வியாழன், 29 டிசம்பர், 2022

பாலி தீவுக்கு பயணம் போகலாமா வேண்டாமா ? பாகம் 2

குட்டா கடற்கரை

பாலியுனுடைய அழகே அதன் கடற்கரையில்தான் இருக்கிறதோ என எனக்கு நினைக்கத் தோன்றியது. கண்ணுக்குக் குளிர்ச்சியாக பெண்கள் சூரிய குளியல் எடுத்துக்கொண்டிருந்தனர். கடற்கரைக்கு நுழையும் வாசலெங்கும் வாசலை இரண்டாகப் பிரித்தது போன்ற கட்டிட அமைப்பு கொண்டிருந்தது.

வந்ததிலிருந்தே என்னை எந்த வகையிலும் ஆச்சரியத்தில் ஆழ்த்தாத இந்த நகரத்தைக் கடற்கரையின் வழி வெறித்துப் பார்த்தபடியே இருந்தேன். பெரிய பெரிய அலைகள் என்னைச் சுருட்டி இழுத்துக்கொண்டு போய்விடுமோ என்று தோன்றியது. கடற்கரைகளில் குளிப்பதற்கு எனக்கு எப்போதும் ஓர் அச்சம் இருக்கும். கால்களை நனையவிட்டு பாதங்கள் பதிய நடந்து, அதைப் பின் நோக்கிப் பார்க்கவும் அலைகள் அதை அழித்துச்செல்ல வருவதைப் பார்த்து ரசிக்கவும் பிடிக்கும். அலைகள் மேலடிக்க, கரையில் அமர்ந்தபடி அந்த அணைப்பை உள்வாங்கி கிடப்பேன்.


தவிரவும் சூரியன் கடலுக்கு அப்பால் மெல்ல விழுந்து மறைவதைப் பார்ப்பது யாருக்குத்தான் பிடிக்காது. அம்மாதிரியான சூரிய உதயத்திடம் தனிமையில் எத்தனைக் கதைகளை பேசியிருப்பேன். அது ஓர் ரசனைதான். என்னையே மறக்கடிக்கும் அமானுஷ்ய நிகழ்வு ஒவ்வொரு தடவையும் நிகழ்த்திக் காட்டி விடுகிறது சூரிய அஸ்தமனம் .

கடலிலிருந்து எழுந்துவந்து பெரிய பெரிய அலைகள் மிரட்டியபடியே இருந்தன. இந்த ராட்சச அலைகளோடு surfing என்ற விளையாட்டை விளையாடுவதற்காகவே வெள்ளைக்காரர்கள் தனது சொந்த சறுக்கு பலகையைச் சுமந்துகொண்டு வருகிறார்கள். மயாமி கடற்கரையில் விளையாடும் இந்தக் காட்சிகளை தொலைக்காட்சியில் பார்த்திருக்கும் எனக்கு நேரில் பார்க்க இந்த குட்டா கடற்கரை உபாயம் செய்திருந்தது. சின்ன குழந்தைகள்கூட அவர்களுக்கு ஏற்ற மாதியான சறுக்கு பலகையை சுமந்து வந்து அலைகளை வம்புக்கு இழுத்து அதோடு போட்டி போட்டுக்கொண்டு சில முறை வெல்வதும் சிலமுறை அதனோடு தோற்பதும் பின் மீண்டும் பந்தயம் வைப்பதுமாக இருந்தனர்.


ஒரு இந்தோனேசியா அம்மா ரொம்ப நேரமாக ஒரே இடத்தில் அமர்ந்திருக்கையே உனக்கு நான் தலையை பிடித்துவிடுகிறேன். அல்லது தோளை பிடித்துவிடுகிறேன். 10 டாலர் கொடு என்றார். நான் வேண்டாம் என்று சொல்லியும் விட்டபாடில்லை . பின் ஒருவாறாக பேரம்பேசி தலையை மட்டும் பிடித்துவிட சொன்னேன். வெயிலுக்குக் கொஞ்சம் இதமாகத்தான் இருந்தது. அருகில் இளநீர் விற்றுக்கொண்டிருந்தவரிடம் நல்ல காயாக தேடிக் குடித்துவிட்டு கிளம்பும் முன் கடற்கரையை மீண்டும் பார்த்தேன். சிலர் பட்டம் விட்டுக்கொண்டிருந்தனர். சூரியன் மறைவதற்கு இன்னும் நேரம் இருந்தது. சுருண்டு வந்த அலையின் வளைவிலிருந்து வெற்றிகரமாக வெளியில் வந்த வீரன் ஒருவன் தன்னைத்தானே ஊக்கப்படுத்தியபடி கரைக்கு எறிவந்தான். நான் அவனைப் பார்த்தபடியே திரும்பி வந்தேன்.

பூரா தானா லோட்

பாலி மொழியில்  'பூரா' என்றால் கோயில் என அர்த்தம். இந்தோனேசிய மொழியில் கோயிலை சண்டி என்றும் குறிப்பிடுவார்கள். குறிப்பாக ஜோக்ஜகார்தாவில் சுற்றியிருக்கும் எந்த இந்து கோயிலையும் அவர்கள்  பூரா எனச் சொல்வதில்லை. சண்டி என்றே வரலாறு கூறுகிறது. 

இந்து கோயில் எனச் சொல்லப்படும் தானா லோட், பாலி நகரைச் சுற்றியிருக்கும் 7 கடற்கோயில்களில் ஒன்றாகும்.  16- ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவன் பக்தரான  'டாங்யாங் நிரார்த்தா' என்கிற  சைவ சமய போதகரால் இந்தக் கோயில் உருவாக்கப்பட்டதென இணையத் தகவல் கூறுகிறது.

தானா லோட் கோயில் கடலுக்கு நடுவில் இயற்கையாகத் தோன்றிய மலையில் உருவாக்கப்பட்டுள்ளது. என்றாலும் கோயில் திருவிழா காலங்களை தவிர்த்து மற்ற உபரி நாட்களில்  அதை பொது மக்களுக்குத் திறந்துவிடுவதில்லை. முட்டிவரை தண்ணீர் நிறைய அப்படியே கடலில் இறங்கித் தான் கோயிலை அடைய வேண்டும். அலைகளின் வேகம் அதிகமாகவே இருக்கிறது. கடல் நாகங்கள்தான் அலைகளாக மாறி  நம்மைத் தாக்குகிறதோ என எண்ணத் தோன்றியது. தீய சக்திகளிடமிருந்தும் கெட்ட ஆவிகளிடமிருந்தும் மக்களை   அங்கிருக்கும் கடல் பாம்புகள் பாதுகாத்து வருவதாக நம்பிக்கை கொண்டிருக்கின்றனர் பாலி வாசிகள்.  இப்போது அங்கு  எந்தக் கடல் பாம்புகளும் இல்லை.

மேலும் கோயிலின் வெளித்தோற்றத்தையும் முழுமையாகக் காண்பதற்கு வாய்ப்பு இல்லாமல் போனது. ஒரு பகுதியை மேம்பாட்டுக்காகவும் மற்றோரு பகுதியைப் பாதுகாப்பு கருதியும் முடி வைத்திருந்தனர். கோயிலின் உட்ப்பிரகாரம் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள முடியவில்லை.  

முன்னதாக கோயிலை பார்வையிடுவதற்கு முன்பு அங்கு குழாய்வழியே வரும் புனித நீரில் கைகால்களை கழுவி சுத்தம் செய்யச் சொல்கிறார்கள். பின் பூவையும் நெற்றியில் அரிசியையும் வைத்துவிடுகிறார்கள். அதன்பின்புதான் கோயிலைக் காண அனுமதிக்கப்படுகிறது.

(தொடரும்)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக