செவ்வாய், 11 ஆகஸ்ட், 2015

புத்தக பார்வை (ஏழாம் நூற்றாண்டின் குதிரைகள்)

சிறிய தோட்டா
‘கடைசி மாவில் ஒரு குட்டி தோசை
குழந்தைக்கென
தைத்த மிஞ்சிய சிறு துணியின் குட்டி கீழாடை அவளுக்கு
உள்நாட்டுப் போரின் போது
அரசின் ஆயுதத் தொழிற்சாலைகளில்
மிஞ்சிய கடைசி உலோகத்தை வீணாக்காமல் ஒரு சிறிய தோட்டா
குழந்தையின் உடலுக்கென..’

கவிஞர் நரன் எனக்கு அறிமுகமானது இந்தக் கவிதையின் வழிதான். போரில் எது வேண்டுமானாலும் நடக்கும். நமக்கும் அது தெரியும்தானே. ஆனால், இந்தக் கவிதையின் கவிஞர்  கொடூரத்தை மிக அமைதியான மொழியில் தயார் படுத்தியிருக்கிறார். ‘நரனுடைய ‘ஏழாம் நூற்றாண்டின் குதிரைகள்’ கவிதை தொகுப்பில் இப்படியான கவிதைகள் அதிகம் உள்ளன.

நரன், 2004-ஆம் ஆண்டிலிருந்து சிற்றிதழ்களில் எழுதிவருபவர். இவர் சமீபத்திய எழுத்தாளர்களில் கவனிக்ககூடியவராக இருக்கிறார். இவருடைய முதல் கவிதை தொகுப்பு ‘உப்புநீர் முதலை’ 2010-ஆம் ஆண்டு காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டது. 60 கவிதைகள் கொண்ட அந்தத் தொகுப்பு நரனுக்கு நவீன எழுத்தாளர்கள் மத்தியில் நம்பிக்கையான அறிமுகத்தை ஏற்படுத்தி தந்தது. அதனைத்தொடர்ந்து  2014-ஆம் ஆண்டு ‘ஏழாம் நூற்றாண்டின் குதிரைகள்’ என்ற நரனுடைய இரண்டாவது கவிதை தொகுப்பை கொம்பு பதிப்பகம் வெளியிட்டது.
.
இரண்டு கவிதை தொகுப்புக்கும் பெரிய இடைவெளி இல்லாத பட்சத்தில்  ஏறக்குறைய ஒரே பாணியில் உள்ளது என்று கூறலாம். ஆனால், நரன் கவிதையில் பேசப்பட்டிருக்கும் விடயங்கள் மிக முக்கியமானதாகவும் விவாதத்திற்கு உட்பட்டதாகவும்தான் இருக்கிறது.
குறிப்பாக முதலாளித்துவம், அதிகார வர்கம், சமூகம் உள்ளிட்ட கேள்வியோடு  ஊடாடுகிற கேட்கும் விதத்தில்,  நரன் தன் கவிதை பார்வையை முன்வைத்திருக்கிறார்.
பேரமைதி என்ற கவிதை வரிகளை இப்படி முடித்திருப்பார்…

‘புத்தனிடமும் ஒரு குளமிருந்தது
அதற்குள் ஓராயிரம் மீன்கள்
ஓராயிரம் தாமரைகள்
ஓராயிரம் கொக்குகள்
நீரற்ற நீரால்
தசையற்ற மீன்களால்
இதழ்களற்ற தாமரைகளால்
பறந்துவிட்ட கொக்குகளால்
நிரம்பியிருக்கிறது அக்குளம்
எப்போதும் வற்றாக் குலமது
அதில் சலனிக்காத நீர்
அது அவன் பேரமைதியில் மட்டுமே சலனிக்கிறது
புத்தனின் முகத்தைப் பார்
எவ்வளவு சலனம்
எவ்வளவு பேரமைதி
இரண்டும் ஒன்றெனப் போல்’
(உப்புநீர் முதலை)

ஈழப்போராட்டத்தில் புலம் பெயர்ந்த மக்களின் வலியையும், அதனால், வெறுமையில் இருக்கும் அந்த ஊரையும் இதைவிட துள்ளியமாக எப்படி செல்வது?  வாழ்வின் சலனத்தும்… பேரமைதிக்கு ஒரே உவமையாக நரன் கையில் எடுத்திருப்பது புத்தனை. அதே வேளையில் திரு.பெலிக்ஸ் என்ற கவிதையில் வாழ்வின் அடுத்தடுத்த பரிமாண மாற்றங்களை மிக எதார்த்தமாக சொல்லி கடந்து போகிறார் நரன்.
‘உப்பு நீர் முதலை’  என்ற  கவிதை தொகுப்பில் ‘முதலை’  என்ற கவிதை மிக  முக்கியமானது .

‘உப்புநீர் முதலையொன்று துயில்கிறது
தலையை நீருக்குள்ளும்
உடலை வெண்மணலிலும்
கிடத்தியபடி
அப்போது அதனுடல்
கார்காலத்தில் தொடங்கி
கோடைகாலம்வரை நீண்டிருக்கிறது’
அந்தத் தொகுப்பில் உள்ள மற்ற கவிதைகளை எளிதில் புரிந்துகொள்ள  செய்யும் உபாயம் இந்தக் கவிதையை புரிந்துக்கொள்வதின் வழி பெற முடியும் என நினைக்கிறேன்.
‘பல்லுயிர் படிம ஆராய்ச்சியாளரான
63 வயது திரு.பெலிக்சுக்கு
177 ஆண்டுகள் பழமையான
மதுப்புட்டியொன்று கிடைத்தது
‘மிச்சம் இருந்த மதுவை
குவளையில் ஊற்றி அளந்து பார்த்தோம்
17 ஆண்டுகள் மீதமிருந்தன’

தலைமுறைச் சிக்கல்களை மட்டுமல்ல,  வாழ்க்கையின் எதார்த்தம் கையறுநிலையில் வெளிபடுவதாய்தான் நான் இவ்வரிகளைப் பார்க்கிறேன். நரன் தனது கவிதைகளில் எண்களோடு விளையாடியிருக்கிறார். ஆம், பல இடங்களில் கணிதம் வழியே அவரின் கவிதைகள் நம்மோடு கூட்டி கழித்து விளையாட்டு காட்டுபவையாக இருக்கின்றன.

47 முறை’ என்ற கவிதையில்
“நீண்ட கழுத்திற்கும் உடலுக்குமிடையே தொடர்பறுந்த ஆணுடல்”
இவ்வோவியத்தை வரைய 
கிட்டதட்ட 47 முறை துருவேறிய கத்தியால் கழுத்திற்கும்
உடலுக்குமிடையே
நேர்கோடிட வேண்டியிருந்தது என்னை
(ஏழாம் நூற்றாண்டின் குதிரைகள்)

கணிதத்தோடு நரன் விளையாடும் கவிதை வரிகள் நம்மை நிலைக்கொள்ளாமல் செய்து விடுகின்றன.
நடை முறை வாழ்கையில் நாம் எண்களை நிறைய பயன்பாட்டிற்கு உட்படுத்துகிறோம். ஆனால் இலக்கிய வடிவில் அதை பக்க எண்களாக மட்டுமே புத்தகங்களில் பயன்படுத்துகிறோம்.
-10 மணிக்கு சந்திக்கலாம் , 
-17 பேர் வந்திருந்தார்கள் ,  
-1300 வருடங்கள் பழையது,  

இப்படியாக சொற்கள் வெளிப்பாட்டில்,  எண்கள்  மிக முக்கியமான பாத்திரமாக ஊடாடிக்கொண்டிருக்கிறன. காலபோக்கில் இலக்கிய வெளியில் நரனின் தனித்த அடையாளமாக  எண்கள் மாறி போயிருக்கலாம்.

‘வார்த்தையைச் சுரக்கும் கிணறு’
என்னும் ஒரு கவிதையும் இவ்வாறான கணித விளையாட்டோடு உளவியல் சிக்கள் சொல்லக்கூடியதாகத்தான் நான் பார்க்கிறேன். இன்னும் நரனின் இந்தக் கவிதைத் தொகுப்பில்

-5600 கந்தக இழுசக்தி திறன் புல்லட் ரயில்
-ஜோடி ரிஷபம்
-பசுவிற்கு ஆறு கால்கள்
-7 மார்புடைய பெண்
-ஏழாயிரத்து பதினொரு கிழந்தைகளின் எழும்புத் துண்டங்கள்
-கர்பவதிக்கு இரண்டு யோனி
-மூன்று ஆணிகள்

இன்னும் பதினான்காயிர கையுடையால், ஏழாயிரத்து நூற்று சொச்சம் குதிரைகள், 127 மன்னர்கள், என எங்கும் விரவிக்கிடக்கிறார்கள். ஒரு வாசிப்பாளனாக இத்தனை புனைவுகளையும் நாமும் சுமந்துக்கொண்டு கணம் கூடிய நத்தை என நகரவேண்டியுள்ளது.

வீட்டில் வழுங்கி விழுந்தாள். அம்மா
வீடாய் எழுப்பப்படும் 47 ஆண்டுகளுக்கு முன்
இவ்வீடு நீரென்ற வார்த்தையைச் சுரக்கும்
கிணறாயிருந்தது’

(ஏழாம் நூற்றாண்டின் குதிரைகள்)

நரனின் கவிதைகளில் ஒளிந்துக்கொண்டு ரணங்கள் அக்கிணற்று நீரைப்போல் நம்மில் தங்கி விடுகின்றன.
முதலாளித்துவத்தை கேள்விக் கேட்கும்படியான பல கவிதைகளை நாம் படித்திருப்போம். ஆனால், நரனின் கவிதைகளை அதிலிருந்து கொஞ்சம் மாறுபடுத்தி பார்க்கலாம். அவர் முதலாளித்துவத்தோடு, மேற்கத்திய கலாச்சாரத்தையும் கேள்வி கேட்கிறார். இன்று சமூதாயம் அதன் பகட்டான மேற்கத்திய மோகங்களை பிரெண்ட்-டில்தானே வைத்திருக்கிறது. இதை வெளிப்படையாக போட்டு உடைக்கிறார் நரன்…

‘ஷூ’
காலையில் விடைப்பெறும் போது மனைவியின்
உதட்டைக் கவ்வி அவள் நாவை என் எச்சிலால்
ஈரப்படுத்துவேன்.
-பதிலீடாய் அவளும்-
தினமும் அலுவலகம் வந்ததும்
என் எஜமானனிடம் ‘லீ கூப்பர்’ கால் பதாகைகளை (ஷூ)
நாவால் நக்கி சுத்தப்படுத்துவேன்.
மனைவியின் நாவால் வலதுகால் ‘ஷூ’ சுத்தமாச்சு’

இப்படி அதிகார வர்கத்தை கேள்வி கேட்கும் சில கவிதைகளை நரன் சற்று காத்திரமாகவே வைத்திருக்கிறார்.
‘இங்கே’ என்ற கவிதையில் 

கண்கள் தோண்டப்பட்ட பெரும் பள்ளத்தை 
‘ரே-பான்’ கருங்கண்ணாடிகள் மறைக்கும் 
என்கிற கவிதையும் அதிகார வர்கத்தை கேள்வி கேட்கும் ஒன்றாகவே நான் பார்க்கிறேன்.
நரன் கிருஸ்துவ பின்புலத்திலிருந்து வந்தவர் என்ற காரணமோ அல்லது என்னவோ அவரின் கவிதைகளில் நிறைய கிருஸ்துவ மணம் வீசுகின்றன. பல இடங்களில் அதை அவதாணிக்க கூடியதாகவும் இருக்கிறது.  இருந்தபோதிலும், சலிப்பு தட்டாது, வாசகனின் மூளைக்கு நிறையவே வேலை கொடுக்கிறார் நரன். 

சில கவிதைகளில் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது நேரடியாக தெரிந்துவிடுகிறது. சில கவிதைகள் ஓரளவுக்கு இதைத்தான் சொல்கிறார் என்று இரண்டாம்- மூன்றாம் வாசிப்பில் அவதானிக்க முடிகிறது. சில கவிதைகள் எதைத்தான் சொல்ல வருகிறார் என்ற கேள்வி எழவும் செய்கிறது.

காலுரைகள்; காலணிகள்; ஹிருதயங்கள் என்ற கவிதையை உதாரணம் கொள்ளலாம்.

பதினான்காயிரம் கையுடையாள்

அவளிடம் பதினான்காயிரம் வெள்ளை உடுப்புகள்;
காலுறைகள்; காலணிகள்; ஹிருதயங்கள்
பதினான்காயிரத்து ஒன்றாய் ரோகியொருவன் உருவாகும் பொழுது
அவளும் பதினான்காயிரத்தொன்றாகிறாள்
யாரேனும் ஒருவர் சொஸ்தப்பட்டோ;
அல்லது நோய் முற்றியோ
கருப்பு வண்டியில் இல்லம் திரும்பும் போதோ அவள் 13999 ஆகிறாள்
எல்லாருக்கும் ஊட்டுகிறாள். துடைக்தெடுக்கிறாள்
மருந்திட்டுக் கண்ணீரும் சிந்துகிறாள்
கழுத்து வரை போர்த்தி விளக்கை ஊதியணைக்கிறாள்
நேர்த்தியாக இரவு உருவாகவும் செய்கிறது
உபரியென  யெதுவுமில்லை அவளிடம்
சில ரொட்டித் துண்டுகள்; சில வெண் பஞ்சுகள்;
சில காடாத்துணிகள்’

நரன் இந்தக் கவிதையின் வழி சொல்ல வருவது என்ன? அவர் கூறும் பதினான்காயிரம் கையின் உவமைக்கு அர்த்தம் என்ன? பிறகு ஏன் அவள் 13999 ஆகிறாள். ஏன் அவளிடம் ரொட்டித் துண்டுகளும், வெண் பஞ்சுகளும், காடாத்துணிகளும் மட்டுமே எஞ்சி இருக்கின்றன? கையுடையாள் என்பவள் உண்மையில் பெண்தானா? அல்லது அதுவும் புனைவா? கருப்பு வண்டி என மரணம் பற்றியும் இந்தக் கவிதையில் நரன் பேசுகிறார். இப்படி நானே பல கேள்விகளை கேட்டு கேட்டு விடை காண்கிறேன். விடை கிடைக்காமலும் இருக்கிறேன். வேறு ஒரு சந்தப்பத்தில் விடை கிடைக்கும் எனவும் காத்திருக்கிறேன்.

நரனிம் இந்த (ஏழாம் நூற்றாண்டின் குதிரைகள்) என்ற கவிதை தொகுப்பில் மிக முக்கியமான கவிதையாக நான் பார்ப்பது  

உணவு வு…ண…உ கவிதையாகும்.

அப்பா உணவு மேசையிலிருந்து
இரண்டு நாள் தொலைவில் வேட்டையாடிக்
கொண்டிருக்கிறார்
ஒரு காட்டு எலியை
நாங்கள் இங்கே காலி தட்டுகள் முன்.
இளையவன் பீங்கான் தட்டுகளை உடைத்து உடைத்து
சில்லுகளைக் காப்பிக் கோப்பைக்குள் முக்கி முக்கி
சுவைத்தான்
நான் எவர் சில்வர் தட்டுகளை முட்கரண்டியால்  குத்தி
குத்தி உண்டேன்
சுத்தியலால் உடைத்து பிட்டு பிட்டு உண்டாள் அம்மா
இவ் உணவு மேசையை
பசியை எங்களிடமிருந்து துரத்திக் கொண்டோடுகிறார்
எம் தந்தை
பழக்கங்களைப் புசிப்பதென்பதுதான் விசித்திரமும்
வாழ்வும்.

தொலைந்த வாழ்வின் எதார்த்தம், வறுமை, இயலாமை, முதலாலித்துவம், மேல் நாட்டு ஆதிக்கம் உள்ளிட்ட விடயங்களோடு நான் இந்தக் கவிதையை பொறுத்தி பார்க்கிறேன். இந்த ஒரு கவிதைக்குள் ஒரு சிறுகதையோ அல்லது ஒரு நாவலோகூட ஒளிந்துக்கொண்டிருப்பதாக நான் நினைத்துப் பார்த்துக்கொள்கிறேன்.
‘உப்பு நீர் முதலை’ கவிதை தொகுப்பில்  அமைதியை விரும்பும் மனநிலை , மற்றும் தோற்ற பிழையின்  மூலம் நாம் கண்டடையும் வாழ்வியல் தரிசனம்  போன்றவையே அந்த தொகுப்பு நெடுகிலும் மிஞ்சுவதாக இருக்கிறது.  ஆனால் ‘ஏழாம் நூற்றாண்டின் குதிரைகள்’ தொகுப்பில் சமுக அக்கறை , அதிகார மையத்தை கேள்வி எழுப்புதல், போன்ற செயல்பாடுகள்  நிறையவே இருக்கிறது.
நரன் அவரது கவிதைகளில் பல இடங்களில் சுயத்தைப் பற்றி கூறும் வேளையில், அது குறித்த கேள்வியையும் நம்மிடம் கேட்கிறார். அவரின் கவிதைகள் எரியாத நெருப்பாக புகைந்துக்கொண்டே இருக்கின்றன. அதன் வெட்பம் பூடகமாக நம்மை புழுங்கச் செய்கிறது.

ஒரு கவிதை புத்தகத்தை திறந்து வைத்தேன்
கவிதையில் வந்து ஒரு குருவி சற்று அமரட்டுமென
சிறுகதை ஏடென்றால் கூடு கட்டி, மஞ்சள் குஞ்சு பொறித்து
நடை பழக்கி பின் செல்லும்
நாவலென்றால்…

இப்படி வரியை முடித்து நம் முகத்தை விட்டென ஏறிட்டு பார்ப்பதைப்போல இருக்கிறது நரனின் கவிதைகள்.  நரனின் ஏழாம் நூற்றாண்டின் குதிரைகள் கவிதை தொகுப்பில் பயன்படுத்தியிருக்கும் ஓவியங்கள்  மிக நேர்த்தியானவை. இயற்கையாகவே ஓவியங்களில் ஆர்வம் கொண்டவரான நரனுக்கு, தமது தொகுப்பிற்கான ஓவியங்களைத் தேர்வு செய்வதில் பெரிய சிரமம் இருந்திருக்காது என்றே தோன்றுகிறது. படங்களுக்கு ஏற்ற கவிதை அல்லது கவிதைக்கு ஏற்ற ஓவியம் என தனியே பிரித்து பேச முடியாத அளவுக்கு இந்த தொகுப்பில் ஓவியங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ரொபெட்டோவின் புகைப்படத்தோடு கூடிய ஓவிய பாணி படங்களும், வில்லியம் கான்ரீஜின் ஓவியங்களையும் கவிதை தொகுப்பிற்கு பயன்படுத்த அதற்கு ஏற்ற கவிதை முதலில் தேவைப்படுகிறது. மிக பொறுத்தமாக அமைந்திருக்கிறது நரனின் கவிதைகள்.
ஆனால், ‘உப்பு நீர் முதலை’ தொகுப்பில் இருக்கும் எல்லா ஓவியங்களையும் நரன் வரைந்திருக்கிறார்  என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து, நரனின் கவிதைகளில் ஏமாற்றமும், கோபமும்தான் எங்கும் இளையோடுகின்றன. அவரின் இரண்டு கவிதை தொகுப்புகளிலும் இதை காண முடிகிறது. வாழ்கை என்பது இன்பமும் துன்பமும் சேர்ந்தது என்றால் இன்பத்தையும் பதிவு செய்துதானே ஆக வேண்டும். கவிஞன் என்பவன் துன்பத்தின் பிரதிநிதியாக மட்டும் தம்மை உணர்த்த முயற்சிப்பது ஏன்? கவிதை என்பது திட்டமிட்டு எழுதப்படும் விடயமா என்ன? நம்மை பாதிக்கும் சம்பவம் அல்லது காட்சி கவிதையாக காகிதத்தில் இறக்கி வைக்கும் போது நம்மை பாதிக்கும் இன்பத்தையும் கவிஞர்கள் கவிதையில் ஏன் பதிவு செய்ய முனைவதில்லை. அதிலும், நரன் வார்த்தைகளை பிரயோகிப்பதிலும், கவிதையை நவீன பாணியில் சொல்வதிலும் அவருக்கென தனி பாணியை வைத்திருக்கும்போது, அவருக்கு இது சாத்தியமான ஒன்றாகவே நான் பார்க்கிறேன். அவரின் அடுத்தடுத்த படைப்புகள் அல்லது அவரோடு ஓர் இலக்கிய சந்திப்பு செய்தால்தான் நரன் விட்டுவைத்திருக்கும் இன்பம் என்ற அந்த வெற்றிடத்தின் காரணத்தை அறியமுடியும் என எனக்கு தோன்றுகிறது.

ஒரு கவிதையில்…
மிகப்பெரிய மலைப் பாம்பொன்றை வரைந்தேனா
அயர்ச்சியில் அதன் மேலேயே படுத்துறங்கி விட்டேன்… 

என்கிறார் நரன், அங்கே என் தூக்கம் பறிபோனதை அவர் அறிந்திருக்கமாட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக