செவ்வாய், 18 ஏப்ரல், 2023

நிலத்தை மீட்டெடுக்க போராடும் பூர்வக்குடி மக்கள்

 மனிதர்கள் அல்லாத உயிரினங்கள் எல்லாமே, யாருடைய அனுமதியும் அதிகாரமும் இன்றி, தம் இருப்பிடத்தை தாமே அமைத்துகொள்கின்றன.  ஏகப்பட்டச் சட்டங்களையும் திட்டங்களையும் கொண்டிருக்கும் மனிதன் ஆதிக்கம் மற்றும்  முதலாளித்துவ சிறையில்  சுக்கிக்கொண்டு மீளமுடியாத சிறைவாசியாகவும், தமக்கான ஒரு கூடு அமைக்க முடியாமலும்  தவிக்கிறான்.

உலகம் முழுக்கவே இதுதான் நிலை என்றாலும், பூர்வக்குடிகளுக்கென்று ஒரு வரையரை உள்ளது. பன்நெடுங்காலமாக காடுகளையே தங்களின் வாழ்விடமாக அவர்கள் கொண்டிருக்கிறார்கள். எந்தச் சட்டத்திட்டத்திற்குள்ளும் அடங்காதவர்கள் என்றும், காட்டுவாசிகள் என்றும் அடையாளம் கொண்டிருக்கும் அவர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பது, உலக சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் உலக மனித உரிமை ஆணையத்தின் வேண்டுகோளாக உள்ளது.

மலேசியாவைப் பொருத்தவரை காடுகள் அழிப்பு என்பது ஒவ்வொருநாளும் கண்மூடித்தனமாக நடைபெற்றுகொண்டிருக்கிறது. இதனால், வனவிலங்குகளும், இயற்கைசூழலும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. இதில் வனவாசிகள் குறித்த பாதுகாப்பும் காடுகளோடு அவர்களுக்கிருக்கும் உயிரோட்டமான உறவையும் யாரும் புரிந்துகொள்வதாக இல்லை. பொறுப்பற்றவர்களால் வனத்தில் மேற்கொள்ளப்படும் இயற்கை சுரண்டல்களுக்கு, தடையாக இருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் பூர்வக்குடி மக்கள், தங்களின் வசிப்பிடம் வரைக்கும் வந்துவிட்ட வன அழிப்பை, பூர்வக்குடிகளின் பிரச்னையாக அல்லாமல், சூறையாடப்படும் வனம் எல்லாருடைய நல்வாழ்வுக்கானது என்பதை உணரும்படி நாட்டுமக்களை கேட்டுகொள்கின்றனர்.  

இதில் புளுகுமூட்டை என்னவென்றால், வசதியாக வாழவைக்கிறோம் என, காடுகளில் வசித்த மக்களை, மாநில அரசாங்கங்கள் சாலையோர குடியிருக்குக்கு மாற்றியமைத்ததுதான். காடு கொடுத்த கொடையில் செழித்து வாழ்ந்த பழங்குடிகள், தற்போது காடுகளை இழந்துவிட்டு, முதலாளிகளுக்கு கூலிகளாக வாழபழகிகொண்டிருக்கிறார்கள்.

இதிலிருக்கும் அரசியலை அறிந்துகொண்ட போராட்ட குணம் கொண்ட சிலர் மட்டும், காடுகளே எங்கள் வீடுகள்; அதை எங்களிடமே கொடுத்துவிடுங்கள் என்று மாநில அரசாங்கத்திடமும் மத்திய அரசாங்கத்திடமும் போராடிகொண்டிருக்கின்றனர். அந்த வகையில், பகாங் மாநிலத்தில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்துவரும், செமாய் சமூகத்தைச் சேர்ந்த போஸ் லானாய் கிராம மக்கள்,  அவர்களின் பாரம்பரிய  நிலத்தை மீட்டெடுக்க, நீதி கேட்டு சட்டத்தை கையில் எடுத்திருக்கின்றனர்.

சட்டத்தை நாடுவதற்கு என்னக் காரணம்?

நூறு ஆண்டுக்கும் பழைமையான இந்தக் கிராமம், பலவரலாற்றுப் பதிவுகளையும், வரலாற்று எச்சங்களையும் இன்னும்கூட கொண்டிருக்கிறது. குறிப்பாக பிரிட்டிஷ் காலணியாதிக்கத்தில், பிரிட்டிஷ்காரர்களோடு இவர்களுக்கிருந்த நட்புறவையும், பகாங் அரசக்குடும்பத்தோடு இம்மக்கள் கொண்டிருந்த நல்லினக்கத்தையும் சிலவற்றை வாய்மொழி பதிவுகளாகவும், புகைப்படங்கள் மற்றும் எழுத்துப்பூர்வ பதிவுகளாகவும் இவர்கள் கொண்டிருக்கின்றனர்.

இம்மாதிரியான வரலாறுகளைக் கொண்டிருதாலும், இந்தக் கிராமமானது ஒரு பாதுகாப்பு இல்லாத சூழலையே இன்றுவரை எதிர்கொண்டுவருகிறது. நல்ல மண் வளமும், நீர் வளமும் கொண்டிருக்கும் பகாங் மாநிலத்தில் சட்டப்பூர்வமாகவும், சட்டத்திற்கு புறம்பாகவும் இயற்கையைச் சுரண்டும் நடவடிக்கைகள் நடந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில் தங்களின் பாரம்பரிய வனப்பகுதிக்கு பேராபத்து வரும்போதெல்லாம் அங்கிருக்கும் பூர்வக்குடி மக்கள் போராட்டத்தை கையில் எடுக்கின்றனர்.

அதற்கு சில சம்பவங்களை சொல்லலாம். உதாரணமாக 2011-ஆம் ஆண்டின் முற்பகுதியில் வனத்திலிருந்த எங்களை Sg Koyan நகருக்கு அருகில் உள்ள Pembangunan Bersepadu Desa Terpencil (PROSDET) கம்போங் பந்தோஸ் என்ற கிராமத்திற்குச் செல்லுமாறு JAKOA வலியுறுத்தியது. உண்மையில், இந்த இடமாற்றம் அரசு மற்றும் TNB நிறுவனத்தால், மின்சார தேவைக்காக ‘தெலோம் அணையை’ கட்டுவதற்காக மேற்கொள்ளப்பட்டது. இவ்விவரத்தை அவர்கள் 2013-ஆம் ஆண்டுதான் எங்களுக்கு தெரிவித்தார்கள். எங்கள் கிராமம் ஆபத்தில் இருப்பதை உணர்ந்து, பழங்குடி மக்கள் மேற்கொண்ட சட்டநடவடிக்கையில், 2019-ஆம் ஆண்டு பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கம் கிராமத்திற்கு எதிரான இந்த திட்டத்தை ரத்து செய்தது. அதை தொடர்ந்து, லந்தனைடு சுரங்க திட்டத்தை 2021-ஆம் ஆண்டு கொண்டு வந்தார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு நடக்ககூடிய இந்த சுரங்கதிட்டம், மாநிலத்திற்கு மட்டுமல்ல, தீபகற்பத்திற்கே மிகப்பெரிய இயற்கை மாசுபாட்டை ஏற்படுத்தக்கூடியதாகும். இதனால், ஒட்டுமொத்த கிராமமும் இந்தச் சுரங்கத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததில், தற்போது அத்திட்டம் ஒத்திவைப்பட்டுள்ளது. இருந்தாலும், அங்கு சட்டவிரோத நடவடிக்கைகள் சில நடப்பதை நாங்கள் கவனிக்கவே செய்கிறோம் என போஸ் லானாய் மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கார்ப்ரேட் நிறுவனங்களின் பல்வேறு இலாபம் ஈட்டும் திட்ட அச்சுறுத்தலை தவிர்ப்பதற்கும், பல ஆண்டுகளாக வசித்து வரும் அக்கிராமத்தை, தங்களுக்கே உரிமையாக்கும்படியும் நீதிமன்ற உதவியை பழங்குடிமக்கள் நாடியுள்ளனர்.

இதுதொடர்பாக கடந்த ஆகஸ்ட் 2021,  பழங்குடிகள் மக்களின் சார்பில், வழக்கறிஞர் ஹர்னேஷ்பால் சிங் புல்லர்  இவ்வழக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதியிலிருந்து தொடந்து  4 நாட்கள் நீதித்துறை ஆணையர் ரோஸ்லான் மாட் நோர் முன்னிலையில் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டிருக்கிறது. 147 பேரை பிரதிநிதித்து 8 பழங்குடிகள் முதல்முறையாக சொந்த நிலத்தை போராடி மீட்கும் வழக்கில் களமிறங்கியுள்ளனர்.

இன்று நாம் அனுபவிக்கும் சுதந்திரம் போராடி பெற்றதுதான். அதில் பூர்வக்குடிகளுக்கும் பங்கு இருக்கவே செய்கிறது. இன்று சொந்த நிலத்து சுதந்திரத்திற்காக அவர்கள் சொந்த நாட்டிலேயே போராடிகொண்டிருக்கின்றனர். நாம் அவர்களுக்கு என்ன பதில் வைத்திருக்கிறோம்.

நன்றி தமிழ்மலர் நாளிதழ் 16/4/2023

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக