செவ்வாய், 28 ஜூலை, 2026

சர்வதேச அளவில் போராட்டங்கள் கவனம் பெற வன்முறைதான் வேண்டுமா?

டெல்லியில் நடந்த நீட் தேர்வு முறைக்கேடு தொடர்பான போராட்டம் என்பது உலக மக்களின் கவனத்தை கடந்த வாரம்தான் பெரிய அளவில் பெற்றிருக்கிறது. மேலும், உலகின் முன்னணி செய்தி நிறுவனங்கள் இது தொடர்பான செய்தியை வெளியிட்டு  அதன் தீவிரத்தையும் முக்கியத்துவத்தையும் மாணவர்களின் போராட்டத்திற்கான நியாயத்தையும் மக்களுக்கு எடுத்துரைத்திருக்கின்றன. 


எல்லாம் சரிதான். ஆனால், இந்தப் போராட்டமானது எப்போது தொடங்கப்பட்டது? சோனம் அவர்கள் இந்தப் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டு எத்தனை நாள் உண்ணா விரதம் இருந்தார்?  யார் இந்த சோனம் வாங்சுக்? இந்தப் போராட்டத்தை தலைமை ஏற்று நடத்திய கரப்பான் பூச்சி கட்சி அல்லது அமைப்புக்கு வெற்றி கிடைத்துவிட்டதாக சொல்கிறார்களே அது உண்மைதானா? 



இந்தப் போராட்டம் முன்னெடுத்தது  தொடர்பான காரணத்தையும் மேல் குறிப்பிட்டிருக்கும் சில கேள்விகளுக்கான விடையையும் முதலில் காண்போம். பிறகு உலக மக்களும் உள்நாட்டு மக்களும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்திருக்கும் விஷயத்தை அடுத்து பேசலாம். 


டெல்லி, ஜந்தர் மந்தரில் நடைபெற்ற NEET தேர்வு முறைகேடு எதிர்ப்பு மாணவர் போராட்டம் சுமார் 36 நாள்கள் நடைபெற்றன. கடந்த மே மாதம் NEET தேர்வை மாணவர்கள் எழுதினார்கள். சில நாள்களில் அந்தத் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், மறு தேர்வு நடத்தப்படும் என்றும் அரசிடமிருந்து அதிகாரப்பூர்வ தகவல் பகிரப்பட்டது. NEET தேர்வுகு முன்பே வினாத்தாள் கசிவு ஏற்பட்டுள்ளதை அவர்கள் அதற்கு காரணம் கூறியிருந்தனர். எழுதிய தேர்வு ரத்து செய்யப்படுகிறது என்ற விஷயம் அறிவித்த வேளையில் அதன் அழுத்தத்தையும் ஏமாற்றத்தையும்  தாங்கி கொள்ள முடியாத மாணவர்கள் சுமார் 12 பேர் தற்கொலை செய்துக் கொண்டனர். இந்த நீட் தேர்வு தொடர்பாக இதுவரை ஏறத்தாழ 22-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த உயிர் இழப்புகளை எதைக் கொண்டு ஈடு செய்ய முடியும்? இது வெறும் தேர்வு முறைகேடு தொடர்பான போராட்டமாக இல்லாமல், இளைஞர்களின் எதிர்காலம், கல்வி அமைப்பின் நம்பகத்தன்மை, மற்றும் மோடி அரசின் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை மையமாகக் கொண்ட மாபெரும் போராட்டமாக உருவாகியுள்ளது.  


சோனம் வாங்சுக்



சுற்றுச்சூழல் குறித்து ஆழ்ந்த அக்கரைக் கொண்ட சூழலியல் ஆர்வளர்களுக்கு சோனம் வாங்சுக் புதியவர் அல்ல. காஷ்மீரை ஒட்டியிருக்கும் லடக்கை சேர்ந்த இவர் செயற்கை நீர் ஊற்றுகளையும் செயற்கை பனிப்பாறைகளையும் கட்டுபிடித்து அங்குள்ள மக்களுக்கும் விவசாயத்திற்கும் ஆற்றியிருக்கும் சேவைக்காக உலகலவில் பாராட்டையும் உயரிய விருதுகளையும் பெற்றிருக்கிறார். அவருடைய சாதனைகளும் சேவைகளும் அது மட்டுமல்ல. தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்காக SECMOL  என்ற அமைப்பை தொடங்கி வழிநடத்தி வருகிறார். மேலும்,  சோனம் ஒரு பொறியியலாளர் மற்றும் சமூக ஆர்வலராகவே அறியப்படுகிறார், தேர்தலுக்காகவும் அரசியல் லாபத்திற்கான வாதி அல்ல அவர். 



இவர் 2026 ஜூன் இறுதியில் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடங்கிய நீட் முறைக்கேடு தொடர்பான மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு அளித்து உண்ணாவிரதத்தை தொடங்குகிறார். அவருக்கு இது முதல் முறை உண்ணாநிலை போராட்டம் அல்ல. 2024-ல் லடாக் சூழலியலைப் பாதுகாக்க 21 நாள் உண்ணாவிரதம் இருந்தார். தொடர்ந்து கல்வியில் சீர் திருத்ததைக் கொண்டு வர வேண்டும் என்று கூறும் இவர் இந்தப் போராட்டத்தில் பங்கெடுத்தார். அது அந்தப் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தியதோடு  மிகுந்த கவனத்தையும் பெற்றது. தேசிய தேர்வு முறையில் சீர்திருத்தங்கள் கோரியும் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என கோரியும் 26 நாள் உண்ணாவிரதம் இருந்தவரை கடந்த  ஜூலை 24  அந்த உண்ணாவிரதத்தை முடித்து வைத்தனர்.  அவருக்கு  மாண்புமிகு கரப்பான் பூச்சி (Honourable Cockroach) என்று Cockroach Janta Party – CJP புகழாரம் சூட்டினர். 



‘காக்ரோச் ஜன்தா பார்ட்டி’ (Cockroach Janta Party) 




இது பதிவு செய்யப்படாத ஒரு கட்சியாகும். இதன் உருவாக்கமே கொஞ்சம் வினோதமானது, அது விஸ்வரூப வெற்றியடைந்தது. சுறுக்கமாகவும் விரிவாகவும் பார்ப்போம். 


இந்திய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சூர்ய காந்த்,  வேலை வாய்ப்பில்லாத சில இளைஞர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களை "கரப்பான் பூச்சிகள்" (cockroaches) என்று ஒப்பிட்டு கருத்து கூறியிருந்தார். இந்த வார்த்தை இளைஞர்களிடையே  கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது.

அதற்கு பதிலளிக்கும் வகையில் அமெரிக்காவில் படித்த இந்திய இளைஞரான அபிஜீத் திப்கே (Abhijeet Dipke) என்ற இளைஞர் "எல்லா கரப்பான் பூச்சிகளும் ஒன்றிணைந்தால் என்ன?" என்று சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.


அந்த பதிவு வைரலாகி,  அதன் பின்னர் Cockroach Janta Party (CJP) என்ற பெயரில் ஒரு இயக்கம் உருவானது. கரப்பான் பூச்சியை எளிதில் அழிக்க முடியாது. கடினமான சூழலிலும் அது உயிர்வாழும். அதுபோல, புறக்கணிக்கப்பட்ட இளைஞர்களும் தொடர்ந்து போராடுவார்கள் என்பதற்கான அடையாளமாக அதைத் தேர்ந்தெடுத்தோம் என்று "கரப்பான் பூச்சி" என்ற சின்னத்தை  தேர்ந்தெடுத்ததற்கான காரணத்தையும் விளக்கி இருக்கின்றனர்.



மிக குறுகிய நாள்களிலேயே மிகப்பெரிய இளைஞர் போராட்ட இயக்கமாக வளர்ந்து இன்று ஒரு மக்கள் இயக்கமாகவும் மாறி இருக்கிறது இந்த "கரப்பான் பூச்சிகள்" இயக்கம் . இந்த அமைப்புக்கு எதிராக இருப்பவர்கள் இதை ஒரு கோமாளி அல்லது நையாண்டி அமைப்பு என்று கேலி பேசவும் செய்கிறார்கள்.  ஆனால், இந்த மாணவர் போராட்டத்தை பொறுத்தவரை இவர்கள் மேற்கொண்ட இந்த முதல் போராட்டமே வெற்றியில் முடிந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். பி.ஜெ.பி கட்சியை பொறுத்தவரை கடந்த 12 ஆண்டுகளில்  மக்கள் பிரச்னைக்கு பொறுப்பெடுத்து எந்த அமைச்சரும் பதவி விலகி வரலாறு இல்லை. ஆனால், இந்த முறை மாணவர்கள் கொடுத்த நெருக்கடியால் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகியிருக்கிறார். இதுவே தேசிய அளவில் பேசு பொருளாக மாறி இருக்கிறது. 


டெல்லியில் நடந்த போரட்டங்களான  நிர்பயாவுக்கு நீதி கோரி நடந்த  அறவழிப் போராட்டம் (2012), மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான  இந்திய விவசாயிகள் போராட்டம் (2020) ஆகியவை என் கவனத்தை ஈர்த்த மாபெரும் போராட்டங்களாகும். காரணம் இந்தப் போராட்டங்கள் தொடங்கிய காலத்திலேயே உள்ளூர் மக்களின் ஆதரவை பெற்று, உலக மக்களின் கவனத்தை பெற்றது. அதன் காரணத்தினாலேயே இந்திய அரசுக்கு மிகப் பெரிய நெருக்கடி உருவானது. 




ஆனால், தற்போதைய இந்த மாணவர்கள் போராட்டம் கிட்டதட்ட 38 நாள்கள் நீண்டது. சோனாம் அவர்களின் உண்ணாநிலை போராட்டம் 26 நாள்கள் நீண்டது. அதுவரை இந்த விவகாரம் ஒரு உப்பு சப்பில்லாத விஷயமாகவே இருந்திருக்கிறது.   மாணவர்கள் மீதும், போராட்டவாதிகள் மீதும் போலீஸ் கண்மூடித் தனமாக அடிதடி நடத்திய பிறகுதான், உள்ளூர் மக்களுக்கும் உலக மக்களுக்கும் இந்தப் போராட்டம் போராட்டமாகவே தெரிந்திருக்கிறது.  அதன் பிறகே கண்டனங்கள் வழுத்தன. எனக்கு எழும் கேள்வி என்னவென்றால் ஒரு போராட்டம் கவனம் பெற அடிதடியோ, உயிர் சேதமோ, வன்முறையோ இப்படி ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடக்கத் தான் வேண்டுமா? அப்போதுதான் அது கவனம் பெற வேண்டுமா?


அப்படி பார்த்தாலும் இற்போதைய இந்த  நீட் தேர்வு முறைகேட்டில் மனம் உடைந்து 12 உயிர்கள் தற்கொலை செய்து கொண்டனவே? ஏன் உலக மக்களின் இதயங்களை அது உலுக்கவில்லை? அனைத்தையும் பொறுமையாக வேடிக்கை பார்க்கும் மனநிலைக்கு மனித மனங்கள் இறுகி விட்டனவா? அல்லது உலக கோப்பையும் ஜனநாயகன் திரைப்படமும் மாதிரியான உதிரி சம்பவங்கள் போராட்டத்தைவிட முக்கியத்துவம் பெற்றனவா? 



இந்தப் நீட் தேர்வு முறைக்கேடு தொடர்பான மாணவர்கள் போராட்டத்தில் நான் கவனித்த மிக முக்கியமான காட்சிகள் பெண்கள் தொடர்பானவை. போலீஸ்காரர்கள் வன்முறையை நிகழ்த்தியபோதும், மிரட்டியபோதும் அவர்கள் கொஞ்சம்கூட பின் வாங்காமல் களத்தில் நிற்கிறார்கள். ஒரு மாணவி போராட்டக்காரர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் சாப்பிட ஏதாவது கொடுத்துக்கொண்டே இருக்கிறார். ஒரு பெண் போலீஸ் லாரியின் முன் துணிகரமான நின்று கைது செய்தவர்களை விடுவிக்க கோருகிறார், அதில் அவர் வெற்றியும் பெறுகிறார்; இன்னொரு பெண் சக மாணவர்கள் மீது லத்தியடி விழாமல் தடுத்து நிற்கிறார்;  பெண்கள் பலவீனமானவர்கள் என்றும் பெண்களும் போதை பொருள்தான் என்று ஏலனம் செய்பவர்களுக்கும் இந்தக் காட்சிகள் வேறொரு மாற்று புரிதலை ஏற்படுத்த வேண்டும் என்பது எனது கோரிக்கையாக இருக்கிறது. 

இறுதியாக எந்தப் போராட்டத்திற்கு அந்தந்த நேரத்தில் ஞாயம் செய்ய வேண்டும், நமது வசதியை பொறுத்து ஆதரவு அளிப்பது அது போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பது அல்ல.  விளம்பரம் தேடிக் கொள்வது, அவ்வளவே...


புதன், 24 ஜூன், 2026

கூகை நிறுவனத்தின் புத்தகங்கள் அன்பளிப்பு



தனியார் பல்கலைக்கழகத்திற்கு புத்தகங்கள்  அன்பளிப்பு செய்யப்பட்டன

புத்தகங்கள் அறிவின் பெரும் செல்வமாகும். வாசிப்பு பண்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில், கூகை நிறுவனம் தொடர்ந்து புத்தகங்களை மாணவர்களுக்கு அன்பளிப்பு செய்து வருகிறது.  

கடந்த மாதம் ஜொகூர் மாநிலத்தில் நடைபெற்ற மலாயா கணபதி மற்றும் வீரசேனன் விழாவில் மாணவர்கள் கணிசமாக கலந்து கொண்டனர். அந்த விழாவில் பார்வையாளர்களாக கலந்து கொண்ட பள்ளிகளுக்கு கூகை நிறுவனத்தின் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டதோடு, எல்லா மாணவர்களும் பயன் பெரும் வகையில் பள்ளி நூல்நிலையத்தில் அப்புத்தகங்களை சேர்க்கும்படி கூறியிருந்தோம்.

இந்நிலையில் Kolej Universiti Yayasan பல்கலைக்கழக மாணவர்கள், தங்கள் கல்லூரியின் நூலகத்தில் தமிழ்ப் புத்தகங்கள் இல்லை என்ற தகவலை தெரிவித்திருந்தனர். கல்லூரியின் தமிழ் மொழிக் கழகத்தில் தலைவரான சகோதரர் திவாகர், அது குறித்து மேலும் தகவல்களை வழங்கினார். கல்லூரியில் தமிழ்ப் புத்தகங்கள் வைப்பதற்கான நடைமுறைகளை மேற்கொள்ள கூகை நிறுவனம் பரிந்துரை செய்தது. அனுமதி கிடைக்கும் பட்சத்தில் 100 புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்குகிறோம் என்று கூறியிருந்தோம்.

மாணவர்களின் முயற்சிக்கு கிடைத்த வெகுமதிதான் இந்தப் புத்தகப் பரிசு. கல்லூரி நிர்வாகமும் அந்த அன்பளிப்பை மதித்து புத்தகங்களை கையளிக்கும் நாளை விழாவாக ஏற்பாடு செய்திருந்தனர். 


இந்த விழாவில் பங்கெடுத்த கல்லூரியின் இயக்குனர் டாக்டர் நோர் ஐஸ்ஷா, கூகை நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்துக்கொண்டதோடு, மேலும் இந்திய மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஆக்கப்பூர்வமான நிகழ்ச்சிகளை கூகை நிறுவனத்தோடு இணைந்து செய்வதற்கு ஆர்வம் கொள்வதாகவும் தெரிவித்தார்.

மேலும், பேராக் மாநில எழுத்தாளர் சங்க தலைவர் தோழர் சிவா லெனின், கூகை நிறுவனத்தின் வடிவமைப்பாளரான ஓவியர் சந்துரு, காரைநகர் நட்புறவு மையத்தைச் சேர்ந்த சகோதரர் பிரவீன் ஆகியோர் இந்த விழாவின் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் அர்த்தமுள்ள நிகழ்வை ஏற்பாடு செய்த KUYPJ தமிழ் கழகம் மற்றும் மாணவர் நலப் பிரிவு (HEP) ஆகியோருக்கு சிறப்பு பாராட்டுகள்.

வெள்ளி, 6 மார்ச், 2026

“பெண்கள் நன்னாள்: கொண்டாட்டமல்ல… இன்னும் முடியாத போராட்டம்!

 இதோ வந்துவிட்டது இவ்வாண்டுக்கான பெண்கள் நன்னாள்.



என் சிந்தனையில் இருந்து கடந்த 13 அல்லது 14 ஆண்டுகளாக இந்த நாளைக் குறித்து நான் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறேன். இந்நாளைப் பற்றி ஏறத்தாழ 5–6 பதிவுகள் எழுதியிருப்பேன். அந்த எழுத்துகளில் நான் தொடர்ச்சியாக எழுப்பும் சில கேள்விகள் உள்ளன.

“பெண்களுக்கு இன்னும் ஏன் பெண்கள் தினம்? அவர்களுக்கு என்ன குறை இருக்கிறது?” என்று கேட்கும் ஆண்களுக்கு, என் பதிவுகளில் பொதுவான பதிலை அளித்திருக்கிறேன். அதேபோல், “பெண்கள் நாள் ஏன் அவசியம்?” என்று தெளிவில்லாமல் கேட்கும் பெண்களுக்கும், அந்த நாள் எப்படி உருவானது, ஏன் அது தேவையானது என்பதையும் என் எழுத்துகளின் மூலம் விளக்கியிருக்கிறேன்.

ஒரே விஷயத்தை திரும்பத் திரும்ப சொல்லுவது சில நேரங்களில் அலுப்பைத் தரலாம். எனினும், ஒரு கொண்டாட்டத்தின் தேவையை ஏற்கவோ மறுக்கவோ ஒரு தனிநபரின் நிலைப்பாட்டில் என்ன நியாயம் இருக்கிறது என்பதைச் சொல்லுவதில் எந்தத் தவறும் இல்லை என்பதே என் கருத்து. அதிலும், நாட்டில் அறியப்படும் எழுத்தாளராக இந்த நாளில் எனது நிலைப்பாட்டைப் பதிவு செய்வது ஒரு கடமை என்றும் நான் நினைக்கிறேன்.

பெண்கள் நன்னாள் என்பது மலர்களும் வாழ்த்துச் செய்திகளும் பரிமாறிக்கொள்ளும் ஒரு சாதாரண நாள் அல்ல. அது விடுதலைக்காகவும் சம உரிமைக்காகவும் போராடிய பெண்களின் குருதி மற்றும் உயிர்ப்பலியின் நினைவுநாள். இன்று நாம் “பெண்கள் தினம்” என்று கொண்டாடும் இந்த நாள், எண்ணற்ற பெண்களின் போராட்டங்களின் சாட்சியாக உருவானது.

அதன் வரலாறோ அதன் தாத்பரியமோ தெரியாமல் சில பெண்கள் அந்த நாளை ஒரு சாதாரண கொண்டாட்ட நாளாகவே அனுபவிக்கிறார்கள். என்னைப் பொருத்தவரையில் அதுவும் தவறு அல்ல. நாள் முழுவதும் குடும்பப் பொறுப்புகள், வேலைச்சுமைகள், சமூக அழுத்தங்கள் ஆகியவற்றுக்குள் வாழும் பெண்களுக்கு ஒரு நாள் சற்றே சுவாசிக்கவும் தங்களைத் தாங்களே கொண்டாடிக்கொள்ளவும் தோன்றினால் அது அவர்களின் உரிமை.

ஆனால் உண்மையை அறிந்த பெண்களே சில நேரங்களில் அந்த உண்மையை மறந்துபோய் நடப்பது தான் சங்கடமாக இருக்கிறது. குறிப்பாக, பொது வெளியில் அறியப்படும் பெண்களுக்கு சில சமூகப் பொறுப்புகள் இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன்.

எங்கோ ஓர் இடத்தில் ஒரு பெண்ணுக்கு நடக்கும் அநீதியை நீங்கள் இங்கிருந்து கண்டிக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. உலகில் எங்காவது ஒரு பெண் துன்பப்படும்போது அதில் நீங்கள் கட்டாயமாக பங்கெடுக்க வேண்டும் என்றும் நான் கூறப்போவதில்லை. அப்படி நீங்கள் செய்தாலும் அது அதிகப் பிரசங்கித்தனம் அல்ல. யாராவது அப்படிச் சொன்னாலும் அதற்கு நீங்கள் எதிர்வினையாற்றத் தேவையில்லை. பேசுபவர்கள் பேசுவதைத் தவிர நமக்காக வேறு எதையும் செய்யப் போவதில்லை.

ஆனால், நமது நாட்டிலேயே நாம் எதிர்வினையாற்றக்கூடிய பல விஷயங்கள் இருக்கின்றன. குறைந்தபட்சம் நம்முடைய சமூகத்தில் நடக்கும் அநீதிகளைப் பற்றிக் கூட நாம் ஏன் பேசுவதில்லை?

ஒரு பெண்ணுக்கோ, பெண் குழந்தைக்கோ பாலியல் வன்புணர்வு நேர்ந்துவிட்டால் தமிழ் ஊடகங்கள் கொஞ்சம்கூட கூச்சமின்றி பெண் கற்பழிக்கப்பட்டாள்; சொந்த தந்தையே கற்பழித்தார், சகோதரனே கற்பழித்தார் என எழுதுகிறார்கள். இப்படி சொல்வதுகூட பெண்களுக்கு எதிரான வன்முறை என்று பலமுறை கூறியாகிவிட்டது. ஒரு பெண்ணின் கற்பை அழிக்க முடியுமா? அவளுக்கு நடந்த கொடுமைக்கு நீதி கிடைக்கிறதோ இல்லையோ ஊடகங்கள் அவளின் கற்பை அழிப்பதில் தீவிரம் காட்டுவது ஏன் என புரியவில்லை. இதை களப்பெண்கள், பெண்கள் அமைப்புகள் கேள்வி கேட்க வேண்டாமா?

மேலும், பெண்களுக்கு எதிரான சட்டங்கள் — குறிப்பாக குடும்ப வன்முறை முதல் பாலியல் பலாத்காரம் வரை — இன்னமும் முழுமையான பாதுகாப்பை அளிக்கும் வகையில் செயல்படுகின்றனவா என்ற கேள்வி இருக்கிறது. இதை யார் கேட்க வேண்டும்? நமக்காக நாம் கேட்காமல் வேறு யார் கேட்பார்கள்?

கடந்த வாரம் இஸ்ரேல் தாக்குதலில் 6 முதல் 12 வயதுக்குள் உள்ள 150 மாணவிகள் உயிரிழந்ததாகவும், மேலும் தேசிய விளையாட்டு வீராங்கனைகள் 40 பேர் கொல்லப்பட்டதாகவும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. அந்த உயிர்கள் பற்றிய வேதனை எத்தனை பேரின் மனசாட்சியைக் குலைத்தது? இதைப் பற்றி யார் பேசினார்கள்? பன்னாட்டு ஊடகங்கள் அது ஒரு சாதாரண செய்தியாகவே கடந்து சென்றுவிட்டது என்பதை நாம் பார்க்கிறோம் அல்லவா? அல்லது நமது நாட்டில் யாராவது அந்த உயிர்களுக்காக ஞாயம் பேசினார்களா?

 


பெண்கள் நன்னாள் என்பது மலர்களும் வாழ்த்துச் செய்திகளும் பரிமாறிக்கொள்ளும் ஒரு விழாவாக மட்டும் மாறிவிடக் கூடாது. அது ஒரு நினைவூட்டல் — பெண்கள் இன்னும் சமத்துவத்திற்காக, பாதுகாப்பிற்காக, மரியாதைக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதைக் நினைவூட்டும் நாள். இந்த நாள் ஒரு கொண்டாட்டமாக இருப்பதற்கும் முன், அது ஒரு கேள்வியாகவும் ஒரு சிந்தனையாகவும் நமக்குள் எழ வேண்டும். அந்த சிந்தனை தான் சமூகத்தில் மாற்றத்தை உருவாக்கும் முதல் படி.

இப்போது சொல்லுங்கள், பெண்கள் நன்னாள் கொண்டாட்டத்தை நாம் எப்படி கொண்டாட வேண்டும், சகோதரிகளே…?

-யோகி

 

ஞாயிறு, 12 அக்டோபர், 2025

வீடு – என் கனவு அல்ல, என் மகனுக்கு கொடுக்கும் சின்னக் கூடு

தனக்கான கூட்டைத் தனக்குப் பிடித்த இடத்தில், யாருடைய அனுமதியோ எதிர்ப்போ இன்றி கட்டிக்கொள்ளும் சுதந்திரம் பறவைகளுக்கே உரியது. ஆனால், மனிதனுக்கு அந்த சுதந்திரம் இல்லை. குறிப்பாக, தன்னுக்கென ஒரு இல்லம் அமைத்துக்கொள்ளும் முயற்சியில், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், பண ரீதியாகவும் மனிதன் கடுமையாக உழைக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படுகிறான்.

பி40 அல்லது வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் ஏழைப் பகுதிகளுக்கான மக்களுக்கு வீடு அமைப்பது கனவுக்குப் புறம்பானது. ஏதேனும் வாய்ப்பைப் பயன்படுத்தி ஒரு இல்லத்தை வாங்கிய பின்னரும், அதன் வங்கிக் கடனை அடைத்து முடிப்பதற்குள் மரணம் வாசலில் காத்திருக்கிறது. அல்லது பண நெருக்கடியால் சிக்கி, திவாலான நிலைமை உருவாகிறது.

இந்தியத் தோட்டப் பாட்டாளிகள், மலாயாவிற்கு பாட்டாளிகளாக வந்து, மூன்றுநான்கு தலைமுறைகளாக இந்நாட்டில் வாழ்ந்தும் இன்னும் பாட்டாளிகளாகவே திகழ்கிறார்கள். நாட்டில் சிறுபான்மை இனமாக மாறிய துயரத்திற்கு மேலாக, அவர்களில் பலருக்கு இன்னும் தங்களுக்கென ஒரு இல்லம் கூட இல்லாத நிலைமை வலியை அதிகரிக்கிறது. மிக அண்மையில், தோட்டப் பாட்டாளிகளுக்கான மலிவு வீடுகள் கட்டித் தர வேண்டும் என்ற கோரிக்கை பார்லிமென்டிலும் ஒலித்ததுஅந்தக் குரல் இவ்வளவு சீக்கிரத்தில் யாராலும் மறக்க முடியாது.

இந்த நிலையில் நானும் எனது இணையர் ஓவியர் சந்துருவும் வீடு குறித்த எந்த ஓர் ஆவலும் ஆசையும் கொள்ளாமலே இருந்தோம்.

வீடு வாங்குவது என் கனவும் அல்ல. என் தேவை ரொம்பவும் எளிமையானது. தேவைக்கு அதிகமாக உணவைக்கூட நான் உண்ண மாட்டேன் என்றால் என் எளிமையை புரிந்து கொள்ளுங்கள். வாழ்க்கையில் பெரிதாகப் பிரபஞ்ச ஆசைகள் எதுவும் வைத்துக் கொள்ளாதவள் நான்.

குழந்தை இல்லாததால், “எங்களுக்கு வீடு தேவையில்லைஎன்ற முடிவில் நானும் சந்துருவும் உறுதியாக இருந்தோம். அந்த முடிவு எங்களுடன் 17 ஆண்டுகளாக உடன் வந்தது. மாதந்திர சம்பளம் ஒரு மாதத்திற்கு அவரவருக்கு போதுமானதாக இருக்க வாழ்க்கையை எந்த சேமிப்பும் இல்லாமல் நிம்மதியாகவே ஓட்டிக்கொண்டு இருந்தோம். அதில் நான் மட்டும், வருடத்துக்கு ஒருமுறை விமானப் பயணம் செய்துவிடுவேன்அதுவே எனது சிறிய ஆடம்பரம்.



2023 நவம்பர் மாதம் மகன் பிறந்தான். ஒருகாலத்தில் வேண்டாம் என்று எண்ணிய வீடு, அவனுக்காகதேவையானதுஎன்று

முடிவு செய்தோம். வயதின் மறுபக்கத்தில் நிற்கும் எங்களுக்குப் பெரிய சவாலான முடிவு இது. இன்றைய முதலாளித்துவச் சூழலில், வாழ்க்கைச் செலவுகள் ஏற்கனவே கழுத்தை நெருக்கிக் கொண்டிருக்கின்றன.

மகனுடைய காலம் எப்படி இருக்குமோ? ங்களால் அவனுடைய  பயணத்தில் நீண்ட நாள் செல்ல முடியாது. எந்த நேரமும் நின்றுபோகக்கூடிய கடிகாரம் போலத்தான் நாங்கள். இந்நிலையில் வீடு வாங்குவது மிகப் பெரிய முடிவு. என்றாலும் மகனுக்காக இந்த சுமையை ஏற்றிருக்கிறோம்.

எங்கள் நிலையில், வாங்கியிருக்கும் வீடு கொஞ்சம் அதிகமான பொறுப்பு தான். ஆனால், மூன்று தலைமுறையாக வீடு வாங்க முடியாத குடும்பத்தைச் சேர்ந்த எங்களைப் பொறுத்தவரைஅந்த வரலாற்றை உடைத்துப் புதிய பாதை திறந்திருக்கிறவன் என் மகன்.

2024-ஆம் ஆண்டு ஜனவரி 20-ஆம் தேதிஅந்த வீட்டுக்காக கையெழுத்திட்டோம். சகல வசதிகளுடன் கூடிய ஒரு மாடர்ன் கான்டோமினியம் வீட்டை நாங்கள் வாங்கியுள்ளோம்.  19/8/2025 அதன் சாவி எங்கள் கைகளில் கிடைத்தது. அந்தச் சாவி, ஒரு கதவை மட்டும் அல்ல; எங்கள் மகன் அவனுக்காக திறக்கப்போகும் புதிய எதிர்காலத்தின் கதவாகும்.