ஞாயிறு, 1 ஜனவரி, 2023

பாலி தீவுக்கு பயணம் போகலாமா வேண்டாமா ? பாகம் 5

ஓரிரு நாள் பாலி பயணத்தில் நிறைய காட்சிகளும் அனுபவங்களும் எனக்கு கிடைத்தது. அனைத்தையும் பதிவு செய்வது என்பது சாத்தியமாகாத ஒன்று. ஆனால், விடுப்படகூடாத ஒரு சில சம்பவங்களை சுறுக்கமாக இந்த 5 பாகத்தில் பதிவு செய்து தொடரை நிறைவுச் செய்து விடுகிறேன்.  

பாலியின் பயணக் கட்டுரையின் முதல் பாகத்திலேயே அங்கே நடந்த குண்டு வெடிப்பு பற்றி கூறியிருந்தேன். அதை இன்னும் கொஞ்சம் தெளிவாக பதிவு செய்து விடுவது நல்லது என நினைக்கிறேன்.  2002-ஆம் ஆண்டு பாலியில் குதா நகரில் நடந்த குண்டு வெடிப்பு ஜாமயா இஸ்லாமியா அடிப்படைவாதிகளால் நடத்தப்பட்டது என்பதை அந்த அமைப்பே ஒப்புக் கொண்டது. வெளி நாட்டினரை குறிவைத்து நடத்திய தீவிரவாதத் தாக்குதல் என்பது ஒருபுறம் இருந்தாலும்  பாலித் தீவில் வாழும் உள்நாட்டு மக்கள் பெரும்பான்மையாக இந்துக்களாக இருப்பதை எதிர்க்கும் அல்லது எச்சரிக்கும் விதமாக இந்த குண்டு வெடிப்பு நடத்தப்பட்டிருக்கிறது.   

தவிர, குண்டுவைக்க பாலியைத் தேர்ந்தெடுக்க மற்றொரு காரணம், குஜராத்தில் நரேந்திர மோடி ஆட்சியின் போது நடந்த இஸ்லாமிய படுகொலைக்கு பழிவாங்குவதற்குத் தானாம். தேதிகளைப் பார்க்க குஜராத் படுகொலைகள் பாலி குண்டு வெடிப்பிற்கு முன்பு நடந்தவை என்று அறியும் போது அவனுடைய வாக்குமூலம் உண்மை தான் என்றும் தோன்றுகிறது, பாலியில் குண்டு வைத்த கும்பலில் ஒருவன் அளித்திருக்கும் வாக்குமூலத்தின் சுறுக்கத்தை இணையப் பதிவர் ஒருவர் இவ்வாறு பதிவு செய்திருக்கிறார்.  உண்மையில் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.

இரவு நேரங்களில் இந்தச் சாலையை பாதச் சாரிகளின் சாலையாக மாற்றிவிடுகிறார்கள். வாகனங்களை அனுமதிப்பதில்லை. தவிர முழுக்க கேளிக்கை மையமாகவே அந்தச் சாலை மாறிவிடுகிறது. இறந்தவர்களுக்கான நினைவுத் தூபி அங்கே அமைத்திருக்கிறார்கள். இறந்தவர்களின் பெயரும், எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதும் அந்த தூபியில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

கோப்பு படம்

பாலி இதிகாச மேடை நாடகங்கள்

பாலி பயணத்தில் நான் பதிவு செய்ய உத்தேசிப்பது அங்கு நான் பார்த்த நாடகமாகும். இந்தோனேசியாவில் உள்நாட்டு மக்களால் நடத்தப்படும் மகாபாரத மேடை நாடகம் உலகப் பிரசித்திபெற்றது என்பது பலருக்கு தெரிந்ததுதான். மகாபாரதம் அல்லாத கூத்து வகை வேஷம் கட்டி  செய்யப்படும்  இதிகாச மேடை நாடகங்களும் பாலியில் நடத்தப்படுகிறது. இந்த வகை நாடகங்கள் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்தே பெருவாரியாக நடத்தப்படுகிறது. கதையும் கரு என்ன என்பது புரிந்துகொள்ள முடியவில்லை என்றாலும், அவர்களின் உடை மற்றும் முக அலங்காரங்களும் நகை ஆபரணங்களும் அந்நாட்டு பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தையும் பேசுகின்றன. 

அதோடு முகமூடிகள் கொண்ட கூத்துவகை ஆபரணங்கள், பாலி நாடகத்துறை ஆய்வுக்கு ஒரு பேச்சுபொருள் ஆக்கலாம். இந்த நாடகங்கள் அரங்கேற்றம் காணும்போது இந்தோனேசிய பாரம்பரிய இசைக்கருவிகளால் live இசை இசைக்கப்படுவது. மலேசியாவிலும் மலாய்க்காரர்கள் இந்தவகை இசைக்கருவிகளையே அவர்களின் பாரம்பரிய இசைக்கருவியாக பயன்படுத்துவதால் எனக்கு அது பரிச்சயமான இசையாகவே இருந்தது. எனக்கு இந்த மேடை நாடகத்தில் பிடிக்காத விஷயமாக இருந்தது அதில் ஆபாசத்தை கலந்ததுதான். இதிகாச நாடகத்தின் இடையில் கேலிசெய்யும் பாத்திரம் ஏற்ற இருவர் ஆபாச செய்கைகளை  நகைச்சுவையாக அரங்கேற்றியது முகம் சுழிக்கும் படியாகவே ‘எனக்கு’ இருந்தது.


எரிமலை

உயிருடன் மற்றும் இறந்த எரிமலை இரண்டையுமே சுற்றுப்பயணிகள் காண்பதற்கு இந்தோனேசியா சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்து தருகிறது. மொத்தம் 130 எரிமலைகளை இந்தோனேசியா கொண்டிருக்கிறது.

பாலித்தீவை பொறுத்தவரை ஆகங் எரிமலை முக்கியமானதாக கருதப்படுகிறது. எங்களுடைய பாலி பயணத்தில் இந்த எரிமையை காண்பதற்கான திட்டம் வரையப்பட்டிருந்தது. ஆனாலும் எங்கள் பாலி பயணித்தின் சில நாட்களுக்கு முன்தான் (ஜூன் 30 2018)  இந்த எரிமலை புகையத் தொடங்கியிருந்தது.  கற்றில் பயங்கரமான மாசு ஏற்பட்டதாலும், பாதுகாப்பு கருதியும் பாலித் தீவுக்குச் செல்லும் பயணங்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன. இந்நிலை இரண்டு நாட்களில் சீரானதை தொடர்ந்து ஜுலை 2 ம் தேதியிலிருந்து பாலிக்கான விமான சேவை சுமூக நிலைக்கு திரும்பியது. எனது பயணம் ஜூலை 4-ஆம் தேதி என்பது குறிப்பிடதக்கது.

நாங்கள் தங்கியிருந்த குதா நகரிலிருந்து சுமார் 70 கிலோ மீட்டர் தொலைவில்தான் ஆகங் எரிமலை இருந்தது. அங்குச் செல்வது பாதுகாப்பு இல்லாத காரணத்தினால், சுற்றுப்பயணிகளுக்கு மறுப்பு சொல்லியிருந்தார்கள். அதனால், நாங்கள் 'Kintamani valcano'  எரிமலை காணச் சென்றோம். மலைக்கு நேர் எதிரே, கிண்டாமணி மலையை முழுமையாக காண கூடிய அளவுக்கு கொஞ்சம் தொலைவில் மலை உச்சியில் சுற்றுலாவாசிகளுக்காக உணவு விடுதி இருக்கிறது. ஒரு டீ அல்லது காப்பியை சுவைத்துக்கொண்டு குளிர் காற்றை அனுபவித்தபடியும் எரிமலையை ரசித்தபடியும்  இருப்பது புது அனுபவத்தை கொடுக்கும். தவிர வாழ்க்கையில் மறக்க மூடியாத காட்சியாகவும் அது அமையும்.

 ஆகங் எரிமையை பார்க்கவில்லையே என்ற குறை பாலியிலிருந்து மலேசியாவுக்கு விமானத்தில் திரும்பும்போது தீர்க்கப்பட்டது. காரணம் அந்த எரிமையை கடந்துதான் விமானம் வந்தது. பயணிகள் அறிந்துக்கொள்வதற்காக விமான ஓட்டி அதை அறிவிப்பு செய்தது எல்லாரும் அதைக் கண்பதற்கு வாய்ப்பாக அமைந்தது.  

 குட்டித் தகவல்

50 வருடங்களுக்கு பிறகு 2017-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்த ஆகங் எரிமலை அதன் சீற்றத்தை கக்கியிருக்கிறது. முன் எச்சரிக்கையாக கிட்டத்தட்ட ஒன்றரை இலட்சம் மக்கள் அங்கிருந்து வெளியற்றப்பட்டனராம்.

மந்திரமா ? தந்திரமா?

கட்டுரையை தொடங்கும்போதே ‘கேள்வி கேட்கும்போது முகத்தில் கொஞ்சம் கடுமை’ என்று எழுதியிருப்பேன். அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அந்த அனுபவம் எனக்கு பணம் மாற்றும் நிகழ்ந்தது. முன்னூறு மலேசிய ரிங்கிடை இந்தோனேசிய ரூபியாவாக மாற்றுவதற்கு குதா நகரில் இருக்கும் பணம் மாற்றும் நிலையங்களில் ஒற்றை ஆளாக சுற்றிக்கொண்டிருந்தேன். மூன்று கடைகளில் விசாரித்தப்பிறகு ஒரு கடையில் நல்ல ரேட் கிடைத்தது. பணத்தை மாற்றியும் விட்டேன். பின் நடந்த கண்கட்டி வித்தையில் மலேசிய ரிங்கிடை திரும்ப கொடுங்கள் என வாங்கிகொண்டு வந்தேன். நடந்தது இதுதான்.

மலேசிய ரிங்கிட் 300-க்கு அவர்கள் ஒரு தொகையை சொன்னார்கள். அது திருப்திகரமாக இருக்கவே சரி என பணத்தை மாற்ற சொன்னேன். அவர்கள் நான் கொடுத்த பணத்தை கையில் தொடவே இல்லை. கவுண்டரில் ஒவ்வொரு நூறு ரிங்கிட்டையும் பிரித்து வைக்க சொன்னார்கள். வைத்தேன். அந்த ரேட்டுக்கு உண்டான இந்தோனேசியப் பணத்தை ஒவ்வொரு தாளாக அவர்கள் எண்ணி என்னிடம் காண்பித்து கவுண்டரில் வைத்தார்கள். என்னை தொட அனுமதிக்கவில்லை. சரியா என்று என்னிடம் கேட்கிறார்கள். நான் சரி என்றதும் அப்படியே பணத்தை மொத்தமாக கொடுத்துவிடுகிறார்கள். கண் முன்னே எண்ணியதில் என்ன பிழை இருக்கப் போகிறது. அப்படியே பண பையில் வைத்தேன். அப்போதுதான் ஷாகுல் அங்கு வந்து சேர்ந்தார்.

 அவர் வேறு எங்கோ பணம் மாற்றியிருந்தார்.  நானும் பணத்தை மாற்றிவிட்டதாக சொன்னேன். சரியாக இருக்கிறதா? எண்ணிப் பார்த்தீர்களா என்றார். சரியாகத்தான் இருக்கும் என்றேன். எதற்கும் எண்ணிப் பாருங்கள் என்று அவர் சொன்னதும் பார்த்தால் அதில் 100 ரிங்கிட்டுக்கான பணம் உண்மையில் குறைவாகவே இருந்தது.  இவ்வளவும் பணம் மாற்றும் இடத்திலேயே நடந்ததால் பணம் மாற்றுபவர்களிடம் போனேன். அவர்கள் அப்பணத்தை வாங்கிகொண்டு அவர்களின் பாணியில் எண்ணும்போது மீண்டும் சரியாக இருந்தது. எனக்கும் ஷாகுலுக்கும் இது என்ன வித்தை என்பதுபோல இருந்தது. பணத்தை இம்முறை ஷாகுல் வாங்கி எண்ணினார். 100 ரிங்கிட்டுக்கான பணம் குறைவாக இருந்தது.

இது மந்திரமா தந்திரமா அல்லது மேஜிக்-கா என்றெல்லாம் ஆராய்ச்சி செய்வதற்கு தோன்றவில்லை. அதிக பணம் அங்கு தண்ணியாக செலவு ஆகிறதை என்னால் உணர முடிந்தது. 100 ரிங்கிட் பற்றாக்குறையை எல்லாம் என்னால் சமாளிக்க முடியாது என்பதால் நான் வேறு கடைக்கு நடையை கட்டினேன்.

இறுதியாக, 

பாலியில் நான், அவர்களின் பாரம்பரிய விவசாய முறையையும் கேட்டு தெரிந்துகொண்டேன். அவர்களின் உணவு முறை, இந்தியர்கள் என்றாலும் இனத்தால் நம்மிடமிருந்து வேறு பட்டிருக்கும் அவர்களின் இந்திய பாரம்பரியத்தை ஓரளவு பார்த்தும் கேட்டும் உரையாடியும் அறிய முடிந்தது. இந்த அனுபவங்களோடு நாங்கள் விடைபெற்றோம்...

முற்றும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக