புதன், 24 நவம்பர், 2021

நாகேந்திரனுக்கு தூக்குக்கயிறிலிருந்து கருணை கிடைக்காதா?

 

கருணை மன்னிப்பு கோரி தூக்குக்கயிறுலிருந்து விடுதலை கொடுக்க வேண்டும் என நாட்டில் பரபரப்பாக பேசப்பட்டும் விவாதிக்கப்பட்டும் வரும் ஒரு வழக்கு நாகேந்திரன் என்ற இளைஞர் சம்பந்தப்பட்ட போதைபொருள் கடத்தல் வழக்காகும். போதை பொருள் சம்பந்தப்பட்ட குற்றங்களுக்கு மிகக் கடுமையான தண்டனையை கொடுக்கும் ஒரு நாடாக சிங்கப்பூர் இருந்து வருகிறது. தவிர அதிகமாக தூக்கு தண்டனை வழங்கும் நாடுகளில் சிங்கப்பூரும் மலேசியாவும் முன்னணியில் இருப்பது கவலையளிக்கும் ஒரு விஷயமும்கூட. 

 நாகேந்திரன் தூக்குக்கயிற்றில் எப்படி சிக்கினார்?

2009 ஆம் ஆண்டில், அப்போது நாகேந்திரன்  தர்மலிங்கத்திற்கு  21 வயது. எல்லா இளைஞர்களையும் போல இவர் இயல்பானவர் அல்ல. அவருடைய யோசிக்கும் திறன் (IQ)  இயல்பைவிட  69  குறைவாக இருப்பதாக மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.  இப்படி இருக்கும் பட்சத்தில் இது சர்வதேச அளவில் அறிவுசார் குறைபாடு என அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஊனமுற்றவராக இருந்தாலும் நாகேந்திரன்  ஜோகூர் பாருவில் பணிபுரிந்துவந்திருக்கிறார்.       

இந்தச் சூழலில் உடல்நிலை பாதிக்கப்பட்ட அவரின்  தந்தைக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய காரணத்தினால், பணத் தேவை இருந்திருக்கிறது.   இதனால் அவர்  “மிஸ்டர்  கே"  என்பவரிடமிருந்து  RM500 கடன் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நாகேன் சிங்கப்பூருக்கு "ஏதாவது" கொண்டுவர வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் கடனை வழங்க   “மிஸ்டர்  கே"   ஒப்புக்கொண்டார். ஆனால், இந்த நிபந்தனையை  நாகேன் மறுத்துவிட்டார். இதனால் அவர் தாக்கப்பட்டதோடு அவரது காதலிக்கும் கொலை மிரட்டல் போயிருக்கிறது. மிகவும் நெருக்கடியில் சிக்கிய அவர் இறுதியாக மிஸ்டர் கே-யின் நிபந்தனையை ஒப்புக்கொள்ள வேண்டியிருந்தது.

நாகேன் இறுதியில் சிங்கப்பூருக்குள் நுழைந்தார். அவரது காலில் 42.72 கிராம் (3 டீஸ்பூன்களுக்கும் குறைவான)  'Diamorphine' 'டயாமார்ஃபைன்' (இதிலிருந்து ஹெராயின் தயாரிக்க முடியும்) என்ற தடை செய்யப்பட்ட  

 போதைப்பொருள்  கட்டி  இருந்ததை சிங்கப்பூர் அமலாக்க அதிகாரிகள் கண்டுபிடித்து நாகேனை  கைது செய்தனர்.  இதன் விளைவாக அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இது தொடர்பான விசாரணையின் போது

தனியார் மருத்துவ மனநல மருத்துவரான டாக்டர்  உங் எங் கேன், நாகேந்திரன் கைது செய்யப்படும் போது பகுத்தறிவுத் தீர்வுகள் மற்றும் முடிவுகளை எடுக்க இயலாத அளவுக்கு மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார் என்று மருத்துவ அறிக்கையை கொடுத்திருந்தார். 69 புள்ளிகள் மட்டுமே அவருக்கு சிந்திக்கும் ஆற்றல் உள்ளது. இந்தப் 10 ஆண்டுகள் சிறை தண்டனையில் அது இன்னும் மோசமான நிலைக்கு போய்விட்டிருக்கிறது.  சிங்கப்பூர் சட்டத்தின்படி, இந்த அறிக்கை அவரை தூக்கு கயிற்றிலிருந்து விடுவிக்க போதுமானதாக  இருந்திருக்க வேண்டும்.  ஆனால், அப்படி நடக்கவில்லை. உண்மையில் அவர் இந்தக் குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் அல்லது விடுவித்திருக்க வேண்டும்.  ஆனாலும் சிங்கப்பூரின் பிடிவாதக் குணமானது 10 ஆண்டுகள் கடந்தபின்னும் நாகேந்திரன் மீது எந்த இரக்கத்தையும் கொண்டுவரவில்லை. அவருக்கு கடந்த 2019-ஆம் ஆண்டு தூக்குதண்டனை உறுதிசெய்யப்பட்டது.  

அக்டோபர் 2021-ல் தூக்கு தண்டனை நிறைவேற்றும் தேதியை குடும்பத்தாரிடம் தெரிவிக்கப்பட்டது. கடந்த நவம்பர் 10-ஆம் தேதி நாகேனுக்கு தூக்குதண்டனை நிறைவேற்ற இருந்த வேளையில், அவருக்கு ‘கோவிட் 19’ பெருந்தொற்று கண்டிருந்த காரணத்தினால் அத்தண்டனையை தற்காலிகமாக நிறுத்திவைக்க சிங்கப்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 


மலேசிய பிரதமர் உட்பட பல சமூக அமைப்புகளும் கருணையின் அடிப்படியின் நாகேந்திரனை தூக்குக்கயிறிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று தொடர்ந்து சிங்கப்பூர் அரசாங்கத்திடம் கேட்டுவருகிறார்கள். இதற்கிடையில் கடந்த நவம்பர் 18-ஆம் தேதி மலேசிய சோசலிசக் கட்சியின் ‘வெட்டிப்பேச்சு’ என்ற இணைய கலந்துரையாடலில் “போதை பொருள் கடத்தலுக்கு தூக்கு தண்டனைதான் சரியான தீர்வா?” என்ற தலைப்பில் பேசப்பட்டது. அந்தக் கலந்துரையாடலில் தூக்குதண்டனை மற்றும் போதைபொருள் கடத்தலில் சிக்கிக்கொள்பவர்கள் தொடர்பாக பல தகவல்கள் பகிர்ந்துகொள்ளப்பட்டன. சிங்கப்பூர் சாங்கிச் சிறைச்சாலையில் இருக்கும் நாகேந்திரனுக்காக சட்ட உதவி மேற்கொள்ளும் மலேசிய வழக்கறிஞர் சுரேந்திரன் மற்றும் சிங்கப்பூர் சமூக ஆர்வளரான வி.ராஜாராம் அந்தச் சந்திப்பில் பேசினர்.

சிங்கப்பூர் சட்டப்படி 15 கிராம் போதைப்பொருளை நாட்டிற்குள் கொண்டு வந்தது நிறுபிக்கப்பட்டால் கட்டாய மரணதண்டனையை விதிக்க சட்டம் வகை செய்கிறது. தற்போதுதான் அதில் சிறுதிருத்தம் செய்திருக்கிறார்கள். என்றாலும் போதைப்பொருள் கடத்தும் கழுதைகளாக  ஏழைகளையும், பணத் தேவை உள்ளவர்களையும், அப்பாவிகளையும் ஒரு கும்பல் குறிவைத்து, மிக சாமர்த்தியமாக அவர்களின் உயிரை பணையம் வைப்பதுடன், இதில் சிக்ககொண்டால் அக்கும்பல் தப்பிகொள்வதுடன், மாட்டிகொண்டவர் தூக்குகயிறுக்கு இரையாகிடுகிறார். இந்தப் பிரச்னையை ஆராய வேண்டும் என சிங்கப்பூர் ஆர்வளரான வி.ராஜாராம் பேசியது கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

தூக்குதண்டனையை நிறைவேற்றும் நாடுகள்..


போதைப் பொருள் கடத்தலுக்கு 32 நாடுகள் மரணதண்டனையை நிறைவேற்றுகின்றன. என்றாலுகூட அமெரிக்கா, கியூபா உள்ளிட்ட 14 நாடுகளில் அத்தண்டனை அமலில் இருந்தாலும் நடைமுறைபடுத்தவில்லை. சீனா, ஈரான், சவூதி, அரேபியா, வியட்நாம், மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய 6 நாடுகளில் மிக அதிகமாக போதைபொருள் கடத்தல் குற்றவாளிகளை வழக்கமாக தூக்கில்போடுகிறார்கள். 2020-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி ஆக அதிகமாக தூக்குதண்டனை கொடுத்த நாடாக வியட்நாம் இருக்கிறது. சுமார் 79 பேருக்கு இரக்கமே இல்லாமல் தூக்குதண்டனையை அந்த நாடு விதித்திருக்கிறது. அடுத்த நிலையில் இந்தோனேசியா 77 பேருக்கும் அதற்கு அடுத்த நிலையில் மலேசியா 25 பேருக்கும், லாவுஸ் 13 பேருக்கும் தாய்லாந்து 8 பேருக்கும் தூக்குதண்டனையை விதித்திருக்கிறார்கள்.

ஆனால்,ஒவ்வொரு ஆண்டும் வெளிநாடுகளில் குறிப்பாக சிங்கப்பூரில் போதைப் பொருள் கடத்தல் குற்றத்திற்காக மலேசியர்கள் அதிகமானோர் கைதுசெய்யப்படுகின்றனர். சிலரின் கவனக்குறைவை பயன்படுத்தி அவர்கள் அறியாமலேயே போதைபொருளை அவர்களின் கைப்பையிலோ அல்லது வாகனத்திலோ வைத்துவிட்டு, அதிர்ஷ்டத்தின் அடைப்படையில் பொருளை கடத்துவது. சிலரின் குடும்ப சூழல் வறுமையை பயன்படுத்தி சூழ்நிலை கையாக்குவது. இவ்வகைக் கடத்தல்காரர்களைதான் போதைபொருள் கழுதை என்று உவமை சொல்கிறார்கள். துரதுஷ்டவசமாக இவ்வாறுறான குற்றவாளிகளில் மலேசியா சிங்கப்பூர் நாடுகளில் அதிகமாக இந்தியர்களே சிக்கிகொள்கிறார்கள்.

அதேவேளையில் உலகம் முழுவதுமே ஆயிரங்கணக்கான மக்கள் போதைப்பொருள் குற்றங்களுக்காக மரண தண்டனையை எதிர்கொண்டிருக்கின்றனர். போதைப்பொருளை பயன்படுத்துபவர்களோ மிக அதிகமாக ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவது அதிர்ச்சியளிக்கும் வேளையில் 2030- ஆம் ஆண்டை எட்டும்போது உலக மக்களிடையே போதைப்பொருளை பயன்படுத்துவது 11 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டிருக்கும் என்று ஓர் ஆய்வு சொல்கிறது. போதைப்பொருள் பயன்பாட்டினால் அதிகமாக பரவும் நோயாக எச்.ஐ.வி-யும், ஹெபடைடிஷ் சி-யும் இருக்கிறது.  

நாகேந்திரன் வழக்கை பொறுத்தவரை அவருக்கு தூக்கு தண்டனை வழங்குவது ஞாயம் இல்லாத ஒன்று என்றும் சட்டத்திற்கு புறம்பானது என்றும் சிங்கப்பூர் - மலேசிய மனிதாபிமானிகள் குரல் எழுப்பிவருகிறார்கள். சுயநினைவோடு இல்லாத ஒருவரை தனக்கு என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ளாத ஒருவரை தூக்கிலிடக்கூடாது என்று  மலேசியர்கள் மட்டுமல்ல சிங்கப்பூர் மக்களும் நாகேந்திரனுக்காக  குரல் எழுப்பிகொண்டிருக்கின்றனர். அவருக்காக பணம் வசூல் செய்து அதை இந்த வழக்குக்காக பயன்படுத்தியும் வருகின்றனர். ஆனாலும், தூக்கில் ஏற்றியே தீருவோம் என பிடிவாதத்தை கடைப்பிடிக்கும் சிங்கப்பூர் அரசாங்கம், மனிதாபிமான அடிப்படையில் கொஞ்சம் மனது இறங்க வேண்டும் என இருநாடுகளின் மனித உரிமை ஆர்வளர்கள் காத்திருக்கிறார்கள். நாமும் அதையே வேண்டுகிறோம்…

நன்றி தமிழ்மலர் 28/11/2021

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக