வெள்ளி, 4 செப்டம்பர், 2026

தோழர் வரதராஜுவின் வாழ்க்கைக்குறிப்பும் தோழர்களின் அஞ்சலியும்

தோழர் வரதராஜு குறித்த சிறு வாழ்க்கைக்குறிப்பும்                  

தோழர்களின் நினைவு அஞ்சலியும்

                                                                                                     

ஒரு  தோழரோ அல்லது இந்தச் சமூகத்திற்காக தன்னை அர்ப்பணித்தவரோ அல்லது மக்கள் பணி செய்தவரோ,  இந்தப் பூவுலகை விட்டு மறைவது என்பது அவரது உடல் மறைவாக மட்டுமே இருக்கலாம். ஆனால், அவர் வாழ்ந்த கொள்கையும், அவர் கொண்டிருந்த நம்பிக்கையும், அவர் நடந்து சென்ற பாதையும், அவர் விதைத்த சிந்தனைகளும் மறைந்துவிடுவதில்லை. குறிப்பாக, அதிகாரத்திற்கும் அநீதிக்கும் எதிராகத் தனது வாழ்நாளையே அர்ப்பணித்த ஒரு காம்ரெட்டின் வாழ்க்கை என்பது, அவரது காலத்தோடு முடிந்துவிடும் ஒன்றல்ல; அது அடுத்த தலைமுறையினரிடம் கேள்விகளையும், சிந்தனைகளையும் விட்டுச் செல்கிறது.

தோழர் வரதராஜூ அவர்கள் மலேசிய வரலாற்றில் இடம்பிடித்திருக்க வேண்டியவர், வெளிநாட்டில் வசிக்கும் இடதுசாரிச் தோழர்கள் அறிந்த அளவிற்குகூட உள்ளூர் வாசிகள் அறியவில்லையே என்பது ஒரு வருத்தம்தான்.

“அதிகார வர்க்கத்தை எதிர்த்தால் காணாமல் போய்விடுவீர்கள்” என்று முதலாளித்துவச் சக்திகள் எழுப்பும் அச்சுறுத்தல்கள் உண்மையாகிவிடுகின்றனவா? அல்லது, அவரைப் போன்றவர்களின் வாழ்க்கையையும் போராட்டங்களையும் பதிவு செய்து பாதுகாப்பதில் நாம்தான் தவறிவிட்டோமா? எங்கே இந்தப் பிழை ஏற்பட்டிருக்கிறது என்பதை நாம் அலசி ஆராய வேண்டியது அவசியம் என்று எனக்குத் தோன்றுகிறது. அவரை நன்கு அறிந்தவர்களும், அவரைப் பற்றி பேசக்கூடிய இடத்தில் இருந்தவர்களும், அவரைப் பேசாமல் விட்டுவிட்டார்களோ என்ற கேள்வியும் என் மனதில் எழுகிறது.

தோழர் வரதராஜூ அவர்கள், தனக்கென ஒரு சித்தாந்தத்தை வகுத்துக்கொண்டு, அந்தச் சித்தாந்தத்திலிருந்து இறுதிவரை விலகாமல் வாழ்ந்து காட்டியவர். அவர் நம்பியதைப் பேசினார்; பேசியதை வாழ்வில் கடைப்பிடித்தார். அதனால்தான் அவரது வாழ்க்கை வெறும் ஒரு தனிமனிதனின் வாழ்க்கையாக அல்லாமல், ஒரு தலைமுறையின் போராட்ட வரலாற்றின் ஒரு பகுதியாகப் பார்க்கப்பட வேண்டியதாகிறது.

இன்று அவர் இந்தப் பூவுலகை விட்டுப் பிரிந்துவிட்டார். ஆனால், நாளை யாரேனும் அவரைப் பற்றி அறிந்துகொள்ளத் தேடினாலும், அல்லது அவரது வாழ்க்கையையும் போராட்டங்களையும் ஆய்வு செய்ய நினைத்தாலும், இங்கே பதிவு செய்யப்பட்டிருக்கும் இந்தத் தகவல்கள் அவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் பயனுள்ளதாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. (அவர் இருக்கும்போதே தேடாதவர்கள், இனியும் தேடுவார்களா என்பது உங்களில் யாரோ ஒருவர் முணுமுணுப்பதும் எனக்கு கேட்கவே செய்கிறது)

எனினும், ஒரு காம்ரெட்டின் வாழ்க்கை காலத்தால் மறக்கப்படக்கூடாது. அவர் போராடிய காரணங்கள், அவர் நம்பிய கொள்கைகள், அவர் சந்தித்த மனிதர்கள், அவர் விட்டுச் சென்ற தடங்கள் இவை அனைத்தும் பதிவு செய்யப்பட வேண்டியவை.

என் மதிப்புமிகு தோழர் வரதராஜூ அவர்களுக்கு, அவருக்கு மதிப்புமிகு தோழராக இருந்த இந்த யோகியின் சின்னஞ்சிறிய சமர்ப்பணம்தான் இந்தப் பதிவு.

போய் வாருங்கள், காம்ரேட்...                                             

உங்கள் போராட்டப் பாதை எங்களின் நினைவில் தொடரும்.

செவ்வணக்கம், தோழரே.

தோழர் வரதராஜுவின் வாழ்க்கைக்குறிப்பு


தோழர் மு.வரதராஜூ 08/06/1947-ஆம் ஆண்டு, சிலாங்கூர் மாநிலத்தில், சுங்கை புலோ பூஜ்ஜோங் தோட்டத்தில் பிறந்தார். உடன்பிறப்புகள் ஐவர். அவர் குடும்பத்தின் இரண்டாவது பிள்ளை. தகப்பனார் பெயர் முருகன். தாயார் பெயர் பழனியம்மாள். தோழர் வரதராஜூ RRI  தோட்ட தமிழ் பள்ளி ஐந்தாம் வகுப்பு வரை படித்திருக்கின்றார். குடும்ப வறுமை காரணமாக அவர் 13 வயதிலேயே வேலைக்கு சென்றார். பின் 1967-ஆம் ஆண்டு தனது 20-வது வயதில் திருமணம் செய்துக்கொண்டார்.  அவரது மனைவியின் பெயர் ராஜமணி. இவர்களுக்கு நான்கு குழந்தைகள் பிறந்தார்கள். மூத்தவர் மகள் உமாதேவி. இரண்டாவது மகன் ஜெயக்குமார். மூன்றாவது மகன் மணிமாறன்.  நான்காவது மகள் தமிழரசி. தனது அரசியல் வாரசு என தோழர் ஜெயக்குமாரை அவர் என்னிடம் கூறியிருக்கிறார்.


ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, சிங்கப்பூர், இலங்கை, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் செய்திருக்கிறார். அவர் குறித்த ஆவணப் படம் ஒன்றை இலங்கை மலையகத்தைச் சேர்ந்த தோழர் கிங்ஸ்லி என்பவர் எடுத்திருக்கிறார். சுமார் ஒரு மணிநேரம் கொண்ட ஆவணம் படம் அது. இலங்கை மற்றும் மலேசியாவில் அது வெளியிடப்பட்டது.

தோழர் வரதராஜூ பயணித்த சில அமைப்புகளின் தகவல்

1. மலேசியா திராவிட கழகம் பத்து தீகா கிளை

2. தொழிற்சங்கம் கெமிக்கல் யூனியன்

3. பினாங்கு பயனீட்டாளர் சங்கம்

4. மண்ணின் தோழர்கள் கழகம்

5. கிள்ளான் பயனீட்டாளர் சங்கம்

6. உலகத் தமிழர் நிவாரண நிதி

7. செம்பருத்தி மாத இதழ்

8. சிலாங்கூர் சுற்றுச்சூழல் சங்கம்

9. மலேசியா பயனீட்டாளர் ஆலோசகர் சங்கம் 

(சில தகவல்களை கொடுத்து விவரங்களை சரிபார்த்து உதவிய தோழர் ஜெயக்குமார் அவர்களுக்கு நன்றி)

 நினைவாஞ்சலிகள்  

மாபெரும் போராட்டவாதியை  (திரு.வருதராஜூ)  இழந்து விட்டோம்

அன்னாரின் அயராத சேவை மக்கள் மதில் என்றும் நிலைத்திருக்கும். தோட்டத்தில் பிறந்து வளர்ந்த திரு.வருதராஜு ஆரம்ப காலக் கட்டத்தில் தொழிற்சங்க வாதியாக, அறிவு இயக்கவாதியாக தொடங்கினார். கிள்ளான் சா ஆலம் வட்டாரத்தில் இவரை பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. சா ஆலம் வட்டார தோட்டத்தின் மூத்த குடிகளில் ஒருவர் அண்ணன் என்றால் அது மிகையாகாது.

பயனிட்டாளர் சங்கம், கிள்ளான் பயனிட்டாளர் சங்கம், மண்ணின் தோழர் கழகம் ஆகியவற்றில் இணைந்து தீவிர தொண்டாற்றினார்.

தோட்டத் தொழிலாளர் வீட்டுடமை பிரச்சனை, தொழிலாளர் நலன் என்று போராடினார். தோட்டத் தொழிலாளர்கள் பிரச்னையை மையமாக கொண்டு 3 நூல்கள் வெளியிட்டுளார். 

பி.பி.நாராயணன் அவர்களை எதிர்த்து போராடிய சபாக் பெர்ணம் வட்டாரத்தை சேர்ந்த திரு.அர்சுணன் அவர்களோடும் இணைந்து பல்வேறு சேவைகளை செய்து வந்தார். பினாங்கு பயனிட்டாளர் சங்க தலை ஹாஜி இட்ரிஸ் அவர்களுடன் இணைந்து நற்சேவையாற்றினார். 

ஸ்டார் நாளிதழின் மூத்த நிருபர் திரு.பரதன் அவர்களுடனும் நல்லுறவு கொண்டு பல்வேறு செய்திகளை முன்னிலை படுத்தியுள்ளார். பல தொழிற்சாலைகள் மூடும் தருவாயில் தொழிலாளர்கள் நலன் காக்க போராடினார். அவரது இச்சேவையில் ஒரு பத்திரிகையாளனாக நானும் அவரோடு இணைந்து பணியாற்றினேன் என்பதில் பெரும் மகிழ்வு அடைகின்றேன். 1969 முதல் ஜ.செ.க.வின் தீவிர தொண்டனாக இருந்து வந்தார். தனது மாற்றுக் கருத்தை எத்தருணத்திலும் முன்னிலை படுத்துவதில் துணிகரமாக செயல் படுவதில் வல்லவர் அமரர் வருதராஜூ என்றால் அது மிகையாகாது.

அன்னாரின் மறைவில் அவரது நற்சேவை நாம் நினைவு கூறுவதே சிறந்த சேவை. உண்மையான தொண்டனனுக்கு என்றும் மறைவில்லை. 

சுப்பையா டாமான்சாரா

 ......................................

மதிப்புமிகு தோழர் வரதராஜூ அவர்களின் மறைவு செய்தி எங்களுக்கு மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தொழிலாளர் நலன், சமூகநீதி, மனித உரிமை, நுகர்வோர் உரிமை மற்றும் தமிழ்ப்பள்ளிகளின் உரிமை என சமூகத்தின் பல்வேறு தளங்களிலும் தனது குரலை உயர்த்தி, முன்நின்று போராடியவர் தோழர் வரதராஜூ.

ஒரு சமூகப் போராளியை இன்று நாம் இழந்துவிட்டோம். அவரது மறைவு ஒரு தனிமனித இழப்பு மட்டுமல்ல, சமூகநீதிக்காகத் தொடர்ந்து போராடிய ஒரு தலைமுறையின் முக்கியமான குரலுமாகும். அவர் இன்று நம்மிடையே இல்லை. ஆனால் அவர் எழுப்பிய  கேள்விகளும்,  உரிமை போராட்டங்களும், பாமர மக்களுக்கு பல வெற்றிகளை பெற்று தந்துள்ளது என்பதை மறுக்க முடியாது.

கனத்த இதயத்துடன் தோழர் வரதராஜூ அவர்களுக்கு எங்களது மரியாதை அஞ்சலியை செலுத்துகிறோம். அவர் மறைந்தாலும், மக்களுக்காக அவர் போராடிய வரலாறும், விட்டுச் சென்ற போராட்டச் சுவடுகளும் என்றும் நினைவுகூரப்படும்.

ஆழ்ந்த இரங்கலுடன்,                                                                                                                  செம்பருத்தி தோழர்கள்

 29.8.2026

...................................

 M. வரதராஜூதாடிக்காரரின் மறைவு

சிலரால் ராஜூ என்றும், அல்லது வெறுமனே “தாடிக்காரர்” என்றும் அழைக்கப்பட்ட M. வரதராஜூ, நான் எனது அரசியல் மற்றும் சமூகச் செயல்பாடுகளில் ஆரம்பகாலத்தில் சந்தித்த அடிமட்டச் செயற்பாட்டாளர்களில் ஒருவராவார்.

அவரை Child அமைப்பைச் சேர்ந்த தோழர் ஆறுமுகம் மற்றும் ஸ்டார் பத்திரிகையின் செய்தியாளரான பரதன் ஆகியோர் எனக்கு அறிமுகப்படுத்தினார்கள். அவரை நான் முதன்முதலில் மிட்லண்ட் எஸ்டேட்டில் சந்தித்தேன். அவர் எப்போதும் ஒரு தோள்பை மற்றும் குறிப்புப் புத்தகத்தை எடுத்துச் செல்வார். அவரது பேச்சு கரடுமுரடாகவும் நேரடியாகவும் இருக்கும். தாடி சீரற்றதாக இருக்கும்; பழைய பாணியிலான மூக்குக் கண்ணாடியை அணிந்திருப்பார். ஆனால் அவரை எப்படிப் பார்த்தாலும், அவரிடம் ஒரு தனித்துவமான கம்பீரம் இருந்தது.

அவர் மலேசிய இயற்கை நண்பர்கள் அமைப்பு (Sahabat Alam Malaysia – SAM) மூலம் தீவிரமான சுற்றுச்சூழல் செயற்பாட்டாளராக இருந்தார். நம்பிக்கையில் அவர் ஒரு நாத்திகர். அவரது ஆரம்பகால சமூக ஈடுபாடு மலேசிய திராவிடர் கழகத்துடன் தொடர்புடையதாக இருந்தது.

தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக அவர் போராடினார். தமிழ் சமூகத்தைப் பாதிக்கும் பல்வேறு பிரச்சினைகளிலும், குறிப்பாக தமிழ்ப் பள்ளிகள் தொடர்பான விவகாரங்களிலும், அவர் தீவிரமாகக் குரல் கொடுத்தார்.

மேலும், NUPW தொழிற்சங்கத்தையும் அவர் கடுமையாக விமர்சித்தார். அந்தத் தொழிற்சங்கம் தோட்டத் தொழிலாளர்களைச் சுரண்டுவதன் மூலம் இயங்கி வருவதாக அவர் குற்றம்சாட்டினார். அவரது வெளிப்படையான மற்றும் துணிச்சலான பேச்சின் காரணமாக, அந்தத் தொழிற்சங்கம் அவருக்கு எதிராக அவதூறு வழக்கொன்றையும் தொடர்ந்தது.

பின்னர், தனது மகனையும் சமூகச் செயல்பாடுகளில் ஈடுபடுத்திய அவர், கிள்ளான் நுகர்வோர் குழுவின் முன்னோடிகளில் ஒருவராகவும் இருந்தார்.

எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் மலேசியத் தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய ஒரு முன்னோடியாக இருந்தார். அதற்காகவே அவர் என்றும் நினைவுகூரப்படுவார்.

ராஜூ பல தமிழ் நூல்களையும் எழுதியுள்ளார். அவர் எழுதிய நூல்களின் சரியான எண்ணிக்கை தெளிவாகத் தெரியவில்லை. அவரது பெரும்பாலான எழுத்துக்கள் இந்தியாவில் அச்சிடப்பட்டதால், அவற்றில் சில சுங்கத் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் சிலர் கூறுகின்றனர்.

நேற்று இரவு அவர் மறைந்த செய்தியைக் கேட்டவுடன், நான் அவரது வீட்டிற்குச் சென்றேன். அவருக்கு 80 வயது. கடந்த சில ஆண்டுகளாக அவர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட சிலர், அவருக்கு இதைவிட அதிக வயது இருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.

அவரது உடல்நிலை குறித்து அறிந்தபோது அவரை நேரில் சென்று சந்திக்க வேண்டும் என்று நான் எப்போதும் நினைத்திருந்தேன். ஆனால் அந்த வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை என்பது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

அவரது இறுதிச் சடங்கில் அதிகமானோர் கலந்து கொள்ளாதது ஆச்சரியமாக இருந்தது. இத்தனை பேருக்கு உதவிய ஒரு செயற்பாட்டாளரின் இறுதி நிகழ்வில் இவ்வளவு குறைவானவர்கள் இருப்பது வருத்தமளித்தது. ஒருவேளை நீண்ட மெர்டேகா விடுமுறை காரணமாக இருக்கலாம். இருந்தபோதிலும், சிங்கப்பூர் உள்ளிட்ட தொலைதூரப் பகுதிகளிலிருந்தும் தோழர்களும் நண்பர்களும் வந்து அவருக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.

என்னை மிகவும் பாதித்த ஒரு விஷயம் என்னவென்றால், ராஜூ ஷா ஆலம் நகரில் உள்ள குறைந்த விலை அடுக்குமாடிக் குடியிருப்பில் வாழ்ந்து வந்தார். அவர் ஒருபோதும் செல்வந்தராக மாறவில்லை. அவரது இறுதிச் சடங்கும் மிகவும் எளிமையாகவே இருந்தது; அது அவருடைய விருப்பத்திற்கேற்றதாக இருந்திருக்கலாம்.

அவரது வாழ்க்கையையும் பங்களிப்புகளையும் பாராட்டி பலர் அவருக்கு அஞ்சலி உரைகளை நிகழ்த்தினர். ஒரு சோசலிசக் கட்சியின் துணைத்தலைவராக, நானும் சில வார்த்தைகள் பேச அழைக்கப்பட்டேன். இறுதியில், “அவரது வாழ்க்கையை நாம் கொண்டாடிய அதே நேரத்தில், அவரிடம் இருந்து விடைபெற வேண்டியிருக்கிறது” என்று கூறி எனது உரையை நிறைவு செய்தேன்.

ராஜூ – அந்தத் தாடிக்காரர் – இன்று நம்மிடையே இல்லை.

அவர் சர்ச்சைக்குரியவராக இருந்தார். அவர் கரடுமுரடானவராகவும் இருந்தார். ஆனால் உலகத்தின் ஆடம்பரங்களுக்காக ஒருபோதும் தனது கொள்கைகளில் சமரசம் செய்யாமல், இறுதி வரை தானாகவே, தனக்குரிய விதத்தில் வாழ்ந்த மனிதராக அவர் நினைவுகூரப்படுவார்.

S. அருட்செல்வன்
30 ஆகஸ்ட் 2026

 ....................................

தோழர் வரதராஜூவுடன் முதல் சந்திப்பு

தோழர் வரதராஜூ அவர்களை நான் 2013-ஆம் ஆண்டு ஒரு நீதிமன்ற வழக்கின்போதுதான் சந்தித்தேன். அப்போது நான் நம்நாடு பத்திரிகையில் நிருபராக பணியில் இருந்தேன். என்னை தொலைபேசியில் தொடர்புக்கொண்டு தோழர் வரதராஜுதான் அழைத்திருந்தார். நிலநிதி கூட்டரவு சங்கம் மீதான வழக்கு அது. பாகான் டத்தோவைச் சேர்ந்த ஒரு தோட்டத்து மக்கள் நில முறைக்கேடு தொடர்பான வழக்கு. பல வருடங்கள் இழுப்பறியில் இருந்த வழக்கு. பத்திரிகையாளர் செய்தி சேகரிப்புக்கு நான் ஒரு நிருபர் மட்டுமே போய் இருந்தேன். அப்போது சுமார் 7 தமிழ்ப்பத்திரிகைகள் செயல்பட்டுக் கொண்டிருந்தன. ஏன் அவர்கள் அவரவில்லை என்பது கேள்வியை ஏற்படுத்தினாலும், அதற்கான விடை எனக்கு எனது பத்திரிகை அலுவகத்திலேயே கிடைத்தது.

அன்றைய தினம் மாலைவரை நான் வரதராஜு தோழருடன் உடன் இருந்தேன். அந்த வழக்கு தொடர்பான பலவிவரங்களை என்னோடு பகிர்ந்துக்கொண்டார். தோட்ட மக்கள் மீது அவர் கொண்டிருந்த ஈடுபாடும், கடமையும் எனக்கு அவர்மீது பெரிய மரியாதையை ஏற்படுத்தின.

அதன் பிறகு தோழருடனான நட்பு இத்தனை ஆண்டுகள் நீண்டு வந்திருக்கிறது. எனது புத்தக வெளியீட்டுக்கு அவரை தலைநகருக்கு அழைத்திருந்தேன். வந்து கலந்துக்கொண்டு ஆதரவு தெரிவித்தார். அவருக்கு அங்கு மரியாதை செய்யப்பட்டது. நான் பத்திரிகையில் என்ன எழுதினாலும் அது அவர் பார்வைக்கு போய்விட்டால் அழைத்து பேச தவறியதில்லை. இந்த ஆண்டு ‘சயாம்-பர்மா மரண ரயில்’ தொடர்பான தொடர் கட்டுரையை பத்திரிகையில் எழுதிவந்த போது தோழர் வரதராஜூ தொலைபேசியில் அழைத்து அது தொடர்பாக பேசினார். எனக்கு வாழ்த்தினை தெரிவித்தார். தோழர் வரதராஜுவுடன் சில முரண்பாடுகள் இருந்தாலும் அவர் அவருக்கு உண்மையாக இருந்த ஒரு காரணத்தினாலேயே அவர் மீதான மதிப்பு எனக்கு அதிகம் இருந்தது.

அவரின் இறுதி மரியாதையின் போது சுமார் 30 பேர் மட்டுமே வந்திருந்தனர் என்பது எனக்கு மிகுந்த வருத்தத்தை கொடுக்கிறது. ஏமாற்றத்தைக் கொடுக்கிறது. தனக்காக அவர் வாழ்ந்ததைவிட பாட்டாளி மக்கள் பிரச்னைகளுக்குதான் அவரின் வாழ்வின் பெரும்பகுதி கழிந்திருக்கிறது. அதற்கான மதிப்பை இந்த சமூகம் கொடுக்க வேண்டாமா?

-யோகி 

........................................

தோழர் வரதராஜின் மரணச் செய்தி எனக்கும் என் துணைவியாருக்கும் மிகுந்த சோகத்தையும் வருத்தத்தையும் தருகிறது.   மலேசியத் தொழிலாளர் வர்க்கத்தின் மீது ஆழ்ந்த அக்கறை கொண்டுருந்தவர் அவர்.

தோழர் SVR

 

வியாழன், 3 செப்டம்பர், 2026

வரதராஜூ எனும் நான் - நேர்காணல் (2022)

தோழர் வரதராஜூ அவர்கள் 29/8/2026  அன்று இயற்கை எய்தினார். அவருக்கு மரியாதை செய்யும் விதமாகவும் அடுத்த தலைமுறைக்கு அவரின் அறிமுகம் தேவை எனும் நோக்கத்திலும் கடந்த 2022- ஆம் ஆண்டு  செய்யப்பட்ட நேர்காணலை மீண்டும் எனது அகப்பக்கத்தில் பகிர்கிறேன். தோழருக்கு செவ்வணக்கம். 


இலங்கை மற்றும் தமிழ்நாட்டின் சமூக செயற்பாடுகள் மற்றும் களப்போராளிகளை சந்திக்கும்போ
து, அவர்களில் சிலர் என்னை விசாரிக்கும் ஒரு நபராக இருப்பவர் தோழர் வரதராஜூ. நமது நாட்டில் வரைக்குறித்து யாரைக் கேட்டாளும் அவர் யார்? என்று திருப்பி நம்மிடமே கேட்பார்கள். வெளிநாட்டு தோழர்கள் மத்தியில் நன்கு  அறிமுகமாகியிருக்கும் நமது நாட்டின் தோழர் வரதராஜூவை நான் எப்போது சந்தித்தேன் தெரியுமா?

நான் அப்போது ‘நம்நாடு’ தினசரி பத்திரிகையில் நிருபராக பணியில் இருந்தேன். 2013- ஆம் ஆண்டு, பாகான் டத்தோ தோட்ட தொழிலாளர்களின் வீடு முறைக்கேடு தொடர்பான வழக்கில் அப்பாட்டாளிகளுக்கு ஆதரவாக நின்ற தோழர் வரதராஜூவை நான் கோலாலம்பூர் உச்ச நீதிமன்ற வளாகத்தில் சந்தித்தேன். அதற்கு முன்பு அவரைப்பற்றிய அறிமுகம் இருந்தாலும் அவரைச் சந்திக்கும் வாய்ப்புகளோ அல்லது தொடர்புக்கொள்ளும் வாய்ப்புகளோ மிக கடினமாக இருந்தது. காரணம் கடைநிலைப் போரளியான அவர் முகனூல், தொலைப்பேசி உள்ளிட்ட சாதனங்களிலிருந்து தள்ளியே இருந்தார். அவரைச் சந்தித்த முதல் நாளில் அவருக்கு என்னைப்பற்றிய விவரங்கள் தெரிந்திருந்தது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அது என் எழுத்துக்குண்டான அங்கிகாரம் என இப்பவும் நம்புகிறேன்.

இந்தப் புகைப்படம் முதல் சந்திப்பில் எடுத்தது

அந்த வழக்கு தொடர்பான நீதிமன்ற விசாரனையைச் செய்தியாக்க மற்ற எந்தப் பத்திரிகையிலிருந்தும் நிருபர்கள் வரவில்லை. ஒரே நிருபராக அன்றையதினம் நான் மாலைவரை அவருடன் உரையாடி செய்திகளைச் சேகரித்தேன். அந்தச் சந்திப்பிலிருந்து எங்களின் நட்பு அவரின் இறுதிகாலம் வரையில் தொடர்ந்திருந்தது.

சில ஆண்டுகளுக்கு முன்பு (2022) தோழர் வரதராஜூவை சந்தித்து ஓர் இதழுக்காக நேர்காணல் செய்திருந்தேன். அந்த நேர்காணலுக்கு தமிழ்நாட்டின் மிக முக்கியமான தோழரும் எழுத்தாளருமான தோழர் எஸ்.வீ.ஆர், தோழர் வரதராஜூவுக்கு கொடுத்திருக்கும் அறிமுகத்திலிருந்து ந்த நேர்காணலை நான் தொடங்கினேன். அதை இப்போது உங்களோடும் பகிர்ந்துக் கொள்கிறேன்.  

 

தோழர் எஸ்.வீ.ராஜதுரை

சுற்றுச்சூழல் தொடர்பாக  பினாங்கில் 1987-ஆம் ஆண்டு நடந்த  ஒரு சர்வதேச மாநாட்டின்போது தோழர் வரதராஜு எனக்கு அறிமுகமானார். குறிப்பிடத்தக்க கல்விப்புலம் எதனையும் பெற்றிராத அவர், தம் நாட்டு நடப்புகளை, குறிப்பாக மலேசியாவில் உள்ள தோட்டத் தொழிலாளர்களின் நிலையை, மிகக் கூர்மையாக அவதானித்து வந்தவர் என்பதை அறிந்து கொண்டேன். ஏறத்தாழ மூன்று ஆண்டுகள் எங்களுக்கிடையே தொலைபேசி வழியாக நடந்த உரையாடல்களையொட்டி, அவரது அழைப்பின் பேரில் 1990-இல் மீண்டும் மலேசியாவுக்கு வந்து அவருடன் ஒருமாத காலம் தங்கியிருந்தபோது இரப்பர், செம்பனைத் தோட்டங்கள் சிலவற்றைப் பார்வையிடவும் அங்குள்ள தொழிலாளிகளின் ( அவர்கள் பெரும்பாலும் தமிழர்கள்) அவல நிலையைப் பார்க்கவும் வாய்ப்புக் கிடைத்தது.

அந்தத் தொழிலாளிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்குப் பதிலாக அந்த நாட்டில் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டிருந்த ஒரே தொழிற்சங்கத்தின் தலைவராக இருந்த நாராயணன் என்ற மலையாளி எப்படியெல்லாம்  தொழிற்சங்கத்தின் நிதி ஆதாரங்களைச் சுருட்டிக் கொண்டிருந்தார் என்பதைப்  பற்றிய ஏராளமான தகவல்களையும் ஆவணங்களையும் தனியொரு மனிதராகத் திரட்டி வைத்திருந்தார் தோழர் வரதராஜு. பின்னர் அவர் ஆவணப்படுத்தி வந்தவற்றை ஒரு நூலாகக் கொண்டுவரும் பொருட்டு சென்னைக்கு வந்திருந்தார்.

அந்த நூலாக்கத்தில் அவருக்கு உதவி செய்ததுடன் அதற்கான முன்னுரையையும் எழுதித் தந்தேன்.  2002-ஆம் ஆண்டில் சென்னை வாழ்க்கையை முடித்துக் கொண்டு கோத்தகிரியில் நானும் என் துணைவியும் குடியேறினோம். 2007-2008 -இல் நான் திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வந்த போது அங்கு ஒருமுறை வந்திருந்தார் தோழர். இந்த இடைக்காலத்தில் அவர் மலேசியாவில் வர்க்கரீதியாகவும் சாதிரீதியாகவும் ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றியாருடைய உதவியுமில்லாமல் அவரே சில நூல்களை எழுதினார்.

மலேசியாவில் அவருடன் ஒரு மாத காலம் நான் தங்கியிருந்தபோது, முக்கியமான ஒரு சட்டத்தரணிஆங்கில நாளேடொன்றின் முக்கிய நிருபர் உட்பட படிப்பறிவு மிகுந்த பலர் தோழர் வரதராஜுவை மிக உயர்வாக மதித்து வந்ததைக் கண்டேன். தொழிலாளிவர்க்கக் குடும்பமொன்றில் பிறந்து சுய முயற்சியாலும் நேரடி அனுபவங்களாலும்  உழைக்கும் மக்களின் பிரச்சினைகளைப் பற்றிய ஆழமான அறிவைப் பெற்றிருந்த  தோழர் வரதராஜு சற்று முன்கோபம் உடையவர். நேர்மைக் குறைவுடையவர்களைச் சட்டென்று தூக்கியெறிந்துவிடுவார். ஆனால், அவரது இலட்சியங்களுடன் உடன்படுவர்கள் மீது அவரது இதயத்திலிருந்து எப்போதும் வற்றாத அன்பும் கருணையும் பாசமும்  பீறீட்டு வந்து கொண்டிருக்கும். மலேசியாவிலுள்ள முற்போக்காளர்களிடையே அவருக்கு உரிய அங்கீகாரம் இதுவரை கிடைக்கவில்லை என்று கருதுகிறேன்.’

-எஸ்.வி.ராஜதுரை 

இனி தோழர் வரதராஜூ அவர்களுடனான உரையாடாலிருந்து..

யோகி: தோழர் வரதராஜூ என்பவர் யார்? உங்களின் பின்னணிதான் என்ன?

தோழர் : நான் ஒரு சாமானிய மனிதன். என் பின்னணியும் தோட்டத்திலிருந்தே தொடங்குகிறது. பெரிய கல்வித்தகுதியும் எனக்கில்லை. அம்மா என் சிறுவயதிலேயே காலமாகிவிட்டார். உடன்பிறப்புகள் ஐவர். நான் இரண்டாவது பிள்ளை. அப்பாதான் எங்களை கவனித்துக்கொண்டார்.

குடும்பத்தின் வறுமை காரணமாக குழந்தை தொழிலாளியாக 13 வயதில் புக்கிட் ஜெலுத்தோம் தோட்டத்தில்வேலைக்குச் செல்ல தொடங்கினேன். 4 ஆண்டுகள் தோட்டத் தொழிலாளியாக செம்பனைக் காட்டில் வெளிக்காட்டுதொழிலாளியாக வேலை செய்தேன். ஒரு நாளைக்கு 0.80 சென் சம்பளம் அப்போது. என் குடும்பம் வறுமையின் பிடியிலிருந்து மீளமுடியாத நிலையில் சூழல் இன்னும் மோசமடைந்தது. தோட்டத்து கிராணி வழியாக மாற்றுவேலையை வேண்டினேன். அவர் எனக்கு செம்பனைக் குழையை தூக்கும் வேலையை மாற்றிக்கொடுத்தார்.

1964-களில் செம்பனைக் குழைகளை தள்ளுவண்டியில் வைத்துதள்ளிக்கொண்டுப்போகும் வசதிவரவில்லை. கூடையில் தூக்கிவைத்து தலையில் சுமந்துச் சென்று முச்சந்தியில் இறக்க வேண்டும். சாதாரணமான வேலையில்லை அது. 40-50 கிலோவரை அது கனக்கும். பிறகு அதிலிருந்து செம்பனைக்குழையை அறுக்கும் வேலையையும் பழகிக்கொண்டேன். அந்தக் காலக்கட்டத்தில் கூலியாட்களை அதிகாரத்தில் இருப்பவர்கள் அடிமைகளைப்போல நடத்துவார்கள்

சுய மரியாதை சுடுபடுவதை ஜீரணிக்கமுடியாமல் அதை எதிர்க்கும் குணம் என்னிலிருந்து வெளிப்பட்டது. எனக்கு எந்தச் சித்தாந்தமும் படிப்பினையும் இல்லை என்றாலும் இயற்கையாகவே இருந்த தன்மானம் அவர்களிடம் குரலை உயர்த்தியது. பின் ஒருமுறை அது கைகளப்பில் முடிந்தது. இதன் காரணமாக தோட்டத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டேன். பின் தோட்டத்திலிருந்து வெளியாகி நான் Sungaiway -யில் இருக்கும் தொழிற்சாலைக்கு வேலைக்குச் சென்றேன். அப்போது அந்த இடத்தை 10-ஆம் கட்டை என்று சொல்வார்கள். அந்த இடத்தில் ஒரு கிராமம் இருந்தது. அங்கே நண்பருடன் தங்கிக்கொண்டேன். தற்போது அந்த இடத்தில் மோட்டோரோலா நிறுவனம் இருக்கிறது

அதன்பிறகு சீன நிறுவனத்தின் ஈயக் கப்பலுக்கு வேலைக்குச் சென்றேன். அந்தக் கப்பலில் சில தொழில்நுட்ப வசதியிருந்தது. பூமியில் எங்கு ஈயம் இருக்கிறது என அந்தக் கப்பல் கண்டறியும். அங்கே ஈயத்தை தோண்டியெடுத்து, அங்கேயே ஈயத்தையும் கழிவுகளையும் பிரித்தெடுக்கும் பணி. 1968-ஆம் ஆண்டுவரை அங்கு வேலைசெய்தேன்.

அந்தக் காலக்கட்டத்தில்தான் பொருளாதார மந்தநிலை நாட்டில் ஏற்பddathu. ஈயம் படுவீழ்ச்சிக் கண்டது. அதன்பிறகு அங்கிருந்தும் பணிநிறுத்தம் செய்யப்பட்டேன். திரும்பவும் தோட்டத்தையே நாடி வந்தேன். அந்தக் காலக்கட்டத்தில்தான் சென் ஜோசப் எனும் கிருஸ்துவ மதப்போதகர் எனக்கு அறிமுகமானார். அவரின் வழியே எனக்கு தோட்டத்து கெமிக்கல் தொழிற்சாலையில் வேலைகிடைத்தது. 1972-ல் திராவிடக் கழகத்திலும் இணைந்தேன். இதோடு எனக்கு இடதுச்சாரி சிந்தனைக் கொண்ட நண்பர்களும் அறிமுகமானார்கள்என் வாழ்க்கை இப்படியாகத்தான் தொடங்கியது.   

யோகி : அந்தக் காலக்கட்டத்தில் இடதுச்சாரி புரிதல் இல்லாத உங்களுக்கு, அவர்களின் உரையாடல்கள் மற்றும் நடவடிக்கைகள் எவ்வாறான தாகத்தை ஏற்படுத்தின?

தோழர் : தொடக்கமாக அது எனக்கு ஒத்த சிந்தனையாகத்தான் தெரிந்தது. இன்னும் அதை சரியாக விளங்கிக்கொள்ள எனக்கு புத்தகங்கள் உதவியாக இருந்தன. இடதுச்சாரி சிந்தனைக் கொண்ட அல்லது மாற்றுச் சிந்தனைக்கொண்ட புத்தகங்களை வாசிக்க தொடங்கினேன். நண்பர்களும் சில புத்தகங்களை பரிந்துரைத்தார்கள். வர்கம், மற்றும் கொள்கை ரீதியாக புரிதல்களில் எனக்கு ஒரு தெளிவு உண்டானது. நண்பர்களின் கலந்துரையாடல்கள் மேலும் எனக்கு புரிதல்களை அதிகப்படுத்தின. 

யோகி : ஒருபுறம் மார்க்சிய சிந்தனைக்கொண்ட தோழர்கள்;  மறுபுறம் திராவிடத் தோழர்கள் இரண்டிலும் ஒருசேர உங்களால் பயணிக்க முடிந்ததா? 

தோழர் : தொடக்கத்தில் கழகத்தில் சில பூசல்கள் வரவே செய்தன. என் மீது ஒரு புகாராகவே அதை வைத்தார்கள். கழகத்தின் தலைவரான கே.ராமசாமி என்னை அழைத்து விசாரித்தார். நான் அப்போது கிளைத்தலைவராக இருந்தேன். மிகத்தெளிவாக எனக்கு எது தேவையோ அதையே நான் செய்கிறேன் என்று கூறிவிட்டேன். என்னால் இடதுசாரி தோழர்களின் நட்பை புறக்கணிக்கவே முடியவில்லை. 

இன்நிலையில் மே கலவரத்திற்கு பிறகு 1 டிசம்பர் 1969-ஆம் ஆண்டு புதியதாக ஒரு கலைகொல்லி தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்றேன். ங்கு 13 ஆண்டுகள் வேலைசெய்தேன். அங்குதான் கேடு விளைவிக்கும் அந்த பாசாணத்தை நான் தெரிந்துகொண்டேன். சீனர்களின் தொழிற்சாலையான அதிலும் பல ஒடுக்குமுறைகள் இருந்தன. 

இந்நிலையில் பினாங்கு மாநிலத்தில் செயற்பட்டு வந்த மண்ணின் தோழர்கள் கழகத் தோழர்களுடன் இணைந்தேன். மெத்தப் படித்தவர்கள் மற்றும் ஆங்கில அறிவுக்கொண்டவர்கள் கொண்ட அமைப்பு அது. அறிக்கைகள் உட்பட அனைத்தையும் ஆங்கிலத்தில்தான் தயாரிக்க வேண்டும். முறையான கல்வி மற்றும் ஆங்கில புலமையில்லையென்றாலும் அந்த அமைப்பில் என்னை இணைந்துக்கொள்ள கேட்டார்கள். என்னை முழுநேர ஊழியனாக இணையச் சொன்னார்கள். 

தொழிற்சாலை வேலையை விடுவதற்கு முன்பு, அங்கு ஒரு தொழிற்சங்கத்தை அந்தச் தொழிற்சாலையில் அமைத்தேன். அது மிகவும் சவாலாக இருந்தது. முதலாளிக்கு பயந்து ஊழியர்களின் ஒத்துழைப்பும் குறைவாக இருந்தது. அந்தத் தொழிற்சங்கத்திற்கு நானே முதல் தலைவனாகவும் ஆனேன். சில ஒப்பந்தங்கள் பரிந்துரைகளை எப்படி கையாளவேண்டும் என்பதை நானே பயிற்சி எடுத்துக்கொள்ளும் களமாக அது அமைந்தது.  அதன் பின் தான்  பினாங்கில் செயல்பட்டுக்கொண்டிருந்த மண்ணின் தோழர்கள்கழகத்தோடு இணைந்து முழுநேர ஊழியனானேன். சுற்றுச்சூழல் சீர்கேடுகள் தொடர்பாக,  அந்த அமைப்பு குரல் எழுப்பியது. இருந்தாலும் தொழிலாளர்கள் பிரச்சனைக்கு குரல் கொடுப்பதைத்தான் என் மனம் விரும்பியது. 

இரண்டு நிலையிலும் ஈடுபாடுகாட்டினாலும் தொழிலாளர்கள் நலனில் கூடுதல் அக்கரை காட்டத்தொடங்கினேன். மண்ணின் தோழர்கள் கழகத்தோடு வேலை செய்த அனுபவம்தான், ஆய்வுகள் செய்வது எப்படி? பிரச்னைகளை அணுகுவது எப்படி என்ற நுணுக்கங்கள் என்னால் கற்றுக்கொள்ள முடிந்தது. 

குறிப்பாக கலைகொல்லி மருந்தின் பாதிப்பினை அறிந்து அதை முழுமையாக இல்லாமல் செய்ய வேண்டும் என்ற தீவிரமும் மண்ணின் தோழர்கள் கழகத்தில் இணைந்தப்பிறகுதான் வந்தது. கலைக்கொல்லி (Paraquat) ரசாயணத்தை தடைசெய்யக்கோரி அக்கோரிக்கையை சர்வதேச நிலைக்கு கொண்டுச்சென்று அதன் பயன்பாட்டை முடிவுக்கொண்டு வந்தேன். சில தன்னார்வ அமைப்புகள் இந்தப் போராட்டத்தில் சுயலாபம் தேடிக்கொண்டது வேறுக்கதை. 

அந்த மருந்தின் சீர்கேட்டை மக்களுக்கு தெரியப்படுத்த எண்ணி, முழு ஆய்வுக்குப் பிறகு அது தொடர்பான புத்தகத்தை எழுதினேன். கலைகொல்லி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலைசெய்திருந்த அனுபவம் இருந்ததால் என்னால் அது குறித்து தீவிரமாகவே எழுத முடிந்தது. மண்ணின் தோழர்கள் கழகத்தில் இருந்தபோது மக்கள் பிரச்சனைகள் குறிப்பாக தோட்ட மக்கள் பிரச்னைகள் முறைகேடுகள் தொடர்பாக 5 புத்தகங்களை கொண்டு வந்தேன். 1995-ஆம் ஆண்டு இந்த அமைப்பிலிருந்தும் நான் வெளியேற வேண்டிய சூழல் உண்டானது. 

யோகி : ஒரு நீண்ட பயணத்தில் வரதராஜூ என்பவர் தோட்டப் பாட்டாளியாக வர்க போராளியாக மேலும் பொதுமக்கள் மத்தியில் கலகத்தை ஏற்படுத்தக்கூடியவராகவும் தன்னை நிலைநிறுத்திக்கொண்டீர்கள். உங்கள் போராட்டமானது மக்களின் பார்வையில் எவ்வாறு ஏற்றுக்கொள்ளப்பட்டது? மக்கள் எவ்வாறு உங்களை ஏற்றுக்கொண்டனர்?

தோழர்:  சில பாட்டளி பிரச்னைகளுக்கு மக்கள் நேரடியாகவே என்னை அணுகியிருக்கின்றனர். கோல்பீல் தோட்டம், கேரித் தீவு தோட்டம் உள்ளிட்ட சில தோட்ட மக்களுக்காக நான் நேரடியாகவே களமிரங்கினேன். பெருவாரியாக நான் குழுவாரியாக இயங்கவில்லை. அவரவர் பிரச்னையை அவரவர் கையிலெடுக்க வேண்டும் என்று அவர்கள் மத்தியில் நின்று தூண்டுகோலாக இருப்பேன். என்னைத் தேடி வரும் மக்கள் பிரச்னைகளை நான் இவ்வாறுதான் கையாண்டிருக்கிறேன். சுயமாக அவரவர் பிரச்னையை அவரவர்தான் போராட வேண்டும் என்று சொல்லித்தர அப்போது யாருமில்லை. நான் அதைச் செய்தேன். 

யோகி: யாருடைய உதவியும் இல்லாமல் தோட்ட மக்களால் போராட முடியாததற்கு என்ன காரணம்? ஏன் அவர்களுக்கு யாருடைய கையோ அல்லது தோளோ தேவையாக இருக்கிறது?

தோழர் : ஆதிக்கத்தின் மீதிருந்த பயம்; இயலாமை போன்றவற்றை காரணமாக சொல்லலாம். அதோடு ஒரு தோட்டத்தில் பிரச்னை நடந்துக்கொண்டிருக்கும்போது பக்கத்து தோட்டத்தில் இருப்பவர்கள் ஆதரவுக்கு வரமாட்டார்கள். கள்ள மௌனத்தில் இருப்பார்கள். இந்த நிலையானது இன்றுவரை தொடர்ந்துக்கொண்டுதானே இருக்கிறது. காலம் மாறினாலும் தோட்ட மக்களின் மனநிலையிலும் வாழ்கை முறையிலும் எந்த மாற்றமும் இல்லை. அடிமைச் சமூகமாக இன்றும் இருக்கின்றனர். 

யோகி : இப்படி நீங்கள் சொல்வதற்கு வேறு ஏதும் அனுபவ ரீதியான காரணம் இருக்கிறதா?

தோழர் : நிறைய இருக்கிறது. குறிப்பாக புக்கிட் ஹாசான் தோட்டப் பிரச்னை. வெளியில் இருந்து வந்த எஸ்.என்.ராஜா, அங்கமுத்து போன்றவர்கள்தான் அந்தப் போராட்டத்தை முன்னெடுத்து பாட்டாளிகளுக்காக தீவிரமாக கொண்டுச் சென்றார்கள். தோட்ட பாட்டாளிகள் அவர்களுக்கு பின்னாடிதான் நின்றுக்கொண்டிருந்தார்கள். நீங்கள் பழைய பத்திரிக்கை செய்திகளை மீள்பார்வைச் செய்தால் உங்களுக்கு நான் என்ன சொல்ல வருகிறேன் என்று புரியும். 

யோகி: தோட்ட மக்களுக்காக நீங்க முன்னெடுத்தப் போராட்டங்களுக்கு அதிகாரவர்கத்தின் எதிர்ப்பை அல்லது தாக்கத்தை எவ்வாறு சமாளித்தீர்கள்?

-எந்த நிலைப்பாட்டையும் கருத்தில் கொண்டு நான் காரியங்களில் இறங்குவதில்லை. 

யோகி: இதுவரை 7 புத்தகங்கள் எழுதியிருக்கும் நீங்கள், அடுத்தப் புத்தகம் ஏதேனும் வெளியிடும் எண்ணம் உண்டா?

தோழர் : நிச்சயமாக இருக்கிறது. அதற்கான களப்பணிகளும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. மலேசியாவில் சாதியம் குறித்து ஆய்வுகள் நடத்திக் கொண்டிருக்கிறேன். தோழர் யோகியும் மலேசிய சாதியம் குறித்த அனுபவங்களை பேசியிருக்கிறீர்கள். அதை நான் அறிவேன். மலேசிய பத்திரிகைகளில் வந்திருக்கும் சில விவரங்களையும் சேகரித்து வைத்திருக்கிறேன். மிக நீண்ட நாளாக போய்க் கொண்டிருக்கும் பணி இது. பலரின் முகத்திரையை இந்தப் புத்தகம் கிழிக்கும். 

முற்றும்.

செவ்வாய், 28 ஜூலை, 2026

சர்வதேச அளவில் போராட்டங்கள் கவனம் பெற வன்முறைதான் வேண்டுமா?

டெல்லியில் நடந்த நீட் தேர்வு முறைக்கேடு தொடர்பான போராட்டம் என்பது உலக மக்களின் கவனத்தை கடந்த வாரம்தான் பெரிய அளவில் பெற்றிருக்கிறது. மேலும், உலகின் முன்னணி செய்தி நிறுவனங்கள் இது தொடர்பான செய்தியை வெளியிட்டு  அதன் தீவிரத்தையும் முக்கியத்துவத்தையும் மாணவர்களின் போராட்டத்திற்கான நியாயத்தையும் மக்களுக்கு எடுத்துரைத்திருக்கின்றன. 


எல்லாம் சரிதான். ஆனால், இந்தப் போராட்டமானது எப்போது தொடங்கப்பட்டது? சோனம் அவர்கள் இந்தப் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டு எத்தனை நாள் உண்ணா விரதம் இருந்தார்?  யார் இந்த சோனம் வாங்சுக்? இந்தப் போராட்டத்தை தலைமை ஏற்று நடத்திய கரப்பான் பூச்சி கட்சி அல்லது அமைப்புக்கு வெற்றி கிடைத்துவிட்டதாக சொல்கிறார்களே அது உண்மைதானா? 



இந்தப் போராட்டம் முன்னெடுத்தது  தொடர்பான காரணத்தையும் மேல் குறிப்பிட்டிருக்கும் சில கேள்விகளுக்கான விடையையும் முதலில் காண்போம். பிறகு உலக மக்களும் உள்நாட்டு மக்களும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்திருக்கும் விஷயத்தை அடுத்து பேசலாம். 


டெல்லி, ஜந்தர் மந்தரில் நடைபெற்ற NEET தேர்வு முறைகேடு எதிர்ப்பு மாணவர் போராட்டம் சுமார் 36 நாள்கள் நடைபெற்றன. கடந்த மே மாதம் NEET தேர்வை மாணவர்கள் எழுதினார்கள். சில நாள்களில் அந்தத் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், மறு தேர்வு நடத்தப்படும் என்றும் அரசிடமிருந்து அதிகாரப்பூர்வ தகவல் பகிரப்பட்டது. NEET தேர்வுகு முன்பே வினாத்தாள் கசிவு ஏற்பட்டுள்ளதை அவர்கள் அதற்கு காரணம் கூறியிருந்தனர். எழுதிய தேர்வு ரத்து செய்யப்படுகிறது என்ற விஷயம் அறிவித்த வேளையில் அதன் அழுத்தத்தையும் ஏமாற்றத்தையும்  தாங்கி கொள்ள முடியாத மாணவர்கள் சுமார் 12 பேர் தற்கொலை செய்துக் கொண்டனர். இந்த நீட் தேர்வு தொடர்பாக இதுவரை ஏறத்தாழ 22-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த உயிர் இழப்புகளை எதைக் கொண்டு ஈடு செய்ய முடியும்? இது வெறும் தேர்வு முறைகேடு தொடர்பான போராட்டமாக இல்லாமல், இளைஞர்களின் எதிர்காலம், கல்வி அமைப்பின் நம்பகத்தன்மை, மற்றும் மோடி அரசின் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை மையமாகக் கொண்ட மாபெரும் போராட்டமாக உருவாகியுள்ளது.  


சோனம் வாங்சுக்



சுற்றுச்சூழல் குறித்து ஆழ்ந்த அக்கரைக் கொண்ட சூழலியல் ஆர்வளர்களுக்கு சோனம் வாங்சுக் புதியவர் அல்ல. காஷ்மீரை ஒட்டியிருக்கும் லடக்கை சேர்ந்த இவர் செயற்கை நீர் ஊற்றுகளையும் செயற்கை பனிப்பாறைகளையும் கட்டுபிடித்து அங்குள்ள மக்களுக்கும் விவசாயத்திற்கும் ஆற்றியிருக்கும் சேவைக்காக உலகலவில் பாராட்டையும் உயரிய விருதுகளையும் பெற்றிருக்கிறார். அவருடைய சாதனைகளும் சேவைகளும் அது மட்டுமல்ல. தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்காக SECMOL  என்ற அமைப்பை தொடங்கி வழிநடத்தி வருகிறார். மேலும்,  சோனம் ஒரு பொறியியலாளர் மற்றும் சமூக ஆர்வலராகவே அறியப்படுகிறார், தேர்தலுக்காகவும் அரசியல் லாபத்திற்கான வாதி அல்ல அவர். 



இவர் 2026 ஜூன் இறுதியில் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடங்கிய நீட் முறைக்கேடு தொடர்பான மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு அளித்து உண்ணாவிரதத்தை தொடங்குகிறார். அவருக்கு இது முதல் முறை உண்ணாநிலை போராட்டம் அல்ல. 2024-ல் லடாக் சூழலியலைப் பாதுகாக்க 21 நாள் உண்ணாவிரதம் இருந்தார். தொடர்ந்து கல்வியில் சீர் திருத்ததைக் கொண்டு வர வேண்டும் என்று கூறும் இவர் இந்தப் போராட்டத்தில் பங்கெடுத்தார். அது அந்தப் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தியதோடு  மிகுந்த கவனத்தையும் பெற்றது. தேசிய தேர்வு முறையில் சீர்திருத்தங்கள் கோரியும் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என கோரியும் 26 நாள் உண்ணாவிரதம் இருந்தவரை கடந்த  ஜூலை 24  அந்த உண்ணாவிரதத்தை முடித்து வைத்தனர்.  அவருக்கு  மாண்புமிகு கரப்பான் பூச்சி (Honourable Cockroach) என்று Cockroach Janta Party – CJP புகழாரம் சூட்டினர். 



‘காக்ரோச் ஜன்தா பார்ட்டி’ (Cockroach Janta Party) 




இது பதிவு செய்யப்படாத ஒரு கட்சியாகும். இதன் உருவாக்கமே கொஞ்சம் வினோதமானது, அது விஸ்வரூப வெற்றியடைந்தது. சுறுக்கமாகவும் விரிவாகவும் பார்ப்போம். 


இந்திய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சூர்ய காந்த்,  வேலை வாய்ப்பில்லாத சில இளைஞர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களை "கரப்பான் பூச்சிகள்" (cockroaches) என்று ஒப்பிட்டு கருத்து கூறியிருந்தார். இந்த வார்த்தை இளைஞர்களிடையே  கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது.

அதற்கு பதிலளிக்கும் வகையில் அமெரிக்காவில் படித்த இந்திய இளைஞரான அபிஜீத் திப்கே (Abhijeet Dipke) என்ற இளைஞர் "எல்லா கரப்பான் பூச்சிகளும் ஒன்றிணைந்தால் என்ன?" என்று சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.


அந்த பதிவு வைரலாகி,  அதன் பின்னர் Cockroach Janta Party (CJP) என்ற பெயரில் ஒரு இயக்கம் உருவானது. கரப்பான் பூச்சியை எளிதில் அழிக்க முடியாது. கடினமான சூழலிலும் அது உயிர்வாழும். அதுபோல, புறக்கணிக்கப்பட்ட இளைஞர்களும் தொடர்ந்து போராடுவார்கள் என்பதற்கான அடையாளமாக அதைத் தேர்ந்தெடுத்தோம் என்று "கரப்பான் பூச்சி" என்ற சின்னத்தை  தேர்ந்தெடுத்ததற்கான காரணத்தையும் விளக்கி இருக்கின்றனர்.



மிக குறுகிய நாள்களிலேயே மிகப்பெரிய இளைஞர் போராட்ட இயக்கமாக வளர்ந்து இன்று ஒரு மக்கள் இயக்கமாகவும் மாறி இருக்கிறது இந்த "கரப்பான் பூச்சிகள்" இயக்கம் . இந்த அமைப்புக்கு எதிராக இருப்பவர்கள் இதை ஒரு கோமாளி அல்லது நையாண்டி அமைப்பு என்று கேலி பேசவும் செய்கிறார்கள்.  ஆனால், இந்த மாணவர் போராட்டத்தை பொறுத்தவரை இவர்கள் மேற்கொண்ட இந்த முதல் போராட்டமே வெற்றியில் முடிந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். பி.ஜெ.பி கட்சியை பொறுத்தவரை கடந்த 12 ஆண்டுகளில்  மக்கள் பிரச்னைக்கு பொறுப்பெடுத்து எந்த அமைச்சரும் பதவி விலகி வரலாறு இல்லை. ஆனால், இந்த முறை மாணவர்கள் கொடுத்த நெருக்கடியால் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகியிருக்கிறார். இதுவே தேசிய அளவில் பேசு பொருளாக மாறி இருக்கிறது. 


டெல்லியில் நடந்த போரட்டங்களான  நிர்பயாவுக்கு நீதி கோரி நடந்த  அறவழிப் போராட்டம் (2012), மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான  இந்திய விவசாயிகள் போராட்டம் (2020) ஆகியவை என் கவனத்தை ஈர்த்த மாபெரும் போராட்டங்களாகும். காரணம் இந்தப் போராட்டங்கள் தொடங்கிய காலத்திலேயே உள்ளூர் மக்களின் ஆதரவை பெற்று, உலக மக்களின் கவனத்தை பெற்றது. அதன் காரணத்தினாலேயே இந்திய அரசுக்கு மிகப் பெரிய நெருக்கடி உருவானது. 




ஆனால், தற்போதைய இந்த மாணவர்கள் போராட்டம் கிட்டதட்ட 38 நாள்கள் நீண்டது. சோனாம் அவர்களின் உண்ணாநிலை போராட்டம் 26 நாள்கள் நீண்டது. அதுவரை இந்த விவகாரம் ஒரு உப்பு சப்பில்லாத விஷயமாகவே இருந்திருக்கிறது.   மாணவர்கள் மீதும், போராட்டவாதிகள் மீதும் போலீஸ் கண்மூடித் தனமாக அடிதடி நடத்திய பிறகுதான், உள்ளூர் மக்களுக்கும் உலக மக்களுக்கும் இந்தப் போராட்டம் போராட்டமாகவே தெரிந்திருக்கிறது.  அதன் பிறகே கண்டனங்கள் வழுத்தன. எனக்கு எழும் கேள்வி என்னவென்றால் ஒரு போராட்டம் கவனம் பெற அடிதடியோ, உயிர் சேதமோ, வன்முறையோ இப்படி ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடக்கத் தான் வேண்டுமா? அப்போதுதான் அது கவனம் பெற வேண்டுமா?


அப்படி பார்த்தாலும் இற்போதைய இந்த  நீட் தேர்வு முறைகேட்டில் மனம் உடைந்து 12 உயிர்கள் தற்கொலை செய்து கொண்டனவே? ஏன் உலக மக்களின் இதயங்களை அது உலுக்கவில்லை? அனைத்தையும் பொறுமையாக வேடிக்கை பார்க்கும் மனநிலைக்கு மனித மனங்கள் இறுகி விட்டனவா? அல்லது உலக கோப்பையும் ஜனநாயகன் திரைப்படமும் மாதிரியான உதிரி சம்பவங்கள் போராட்டத்தைவிட முக்கியத்துவம் பெற்றனவா? 



இந்தப் நீட் தேர்வு முறைக்கேடு தொடர்பான மாணவர்கள் போராட்டத்தில் நான் கவனித்த மிக முக்கியமான காட்சிகள் பெண்கள் தொடர்பானவை. போலீஸ்காரர்கள் வன்முறையை நிகழ்த்தியபோதும், மிரட்டியபோதும் அவர்கள் கொஞ்சம்கூட பின் வாங்காமல் களத்தில் நிற்கிறார்கள். ஒரு மாணவி போராட்டக்காரர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் சாப்பிட ஏதாவது கொடுத்துக்கொண்டே இருக்கிறார்.

ஒரு பெண், போலீஸ் லாரியின் முன் துணிகரமான நின்று கைது செய்தவர்களை விடுவிக்க கோருகிறார், அதில் அவர் வெற்றியும் பெறுகிறார்;

இன்னொரு பெண் சக மாணவர்கள் மீது லத்தியடி விழாமல் தடுத்து நிற்கிறார்; பெண்கள் பலவீனமானவர்கள் என்றும் பெண்களும் போதை பொருள்தான் என்றும் ஏலனம் செய்பவர்களுக்கு இந்தக் காட்சிகள் வேறொரு மாற்று புரிதலை ஏற்படுத்த வேண்டும்.

இறுதியாக எந்தப் போராட்டத்திற்கும் அந்தந்த நேரத்தில் ஞாயம் செய்ய வேண்டும், நமது வசதியை பொறுத்து ஆதரவு அளிப்பது அது போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பது அல்ல.  விளம்பரம் தேடிக் கொள்வது, அவ்வளவே...