ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2015

வீதிப் போராட்டமாச் சட்டமா...


சுதந்திரம் அடைந்த பல நாடுகள் போராட்டத்தை முன்னெடுத்த பிறகுதான் அதைப் பெற்றிருக்கின்றன. மலேசியாவைப் பொறுத்தவரை 1940-களில் நடந்த பல மக்கள் போராட்டங்கள் மறைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றன. இருந்தாலும், என் தலைமுறையில் பெர்சே பேரணிதான் மலேசியாவில் நான் பார்த்த மாபெரும் போராட்டம் என்று சொல்லலாம். அதன் பிறகு இந்தியர்களுக்கு உரிமைக் கோரும் போராட்டமாக ஹிண்ராப் போராட்டத்தைச் சொல்லலாம். அதன் பிறகு மீண்டும் பெர்சே 2.0 போராட்டம், தொடர்ந்து இத்யாதி இத்யாதிப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

சாங் லே காங், தான் கார் ஹிங், பாக்ரி
முக்கியத்தலைவர்கள் ஆதரவுடன் அவர்களே களமிரங்கி நடத்தும் போராட்டங்கள் ஒரு புறமிருக்க, இளைஞர்கள் படைக்கொண்ட மாணவரப் போராட்டம் மிகப் பெரிய அளவில் மலேசிய மக்களையும், உலக மக்களையும் திரும்பிப் பார்க்கும் அளவுக்குப் பலம்கூடியதாக இருக்கின்றன. அதுவும் மலாய்க்காரர்கள் அதிகம் பங்கெடுக்கும் அல்லது மூவினமும் சேர்ந்து முன்னெடுக்கும் போராட்டம் என்றால் நாட்டையே உலுக்கும் அளவுக்கும், அமைச்சரவையே தெரிக்கும் அளவுக்கும் (எப்படித் தெரிக்கும் என்று சட்டாம் பிள்ளைபோல் கேள்வி கேட்கக்கூடாது) ஒரு பயத்தை ஏற்படுத்துபவையாக இருக்கின்றன.

ஆகஸ்ட் 1-ஆம் தேதித் தலைநகர் ராஜா லாவூட் சாலையில்
நடந்த 'தங்காப் நஜிப்' அமைதிப் போராட்டம் 400-பேருக்கும் குறைவான ஆட்கள் என்றாலும் பெரிய அளவில் மலேசிய மக்களைத் திரும்பிப் பார்க்க வைத்தது.

அதற்கு முன்பே இந்தப் போராட்டம் குறித்துச் சமூக வலைத்தளங்களில் செய்திப் பரவியது ஒரு புறமிருந்தாலும், செய்தி ஊடகங்கள் இது குறித்துச் செய்திகளை வெளியிட்டிருந்தது பலரைப் புருவம் நெளியச் செய்தது. 'மலேசியாவிக்காக' என்ற பெயரில் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப்பைப் பதிவி விலக வேண்டும் என்று சமூக ஆர்வலரும் மாணவருமான அடாம் அட்லி அப்துக் ஹாலிம் தலைமையில் அந்தப் போராட்டம் முன்னெடுக்கப்போவதாகக் கூறப்பட்டன. அடாம் அட்லி, சில வருடங்களுக்கு முன்பு அரசுக்கு எதிராகக் கொள்கைப் பரப்பு வேலைகள் செய்கிறார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுத் தேச நிந்தனைச் குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டவர். இதனால், இடதுசாரிகளிடத்தில் ஒரு விரோதத்துவத்தையும் வலதுசாரிகளிடத்தில் நாளைய போராட்ட நட்சத்திரமாகவும் அடாம் அட்லிப் பிரபலமானார். ) அவரின் தலைமையில் ‘டெமி மலேசியா’ (மலேசியாவுக்காக) எனும் இளைஞர் அமைப்பு இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தது.

 போலீஸ் இந்தப் போராட்டத்தை நடத்துக்கூடாது என்று எச்சரித்தது. இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாகக் கூறியிருந்த அடாம் அட்லியை விசாரிப்பதற்காக டாங் வாங்கிப் போலீஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார். அடாம் அலியுடன் லென்சாக் கம்முனிகேசன்ஸ் அதிகாரிச் சுக்ரியும் சென்றிருந்தார். முன்னதாக இந்த விசாரனையின்போது கைது செய்ய மாட்டார்கள் என்று கூறப்பட்டிருந்த வேளையில், விசாரனை முடிந்து வெளியில் வரும்போது இருவரும் கைதுச் செய்யப்பட்டனர்.

போலீசின் இந்தச் செய்கையானது மாணவர் சமூகத்தைக் கிளர்ச்சியடையச் செய்தது என்றுதான் கூற வேண்டும். அமைதிப் போராட்டத்தை நடத்தியே தீருவோம் என்று எழுந்த மாணவ சக்தி, சனிக்கிழமை ஒரு மணியளவில் சோகோ பேராங்காடி முன்பு ஒன்று கூடத் தொடங்கினர். அதே வேளையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸ்காரர்களும், சாலைப் போக்குவரத்துப் போலீஸ்க்காரர்களும், ஊடகவியலாளர்களும் அந்தச் சாலையை முற்றுகையிட்டிருந்தனர்.

குறிப்பிட்ட நேரம் கடந்துக்கொண்டு இருந்ததே தவிர, இவ்விதப் போரட்டமும் நடக்கவில்லை. எவ்விதக் கோஷமும் அங்கு எழவில்லை. ஆனால், பெருமளவில் கூட்டம் மட்டும் கூடிக்கொண்டே இருந்தது. அதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் போலீஸ்க்காரர்கள் கூட்டத்தினரைப் பார்த்துக் கலைந்துபோகக் கட்டளையிட்டனர். குறிப்பாகத் தேஜா நாடாளுமன்ற உறுப்பினர் சாங் லே காங், சிம்பாங் புலாய் நாடாளுமன்ற உறுப்பினர் தான் கார் ஹிங், பாக்ரி, ஆகியோரை நோக்கிப் போலீஸ்காரர்கள் அந்தக் கட்டளையைப் பிரப்பித்தனர். 5 நிமிடக் கெடுகொடுத்தப் போலீஸ்காரர்கள் அந்த நேரம் கடந்து போகவே தங்களின் அதிகாரத்தைப் பயன்படுத்தி அம்மூவறையும் தொடக்கமாகக் கைது செய்து இழுத்துச் சென்றனர்.

அதன் பிறகே அங்குச் சலசலப்பு மூண்டது. மக்கள் 'தங்காப் நஜிப்' என்ற கோஷத்தை எழுப்பினர். கோஷத்தை எழுப்பியவர்களும் கைதுச் செய்யப்பட்டனர். ஒருவர் ஆபத்தானப் பட்டாசைக் கொழுத்திப் போட நிலமை இன்னும் மோசமானது. கலவரம் ஏற்படுத்தும் நோக்கில் நடந்துக்கொண்ட அனைவரையும் போலீஸ், கைதுச் செய்தது. ஆனால், கூட்டம் கலைவதாகத் தெரியவில்லை. 100-க்கும் மேற்பட்ட போலீஸ் அந்த மக்களை அல்லது இளைஞர்களைக் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லையோ என்னவோ தெரியவில்லை மேலும் இரண்டு பஸ்களில் போலீஸ்காரர்கள் வரவழைக்கப்பட்டுக் குவிக்கப்பட்டனர். அங்கிருந்த மக்களைக் கலைந்து போகச் செய்யும்படி இந்தப் போலீஸ்காரர்களுக்குக் கட்டளையிடப்பட்டது. அவர்கள் செயலில் இறங்கினர். மாலை 4 மணியளவில் அந்தச் சாலையில் மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டு, வாகன நடமாட்டத்திற்குத் திறந்துவிடப்பட்டது.

போராட்டமே நடக்காமல், ஒரு பயங்கரப் போராட்டம் போலீஸ்காரர்களால் கட்டமைக்கப்பட்ட ஒரு சம்பவம் இது என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. மலேசிய பிரதமர் நஜிப் எதிர்கொண்டிருக்கும் 1எம்டிபி ஊழல் குற்றச்சாட்டுகளுக்கும், அதிகாரத் துஷ்பிரயோகங்களுக்கும் பொறுப்பேற்று, அவர் பதவியைத் துறக்க வேண்டும் என்று வழியுறுத்தும் பேரணிதான் இந்த ‘தங்காப் நஜிப்’ (நஜிப்பைக் கைதுசெய்யுங்கள்) பேரணி என அடையாளப்படுத்தப்படுகிறது. அதே வேளையில், இதன் தொடர்ச்சியாகப் பெர்சே அமைப்பு மற்றும் ஒரு போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாகவும் அறிவித்துள்ளது.

பார்ப்போம்! வீதிப் போராட்டம் தோற்றதாக எந்தச் சரித்திரத்தையும் நாம் இன்னும் படிக்கவில்லை. போராட்டம் கலைக்கப்படலாம். கோரிக்கைகளின் குரல்கள் நசுக்கப்படலாம். ஆனால், மாணவப்போராட்டம் ஒரு தீக்குச்சியைப்போல… உரசும் வரைதான் அதன் பேரமைதி எங்கோ ஒளிந்துக்கொண்டிருக்கும். தீப் பற்றிகொண்டால் எரிந்து சாம்பலாகும், அல்லது சாம்பலாக்கும்.

-யோகி




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக