சனி, 6 பிப்ரவரி, 2016

பேராசிரியர் மௌனகுரு

 பேராசிரியர் மௌனகுரு. ஆம்! எனக்கு அவர் பேராசிரியராகவும் இலங்கை நாடகத்துறையில் புதிய பரிமாணத்தைக் கொண்டு வந்தவராகவும் மட்டும்தான் தெரியும்.  கடந்த ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து பேராசிரியர் மௌனகுரு எனக்கு முகநூல் வழி அறிமுகமானார். எனது இலங்கைப் பயணம் குறித்தானப் பயணக் கட்டுரையின் வழிக் கிடைத்த சில ஆளுமைகளில் பேராசிரியர் மௌனகுரு மிகமுக்கியமானவர்.

அப்போது அந்தப் பேராசிரியரின் ஆளுமைக் குறித்து நான் பெரிதாக ஒன்றும் அறிந்திருக்கவில்லை. அவர் முகநூலில் பதிவிடும் நிலைத்தகவல்களுக்கு லைக் போடுவதைத்தவிர. பலரின் ஆளுமை குறித்துத் தெரியாமல், இப்படி லைக் போட்டே கடந்து போவது சாதாரண ஒன்றாக ஆகிவிட்டது இல்லையா? இதற்கிடையில் பேராசிரியர் சிங்கப்பூருக்கு வந்திருப்பதாகவும் பினாங்கிற்கு வருவதற்கான திட்டம் உள்ளதாகவும் யோகியைச் சந்திக்க விரும்புவதாகவும் எனக்குத் தகவல் அனுப்பியிருந்தார். ஆனால், அப்போதுமலேசியாவில் புகைமூட்டப் பிரச்னைப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிந்தபடியால் அவருடைய பினாங்குப் பயணத்தின் விமானம் ரத்துச் செய்யப்பட்டது.

இலங்கைத் திரும்பியவர் எனக்கு ஒரு பரிசு அனுப்பியிருந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் ‘சங்க காலம் முதல் சம காலம் வரை’ என்ற புத்தகம் எனக்குத் தபாலில் வந்து சேர்ந்தது. பேராசிரியர் செ.யோகராஜன் பேராசிரியர் சி.மௌனகுருவைச் செய்த நேர்காணல் புத்தகமாகத் தொகுக்கப்பட்டு மகுடம் பதிப்பகம்  வெளியிட்டிருக்கிறது.


மௌனகுரு எனும் ஆளுமை, இலங்கையின் எத்தனை பெரிய கலைச் சொத்து என்று நேர்காணலைப் படித்து முடிக்கும்போது தெரிந்துக்கொள்ள முடிந்தது. நாடகவியலாளராக மட்டுமே அடையாளப்படுத்தப்படும் பேராசிரியர் மௌனகுருவின் இந்த நேர்காணலில் நாடகவியலைச் சார்ந்த கேள்விகளைத் தவிர்த்து அவரின் பிற ஈடுபாடுகளைக் குறித்துக் கேள்விகளை மென்னெடுத்திருக்கிறார் பேராசிரியர் செ.யோகராஜன்.

இந்த நேர்காணம் பதிவில் தன்னை மட்டுமே பேசாமல், அதனூடே வேறு பல ஆளுமைகளையும் தன்னுடனேயே அழைத்து வருகிறார் பேராசிரியர்.
பின் நவீனத்துவ நோக்கில் கூத்தைப் புரிந்துக் கொள்ளல் என்ற ஆய்வை
மாக்ஸிஸம் பார்வையிலிருந்து விவரிக்கிறார் பேராசிரியர். அதன் வழிப் பல ஆளுமைகளின் அடையாளம் நமக்குக் கிடைக்கிறது. அதேபோன்று ஒவ்வொரு கேள்விக்கும் நமக்குத் தெரிந்த மற்றும் தெரியாத ஆளுமைகள் அறிமுகமாகிக்கொண்டே வருகிறார்கள்.
தற்கால இலக்கிய ஆளுமைகளுடனும் பரீச்சயம் கொண்டிருக்கும் மௌனகுரு எழுத்தாளன் இதைத்தான் எழுத வேண்டும்; இப்படித்தான் எழுத வேண்டும் என்ற நிர்ப்பந்திப்பதை வன்முறை எனகுறிப்பிடுகிறார். மேலும், அதை எந்த விமர்சகரும் அதைச் செய்யக்கூடாது என்றும் வழியுறுத்துகிறார்.

இந்தப் புத்தகத்தில் கவனிக்கப்படும் கேள்வியாக 17-வது கேள்வி இருக்கிறது. ‘சக்தி பிறக்குது’, ‘சரிபாதி’ உள்ளிட்டப் பெண்ணிய நாடகங்களைப் படைத்திருக்கும் பேராசிரியரிடம்
*பெண்கள் இலக்கியத்தில் குறிப்பாக ஈழத்துப் பெண் படைப்பாளிகள் கவிதைத் துறையில் வளர்ச்சிக் கண்டுள்ள அளவிற்குச் சிறுகதை, நாவல் துறையில் வளர்ச்சியடையவில்லை என்று அவதானிக்கப்படுகிறது. உங்கள் அவதானிப்பு எத்தகையது?
-இலக்கியத்தைப் பல்கூறுகளாகப் பிரிக்கலாமா? என்பது எனக்குள் என்றும் எழும் வினா. இலக்கியம் இலக்கியம்தான். ஆண்கள் அனுபவம், பெண்கள் அனுபவம் தான் அதற்குள் வருகின்றன. அடக்கப்பட்டவர்கள் யாவரேயாயினும் அவர்கள் பக்கம் நிற்பது என் இயல்பு. ஆண்டாண்டு காலமாக அடக்கப்படுபவர்கள் யாவரேயாயினும் அவர்கள் பக்கம் நிற்பது என் இயல்பு. ஆண்டாண்டு காலமாக அடக்கப்பட்டு வந்த அந்தச் சரிபாதி இன்று விழிப்புணர்வுப் பெறுவதும், தம் உரிமைகளுக்காகப் போராடுவதும் வரவேற்கப்பட வேண்டியது என்கிறார்.

பேராசிரியர் மௌனகுருவின் அனைத்துப் பதில்களும் உடன்படக்கூடிய வகையில் நமக்கு இல்லை என்றாலும், மற்ற பல பதில்கள் முக்கியமான விடயத்தை முன்நிறுத்துவதோடு அது விவாத்ததிற்கு உட்படுத்தக்கூடியதாகவும் அடிகோடிட்டுப் பார்க்கக்கூடியதாகவும் இருக்கிறது.

இந்த நேர்காணலில் அதிகமாக இலங்கையைச் சார்ந்த கலை மற்றும் இலக்கியம் சார்ந்த கேள்விகள் கேட்கப்பட்டிருந்தாலும் மறுவாசிப்புக்கு உட்படுத்திய மகாபாரதம், ‘கம்பன் ஒரு கலக்காரன்’ என எழுதிய கட்டுரை உள்ளிட்டச் சில கேள்விகளுக்குப் பேராசிரியர் அளித்திருக்கும் பதில்கள் கவனித்தில் கொள்ளக்கூடிய விஷயங்களாகும்.
பேராசிரியர் மௌனகுருக் குறித்துப் பெரிய ஆளுமைகள் மத்தியில் பரீட்சயம் இருந்தாலும், அதிகமானோருக்குக் குறிப்பாக இளைய சமூதாயத்தினருக்கு அவ்வளவாகப் பரிட்சயம் இல்லை என்பது கொஞ்சம் கவலையளிகக்கூடிய விடயம்.

பேராசிரியர் மௌனகுரு யார் என்ற அறிமுகத்திற்கும் அவர் செய்த இலக்கியச்சேவை மற்றும் பதிப்பித்திருக்கும் புத்தக அறிமுகங்களுக்கும் இந்த நேர்காணம் சம்பந்தப்பட்ட புத்தகமே போதுமானது.

பேராசிரியரின் இந்த நேர்காணலை மட்டுமே புத்தகமாகக் கொண்டு வருவதற்கான முயற்சியை முன்னெடுத்த மகுடம் பதிப்பகத்திற்கு வாழ்த்துகளைத் தெரிவித்தே ஆக வேண்டும்.
நன்றி
6.2.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக