வெள்ளி, 30 டிசம்பர், 2022

பாலி தீவுக்கு பயணம் போகலாமா வேண்டாமா ? பாகம் 3


Pura Taman Ayun

சைலேந்திர அரசு,  ஸ்ரீவிஜயா அரசு, என மத்திய ஜாவாவை ஆக்கிரமித்த இந்திய அரசுப் பெயர்களை  பாலி தீவுகளில் காண்பது அரிது.  பாலி தீவில் புகழ்பெற்ற 7 கோயில்களில் ஒன்றான  Pura Taman Ayun மெங்வி தேசத்து ராஜகுடும்பத்தை  சேர்ந்த இந்து கோயிலாகும். பாலினீஸ் கட்டிடக்கலை வடிவமைப்பில் இந்தக் கோயிலை கட்டியிருப்பதாக கூறினாலும் நாம் அதைக் காணும்போது கேரளா கட்டிடக் கலையையே நினைவுபடுத்துகிறது. வைக்கோலால் வேயப்பட்டிருக்கும் கூரையில்  தொடங்கி, அதன் அடுக்கடுக்கான கோபுரங்கள்வரை கேரள கட்டிட வடிவமைப்போடு நிறைய ஒத்துப் போகிறது. ஆனாலும் இதன் வரலாற்றை படிக்கையில் சீன கட்டிட கலையம்சத்தில் புனரமைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. 

Mengwi  சாலையில் அமைந்திருக்கும் இந்தக் கோயிலை சுற்றி பெரிய அகழி உள்ளது. அதில் தாமரை இலைகளை காண முடிந்தது. கோயிலை சுற்றிலும் 'ஆர்கிட்' பூ மரங்கள் பல வண்ணங்களில் பூத்து, ரம்மியமான வாசத்தை பரப்பியபடி இருந்தன. 

1634- ஆம் ஆண்டில்  மெங்வி ராஜ்யத்தின் ஆட்சியாளரான  Gusti Agung Putu என்பவரால் இந்தக் கோயில் கட்டப்பட்டது. ராஜ குடும்பத்திற்கான ஆலயமாகத்தான் இதை கட்டியுள்ளார்கள். குடும்பத்தின்  முன்னோர்களை வழிபடும் பாரம்பரியத்தை மெங்வி ராஜ்யமும் பின்பற்றியுள்ளது கூடுதல் தகவலாகும். முன்னோர்களுக்காக தனி தனி சந்நிதி ஒதுக்கி கோயிலை எழுப்பியிருக்கிறார்கள் என்ற தகவல் அவர்கள் வழங்கிய கோயில்பற்றிய சரித்திரக்குறிப்பில் இருந்தது.  

கோயிலை சுற்றியெழுப்பட்டிருக்கும் மதில் சுவருக்கு அப்பாற் இருந்துதான்  கோயிலின் உட்புறத்தை காண முடிந்ததே தவிர, இங்கும் கருவறைக்குடில்கள் அமைந்திருக்கும் உட்பகுதியை காண அனுமதிக்கவில்லை. 

வருடாந்திர திருவிழாவின்போது... 

கலைநிகழ்ச்சிகள் நடத்துவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் கூடத்தில் சேவல் சண்டை நடக்கும்படியான ஒரு காட்சியை சிலை வடிவில் வைத்துள்ளனர். இஸ்லாமிய நாட்டில் சூது ஹராம் ஆயிற்றே? இன்னும் இங்கு சேவல் சண்டை நடக்கிறதா என கேட்டதற்கு, அனுமதி இல்லை. என்றாலும் திருவிழாவின்போது மட்டும் நடத்தப்படும் எனக் கூறினார்கள். விவசாய பூமி என்பதற்கு அடையாளமாக ஸ்ரீதேவி எனும் அன்ன தேவிக்கு, இந்த கோயிலுக்கு வெளியில் சிலை வைத்திருக்கிறார்கள்.  

Pura Alas Kedaton 

குரங்கு கோயில் என அறியப்படும் இந்தக் கோயிலை நாம் அனுமார் கோயில் என அழைக்கலாமா எனக் கேட்டால் தேவையில்லை என்றுதான் நான் சொல்வேன். காரணம் இதிகாச குரங்கிற்கு அங்குக் கோயில் எழுப்பவில்லை. குரங்கிற்குத்தான் அங்குக் கோயில் வைத்திருக்கிறார்கள். அதிகமான குரங்குகள் வாழும் வனத்தை ஒட்டினாற்போல் அந்தக் கோயில் அமைந்துள்ளது. ஆயிரக்கணக்கான குரங்குகள் மற்றும் நூற்றுக்கணக்கான பெரிய வௌவால்கள் அங்கு வாழ்விடம் கொண்டிருக்கின்றன. 


இந்தவனத்தில் இருக்கும் குரங்குகள் பார்ப்பதற்கு அமைதியாக இருந்தாலும் அவை சில வேளைகளில் கோபமாக தாக்கக் கூடுபவை எனக் கோயிலை பற்றிய விவரங்கள் கொடுக்கவந்தவர் சொன்னார். இந்து கோயில் என்று சொன்னதும் அதன் உட்ப்பிரகாரம் எப்படி இருக்கிறது எனக் காணும் ஆவலில் உட்புறம் செல்ல நினைத்தோம். பாரம்பரிய உடை இல்லாமல் செல்ல முடியாது என மறுத்துவிட்டனர்.

 இந்தக் கோயில்களை காண்பதற்கு மூன்று விஷயங்கள் தடையாக இருப்பதை மிக நன்றாகவே உணர்ந்துகொண்டேன். ஒன்று 6 மணிக்குள் போய்விட வேண்டும். இல்லையேல் கோயிலை அடைத்துவிடுகிறார்கள். இரண்டாவது அவர்கள் வரையறுத்து வைத்திருக்கும் பாரம்பரிய உடையில் போக வேண்டும். இல்லையேல் நேரம் இருந்தாலும் இந்தக் காரணத்தை சொல்லியே மறுக்கிறார்கள். மூன்றாவது கோயிலை அவர்கள் திறப்பதே இல்லை. பயணிகளால் அது பாழ் படாமல் இருக்கக் கோயில் திருவிழாவிற்கு மட்டும் திறக்கிறார்கள். 

இந்த விவரங்களைப் பாலி சுற்றுலா முகவர்கள் நம்மிடம் தெரிவிப்பதில்லை. அங்குப் போனதும்தான் தெரிய வருகிறது. இதை நேரிடையாக எங்கள் முகவரிடம் கேட்டதற்கு அவரிடம் பதில் இல்லை. நல்ல காடு , அதைச் சுற்றிப்பார்க்க எங்களுக்கு வாய்ப்புதான் அமையவில்லை.

(தொடரும்)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக