோசனைகளை வழங்கும். என்றாலும், பெரிய பெரிய நிறுவனங்களுக்கு வங்கிகளுக்கு ஆலோசனை சொல்லும் இந்த ‘பிளேக்ராக்’. நிறுவனம் வைக்கும் ஒரு நிபந்தனை என்னவென்றால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பங்குதாரராக மாறுவதுதான். அந்த நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டால் சிரமத்தில் இருக்கும் நிறுவங்களுக்கோ அல்லது வங்கிகளுக்கோ கடன் கொடுப்பதிலிருந்து அதை லாபகரமான நிறுவனமாக மாற்றுவது வரை  அதன்வழியை காட்டுகிறோம் என்கிறது இந்த நிறுவனம்.

இந்த ‘பிளேக்ராக்’ நிறுவனம் எப்படி தன் ஆதிக்கத்தை மேற்கொள்கிறது என்று பார்ப்போம். இதை எளிமையாக சொல்வதற்கு இணையத்தில் நான் அறிந்துக்கொண்ட ஒரு செய்தியை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.

உக்ரைன் நாட்டின் சட்டப்படி தன் நாட்டின் விளை நிலங்களை அல்லது விவசாய நிலங்களை வெளிநாடுகளைச் சேர்ந்த தனியார் நிறுவனங்களுக்கும், தனிநபருக்கும் விற்பனை செய்யக்கூடாது என்பதாகும். ஏறத்தாழ 32 மில்லியன் ஹெக்டர் விவசாய நிலங்களை உக்ரைன் 2014-ஆம் ஆண்டுவரை கொண்டிருந்தது. இதை இன்னும் எளிமை படுத்தி அதன் பிரமாண்ட அளவை சொல்வதென்றால், ஐரோப்பாவின் 27 நாடுகளின் விவசாய நிலங்களை ஒன்றுகூட்டி, மூன்றாக பிரித்தால், அதில் ஒரு  பங்கு உக்ரைன்னுடையது ஆகும். மேலும், உக்ரைனில் விளைவிக்கும் விளை பொருள்கள் ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்பதும் குறிப்பிடதக்கது.

2014-ஆம் ஆண்டு உக்ரைன் – ரஷ்யா – கிரிமியா பிரச்னையின்போது, உக்ரைன்னுக்கு ஆதரவளிக்க பல நாடுகள் முன்வந்தன. International Monetary Fund (IMF) உக்ரைன்னுக்கு 17 மில்லியன் கடனுதவி செய்ய முன் வந்தது. இங்கேதான் ‘பிளேக்ராக்’ அதன் தந்திரத்தை கையாண்டது. நிற்க. IMF -க்கும் ‘பிளேக்ராக்’-குக்கும் என்ன சம்பந்தம் என்று உங்களுக்கு தோன்றலாம். தற்போது IMF-இன் அறங்காவலராக விளங்குவதே ‘பிளேக்ராக்’தான்.  உக்ரைன் அந்த 17 மில்லியன் கடனுதவி பெறுவதற்கு ‘பிளேக்ராக்’ வைத்த நிபந்தனை அந்நாட்டு விளை நிலங்கள்மீது நின்றது.

அதாவது உக்ரைனின் விளைநிலங்களை தனியார் நிறுவனங்களுக்கு வைப்பதற்கு ஒப்புதல் தெரிவிக்க வேண்டும் என அவை கேட்டன. அந்நாட்டு அரசு சாசனத்தை மாற்றி எழுத அந்த இரு நிறுவனகளும் உக்ரைனை வலியுருத்தினர். மிகப்பெரிய தொகையை கடனாக பெறுவதற்கு உக்ரைன்னும் தனது அரசு சாசனத்தை மாற்றி எழுதியது. அதன் விளைவு, கடந்த 10 ஆண்டுகளில் 60 சதவிகித நிலத்தை இழந்து நிற்கிறது உக்ரைன்.

இதுதான் ‘பிளேக்ராக்’ எனும் மேலாண்மை நிறுவனத்தின் தந்திரமாகும். இன்று பற்பலகோடிகளின் அதிபதியாக இருக்கும் இந்நிறுவனம் அசைக்க முடியாத ஒரு மாபெரும் சக்தியாக மாறியிருக்கிறது.

(நன்றி, பொக்கிஷம் இணையத்தளம்)

சமூக ஆர்வளர் மைத்திரேயன் ஏன் உண்ணா விரதம் இருக்கிறார்? 

நமது நாட்டைச் சேர்ந்த சமூக ஆர்வளர் மைத்திரேயன் கடந்த 7 நாள்களா டத்தாரான் மெர்டெக்காவில் உண்ணாநிலை போராட்டத்தில் உள்ளார். பாலஸ்தீன் -இஸ்ரேல் போர் இன்னும் முடிந்தபாடில்லை. தினமும் இதுகுறித்து அங்கிருந்து வரும் செய்திகள் அச்சமூட்டுபவையாக இருக்கின்றன. இந்தப் போரில் காசா மக்கள் லட்சக்கணக்கில், இஸ்ரேலால் ராணுவத்தால்  கொன்று குவிக்கப்பட்டுவிட்டனர். பிற நாடுகளிலிருந்து இஸ்ரேலுக்கு எதிராக கண்டனங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும், தன் பிடிவாத போக்கை இஸ்ரேல் விடுவதாக இல்லை. இதற்கிடையில் மலேசியாவும் பாலஸ்தின் மக்களுக்கு ஆதரவாகவும் இஸ்ரேலுக்கு காந்திரமான கண்டனத்தையும் பதிவு செய்து வருகிறது.  

இந்நிலையில்தான் MAHB என்று சொல்லக்கூடிய மலேசியா ஏர்போர்ட் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட்டுக்கு சொந்தமான பங்குகள் ‘பிளேக்ராக்’ நிறுவனத்திற்கு விற்பதற்கு அம்மலேசிய நிறுவனம் முடிவெடுத்திருக்கிறது. இஸ்ரேலுடன் தொடர்புடையது என்று நம்பப்படும் ‘பிளேக்ராக்’ நிறுவனத்திடம் நம் நாட்டுக்கு தொடர்புடைய பங்குகளை விற்கக்கூடாது என்று நமது நாட்டைச் சேர்ந்த பல சமூக ஆர்வளர்கள் எதிர்த்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.


 அதற்கும் ஒரு படி மேலே போய் மைத்ரேயன் தனி நபராக உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வருகிறார். தற்போது மருத்துவர்கள் ஆலோசனையின் பேரில் அவர் தண்ணீர் மட்டும் அருந்துகிறார். இருந்தபோதும் அவர் நாளுக்கு நாள் பலவீனமாகிக்கொண்டே வருகிறார்.      

 

டிக் டோக் சமூக ஊடகத்தில் இந்த போராட்டம் தொடர்பான சில பதிவுகளை காணும்போது அருவருக்க தக்கதாக இருக்கிறது. அது மலேசியர்களின் முதிர்ச்சியின்மையை காட்டுவதாகவும் இருக்கிறது. ஈழப் போராட்டம் நடந்துகொண்டிருந்தபோது இவர் எங்கு இருந்தார் என்று பலர் கேள்வி கேட்டிருப்பதை நான் பார்த்தேன்.

‘நம் நாடு’ எனும் பத்திரிக்கையிலும் ‘தினக்குரல்’ (புதியபார்வை) ஆகிய பத்திரிக்கைகளிலும் தலைமை நிருபராகவும், ஆசிரியர் குழுவிலும் நான் இருந்திருக்கிறேன். ஈழப் போராட்டம் உச்சக் கட்டத்தில் இருந்தபோது தமிழ்பத்திரிக்கை அலுவலகங்கள் எந்தமாதிரியான பதட்டத்தில் இருந்தன என்பது வார்த்தைகளால் சொல்ல முடியாது. ஈழப் போராட்டம் என்பது அதன் ஆதரவாளர்களின் ரத்தத்தில் கலந்திருக்கிறது.

செய்தியாக வாசித்து கடந்து செல்பவர்களுக்கும், சாப்பிட்டுக்கொண்டே தொலைக்காட்சியில் ஈழப்படுகொலைச் செய்தியைப் பார்த்துவிட்டு கை கழுபவர்களுக்கும் அந்த உணர்வு இருக்குமா என எனக்கு உறுதியாக சொல்லத் தெரியவில்லை. காரணம் நமது நாட்டில் இன்னும் எத்தனை எத்தனையோ ஈழ அகதிகள் இருக்கிறார்கள். சாப்பாட்டிற்கே சிரமப் படுகிறார்கள். சில ஈழ உழைப்பாளிகளின் உழைப்பைச் சுரண்டி எடுக்கும் முதலாளிகள் இருக்கிறார்கள். ஈழத்திற்கு என்ன செய்தீர்கள் என்று சமூக ஊடகங்களில் வாய் பேசுபவர்கள், இங்கே தனது வாழ்வாதாரத்திற்கே போராடுகள் அகதிகளுக்கு என்ன செய்தார்கள்? 

ஆனால், மைத்திரேயன் ஈழப் போராட்டம் உச்சத்தில் இருந்த காலத்தில் பல மகஜர்களை அரசுக்கும், ஶ்ரீலங்கா தூதரகத்துக்கும் வழங்கினார். அதன் நகலை கொடுப்பதற்கு பத்திரிக்கை அலுவலகங்களுக்கு நடையாக நடந்திருக்கிறார். இப்படிதான் எனக்கு மைத்திரேயன் அறிமுகம். ஶ்ரீலங்கா கண்டனப் போராட்டம் நடக்கும் எல்லா இடங்களிலும் மைத்திரேயனை காண முடியும். தவிர தமிழ்பள்ளிகள் தொடர்பான போராட்டம், தமிழர்களுக்கான போராட்டங்களில் மைத்திரேயனை அவ்விடத்தில் பார்க்கலாம். குழுவாக இல்லாமல் தனித்தே செயல்படுவார். இந்த உண்ணாநிலை போராட்டமும் அப்படியானதுதான்.

 -யோகி

 குறிப்பு : பத்திரிக்கை செய்திக்காக எழுதப்பட்ட கட்டுரை இது. 16 ஜூலை 2024 மைத்திரேயனின் உண்ணாநிலை போராட்டத்தின்போது எழுதியது. ஆனால், பத்திரிக்கை இந்தச் செய்தியை வெளியிடவில்லை.