புதன், 13 மே, 2015

மௌனம் உறைந்த தேசம் 6

சிதைந்த கட்டடச் சுவரில் சாம்பற் பறவை

கல்லூரி அருகே ஓடிக்கொண்டிருக்கு ரயில் 
தொடர் 6

எனது இலங்கை பயணத்தின் முக்கியமான நாள் இது. நான் வந்ததற்கான நோக்கமும் அதுதானே. ஆம். இன்று எனது கட்டுரையை நான் படைக்கப்போகிறேன் என்ற எதிர்பார்ப்பு எனக்கிருக்க மிகவும் இயல்பாக எனது மூன்றாம் நாள் மலையகத்தில் விடிந்தது. முதல் இரண்டு நாளில் இருந்த எந்தத் தடுமாற்றமும் எனக்கு இருக்கவில்லை.
நான் எழும்போது விடியற்காலை 5 மணி. வெளியில் இன்னும் வெளிச்சமில்லாமல் இருந்தது. நான் கொஞ்சம் காத்திருந்தேன். குளிர் அவ்வளவாக இல்லை. எனது கேமராவை தூக்கிக்கொண்டு வெளியேறினேன். யாரும் விழித்திருக்கவில்லை. டீக்கடை திறந்திருக்கா என்று பார்த்தேன். இன்னுமில்லை. தேயிலை தோட்டத்தை ஒட்டி மேலிருக்கும் அந்த அருவியை நோக்கி நடந்தேன். சில சிங்கள இளைஞர்கள் நான் போகும் வழியில் பேசிக்கொண்டிருந்தனர். நான் போவதை வித்தியாசமாகவும் பார்த்தனர். அவர்கள் எதையோ கதைக்கத் தொடங்கினர்.
நான் இந்த ஊர் அல்லது இந்த நாட்டுப் பெண்ணாக இருக்கமாட்டேன். இவ்வேளையில் இந்தப் பெண் எங்குச் செல்கிறாள்? இவளுக்கு  எவ்வளவு தைரியம்.. அதிகபட்சமாக இப்படியான கேள்விகள்தானே அவர்கள் பேசக்கூடும் என நானே நினைத்துக்கொண்டேன். பிறகு, போகும் வழிகளில் எனக்குப் பிடித்த இயற்கைக் காட்சிகளை எல்லாம் படம் பிடித்துச் சென்றேன். கட்டுரை படைப்பதற்கு இன்னும் ஒரு முறைகூட பயிற்சி செய்யவில்லையே என்ற கவலை இல்லாமல் அத்தனை உற்சாகமாக இருந்தது எனக்கே ஆச்சரியமாக இருந்தது.
அந்தப் பனிபெய்யும் தேயிலை வனத்திற்குள் கொட்டும் அருவியை ஸ்வரிசிக்க ஒரு யட்சியென போய்க்கொண்டிருந்தேன். கொஞ்சம் நேரம் அருவியை வெறித்தபடி இருந்தேன். அதன் தொடக்கம் காண்பதற்கான எந்தக் கூறும் அங்கு இல்லை. ஒரு உடைந்த பாறையின் மீது சிறிது நேரம் அமர்ந்திருந்தேன். எனது கேமராவில் டைம் செட் செய்து  என்னையே சில புகைப்படங்களை எடுத்துக்கொண்டேன். அழகான ஓரிரு படங்கள் அமைந்த திருப்தியில், அருவியில் கைகளை நனைத்து முகம் கழுவிக்கொண்டேன். சில்லென்றிருந்தது. பிறகு, மெல்ல குளிரத்தொடங்கியது. (ஆனால், படங்கள் இடமாற்றியதில் அருவியோடு பிடித்த ஒரு படமும் என்னிடத்தில் இல்லாமல் போனது, கொஞ்சம் ஏமாற்றம் எனக்கு)
பின்பு, மீண்டும் திரும்புகையில் சில புகைப்படங்களை எடுத்தவாறு வந்தேன். தேயிலை தோட்டத்துத் தொழிலாளர்களை படமெடுக்கலாம் என்று நினைத்தேன். ஆனால், யாரும் வேலை செய்து நான் பார்க்கவில்லை. கண்டிப்பாக டீக்கடை திறந்திருப்பார்கள். ஒரு டீ குடிக்கலாம் என்பதே நான் புதிதாய் பிறப்பதைப் போன்ற சந்தோஷத்தைக் கொடுத்தது. கடை திறந்திருந்தது. விரைந்துகொண்டிருந்தேன். இடையில், ஒருவர் சொன்னார், உங்க காலில் அட்டை கடித்துள்ளது, பாருங்க, ரத்தம் வருதுனு சொன்னார். அப்போதுதான் பார்த்தேன். அட்டை கடித்திருந்ததை. பிடுங்கி எறிந்துவிட்டு, சொன்னவருக்கு நன்றியையும் கூறிவிட்டு டீக்கடை நோக்கிப் போனேன்.   டீக்கடை பையன் என்னைப் பார்த்ததுமே புன்னகைத்தான். ஒரு டீ, ஒரு காப்பி இரண்டும் எனக்குத்தான் கொண்டு வாங்க என்றேன். அந்தப் பையன் சிரித்தான்.
இரண்டையும் சுவைத்ததில் கொஞ்சம் குளிர் விட்டிருந்தது. இன்னும் உற்சாகத்துடன் நிகழ்விடத்திற்குக் கிளம்ப அறைக்குப் போனேன். கிளம்பினேன். நானும் ச.விஜயா அம்மாவும் நிகழ்விடத்திற்கு நடந்தே போனோம். குளிரின் காரணமாக எனக்கு தோலில் வறட்சி இருந்தது. கொஞ்சம் மிட்டாயும் லோஷனும் வாங்கனும் என்றேன். போகும் வழியிலிருந்த ஒரு கடையில் வாங்கினேன். இலங்கை வானொலியில்நேப்பாளில் நடந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்கள் 1,000 பேரை எட்டியுள்ளது என்ற தகவல் கூறப்பட்டது. நானும் விஜயா அம்மாவும் சோகத்தைப் பரிமாறியபடியே மண்டபத்திற்கு வந்து சேர்ந்தோம்.
அன்றைய நிகழ்வில் ஆண்களும் கலந்துகொள்ளலாம் என இருந்ததால் நிறைய ஆண்களைக் காண முடிந்தது. பல புதிய முகங்கள் இருந்தன. குறிப்பாக ஊடகக்காரர்கள், இலக்கிய ஆர்வர்களர்கள் என அதிகமான ஆட்களை வளாகத்தில் காண முடிந்தது. 'தேசிய கலை இலக்கியப் பேரவை' குழுவைச் சேர்ந்தவர்களும், 'பெருவிரல்' இலக்கிய வட்டத்தைச் சேர்ந்தவர்களும் அதில் அடங்குவர்.

தொடக்க நிகழ்வாகக் கூத்து நடைபெற்றது. வாத்தியக் கருவிகளை வாசித்துக்கொண்டு அரிதாரம் பூசி சிறுவர்களுடன் இளைஞர்களும் கூத்துக்கட்டினர். மலேசியாவிலும் இதுபோன்ற கூத்து நிகழ்வுகள் ஆங்காங்கே நடந்தாலும், இது வேறுமாதிரியானது. அவர்களின் வாய்ப்பாட்டும், நடன அசைவுகளும் ஒரே ரகத்தைச் சேர்ந்தவையாக இருந்தன. முதல்முறை பார்க்கிறேன் எனும்படியால் மிகவும் நூதனமாகவே பார்த்தேன் என்றும் சொல்லலாம். எனக்கு மனிதர்களின் கால்களில் தேடல் அதிகம். எந்த நிகழ்விலும் அவர்களின் கால்களைக் குறிப்பாக செருப்பு அணியாத பாதங்களைப் படம் எடுக்கவே முனைப்பு காட்டுவேன். அந்த நடனக்கலைஞர்களின்  பாதங்களைப் படம் எடுத்தேன். அலைவரிசை மாறாத நடனம் அது.
பிறகு பெண்ணியச் சந்திப்பு நிகழ்வு தொடங்கியது. முதல் அமர்வில் பெண் கவிஞர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளை அதன் நயத்தோடு யாழினியும் பிறெளவ்பியும்  வாசித்தார்கள். பிறகு, இரண்டாம் அமர்வாக  கலையிலக்கியங்களில் முஸ்லிம் பெண்களின்  பங்களிப்பு-சவால்களும் தீர்வு முன்மொழிவுகளும் என்ற தலைப்பில் லறீனாவும்விதவைப் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும், சவால்களும் என்ற தலைப்பில் ஷாமிலா முஸ்டீனும், இலங்கை வரலாற்றில் முஸ்லிம் பெண்களின் கல்வி வளர்ச்சியும், அவர்கள் எதிர்நோக்கும், சவால்களும் என்ற தலைப்பில்  ஜெஸீமா ஹமீட்ட்டும் தங்கள் படைப்புகளை முன்வைத்தனர்.
தொடர் அங்கமாக நான் பங்குபெரும் அங்கமாகும். நான் பேசுவதற்கு கொஞ்சமும் பொருந்ததாத ஒரு நபர். சொதப்பி எடுப்பேன். அதைவிட எனக்கு குரலிலும் உடலிலும் நடுக்கம் இருக்கும். ஆனால், நிகழ்ச்சி ஆரம்பிக்கும் வரை எனக்குள் எந்த நடுக்கமும் எழவில்லை. ஏன் இல்லை என்ற காரணமும் விளங்கவில்லை. 
அரசியலில் பெண்கள் என்ற தலைப்பில் புதியமாதவியும், மலையக நாட்டாரியலில் பெண்ணியச் சிந்தனைகள் என்ற தலைப்பில் சந்திரலேகாவும் மலேசியாவில் பெண்களின் இன்றைய சவால்கள்  (யோகி) நானும்பாலினம் - பாலின பாகுபாடு என்ற தலைப்பில் ரஜனியும் படைப்புகளைப் படைத்தோம்.
அடுத்த அமர்வில் தாய்மையும் தாய்மை குறித்த சமூக உரிமைகள், நம்பிக்கைகள் (தந்தை உரிமையுடன் ஒப்பிடல்) என்ற தலைப்பில் நளினி இரட்னராஜூம், பெண் சுயம் குறித்த ஒரு மாற்றுப் பார்வை - பவநீதா லோகநாதனும் பேசினார்கள். இதில் நளினி ஒரு சமூக ஆர்வலராக இருப்பதால் பல ஆதாரங்களோடு தன் கருத்தினை முன் வைத்தார். அவர் பேசும்போது ஒரு பெண் புலி உருமுவதைபோன்ற பாவனை ஏற்பட்டது. அவர் பார்வைக்கு மட்டுமல்ல செயலிலும் மிகவும் தீவிரமாக ஈடுபடுவராக இருந்தார். எதுகுறித்தும் அவரிடம் பேசலாம். ஒரு தெளிவான விளக்கத்தோடே நமக்கு பதிலளிக்கிறார் நளினி.
இந்த நிகழ்வில்  கடைசி பேச்சாளரும் இளம் பேச்சாளருமாக பவநீதா லோகநாதன் இருந்தார். அழகான ஊடகவியல் பெண். பேச்சு அவரிடம் இயல்பாக வந்தது. என்னை ஆச்சரியப்படுத்தினார் இந்த இளம் பெண். நான் அவரின் வயதில் இருக்கும்போது, இருந்த நிலையை நினைத்து கொண்டேன். எத்தனை முன்னோக்கி இருக்கிறார் பவநீதா.
நிகழ்வின் போது தேனீர் கொடுக்கிறார் ரஜனி  
 இந்த இறுதி நாள் நிகழ்வில் நடந்த முக்கியமான மற்றுமொரு நிகழ்வு சில பெண் படைப்பாளர்களின் புத்தகங்களை அறிமுகப்படுத்தியதாகும். விஜயலட்சுமி சேகர், எஸ்தர், லுணுகலை சிறி, றஞ்சி ஆகியோர் இந்த நிகழ்வை வழி நடத்தினர். இறுதியாக மாதவிடாய்' குறும்படத்தோடு நிகழ்வு நிறையை எட்டியது. நிகழ்ச்சியின் போது ஒருமுறை இளைப்பாற கொஞ்சம் வெளியில் வந்தேன். மலையகத்தைவிட்டு இன்றோடு எனது பயணம் முடியப்போகிறது என்ற கவலை பீடித்திருக்க வேண்டும். என்னால் சரியாக சொல்லத்தெரியவில்லை.
வெளியில் பெருவிரல் இலக்கிய நண்பர்கள் சிலர் பேசிக்கொண்டிருந்தனர். அதில் ஒருவர் நீங்கள் குவர்னிக்கா' புத்தகத்தில் படைப்பு வழங்கியிருக்கும் யோகியா? என்று கேட்டார். ஆமாம் என்றேன்.  மலையகத்தில் அதன் அறிமுக விழா நடந்தபோது, அதில் வந்த உங்கள் கவிதை இங்கு சிலாகிக்கப்பட்டது என்றார். இப்படியான ஒரு அறிமுகம் எனக்குப் பெருவிரல் இலக்கிய வட்டத்தோடு ஏற்பட்டது மகிழ்ச்சியாக இருந்தது.

 இலக்கிய வட்ட நண்பர்களுடன் 
கழிப்பறைக்கு போனேன். அங்கே விளக்கோ தண்ணீரோ இல்லை. தண்ணீரை ஒரு வாளியில் கொண்டுச் செல்ல வேண்டும். ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் வசதிகள் இவ்வளவு குறைவாக இருக்கிறதே என்று நினைக்க தொடங்கினேன். என்னால், என்ன செய்திட முடியும். இந்தச் சந்திப்புக்குப் பிறகு ஒரு மாறுதல் வந்தால் எவ்வளவு நன்மையாக இருக்கும் என தோன்றியது.

வெளியில் வந்து மலையை வெறித்து பார்த்தபடி இருந்தேன். கண்ணுக்கெதிரே ரயில் என்னை தாண்டிச் சென்றது.

(தொடரும்)







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக