புதன், 29 ஜூலை, 2015

அப்துல் கலாமிற்கு முன்பும் பின்பும்


ஏ.பி.ஜே டாக்டர் அப்துல் கலாமிற்க்கு அறிமுகம் தேவையில்லை. விஞ்ஞானி, குடியரசு தலைவர், எழுத்தாளர் என பலவகைகளில் அடையாளப்படுத்தப்படுபவர்.
2002- ஆம் ஆண்டு இந்தியாவின் 11-வது குடியரசுத் தலைவராக ஜூலை 25-ஆம் தேதி 2002-ல் பதவியேற்றார். ஐந்து ஆண்டுகள் மட்டுமே அப்பதவியில் இருந்த அவர் 2007-ஆம் ஆண்டு அவர் அப்பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். ஆனால், அவர் 'மக்களின் ஜனாதிபதி' என்று அன்போடு அடையாளமாகியுள்ளார் மக்களின் மனதில்.
இந்தியாவில் இதற்கு முன்பு அப்துல்கலாம் உட்பட10 குடியரசு தலைவர்கள் இருந்திருக்கிறார்கள். கலாம் ஓய்வு பெற்ற பிறகு பிரதீபா பாட்டில், அதன்பிறகு  குடியரசு தலைவராக பிரணாப் முகர்ஜி அப்பதவிக்கு வந்தார். ஆனால், அப்துல் கலாமை தவிர, அவர் அளவுக்கு யாரும் பிரபலமாகவில்லை? அதற்கு கலாமின் தனிப்பட்ட ஆளுமை ஒரு காரணமாக இருந்தாலும், என்னை பொறுத்தவரையில் சினிமாவும் ஒரு காரணம் என கூறுவேன்.

‘எதிர்கால இந்திய இளைஞர்கள் கையில்’
“கனவு காணுங்கள்! அந்த கனவை நினைவாக்க
பாடுபடுங்கள்”
 என்னும் வாக்கியத்தை அப்துல் கலாம் கூறியிருந்தாலும், சின்ன கலைவாணர் என அழைக்கப்படும் நகைச்சுவை கலைஞர் விவேக் திரைப்படங்களில்தமது நகைச்சுவை காட்சிகளில் அதை பயன்படுத்தினார். அப்துல் கலாம் என்ற பெயர், கல்வியறிவு இல்லாத பாமர மக்களையும் சென்றடைந்தது. அதுமட்டுமல்லாமல், இந்தியாவைத் தாண்டி உலகமுழுதும் பரவிக்கிடக்கிற தமிழ் மக்களிடத்தில் கலாம் மிக இலகுவாக அறிமுகமானார். அதற்கு சினிமா எனும் ஊடகம் பெரிய அளவில் அவருக்கு விளம்பரம் கொடுத்தது என்பதையும் மறுக்க முடியாது.

கலாமின் தாரக மந்திரங்கள் இளைஞர்களின் மனதிலும், மாணவர்கள் மனதில் வலுவாக வேரூன்ற கலாமின் தோற்றமும் ஒரு காரணம் எனக்கூறலாம். மிக மிகஎளிமையான அவரின் உடையலங்காரம் மட்டுமல்ல அவரின் சிகையலங்காரமும் தனி பாணியிலானது.
இந்தியா எனும் ஜனநாயக நாட்டை வல்லரசு நாடாக மாற்ற வேண்டும் என்று பல தலைவர்கள் முயற்சி எடுத்திருந்தாலும் அதற்கான செயல்களில் இறங்கியவர் அப்துல் கலாம் என இந்திய மக்களாம் வர்ணிக்கப்படுகிறார். அதை செயல்படுத்த தொலைநோக்கு பார்வையுடனும்,
திட்டங்களுடனும் 'இந்தியா-2020' என்ற புத்தகத்தை அப்துல் கலாம் எழுதினார். அவரின் திட்டங்கள் அனைத்தும் மாணவர்களை நோக்கிய இலக்கை கொண்டதாக இருந்ததற்கு இந்த தொலைநோக்கு சிந்தனையும் ஒரு காரணம் என்று தாராளமாக சொல்லலாம்.

இளைய சமூதாயம் மட்டுமே வளமான இந்தியாவை மீட்டுக்கொடுக்கும் என்று அசைக்க முடியாத நம்பிக்கையாக அவருக்கு இருந்தது. அதனால்தான்
என் கடைசி நிமிடம் மாணவர்களுடன்தான் என்று கூறியிருந்தார். அவரின் எண்ணம் போல்தான் அமைந்தது அவரின் கடைசி நிமிடமும்.

எனக்கு அப்துல் கலாம் மீது மிக பெரிய மரியாதை இருந்தாலும், அவரின் மீது விமர்சனமும் இருக்கிறது. டாக்டர் அப்துல் கலாம் மீது உலக மக்கள் அல்லது ஈழஆதரவாளர்கள் வைக்கும் முக்கிய விமர்சனம் மீனவர்களுக்கும், ஈழத்தமிழர்களுக்கு அவர் ஆதரவாக ஒன்றுமே செய்யவில்லை என்பதுதான். ராமேஸ்வரத்தில் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்ட மீனவர்கள், அவர் பிறந்த சொந்த மண்ணைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடததக்கது. என்னைப் பொறுத்தவரையில், தமது சொந்த நாட்டில், சொந்த நாட்டு மக்களுக்கு நடந்த கூடங்குளம் அணுவுலை பிரச்னை வந்தபோது அவர் ஒரு விஞ்ஞானியாக மட்டுமே நடந்துக்கொண்டார். தம்மக்களின் கண்ணீரும் கோரிக்கையும் மனிதாபிமான ரீதியில் எந்த ஒரு இரக்கமும் அவருக்கு ஏற்படவே இல்லை. அதனால் ஏற்படப்போகும் சுற்றுச்சூழல் பேராபத்துக் குறித்தும் அவருக்கு எந்த வருத்தமும் இல்லை. மேலும், அது சார்ந்த குரலை கேட்கவும் கலாம் மறுத்துவிட்டார் என்று அங்கிருந்து கிடைப்பெற்ற பத்திரிகை செய்திகள் என் வரையில் பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியது. ராணுவ துறையின் மேம்பாட்டுக்கு மட்டுமே அவரின் முழு ஆராய்ச்சியும் உழைப்பும் இருந்தது. அவர் அக்னி பறவையாகவும், ஏவுகணைகளின் மன்னனாகவும் இருந்துவிட்டு போகட்டும். அதற்காக,காட்டை வேக விடுவதற்கும், வெந்து தனிப்பதற்கும் விளிம்பு நிலை மக்களின் உயிர் அத்தனை மலிவானதா? இந்த ஆதங்கம், பெரும் ஏமாற்றத்தை என்னில் ஏற்படுத்தியிருந்தது.

நான் அப்துல் கலாமின் சுயசரிதையை தனியாக படிக்கவே இல்லை. தும்பி எனும் சிறுவர் அறிவியல் இதழுக்காக சந்துரு அப்துல் கலாமின் ஓவியங்கள் வரைய வேண்டியிருந்தது. அதில் ராமேஸ்வரத்தில் கலாம் பிறந்தது முதல், அவர் அடைந்த சாதனை வரை சில படங்களை வரைய வேண்டும். வரைந்த ஓவியங்களை என்னிடம் காட்டியபோது அதில் கலாமுடைய மாணவர் பருவம்தான் என்னை மிகவும் ஈர்த்தது. காரணம், கலாமும் என்னைப் போல் மாணவர்ப் பருவத்தில் குழந்தைகளின் இயல்பு நிலையை தொலைத்தவராக இருந்திருக்கிறார். ஆனால், அவரின் விளையாட்டு மொத்தமும் கல்வியாகவே இருந்தது.
கலாமின் வாழ்க்கை மொத்தமும் சில ஓவியங்களில், மாணவர்களை கவரும் வகையில் சந்துரு வரைந்திருந்திருந்தது அவருக்கு மட்டுமல்ல எனக்கும் கலாமோடு ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

இன்று அப்துல் கலாம் என்ற சாதனையாளர் நம்மோடு இல்லை என்பது வருத்தமாகத்தான் இருக்கிறது.  இந்த நூற்றாண்டில் நாம் என்னென்ன இழக்கப்போகிறோம் என்பதுதெரியாது.
ஆனால், இந்த இழப்பை யார் கொண்டும் ஈடுச் செய்ய முடியாது.
டாக்டர் அப்துல் கலாம் 'எண்ணத்தில் நலமிருந்தால் கனவு தமிழகம் உருவாகும்' என்ற தலைப்பில் ஒரு படைப்பை எழுத்திக்கொண்டிருந்தார் என்றும் அந்தப் புத்தகத்தை முழுமையாக எழுதி நிறைவு செய்யாமலேயே இப்பூவுலகை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார் என்ற தகவல் உலக மக்களை வேதனையில்ஆழ்த்தியுள்ளது.

'ஒரு முறை வந்தால் அது கனவு,
இரு முறை வந்தால் அது ஆசை
பலமுறை வந்தால் அது லட்சியம்'

 -அப்துல் கலாம்

(நன்றி, 28.7.2015 தினக்குரல் மலேசியா)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக