ஞாயிறு, 26 அக்டோபர், 2014

உணவு தினம்


மனிதன் உண்பதற்காக வாழ்கிறானா அல்லது வாழ்வதற்காக உண்கிறானா என்றொரு கூற்று பலகாலமாக மக்களிடத்தில் கேள்வியாகத் தொங்கிக்கொண்டிருக்கிறது. ஆம்.  என்னைப் பொறுத்தவரையில்,  இரண்டும் சரிதான். காரியம் சாதிப்பவன் தன் பலத்திற்காக உணவை உண்கிறான். ஒன்றுக்கும் உதவாதவன்  உடல் பலத்தைப்பெற உண்டுகொண்டே இருக்கிறான். இப்போது விஷயம் அதுவல்ல. கடந்த வியாழக்கிழமை (அக்டோபர் 16) உலக உணவு தினம் உலகலவில்   கொண்டாடப்பட்டது.

உலக உணவு தினம் என்றால் என்ன?  

உங்களுக்கு பதில் தெரியமா? அன்றைய தினம் விதவிதமான உணவுகளை வாங்கி உண்டு மகிழ்வதா? அல்லது பார்ட்டி, கேளிக்கைகள் என்று கூட்டாக உணவுகளை வைத்து கூட்டமாக உண்டு கொண்டாடி  மகிழ்வதா?  70 விழுக்காட்டினருக்கு  உலக தினங்களைக் குறித்த பிரக்ஞை இல்லாதது அறியாமை என்று சொல்லிவிடமுடியாது. அது அறியாமையின் உச்சம். வெட்கப்படவேண்டிய விஷயம். சிலர் அர்த்தம் தெரியாமலும், ஏன் - எதற்கு என்ற காரணம் புரியாமலும் இதுபோல கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்துவிடுகின்றனர்.

‘உலக உணவு தினம்' எதற்காகக் கொண்டாட வேண்டும் என்பதை முதலில் தெரிந்துகொள்வோம். 1945-ஆம் ஆண்டு அக்டோபர் 16-ஆம் தேதி ஐக்கிய நாடுகள் நிறுவனத்தில்,  ஐக்கிய நாடுகளின் உணவு  மற்றும் வேளாண்மை அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதை நினைவுகூரும் வகையில்,  ஐநா இந்நாளை சிறப்பு நாளாக அறிவித்தது. நவம்பர் 1979-ஆம் ஆண்டில் இவ்வமைப்பின் 20-வது மாநாட்டில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஹங்கேரியின் முன்னாள் வெளிநாட்டமைச்சர்  பால் ரொமனி என்பவரின் முயற்சியினால் இத்தீர்மானம் ஏக மனதாக ஏற்கப்பட்டு, தற்போது 150-க்கும் அதிகமான நாடுகளில் இந்நாள் கொண்டாடப்படுகிறது. உணவு விரயமாக்குதலிருந்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த தினம் முன்னெடுக்கப்பட்டது.
வறுமை நாடுகளில் ஒருவேளைக்கு ஒரு பிடியளவு உணவுகூட கிடைக்காத நிலை உள்ளது.  பசியின் கொடுமையால் மனித இறைச்சியை உண்ணும் நிலையும் சில நாடுகளில் நடந்துள்ளதும் இன்னும் நடந்துக்கொண்டிருப்பதும் அவ்வப்போது வரும் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.


2012-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, உலகின் 85 கோடி மக்கள் பசியாலும், ஊட்டச்சத்துக் குறைபாட்டாலும் பாதிக்கப்படுகின்றனர் என்று உலக சுகாதார அமைப்புக் கூறுகிறது.  இவர்களில் 85 கோடி மக்கள் வளரும் நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது.  அதோடு பட்டினியால் ஆண்டுதோறும் வருடத்திற்கு மூன்று கோடியே 50 லட்சம் பேர் மரணமடைவதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் பட்டினி மரணங்களின் கணக்கெடுப்பு அதிகரிக்கிறதே ஒழிய, குறையவில்லை என்பதும்  நிதர்சன உண்மையாகும்.

மலேசியாவைப் பொருத்தவரை உணவு விஷயத்தில் 
மக்களின் விழிப்புணர்வு எப்படி இருக்கிறது? 

இங்கே 24 மணிநேர மாமாக் கடைகள், விரைவு உணவுக் கடைகள் என எந்த நேரத்தில் உணவு வேண்டும் என்றாலும் உண்பதற்கு அல்லது உணவை வாங்குவதற்குக் கடைகள் இருக்கின்றன. ஏழைகளும், பணக்காரர்களும் யாராக இருந்தாலும், உணவு விஷயத்தில் நேரம் காலம் எல்லாம் இங்கு பார்ப்பது இல்லை.  சமையளுக்கான பொருள்கள் வாங்கும் கடைகளும் இங்கு 24 மணி நேரமும் இயங்குகின்றன.

2006-ஆம் ஆண்டு பிரபல எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் மலேசியாவுக்கு வந்திருந்தார்.  சிலநாள்கள்  இங்கு தங்கி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டவர், கிளம்பும்போது  மலேசியாவில் உணவைக் கொண்டாடுகின்றனர் என்ற வார்த்தையை உதிர்த்துவிட்டு போனார். கடந்தாண்டு வந்த எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யாவோடு, தலைநகரின் ஒரு சாலையில்  நள்ளிரவு நடைபயணத்தை மேற்கொண்டோம். அவர் அதிசயித்த  காட்சி அந்த நேரத்திலும் உணவுக்கடைகள் திறந்திருந்ததும், பகல் நேரத்தைப் போலவே பலர் உணவருந்திக் கொண்டிருந்ததுதான். குறிப்பாக வெளிநாடுகளிலிருந்து வரும் நண்பர்கள் கிளம்பும்போது மலேசிய உணவைக்குறித்துப் பேசாமல் போனதில்லை. அந்த அளவுக்கு மலேசியாவில்  உணவுகள் பிரபலம். எந்த நேரத்திலும், நாம் விரும்பும் எந்த உணவையும் சில நிமிடங்களில் சுவைத்துவிடலாம்.

இங்கே உணவை பசித்து உண்பது குறைவாகவே இருக்கிறது. பொழுது போக்கு நிலையில் தேனீர், பலகாரம் விளையாடுவதற்கு சதுரங்கம் என்ற களிப்பில் மாலை நேர தேனீர் நேரம் நகரும். அப்படியே பகல் நேரமும், இரவு நேரமும் அப்படியே, ஏன் காலை நேரம்கூட  இப்படி அமைவது உண்டு.  தேனீர் பலகாரங்கள் உணவு பட்டியலில் மலேசியர்கள் சேர்த்துக்கொள்ள மறுக்கிறார்கள். அது அவர்களுக்கு snack நேரம். பிறகு, உணவு நேரம் தனியாக. பசித்த வயிறு காண்பது அறிதாகிவிட்டது இங்கு. அதே நேரத்தில் நம்மளவிற்கு உலகத்தில் யாரும்  உணவை விரயமாக்குகிறார்களா என்று தெரியவில்லை.

நமது நாட்டில் உணவைப்பற்றிய விழிப்புணர்வு எப்படி உள்ளது? 

இதை அறிய  பினாங்கு பயனீட்டாளர் சங்க செயலாளர் சுப்பாராவை தொடர்புக்கொண்டேன்.  சுப்பாரவ் கடந்த  35 ஆண்டுகளாகப் பயனீட்டாளர் சங்கத்தின் வழி பல விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார். அவர் பேசுகையில்...

சுப்பாரவ் 
“இந்த நாட்டில் யாரும் உணவை மதிப்பதே கிடையாது. உணவை உண்ணும்போது இறைவனுக்கும், உணவுக்கும்  வணக்கம் அல்லது நன்றியைக் கூறிவிட்டு உண்பதுதான் இந்திய கலாச்சாரமாக இருந்தது. இன்று அந்தக் கலாச்சாரம் காணாமல் போய்விட்டது.  நினைத்த நேரத்தில் உணவை உண்ணும்  மலேசியர்கள்,  நல்ல ஆரோக்கியமான உணவைத்தான் உட்கொள்கிறார்களா?  இந்த கேள்விக்கு யாராலும் நேர்மையாக பதில் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. அவர்கள்  குறைவான சத்துள்ள, அதிகமான ரசாயனமுள்ள உணவைத்தான்  அன்றாடம் உண்கிறார்கள் என்ற கூற்றையும் யாராலும் மறுக்க முடியாது. இதனாலே குழந்தைகளுக்குகூட  உடல்பருமன் பிரச்னை  தலைதூக்கியுள்ளது.

உணவு விரயமாக்குதல் நாடுகளின் கணக்கெடுப்பில் நமது நாட்டிற்கு முதலிடம் கிடைத்துள்ளது.  உண்மையாக இருக்கும என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். கடந்த ஆண்டு பினாங்குப் பயனீட்டாளர் சங்கம் ஓர் ஆய்வினை மேற்கொண்டது.  அந்த ஆய்வு  நம்பமுடியாத ஒரு தகவலை நமக்குச் சொன்னது. அதாவது மலேசியர்கள் ஒரு வருடத்தில்  விரயமாக்கும்  உணவில் 25 இரட்டை மாடிக்கோபுரங்களைக் கட்டலாமாம். 
பெருநாள், பண்டிகை, திருவிழா திருமணம் போன்ற கூட்டு விழாக்களில் வழங்கப்படும் உணவை எடுப்பவர்கள் தங்கள் வயிற்றுக்குப் போதுமான உணவை எடுப்பதில்லை. அதற்கும் மேலாக மலைபோல் தட்டில் உணவைக் குவித்துவைத்து, அதை  உண்ண முடியாமல், கோழி, இரையை  கிளறி விடுவதுபோல் கிளறி அப்படியே வைத்து விடுவர். இப்படித்தான் பலபேர் உணவை விரையமாக்குகின்றனர். 

மேலும் உணவு விழாக்கள் என்ற பேரில் விரயமாகும் உணவுகள் மிக அதிகமாகும்.  குறிப்பாக நட்சத்திர தங்கும் விடுதிகளில்  பு ஃபே பாணியிலான உணவுகளுக்குப் பெரிய கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 100 வகை உணவுகள் எனவும் விளம்பரப்படுத்தப்படுகிறது. உண்மையில் மனித வயிறு ஒரு வேளை உணவில் 100 பதார்த்தங்களை ஏற்றுக்கொள்ள முடியுமா? சாதாரணமாக ருசிப் பார்த்து தூக்கிவீச மலேசியர்கள் பணம் கொடுத்துச் செல்கின்றனர் என்பது வேடிக்கையாக இருக்கிறது. இந்த பிரச்னைக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கில்தான் உணவகங்களில் ஒரு நடைமுறையைக் கொண்டு வந்தோம். அதாவது தேவைக்கு அதிகமான உணவை எடுத்து உண்ண முடியாமல் தூக்கி எறிந்தால் அதற்கும் பணம் வசூலிக்கும் நடைமுறையது. தற்போது இந்த நடைமுறை கோலாலம்பூர், செகமாட் மற்றும் பினாங்கு போன்ற மாநிலங்களின் சில உணவு விடுதிகளில் உள்ளன. இந்த நடைமுறை மலேசியா முழுவதும் வரவேண்டும். உணவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற பண்பு மலேசியர்களிடத்தில் இருக்கவேண்டும்”  என்று சுப்பாராவ் கூறினார்.


என்னிடம் சுப்பாராவ் கூறிய மற்றொரு விஷயம் உண்மையில் சிந்திக்கக்கூடியதே. அவர் சுட்டிக்காட்டியது  இந்திய சினிமாவை. அதாவது இந்திய சினிமாவில் மட்டும்தான் உணவைக் காலால் எட்டி உதைக்கிற காட்சி, சந்தையில்  சண்டையிட்டு உணவுகள் நாசமாகும் காட்சியெல்லாம் வைக்கப்படுகிறது. மற்ற நாட்டு சினிமாவில் இதுபோன்ற காட்சிகளைக் காண்பது அரிது. உணவு ஒரு கேளிக்கைப் பொருளல்ல  என்று  சுப்பாராவ் கூறினார்.  சிந்தித்துப் பார்த்தால்  அதிலும் உண்மை இருக்கவே செய்கிறது.

நமது நாட்டில் நமக்கு உணவு மிக எளிமையாகக் கிடைக்கிறது. பசிக்கிறது என்று சொன்னால், யாராக இருந்தாலும் உணவு வாங்கிக் கொடுக்க இங்கு தயங்குவதில்லை.  பிச்சைக்காரர்கள் கூட இங்கு பசியால் வாடுவதில்லை.  இந்நிலையில்  உணவு பிடிக்கவில்லை என்றும், ருசியாக இல்லை என்றும் நாம் சர்வசாதாரணமாக உணவைத் தூக்கியெறிகிறோம்.  பிடிக்காத உணவை ஏன் உண்ண வேண்டும் என்று சட்டம் பேசுகிறோம்.  உணவை வீசும்  அந்த நேரத்தில் இந்த உலகின் எங்கோ ஒரு மூலையில் பட்டினிச் சாவு நடக்கிறது என்பதை நாம் மறந்துவிடுகிறோம். நாவின் ருசிக்குப் பழக்கப்பட்ட நாம், பசிக்கு ஒரு பருக்கை சோறு இல்லாதவர்களை நினைத்துப் பார்க்கத் தவறுகிறோம். இதனால் என்ன வந்துவிடப்போகிறது என்று இறுமாப்புக் கொள்கிறோம்.


 என்னுடைய கணினி கோப்பில் சிலவருடங்களாக இரு ஒரு புகைப்படம் உள்ளது. உடல் ஒட்டிய நிலையிலும், ரத்தம் சுண்டிய நிலையிலும் இருக்கும் ஒரு சோமாலியா நாட்டைச் சேர்ந்த தாய், அதைவிடவும் மோசமான நிலையில் இருக்கும் தன் குழந்தைக்குத் தாய்ப்பால் புகட்டுவார். அவரின் மார்பிலிருந்து காற்றுக்கூட வெளிப்படுமா என்று தெரியாத நிலையில் குழந்தை பால் அருந்தும்.கந்தக் காட்சி மனித உளவியலை ஒரு முறை அசைத்துப் பார்க்கக்கூடியது. அந்தப் புகைப்படத்தைக் கண நேரம்கூட பார்ப்பதற்கு திராணியற்றுப் போவேன் நான். அந்தப் புகைப்படத்தைக் காணும் போதெல்லாம் உணவு குறித்த ஆர்வம் அருகதையற்றுப் பறந்தோடும் நிலை எனக்கு ஏற்படும். இந்தப் புகைப்படம் என் சேமிக்கு வந்த காலத்திலிருந்து இன்று வரை தினம் ஒரு வேளை சாப்பட்டைக் குறைத்துக்கொண்டேன்.  அதோடு வயிறு நிறைய என்றும் சாப்பிடுவதில்லை என்ற கொள்கையையும் வைத்திருக்கிறேன். இவை எனக்கு ஆரோக்கியம் தரும் விஷயம்  தானே என்று  நீங்கள் கூறலாம்.  நீங்கள் அப்படி நினைத்துக்கொள்வதற்கு நான் ஒன்றும் செய்யமுடியாது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக