செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

வனம் தேடும் சாம்பல் பறவை ! 12


குறும்பர்கள் என்பவர்கள் யார்?

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் கிராமிய சாதிய சமூகமாக வாழ்ந்த பழங்குடிகளில்  தங்களுக்கு ஏற்பட்ட மிகப்பெரும் வரலாற்று நெருக்கடிகளைச் சமாளிக்க மலைப் பகுதிகளுக்குச் சென்று பாதுகாப்பாக தங்கிவிட்டவர்களில் குறும்பர்களும் அடங்குவர். இன்றும் இவர்கள் பூர்வீகத்தில் வழிபட்ட வைணவ, சைவ கடவுள்களை விடாமல் வழிபட்டு வருகின்றனர்.
குறும்பர்கள் 6-ஆம் நூற்றாண்டு வாக்கில் தென்னகம் முழுவதும் ஆட்சி செய்த பல்லவர்கள் என்றும், இவர்கள் 7-ஆம் நூற்றாண்டில் கொங்கு, சோழ, சாளுக்கிய மன்னர்களால் தோற்கடிக்கப்பட்ட போது ஒரு பிரிவினர் காடுகளிலும் மலைகளிலும் வாழத் தலைப்பட்டனர் என்றும் குறும்பர்களின் வரலாறு அறியப்படுகிறது. 1891-ஆம் ஆண்டு  குடிமதிப்பு அறிக்கையில் குறும்பர் அல்லது குறுபர் எனக்கூடியவர்கள் பல்லவர்களின் இன்றைய  பேராளர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிகையில் வரையறுக்கப்பட்ட 6 தொன்மை பழங்குடிகளில் குறும்பர்களும் அடங்குவர்
குறும்பர்களின் (குறுமர் என்பதே சரியான வழக்கு) மொழி பல்வேறு பிரிவினராக வேறுபட்டுக் காணப்படுகின்றனர். பெட்டக் குறும்பர்களின் பேச்சு வழக்கானது கன்னடத்தின் கிளை மொழியாக கருதப்பட்டாலும் அது ஒரு தனித்த தெந்திராவிட மொழி என எமனோ, சுவலப்பில் கூறுகின்றனர். தேன் குறும்பர் (ஜேனுக் குறும்பர்) பேசும் மொழியானது கன்னடத்தின் கிளை மொழியாகவே கருதப்படுகிறது. இவர்கள் வாழும் பகுதி கர்நாடக எல்லையை ஒட்டியுள்ளதால் இவர்கள் கன்னடம், தமிழ், படகு முதலான மொழிகளையும் பேசுகின்றனர். ஆனால், முள்ளுக் குறும்பர்களின் மொழியானது மலையாளத்தின் கிளை மொழியாகக் கருதப்படுகிறது என்கிறார் ராஜசேகரன் நாயர்.
நீலகிரியை அடுத்த கூடலூர் பகுதியானது கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் இணையும் பகுதியில் இருப்பதால் இம்மலைத் தொடரில் வசிக்கும் பழங்குடிகள் பன்மொழிப் புலமை கொண்டவர்களாக உள்ளனர். இவையாவும் தொடர்பு மொழியாகக் கையாளப்படுகிறது.
முள்ளுக் குறும்பர் எனும் பெயர் இந்த மக்களுக்கு எஜமானர்களாக விளங்கிய நாயர்கள் கொடுத்ததாகும். முள்ளுக் குறும்பர்கள் தங்களை ‘உள்ளக் குறும்பர்’ என்றே கூறிக்கொள்கிறார்கள். முள்ளுக் குறும்பர் வாழ்வில் மூங்கில் பின்னிப்பிணைந்த ஒன்றாகும். இவர்கள் எப்போதும் கையில் கொண்டு செல்லும் அம்பு “முள்ளு” என்றே கூறப்படும். ஆதியில் முள்ளு இல்லாத எந்த குறும்பனையும் பார்க்க முடியாதாம்.
முள்ளாகிய அம்பு கொண்டு வேட்டையாடுதல் இவர்களின் முக்கிய தொழிலாகும். அதனால்தான் முள்ளு என்னும் அம்பைக் கொண்டிருந்தவர்கள் முள்ளுக் குறும்பர் என பெயர் பெற்றார்கள்.
பெட்டக் குறும்பர்கள் பொருத்தவரை திப்பு சுல்தான் காலம் முதல் இன்றுவரை கூடலூரில் உள்ள தெப்பக்காடு பகுதியில் வனத்துறை நடத்தும் யானைகள் முகாமில் வேலை செய்துவருகின்றனர். யானைகளை பிடிப்பதிலும், பழக்குவதிலும் பராமரிப்பதிலும் பெட்டக் குறும்பர்கள் வல்லவர்கள். காட்டு யானைகளைக் குழிவெட்டி அதில் விழச் செய்து, பின்னர் அவற்றைப் பழக்குவார்கள். இத்தகைய கும்கி வளர்ப்பு யானைகளைக் கொண்டு பயிர்களை அழிக்கும் காட்டு யானைகளைக் காட்டுக்குள் விரட்டுவார்கள்.
குறும்மர்களும் கோத்தர்களை போன்றே பல்வேறு கைவினைத் தொழிகள் செய்யும் கொல்லர்களாகவும், தச்சர்களாகவும், குயவர்களாகவும், இசைவாணர்களாகவும், கூடை முறம் கட்டுபவர்களாகவும் இருக்கிறார்கள். இவர்கள் மண் வனை, சக்கரம் அல்லது பிற கருவிகளோ இல்லாமல் வெறும் கைகளைக் கொண்டே மண்பாண்டங்கள் செய்யும் திறனை பெற்றிருக்கிறார்கள்.
தனக்கு கிடைக்கும் உணவை அல்லது உடைமை அனைத்தையும் பகிர்ந்து உண்ணும் அல்லது பகிர்ந்துக்கொள்ளும் போக்கு இன்னும் இவர்களிடத்தில் காணப்படுவதாக கூறப்படுகிறது. பணமும் பொருளாதாரமும் ஒருவருக்கு அதிகாரமும் பழங்குடிகளிடம் புறக்கூறுகளாகவே செயற்படுகின்றன. மேலும், குறும்பர் சமூகத்தில் ஒருவர் உடைமைகளைப் பெருக்க முயன்றாலோ, சமூகத்தின் பாரம்பரிய விழுமியத்திலிருந்து மாற முயன்றோலோ மந்திரம் கொண்டு அவர்களை மட்டம் தட்டிவிடும் போக்கு இன்றும் பழங்குடிகளிடம் உள்ளது. இது சமூகத்தைப் பேணும் ஓர் ஆற்றல் வாய்ந்த கருவியாக உள்ளது. குறும்பர் பண்பாட்டில் செயற்படும் இக்கூறு பற்றி ஜார்ஜ் தாரகன் நன்றாக விளக்கியிருக்கிறார்.
 
இறைவழிபாடு என்று பார்த்தால் கல் வழிபாடு ஆவி வழிபாடு இவர்களிடத்தில் மிகுதியாக இருக்கிறது. நீலகிரி குறும்பர்கள் இரண்டு வகையான ஆவிகளை இனங் காண்கின்றனர். பெரிய ஆவி, சிறிய ஆவி இரண்டும் ஒருவரின் இறப்பினால் உணரப்படுகின்றன. பெரிய ஆவியானது கண்ணுக்குத் தெரியும் நிழலைக் கொண்டதாகும். அந்த நபரை அடக்கம் செய்யும் வரை இந்தச் சிறிய ஆவியானது உலவிக் கொண்டிருக்கும். இறந்த சில ஆண்டுகளுக்குப் பின்னர் செய்யப்படும் கல் நடும் சடங்கின்போதே  சிறிய ஆவியும் பெரிய ஆவியும் ஒன்றாக இணைகிறது என அவர்கள் நம்பிக்கை கொண்டிருக்கின்றனர்.
இருளர்களும் குறும்பர்களும் இறந்தவர்களுக்குக் கல்மாடங்களை அமைக்கின்றனர். இவர்களிடையே ஒரு இறப்பு நிகழுமாயின் ‘தெவ்வ கொட்ட கல்லு’ எனப்படும் மழமழப்பான கூழாங்கற்கள் ஒன்றினைக் கொண்டு வந்து அந்தப் பகுதியில் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள பழைய வட்டக் கல்லறை மாடங்களில் வைப்பார்கள். குறும்பர்களில் சிலர் கடந்த காலங்களில் பலகைக் கற்களைச் செக்குத்தாக நிறுத்தி நினைவு மாடங்களை எழுப்பியதாக கூறுகிறார்கள்.
தொழில் என்று வரும்போது முதுமலை வனத்தில் வசிக்கும் குறும்பர்களும் கூலி ஆட்களாக தற்போது தங்களில் தொழிலை செய்கின்றனர். அவர்களுக்கான வசிப்பிடத்தில் அரசாங்க சலுகளைகளை அனுபவித்து தங்களின் இயல்பை விட்டு மாறி வருகின்றனர்.  இருந்தாலும் நீலகிரி மலைத் தொடரில் தேனெடுக்கும் குறும்பர்களை தேனுக் குறும்பர் அல்லது  ஜேனுக்குறும்பர் என்று அழைக்கப்படுகின்றனர். அவர்களுக்கு தஏன் எடுத்தல் முக்கியமான தொழிலாகும். குறும்பர்கள் மாணிப்புல் தர்ப்பைப்புல் போன்ற புல்வகைகளைக் கூரை வேய சேகரிக்கின்றனர். கன்றுகளை காப்பதற்கு தைலப்புல் சேகரிக்கின்றனர்.
முள்ளுக் குறும்பர்கள் காட்டெரிப்பு வேளாண்மையையும் வேட்டையாடுதலையும் முக்கியத் தொழிலாகக் கொண்டிருக்கின்றனர். ஆனால், வேட்டை என்பது இன்று திருமணச் சடங்கின்போது மேற்கொள்ளப்படும் ஒரு சடங்கியல் கூறாகச் சுருங்கிவிட்டது.
பழங்குடிகளை பொருத்தவரை அவர்களின் சடங்குகளின் போது பிற பழங்குடிகளின் தயவு அல்லது தேவை இருக்கத்தான் செய்கிறது. உதாரணத்திற்கு தொதவர்கள் தங்கள் சடங்குகளை நடத்தும்போது  இரண்டு பொருள்களைக் குறும்பர்களிடமிருந்து பெற்றுக்கொள்கின்றனர். இரண்டாம் சாவுச் சடங்கின்போது ‘தட்ரி’ எனப்படும் நீண்ட  கழியினைத் தொதவர்கள்  நடனமாட பயன்படுத்துகிறார்கள். சடங்கு முடித்தபின்  அக்கழியை எரித்து விடுவர். அடுத்ததாக, சாவுச் சடங்கில் எருமையினைப் பலியிடுவதற்கான ‘தெய்கீ’ எனப்படும் கம்பமும் குறும்பர்களிடமிருந்தே பெறுகின்றனர்.
குறும்பர்களைப் பற்றிய மேற்கூறிய விவரங்கள்  பக்தவத்சல பாரதி எழுதிய  தமிழகப் பழங்குடிகள் என்ற புத்தகத்தில் கூறுகிறார்.
குறும்பர்களின் குடியிருப்பிற்கு சென்ற போது அவர்களின் இயல்பு வாழ்கை எத்தனை தூரம் மாறி இருக்கிறது என்பதை கண்கூடாக பார்க்க முடிந்தது. வீடுகளிலும் மாற்றம் தெரிந்தது. சிலர் மூங்கிலான வீடுகளிலும், மண் வீடுகளிலும் வசிக்கின்றனர். முழுக்க நவீன வாழ்கைக்குள் நுழைந்ததற்கான எல்லா மாறுதல்களையும் அங்கு பார்க்க முடிந்தது. குறும்பர் பெண் இனத்தைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கையில் அவர்களின் பிள்ளைகள் அரசு பள்ளிகளில் படிப்பதாக சொன்னார்கள். அரசிடமிருந்து நிறைய உதவிகள் கிடைப்பதாகவும் சொன்னார்கள். ஓட்டு பதிவு இருக்கிறதா என்றேன் ஆம் என்றார்கள். நானும் சாகுலும் அங்கு ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை. நவீனத்திற்கு மாறிவிட்ட பழங்குடிகளிடத்தில் எங்களுக்கு கிடைக்கும் விவரங்களில் முழுமை இருக்காது என தெரியும். மேலும், பழங்குடிகள் வாழ்வானது 3 மணி நேரத்தில் பார்க்ககூடிய சினிமா அல்ல. அதற்காக பக்தவத்சல பாரதி எத்தனை ஆண்டுகள் செலவு செய்திருப்பார் என்று அனுமானிக்ககூட  முடியவில்லை.
 ஒரு நாளில் அல்லது இரண்டு நாட்களின் சந்திப்பில் பெரிய விவரங்களை திரட்ட முடியாமல் போனாலும் குறைந்தபட்சம் அவர்களை சந்தித்ததில் மகிழ்சிதான். அடுத்த முறை அவர்களோடு தங்கி ஓர் ஆவணப் படத்தை எடுக்க வேண்டும் என எண்ணம் ஏற்பட்டது எனக்கு.
பார்ப்போம்… குறும்பர்களின் சந்திப்போடு எனது முதுமலை வன பயணத்தை நான் முடித்துக்கொண்டு சென்னைக்கு கிளம்பினேன். திண்டுக்கள் பேருந்து நிலையத்திலிருந்து இரவு பேருந்தில் பழங்குடிகளின் நினைவுகள் மாறி மாறி அலைக்கழிக்க சென்னை வந்து சேர்ந்தேன்.  வனத்தின் உள் பகுதிக்கு சென்றிருந்தால் அவர்களின் அசல் வாழ்கையை பார்த்திருக்கலாமே என்ற எண்ணம் இன்னும் இருக்கிறது.  மகுடபதி அண்ணன் எனக்காக பேருந்துநிலையத்தில் காத்திருந்தார்.

(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக