புதன், 8 பிப்ரவரி, 2023

'ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள்’ - புத்தக விமர்சனம்

2019-ஆம் ஆண்டிலிருந்து தேடிக்கொண்டிருந்த புத்தகம், பல பதிப்பகங்களிடமும் கேட்டுப்பார்த்தும் இல்லை என்ற பதில் மட்டுமே கிடைத்தது. அடுத்த ஈராண்டுகள் கொரானா காலமாக இருந்தாலும், வாசிப்புக்கு எந்தத் தடையும் இல்லாமல் இருந்தது. ஆனாலும் அந்தப் புத்தகம் மட்டும் கைக்கு எட்டவே இல்லை.  இந்நிலையில்தான் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதெமி விருதினை இப்புத்தக்திற்கு அறிவித்தார்கள். சரியான ஒரு புத்தகத்திற்காகத்தான் காத்திருக்கிறோம் என்று மனம் மீண்டும் புத்தகத்தை இன்னும் தீவிரமாக தேடத் தொடங்கியது. சென்னையிலிருந்து மலேசியாவுக்கு வந்த நண்பர் மூலமாக கடந்த ஆண்டு புத்தகம் கைக்கும் வந்தது.  அடுத்த சில நாட்களில் புத்தகத்தை வாசித்து முடித்துவிட்டு இதை எழுதுகிறேன்.

வாசிக்கும் எல்லாப் புத்தகத்திற்கும் நான் குறிப்பு எழுதுவதில்லை. நான் குறிப்பு எழுதுவதற்காக வாசிப்பதும் இல்லை. பாதித்த புத்தகத்தின் பாத்திரங்கள் மனதில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கங்களை,  எழுதினாலே தவிர அதை இறக்கி வைக்கமுடியாது. அந்தப் பாரத்தை அப்படியே சுமந்து திரிவதும் சுலபமல்ல. வேறு எந்தப் புத்தகத்தின் பாத்திரங்களையும் உள்வாங்க முடியாமல் வாசிப்பு  மட்டுப் படும் அபாயம் இருக்கிறது.

 சைரஸ் மிஸ்திரி எழுதிய ‘ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள்’ என்றப் புத்தகத்தில் கதைச் சொல்லியாக வரும் ஃபெரோஸ் எல்சிதானா; என்னுள் கிடத்திய பாரத்தை இப்போது இறக்கி வைக்கிறேன்.

எழுத்தாளர் மாலன் தமிழில் மொழிபெயர்த்திருக்கும் இந்தப் புத்தகம், ஒரு தனிப்பட்ட சமூகத்தின், அடையாளத்தைப் பேசும் புத்தகம் என்றே சொல்லலாம். பாரசீக நாட்டில் தோன்றிய இம்மதத்தை,   பம்பாயில் பின்பற்றுபவர்களால் எப்படி வழிநடத்தப்படுகிறது என்பதை நேரடி சாட்சியாகவும் காட்சிகளாகவும்  நம் முன் விரிகிறது.

புத்தகத்தின் கதைக்குள் போகும் முன்பு, நாம் பார்சி மதத்தை சுறுக்கமாக  தெரிந்துக்கொள்ள வேண்டும். பார்சி மதத்தைக் குறித்து தெளிவு இருக்கும் பட்சத்தில் கதையை இன்னும் ஆழமாக உள்வாங்க வகை செய்யும்.  

பாரசீகத்தில் தோன்றிய மதம் என்பதால் ஒருசில விஷயங்கள் இஸ்லாமிய சமையத்தை ஒத்து இருக்கிறது. ஆனால், அவர்கள் இஸ்லாமியர்கள் அல்ல.  ஈரான், அம்மக்களை முஸ்லிமாக மாற்ற முயற்சி செய்தததாகவும்,  அதனால்  அவர்கள் பல நாடுகளுக்கு தப்பித்து புலம் பெயர்ந்தார்கள் என்றும் சொல்லப்படுகிறது.  அவர்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று.  பார்சிகள் இந்திய மேற்கு கடற்கரைக்கு வந்து சேர்ந்தனர் என்றும் சுமார்  6000 பேர் குஜராத் மாநிலத்தில் உள்ள உட்வாடா பகுதிக்கு புலம் பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர் என்றும் இணையத் தகவல் சொல்கிறது.

இவர்கள் தங்கள் மதத்தை மிகவும் தீவிரமாக பின்பற்றுவர்களாக இருப்பதால், மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே இம்மதத்தினரின் மக்கள் தொகை இருக்கிறது. உலகத்தில் சுமார் 70,000 பார்சி மக்கள் மட்டுமே  வாழ்கின்றனர் என்று ஒரு இணையத் தளம் செய்தி சொன்னாலும், இந்தியாவில் மட்டும் 1 50,000 பார்சிகள் இருக்கிறார்கள் என்று இன்னொரு இணையச்செய்தி சொல்கிறது.  

இவர்களின் ஆண்கள் பாராசீக உடையையே பாரம்பரிய உடையாக அணியும் அதே வேளையில் பெண்கள் புடவை அணிகிறார்கள்.  ஆண்கள் தலைக்கு குல்லா அணியும் வழக்கமும் இருக்கிறது.  1795-ல் பார்சிகள் தமிழ்நாட்டிற்குள் காலடி வைத்திருக்கின்றனர். ராயப்புரத்தில் தஞ்சமடைந்த அவர்கள் பின்னாளில் அவர்களின் பாரம்பரிய  நெருப்புக் கோயிலையும் ராயப்புரத்திலேயே கட்டிக்கொண்டனர்.  நூறாண்டுக்கும் மேலாக அங்கு நெருப்பு அணையாமல் எரிந்துக்கொண்டிருக்கிறது.  தவிர இந்தியா முழுவதும் சுமார் 100 நெருப்புக் கோயில்கள் இருக்கிறதாம்.  மிகவும் கட்டுப்பாடுகள் கொண்டிருக்கும் இந்த மதத்தில் அவர்கள் மட்டுமே அந்தக் கோயிலுக்குள் செல்ல முடியும். சென்னையில் 300 பார்சி மதத்தைச் சேர்ந்த மக்கள் இன்னும் இருக்கின்றனராம்.

உலகின் பழமையான மதம் என்று சொல்லக்கூடிய இம்மதத்தைச் சேர்ந்தவர்களின் இறந்தவர்களுக்குரிய இறுதிச் சடங்கு வித்தியாசமானது. அது வேரு எந்த மதத்திலும் இல்லாத ஒன்று. இவர்கள் இறந்தவர்களின் உடலை உயரமான இடங்களில் வைத்து கழுகு மற்றும் பறவைகளுக்கு இரையாக்கி விடுகிறார்கள். அந்த உயரமான இடத்தைதான் அவர்கள் அமைதி கோபுரம் என்று அழைக்கிறார்கள்.  

இந்தியாவில்  தொழில்துறை மற்றும் வியாபார வர்த்தகத்தில் பார்சி மக்களே ஆதிக்கம் செலுத்துகின்றனராம். குறிப்பிடத்தக்க அவர்கள் யார் யார் என்று இணையத்தில் தகவல்கள் இருக்கின்றன.  தேவையானவர்கள் பார்த்து தெரிந்துக்கொள்ளலாம்.

பார்சி  மதத்தின் புனித நூலுக்கு 'அவஸ்தா' என்றுப் பெயர்.  அவர்களுக்கான முக்கிய மதச் சடங்குகளும் உள்ளன. தனி நாள்காட்டியும் உள்ளது. இவர்கள் பண்டிகையை நவ்ரூஸ் பண்டிகை என்று அழைக்கப்படுகிறது. பாரசீக நாட்டில் தோன்றிய மற்றுமொரு மதமான பஹாய் சமையத்தின் பண்டிகையும் நவ்ரூஸ் என்றுதான் அழைக்கப்படுகிறது. அது மார்ச் மாதத்தில் வரும். பார்சிகளின் பண்டிகை ஆகஸ்ட் மாதத்தில் வருகிறது. நவ்' என்றால் புதியது, 'ரோஸ்' என்றால் நாள் என்று பொருள்படுகிறது.

இப்போது நாம் நாவலுக்குச் செல்லலாம்.

இதை ஒரு பிணந்தூக்கியின் வலியைப் பேசக்கூடிய புத்தகம் என்று மட்டும் சொல்லிவிடமுடியாது. இது ஒரு காதல் கதை.  மிக முக்கியமான தகவல் என்ன வென்றால்,  இந்த நாவல் கர்பனையால் புனையப்பட்டக் கதை அல்ல. பம்பாயில் வாழும் பார்சி சமூகத்தினர் பற்றிய ஆவணப்படம் தயாரிப்புக்காக சேகரிக்கப்பட்ட தகவல்கள், அந்நோக்கம் நிறைவேறாத காரணத்தினால்,  தன் நினைவில் நின்றுவிட்ட இந்தச்  சமூகத்தில் நடந்த சில முக்கியச் சம்பவங்கள்  நாவாலாகத் தன்னை வடிவமைத்துக்கொண்டன;  என்று இந்தப் புத்தகத்தின் அசல் எழுத்தாளரான சைரஸ் மிஸ்திரி குறிப்பு எழுதியிருக்கிறார்.

துறைமுகத் தொழிலாளியும், பிணம் தூக்கியின் மகளும் காதல் வயப்பட்டு திருமணம் செய்துக்கொள்ள முடிவெடுக்கின்றனர். தன் மகளைத் திருமணம் செய்ய வேண்டும் என்றால் பிணம் தூக்கியாக மாற வேண்டும் பெண்ணின் தந்தை கட்டளை இடுகிறார்.  (துறைமுகத் தொழிலாளியின் குடும்பத்தை பழித்தீர்க்கும் காரணம் இதில் இருக்கிறது. ) துறைமுகத் தொழிலாளி காதலுக்காக கட்டளையை ஏற்று தன் வாழ்கையின் திசையை மாற்றிக்கொள்கிறார் என்பது நடந்த உண்மைச் சம்பவம்.

நாவலில்,  ஒரு ஆச்சாரமான கோயில் குருக்களின் பிரியமான இளைய மகன்,  பிணந்தூக்கியின் மகளை காதலித்து, அவள் தந்தையின் கட்டளையின் பேரில்  ஒரு  பிணந்தூக்கியாக மாறிவிடுகிறான்.  பார்சி சமூகத்தில் ஒடுக்கப்பட்டோரை அச்சமூகம் எப்படி நடத்துகிறது, தனது சொந்தக் குடும்பத்திலேயே அவன் எப்படி ஒதுக்கி வைக்கப்படுகிறான், எதெல்லாம் தீட்டாக பார்க்கப் படுகிறது, தீட்டிலிருந்து தூய்மைப் படுத்திக்கொள்வது எப்படி உள்ளிட்ட விஷயங்கள் கதையின் ஓட்டத்தில் கட்சிதமாக பேசப்பட்டிருக்கிறது.

மிகவும் கட்டுப்பாடுகொண்டவர்கள் என்று அரியப்படும் பார்சிகள், அவர்களுக்குள்ளாகவே சிறுசிறு குழுக்களாக பிரிந்து செயற்படுகின்றனர். அதில் ஒடுக்கப்பட்ட குழுவினர்தான் பிணம் தூக்குபவர்கள். தீண்டத்தகாதவர்களாக அக்குழுவினரை பார்சிசமூகம் பிரித்தும் வைக்கிறது.  

கதையின்படி பார்சி மதகுருவின் மகன் பிணம் தூக்கும் ஒருவரின் மகளை விரும்பி கல்யாணம் செய்வதிலிருந்து அச்சமூகத்தின் இருண்மையான பக்கங்கள் நமக்கு காட்டப்படுகிறது. தனக்கு பிறக்கும் குழந்தை, காதல் மனைவி மரணம், தொழில் சுரண்டல், போராட்டம் என தங்குதடையின்றி நாவல் நம்மை உள்ளே இழுத்து உட்கார வைத்து விடுகிறது.

பிணந்தின்னும் கழுகுகளுக்கு இறந்த உடலை அர்பணிப்பது, புனிதமான காரியமாக பார்க்கும் பார்சி சமூகத்தினர், சூழலியல் காரணத்தினால் அழிவை நோக்கிப்போய்கொண்டிருக்கும் கழுகுகளால் தனது சமூகமே எப்படி பாதிக்கிறது என்பதையும், இந்த நாவல் பேசிச் செல்கிறது.

ஃபெரோஸ், செப்பி, டெமூரு, மதகுரு, அவரின் மனைவி, ஃபெரோஸின் சகோதரன், ஃபெரோஸின் மகள், ஃபெரோஸின் நண்பர்கள் என முக்கிய கதாப் பாத்திரங்களோடு நாமும் ஒரு பாத்திரமாக எங்கோ ஒரு மூலையில் இவர்களோடு இந்த நாவலில் இருப்போம்.

நமக்கு அறிமுகமில்லாத ஒரு மதம், எங்கோ ஒரு தேசத்தில் தோன்றி இந்திய தேசத்திற்கு வந்து, மாறுபட்ட மண்ணில், அவர்களின் வாழ்க்கை முறை, பண்பாடு கலாச்சாம் என முற்றிலும் மாறுபட்ட ஒரு வாழ்வியலை  ஆவணமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.  தேசிய விருதுக்கு தகுதியான நாவல்தான் என்று ஒரு வாசகனை திருப்தி படுத்திருக்கும் இந்த நாவலை மொழிபெயர்த்துகொடுத்த எழுத்தாளர் மாலன் அவர்களை பாராட்டத்தான் வேண்டும்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக