புதன், 3 பிப்ரவரி, 2016

வனம் தேடும் சாம்பல் பறவை ! 7

ஊட்டியில் வெறும் பொழுதுபோக்கு அம்சம் மட்டுமல்லாமல் இப்படி ஒரு பழங்குடியின் வரலாற்றை தெரிந்துக்கொள்ளும் வாய்ப்பும் எனக்கு அமையும் என்று நம்பவே இல்லை. இன்னும் முதுமலையில் சந்திக்கப்போகும் பூர்வக்குடிகள் பற்றிய சிந்தனையும் எதிர்பார்ப்பும் என்னை ஆட்கொள்ளத் தொடங்கியது. சாகுலின் கார் முதுமலை வனத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தது. 

கிட்டதட்ட இரவை நெருங்கி கொண்டிருந்த நேரத்தில் நானும் சாகுலும் முதுமலை வனதுறை அலுவலகத்தை அடைந்தோம்.  


வனதுறை அதிகாரி ஆரோக்கியசாமி என்பவரின் மேற்பார்வையில் முதுமலை புலிகள் காப்பகம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. போலீஸ் அதிகாரிகள் உடுத்தும்  உடை போல அணிந்திருந்தார். தொந்தி கொஞ்சம் எட்டிப்பார்த்தது. குங்குமப்பொட்டு வைத்திருந்தார். அவரை காண வருபவர்களை அமரச்சொல்லி, மிகவும் மரியாதையாக பேசிக்கொண்டிருந்தார். பிறர் பேசுவதை கேட்கும் போது, அவர் முகத்தில் மெல்லிய சிரிப்பை ஓடவிட்டிருந்தார். அதிகாரியை சந்திக்கும் அறையில் வேறொரு அதிகாரியையும் இடை இடையே பேசுவது விளங்கியது. எங்களின் முறை வரும் வரை நானும் சாகுலும் காத்திருந்தோம்.
எங்களின் முறை வந்தது. சாகுல் “இவர் யோகி. மலேசிய தமிழ் பத்திரிகையில் வேலை செய்கிறார்” என்று அறிமுகப்படுத்தி வைத்தார். பின் ஊட்டியில் இவர்களுக்கு எல்லாம் தலைமை அதிகாரிகளில் ஒருவரான சந்திரன் சாரை சந்தித்து வந்திருக்கிறோம் என்பதையும் சாகுல் தெளிவுபடுத்தினார்.   
முதுமலை வனத்தில் வசிக்கும் மிருகங்களைக் காண்பதைவிட, அங்கு வசிக்கும் இருளர் சமூகத்தை சந்தித்து அவர்களோடு தங்கி, அவர்களின் வாழ்வியல் முறையையும் பழக்க வழக்கம், உணவு போன்றவற்றை தெரிந்துக்கொள்ளவும் அதை சின்னதொரு வீடியோ பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கூறினோம். ஆனால், ஊட்டியிலேயே அதற்கான அனுமதி மறுக்கப்பட்டதை நான் அங்கு தெரிவிக்கவில்லை. நிருபர் மூளையில்லையா? எந்தப் பக்கத்தில் கதவு திறந்தாலும் நுழைந்துவிடலாம். பின்னால் வருவதை பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்ற எண்ணம். அதனால், வனத்தின் வெளிபகுதியில் வசிக்கும் இருளர்களை விடவும், வனத்தின் உட்பகுதியில் வசிக்கும் அவர்களை சந்திக்க அனுமதிக்குமாறு நான் கேட்டேன்.
ஆனால், ஆரோக்கியசாமி சாரும் அதை மறுத்தார். பொதுவிடு முறையாக இருப்பதால் உடன் ஒரு அதிகாரியை அனுப்பி வைக்க வேண்டும். தற்போது அதிகாரியில்லை. உள்வனத்திற்குள் அனுப்புவது பாதுகாப்பு குறைவாக இருக்கும். மேலும், அதிகாரப்பூர்வக் கடிதம் எதுவும் நீங்கள் கொண்டுவரவில்லை என ஆரோக்கியசாமி சார் கூறினார்.
அவரின் அந்த நிதானமும் சிரிப்பும் குறையாத அதே நிலையில் “இந்த வனத்தை முன்பு எல்லாம் இரண்டு மணி நேரங்கள் வண்டியில் ஏற்றி பயணிகளுக்கு சுற்றிக்காட்டுவோம். பின் அது 1 மணி 30 நிமிடங்கள் என குறைக்கப்பட்டது. தற்போது ஒரு மணி நேரம் மட்டுமே காண்பிக்கப் படுகிறது.
சில-பல காரணங்கள் அதற்கு இருக்கிறது. வனம் பாதுகாப்பாக இருந்தாலும், மனிதர்கள் அதை பாதுகாப்பாக வைத்திருக்க தவறிவிட்டனர். தற்போது இந்த புலிகள் காப்பகத்தில் புலிகள் அதிகரித்துள்ளன. எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் விலங்குகளின் பாதுகாப்பைக் கருதி சில விஷயங்களை செய்கிறோம் என எனக்கு விளக்கம் கொடுத்தார். நான் அவர் பேசுவதையே கேட்டுக்கொண்டிருந்தேன். இத்தனை அன்பாக ஒரு அதிகாரி பேசுவதே எனக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது.
அன்று இரவு நான் தனியாக அந்த வனத்தில் தங்கப் போகிறேன். கடந்த முறை மணிமுத்தாறு  வனத்தில் (மோகன் அங்கிள் பராமரிக்கும் சிறுவனப்பகுதி அது) தங்கிய அனுபவம் எனக்கு இருக்கிறது. ஆகையால், பெரிய விளக்கங்கள் கொடுப்பதற்கு தேவையில்லாமல் போனது. பொதுவிடுமுறை காரணத்தினால் வனத்தில் வாடகைக்கு விடும் அறைகள் முழுவதும் பதிவு செய்யப்பட்டிருந்தது. சாகுல் முன்பே அறைகளுக்காக விண்ணப்பம் செய்திருந்தாலும் எனக்கு ஒரு பகுதியிலும் சாகுலுக்கு வேறொரு பகுதியிலும் தங்குவதற்கு அறைகள் கிடைத்தன.
எனக்கு பரம சந்தோஷம். தனிமையின் ருசி அறிந்தவள் இல்லையா? எனக்கு வழங்கப்பட்ட அறை மிகவும் அழகான அறை. அதை குறித்து பிறகு சொல்கிறேன். தற்போது மாலை மணி ஆறுமணியை கடந்திருந்தது. நன்றாக இருட்டத் தொடங்கியிருந்தது. நான் இந்தியாவுக்கு வந்து 3 நாட்கள் கடந்திருந்த நிலையில் சந்துருவின் நினைவும், என் தங்கை ரேவதியின் நினைவும், என்னை வழியனுப்பி வைத்த விஜயா அம்மா நினைவும் வந்து வந்து போனது.
அனைவரைவிடவும் சந்துரு என்னை எதிர்பார்த்திருப்பார் என்று தெரியும். முதுமலை வனத்தில் தொடர்பு சாதனங்கள் முற்றிலுமாக செயல் இழந்துக்கிடந்தன. சாகுலிடம் வருத்தத்தைச் சொன்னேன். ஒரு முறை அவரோடு பேச வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.
தங்கும் அறைக்கு போவதற்கு முன்பு, நீங்கள் விருப்பப் பட்டால் பக்கத்தில் இருக்கும் இன்னொரு வனத்தை காரிலேயே பார்த்து வரலாம். காரணம் அங்கு புலிகள் நடமாட்டம் அதிகம் இருக்கும். பலர் புலிகளை பார்த்துள்ளனர். அது ஓர் அதிர்ஷ்ட நிலை என்றார் சாகுல்.

யட்சிக்கு வனம் காண கசக்குமா என்ன? இன்னொரு முறை நான் இந்த வனத்திற்கு வருவதற்கான சாத்தியம் இருக்கிறதா என்று தெரியவில்லை. போகலாம். அதற்கு முன்பு சந்துருவிடம் பேசிவிட்டால் வனத்தை நானும் வனம் என்னையும் ரசிக்கும் என்றேன்.
பின், இருவரும் கிளம்பினோம். முழு நிலா. வெளிச்சம் அதிகமாகவே இருந்தது. வனத்தை தாண்டி அதை ஒட்டியுள்ள சின்ன கடைத்தெருவிற்கு சாகுல் அழைத்துச் சென்றார். 'சிக்கன் பக்கோடா' இங்கு ரொம்ப பிரபலம் என அந்தக் கடையை சாகுல் தேடிக்கொண்டிருந்தார். இந்த கடையில்தான் சாப்பிட்டேன் என சந்தேகமாக ஒரு கடைக்காரரிடம் கேட்க, நீங்கள் சொல்வது சரிதான். இந்த இடத்திலேயே நான் ஒருவன்தான் 'சிக்கன் பக்கோடா' செய்வேன். தற்போது சபரிமலைக்கு மாலை போட்டிருப்பதால் மச்சம் தொடுவதில்லை என்றார்.
பக்கத்தில் உள்ள பள்ளி வாசலில் தொழுகை நடைபெற்றுக்கொண்டிருந்தது. நிறைய முஸ்லிம் சமூகத்தினரை அங்கு காண முடிந்தது. அதே வேளையில் சபரி மலைக்கு மாலை போட்டிருப்பவர்களும் கறுப்பு வேட்டியணிந்து நடமாடிக்கொண்டிருந்தனர். பெண்களின் நடமாட்டம் மிக குறைவாகவே இருந்தது. கடைக்கு வெளியே போட்டிருந்த பெஞ்சில் அமர்ந்து நிலாவைப் பார்த்துக்கொண்டே அன்றைய சம்பாஷனைகளோடு காப்பி குடித்தது புதிய அனுபவம். திண்ணைகளின் அருமை விளங்கியது.
நிலா பல நினைவுகளை சுமக்க வல்லது. சிப்ஸ், பழம், தண்ணி என சாகுல் பாலர் பள்ளிக்கு அனுப்பிவிடும் குழந்தைக்கு தேவைபோல எனக்கு வாங்கிக் கொண்டிருந்தார். நான் அதை எல்லாம் சாப்பிட்டு முடிக்க ஒரு மாதம் ஆகும் என்பது கொஞ்சம் தாமதமாகத்தான் சாகுல் தெரிந்துக்கொண்டார்.
சந்துருவுக்கு அழைத்தேன். சரியாக தொடர்பு கிடைக்கவில்லை. தொழுகை வேறு நடந்துக்கொண்டிருந்தபடியால் பேசுவதும் விளங்கவில்லை. சாகுல், இங்கே பள்ளி வாசல்கள் இருக்கும் அளவுக்கு ஏன் முஸ்லிம்களின் மயானங்களை  கொள்ளைகளை காண முடியவில்லை என்றேன். அதற்கான சரியான பதில் சாகுலிடம் இல்லை.

பின் சாகுல் சொன்ன அந்த வனத்திற்கு போனோம். மயில், கிளை மான், புள்ளி மான் உள்ளிட்ட மிருகங்களை சாதாரணமாகவே காண முடிந்தது. சில இடங்களில் யானையின் எச்சம் அதன் நடமாட்டத்தை உறுதி செய்தது.
நீண்ட நேரம் பயணம் செய்த மாதிரி இருந்தது எனக்கு. அந்த வனச் சாலையில் வேறு வாகனங்களை காணமுடியவில்லை. “புலி நம்மை ஏமாற்றிவிட்டது யோகி” என்றார் சாகுல். நான் சிரித்தேன். ஆனால், பலர் பார்த்திருக்கிறார்கள். அதற்கு ஓர் அதிர்ஷ்டம் வேண்டும் என்றார். பின் டேம் போன்ற நீர் தேக்கம் அருகே காரை நிறுத்திவிட்டு நீங்கள் யார் யாரோடு பேச விருப்பமோ அனைவரோடும் பேசுங்கள் என என்னை தனிமையில் விட்டு எங்கோ என்றார்.
நிலா வெளிச்சம் விளக்கு வெளிச்சத்தைவிடவும் அதிகமாக இருந்தது. நீர் தேக்கத்தில் பட்டு அழகு நிலா, மின்னிக்கொண்டிருந்தது. சாகுலை தேடினேன். காணவில்லை. ஆள் நடமாட்டமும் குறைவாகத்தான் இருந்தது. சந்துரு, விஜியா அம்மா, மகுடபதி அண்ணா என எல்லாருக்கும் அழைத்து பேசிக்கொண்டிருந்தேன். கிட்டதட்ட 30 நிமிடங்கள் அலைபேசி சம்பாஷனை முடிந்து அலைபேசியை வைக்கவும் சாகுல் திரும்பி வரவும் சரியாக இருந்தது. நிலாவைவிட உங்கள் முகம் பிரகாசமாக இருக்கிறதே என்றார் சாகுல். இருக்காதா பின்ன?
மீண்டும் முதுமலை வனத்தில் எனக்காக காத்திருந்த அந்த வன அறையின் மீது எனக்கு ஏகப்பட்ட கற்பனை விரவியிருந்த்து. பக்கத்தில் ஓடிக்கொண்டிருந்த நதியின் சலசலப்பு கேட்டுக்கொண்டே இருந்தது. நிலா வெளிச்சம், வாசிக்க சாருவுடைய புத்தகம், சூடாக ஒரு கப் டீ. அட வாழ்கிறாள் யட்சி. இப்படியாக கூறிக்கொண்டேன்.       
சாகுல், மிகவும் கலைத்து போயிருந்தார். என்னை இறக்கிவிட்டு ஏதேனும் உதவி தேவை என்றால் காவலுக்கு இருப்பவர்களிடம் தெரியப்படுத்துங்கள். இல்லை என்றால் என்னை அழையுங்கள் என கூறிச்சென்றார். ஆனால், நான் தங்கும் அறைக்கு போனபோது ஆள் நடமாட்டமே இல்லாத மாதிரி வெறுமையாக இருந்தது. காவலுக்கு இருந்தவர் அறையை திறந்துவிட்டு போய்விட்டார். காப்பி கிடைக்குமா என்றேன். இனி காலைதான் என்றார். அவ்வளவு ஏமாற்றமாக அறைக்கு போனேன். மறுநாள் காலையில் பால கோபால கிருஷ்ண ஆலயத்திற்கு அழைத்துச் செல்வதாக சொல்லியிருந்தார் சாகுல். இரண்டாவது முறையாக இந்தியாவுக்கு வந்திருந்தாலும் முதல் நான் பார்க்கப்போகும் கோயில் அது. எனக்கும் அந்த கிருஷ்ணனுக்கு ஏதோ தொடர்பு இருக்குதான் போல.
(தொடரும்)   


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக