புதன், 26 நவம்பர், 2014

என்ன செய்வதென்றுதான்

அம்மா விட்டுச் சென்ற புடவையில்
எப்போதாவது ரோஜாக்கள் பூக்கும்
வண்ணத்துப்பூட்சிகள் முண்டியடிக்கும்
மகரந்தச் சேகரிப்புக்கு
புடவையின் வர்ணம் மாறி மாறி
மாயாஜால வித்தை காட்டும்
பரதேசி ஒருவருக்கு அம்மா உணவளித்ததை
ஒருநாள் அவரின் முந்தானையில் தெரிந்தது

அம்மாவின் புடவையைப்
பற்றிய பயம்
 மனத்தில் வந்து வந்து போனது
சூத்திரக்காரி நெய்த புடவையாக
இருக்கக்கூடும்
என நினைத்துப் புடவையை
எரித்துவிட்டேன                                                                                                                                ஆனால்
பயத்தை என்ன செய்வதென்றுதான்
 இப்போது புரியவில்லை

ஏன் எனக்கு ஆண்களை பிடிக்காது



எனது inbox-க்கு வரும் சிலர் கேட்கும் கேள்வி, ஏன் உங்களுக்கு ஆண்களை பிடிக்கவில்லை என்பதுதான்.  நான் ஆண்களை பிடிக்காது என்று சொன்னதே இல்லையே. மேலும், ஆண்கள் இல்லாத வாழ்கையை எப்படி வாழ்வது? எனது அப்பா, சகோதரன், நண்பன், காதலன், துணைவன், தெரிந்தவன் என நீள்கிறது நான் விரும்பும்  ஆணின் பட்டியல்.

 10 ஆண்களிடம் வேலை செய்து விடலாம், 10 பெண்கள் இருக்கும் இடத்தில் வேலை செய்ய முடியாது என்று பொதுவாக சொல்வார்கள். அது உண்மைதான் என்று நானும் ஒப்புக்கொள்வேன். பெண்களுக்கே அவர்களின் பலமும் பலவீனமும் தெரியாத போது இது போன்ற விமர்சனங்களை ஏற்றுகொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.

எனது இந்த 34 வயதுக்குள் பலதரப்பட்ட ஆண்களை சந்தித்திருக்கிறேன். முதலாளித்துவ ஆண்கள், காமுகன்கள், நட்புக்கு இலக்கனமான நண்பர்கள், காதலன்கள், காதலிப்பது போல் ஏமாற்றிய ஆண்கள், கொஞ்ச நாள் காதலாக, பின் காரணமே சொல்லாமல் முகத்தை திருப்பிய ஆண்கள், காதலையும்-காமத்தையும் அடக்கி வைத்துக்கொண்டு ஒன்றுமே இல்லாதது போல் நடித்த ஆண்கள், கூட பிறக்காத சகோதரர்கள், ஆலோசகர்கள், நலன் விரும்பிகள் என நூற்றுக்கும் அதிகமான ஆண்களிடம் நான் அறிமுகமாகி இருக்கிறேன். எனக்கும் அவர்கள் தங்கள் உண்மை அடையாளத்தை சிலர் தெரிந்தும், சிலர் தெரியாமலும்   காட்டியுள்ளனர்.

 ஒரே ஒரு காதல் தோல்வியைத் தவிர நான் எந்த ஆணிடமும் மனவருத்தம் அடைந்ததில்லை. அதே வேளையில் எந்த ஆண்களும் என்னை காயம் படுத்தும் அளவுக்கு இடத்தையும் நான் கொடுத்ததில்லை. நான் ஆண்களிடத்தில் கேட்கும் அல்லது வைக்கும் கோரிக்கை ஒன்றுதான்.

பெண்களுக்கு மதிப்பளியுங்கள். அவர்களை மரியாதையாக நடத்துங்கள். அவர்களின் சுதந்திரத்தை தட்டி பறிக்காதீர்கள். அவர்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களை அவர்களே முடிவெடுப்பதில் உங்களுக்கு என்ன சிரமம்? உங்களுக்கு ஒரு நியாயத்தையும், பெண்களுக்கு ஒரு நியாயத்தையும் கற்பிக்காதீர்கள்.  பெண்களுக்கான முடிவெடுக்கும் அதிகாரத்தையும் நலிந்தவர்களிடத்தில் காட்டும் வீரத்தையும் உங்களுக்கு யாரும் கொடுக்கவில்லை. அவளின் அனுமதியின்றி அவளை நெறுங்க வேண்டாம். அவ்வளவே.

உண்மையில் நான் இந்தக் கோரிக்கைகளை வைக்கவில்லை. காலகாலமாக பெண் போராளிகளின் முன்வைப்பது இதுதான். கொடுமை என்னவென்றால் இன்னும் அதையே கேட்டுகொண்டிருப்பதுதான். தொடர்ந்து குரல் எழுப்புவதால்தான் பெண்கள் தங்களுக்கான குரல் வரும் திசையைப் பார்த்து கையை நீட்டுகிறார்கள்.  பெண்களுக்கு ரௌத்திரம் தெரிய வேண்டும். எல்லா நேரத்திலும் அவர்களுக்கு தைரியம் வேண்டும். முக அழகு ஒரு பெண்ணுக்கு அழகல்ல. ஒரு பெண்ணின் அழகு அவளது பேச்சில் இருக்கிறது. அவளது தைரியத்தில் உள்ளது. அவளது தன்னம்பிக்கையில் உள்ளது.

ஓர்  ஆண் அவளது காப்பாளன் அல்ல.
ஆண் அவளது தோழன்.
பெண் அவனது தோழி.

செவ்வாய், 25 நவம்பர், 2014

தீப்பொறியும் அவரின் புகைப்படமும்



புகைப்படங்கள் நமது வாழ்வின் அல்லது நிகழ்வின் அல்லது வரலாற்றின் பதிவுகளாகவும் சாட்சிகளாகவும் உள்ளன. என்னை இதுபோன்ற சில புகைப்படங்களில் சிலர் மிகவும் தொந்தரவு செய்வதுண்டு. கடந்த சில நாள்களில் என்னை மிகவும் பாதித்த புகைப்படமாக, நான் எடுத்த  கவிஞர் தீப்பொறி பொன்னுசாமியின் புகைப்படம் அமைந்துவிட்டது.
‘தீப்பொறி பொன்னுசாமி' இது நான் மலேசிய இலக்கிய உலகுக்கு வந்த காலம்தொட்டே கேட்கத்தொடங்கிய பெயர். மரபுக்கவிதைகளில் எனக்கு அவ்வளவாக ஈடுபாடு இல்லாததால், பெரிய எதிர்பார்ப்புகளோடு நான் மரபுக்கவிதையை வாசித்தது இல்லை. அதே வேளை, மரபுக்கவிதை கவிஞர்களுடனான நட்பும் எனக்கு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இருந்ததில்லை. அண்மையில் இறையடிச் சேர்ந்த இறையருள் கவிஞர் சீனி நைனா முகம்மதுவின் இரங்கல் கூட்டம் சோமா அரங்கில் நடந்தது. செய்தி சேகரிப்புக்காக நான் சென்றிருந்தேன். அப்போதுதான் தீப்பொறி அவர்களை முதன் முதலாகச் சந்தித்தேன். நிகழ்வை புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த என்னை அழைத்து தன்னை புகைப்படம் எடுக்கும்படி கூறினார். நானும் எடுத்தேன். எனது டிஜிட்டல் கேமராவில் ஃபிளாஷ் வரவில்லை. ஆனால், அவரின் படம் மிகத் தெளிவாகப் பதிவாகியது. இருந்த போதிலும் நான் அவரை புகைப்படம் எடுத்ததில் அவருக்கு நம்பிக்கை இல்லை.
நீ ஏமாற்றுகிறாய், ஃபிளாஷ் வரவில்லை, புகைப்படம் எடுக்கவில்லை என்று அவர் கூறியவேளையில், நான் திரும்ப திரும்ப 3-4 படங்களை எடுத்து அவரிடம் காண்பித்தேன். ஆனால், ஒரு நம்பிக்கையின்மையே அவரிடம் இருந்தது. எனக்கு எனது முன்கோபம் எட்டி பார்க்க ஆரம்பித்த வேளையில், பொன் கோகிலம் வந்து, நிலைமையைச் சரி செய்தார். பிறகு தனது அப்பாவுடன் ஒரு படம் எடுக்கச்சொல்லி கேட்டார். நானும் எடுத்தேன். அதை தனது முக நூலுக்கு அனுப்பி வைக்கும்படி பொன் கோகிலம் கேட்டுக்கொண்டார். ஆனால், நான் அனுப்பி வைக்கவே இல்லை.  அன்று கவிஞர் சீனி நைனா முகம்மதுவின் இரங்கல் கூட்டத்தில் எடுத்த தீப்பொறி அவர்களின் புகைப்படம், கடந்த புதன்கிழமை அவரின் இறப்புச் செய்திக்காக ‘நம் நாடு' நாளிதழில் பயன்படுத்தப்பட்டது. ஒரு புகைப்படம் எம்மாதிரியான வரலாற்றையும் பெற்றிருக்கலாம். ஆனால், இது போன்ற ஒரு பதிவு, ஒரு படைப்பாளனை மிகவும் துன்புறுத்தக்கூடியது. என்னுடன் அலுவலகத்தில்  வேலை செய்த ராமக்கிருஷ்ணன் என்பவரிடமும் தீப்பொறி அந்தப் படத்தை பலமுறை வாங்கித் தரும்படி கேட்டிருந்தார். நான் கொடுக்கிறேன் என்று கூறினேனே தவிர, வேலைப் பளு காரணமாக அக்கறையோடு அதை செய்துகொடுக்கவில்லை. இன்று அதைக் கொடுப்பதற்கு அவர் இல்லை.
இறுதியாக  தீபொறியின் பூத உடல் கடந்த வெள்ளிகிழமை (21.11.2014),  செலாயாங்கில் உள்ள அவரது வீட்டில் வைத்து மரியாதை செய்யப்பட்டு, செராஸ் மின்சுடலையில் தகனம் செய்யப்பட்டது. நானும் எனது நண்பரும் தீப்பொறி அவர்களின் வீட்டுக்கு செல்லமுடியாத காரணத்தினால், செராஸ் மின்சுடலைக்குச் சென்றோம். அவரின் உடலை பார்ப்பதற்கு எனக்கு இறுதி வாய்ப்பு கிடைத்தது. அமைதியாக, அவரிடம் கொடுக்க தவறிய அந்த புகைப்படத்திற்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டிருந்தேன்.


நான் நடிக்க போகிறேன் (டத்தோ லீ சோங் வேய்)

டத்தோ லீ ஆட்டக்களத்தில்
நாட்டின் நற்பெயருக்கு பாடுபட, போட்டி விளையாட்டுகளும்  சிறந்தத் தளமாக அமைந்திருக்கிறது. அப்படியான விளையாட்டுப் போராளிகளான டத்தோ நிக்கோல் டேவிட், கராத்தே வீரார்கள்,  நீச்சல் வீராங்கனை பண்டேலேலா ரினோங் உட்பட தங்களது விளையாட்டுத் திறமையால் நம் நாட்டின் வாசத்தை உலகம் மணக்கச் செய்தவர்கள் பலர். அதில் நாட்டில் குறிப்பாக  முதல் நிலை ஆட்டக்காரர்  டத்தோ லீ சோங் வேய். அவரின் உழைப்பைக் குறைத்து மதிப்பிட முடியாது. உலக அரங்கிலும் மிகவும் புகழ் பெற்றவர் டத்தோ லீ.
பூப்பந்து அரங்கின் வழி நமது நாட்டிற்கு  வெற்றிமாலை சூட்டி அழகு பார்த்தவர். தனது அபார விளையாட்டுத் திறமையை வெளிப்படுத்தி  லீ சோங் வேய்  உலக நாடுகளின் கண்களுக்கு மங்கலாக தெரிந்த மலேசியாவை இன்னும் தெளிவாக  வெளிச்சம் போட்டுக் காட்டினார்.
டத்தோ லீ தனது விளையாட்டு எதிரியான
லின் டான்னுடன்
பினாங்கு மாநிலத்தில் 1982-ஆம் ஆண்டு பிறந்தவர் லீ சோங் வேய். 1996-ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டி லீ சோங் வேய்க்கு  மட்டுமல்ல, மலேசியாவுக்கே மிக முக்கியமானதாகவும் மேலும் சோதனையாகவும் அமைந்தது. காரணம் மலேசியாவுக்கு எந்த ஒரு பதக்கமும் கிடைக்காத நிலையில், பூப்பந்து ஆண்கள் ஒற்றையர் விளையாட்டின் வழி இறுதியாட்டத்திற்கு தேர்வு பெற்ற முதல் மலேசியராகவும் லீ சோங் வேய் இருந்தார். அந்த கணமே மலேசியா ஓர் நம்பிக்கை நட்சத்திரத்தை பார்க்கத் துவங்கிய நாளாகும்.  2008-ஆம் ஆண்டு நடந்த பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் இவர் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
உண்மையில் அவர் குறிவைத்து விளையாடிய தங்கப் பதக்கத்திற்கான அந்தப் போட்டி, அரங்கம் தீ பற்றி எரியாத ஒரே குறைதான். அந்த அளவுக்கு சூடு பிடித்த விளையாட்டு அது. இறுதியில் சீனாவின் முதல் நிலை ஆட்டக்காரரான லின் டான் தங்கப் பதக்கத்தை வெற்றிக்கொள்ள லீ-க்கு வெள்ளிப் பதக்கம்தான் கிடைத்தது. அன்று முதலே பூப்பந்து விளையாட்டின் எதிரிகளாக லின் டானும், லீயும் ஆனார்கள் எனலாம். நாட்டிற்கு வெள்ளிப்பதக்கத்தைப் பெற்றுதந்ததைப் பாராட்டி பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், லீ-க்கு டத்தோ விருது வழங்கிச் சிறப்பித்தார்.
தொடர்ந்து, டத்தோ லீ பல போட்டிகளில் பங்கெடுத்து வெற்றிமாலைகளை சூடினார். அவருக்கு மற்றுமொரு எதிரியாக ஜப்பான் விளையாட்டாளர்கள் வந்தார்கள். டத்தோ லீக்கு சீனாவும், ஜப்பானும்தான் போட்டி விளையாட்டாளர்களாக அமைந்தார்கள்.
டத்தோ லீயின் வெற்றி வாய்ப்புக் குறித்து அதிகம் விமர்சிக்கப்பட்ட ஆண்டாக 2011-ஆம் ஆண்டைச் சொல்லலாம். காரணம் தோமஸ் கிண்ணப் பூப்பந்தாட்டம் அது. நமது சொந்த நாட்டில் நடந்த அந்த பூப்பந்தாட்டத்தில் டத்தோ லீ தங்கத்தை பெற்றுத் தருவார் என்று மலேசிய வாழ் ஒட்டுமொத்த மக்களும் நம்பிக்கையோடு இருந்தனர். ஆனால், மிகப் பெரிய தோல்வியை டத்தோ லீ சொங் வேய் சந்தித்ததை அந்த விளையாட்டைப் பார்த்த யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அதே வேளையில், தேசிய பூப்பந்தாட்ட ஆணையத்தின் மீதும் பல விமர்சனங்கள் வைக்கப்பட்டன. பூப்பந்தாட்டத்திற்காக பல்வேறு வசதி வாய்ப்புகளையும் ஊக்குவிப்புத் தொகைகளையும்  அரசாங்கம் மானியமாக வழங்கும்போது ஏன் இந்த நிலை ஏற்பட்டது? என்று கேட்கப்பட்டதோடு, டத்தோ லீயைக் கடுமையான விமர்சனத்திற்கும் உள்ளாக்கியது. அவரின் செல்வாக்கும், அவரின் மீதான நம்பிக்கையும் குறையத் தொடங்கிய நாளென்றுகூட சொல்லலாம்.
அதன் பிறகு டத்தோ லீக்கு அமைந்தது அனைத்தும் சோதனைக் களமாகவே அமைந்தது. அவர் வெற்றி பெறுவார் என்றும் தோல்வியடைவார் என்றும் விளையாட்டில் ஈடுபடும் முன்பே விமர்சிக்கப்படத் தொடங்கினார்.
இவ்வருடம் முழுதுமே டத்தோ லீ பல விமர்சனங்களைச் சந்தித்தார். அதன் உச்சக் கட்டம்தான் ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கியது.  கடந்த ஆகஸ்டு மாதம் டென்மார்க்கில் நடைபெற்ற உலகப் பூப்பந்து கூட்டமைப்பின் அனைத்துலக சாம்பியன்ஷிப் போட்டியின் போது, டத்தோ லீ சோங் வேய் உடலில் ‘dexamethose' என்ற ஊக்கமருந்து  கலந்திருப்பது இரு வாரங்களுக்கு முன்பு, நார்வே, ஆஸ்லோவில் நடத்தப்பட்ட பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது.
அதனைத்தொடர்ந்து  அவருக்கு எதிரான முடிவு கிடைத்ததையடுத்து உலகப் பூப்பந்து கூட்டமைப்பு அவரை இடைநீக்கம் செய்தது யாரும் எதிர்பார்க்க்காத ஒன்றாகும்.
இதனையடுத்து இவ்விவகாரத்தை உலகப் பூப்பந்து கூட்டமைப்பு ஊக்கமருந்து விளக்கமளிப்பு குழுவிடம்  கொண்டு சென்றது.  ஆனால், டத்தோ லீ, தாம் போட்டியில் வெல்ல எந்தப் போதை மருந்தையும் எடுத்துக்கொள்ளவில்லை என கருத்து வெளியிட்டார்.
இளைஞர் விளையாட்டுத் துறையமைச்சர்
கைரி ஜமாலுடின்
இந்த விவகாரத்தில் இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சரான கைரி ஜமாலுடின்  முதன்மையாளராக விளக்கம் கொடுத்தார். இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சர் என்ற ரீதியில் அதற்கான கடப்பாடும் அவருக்கு இருக்கிறது. இருந்த போதிலும் லீக்கு ஆதரவான பதிலை கைரி கொடுக்கவில்லை என்றே சொல்லலாம்.   தமது பத்திரிகை செய்தியில் கைரி, ஊக்க மருந்தை செலுத்தியது தேசிய விளையாட்டு மையத்தின் மருத்துவர்கள் அல்ல என்றும், கோலாலம்பூரில் உள்ள விளையாட்டாளர்களுக்கான தனியார் நிபுணத்துவ மருத்துவமையம் (கிளினிக்) ஒன்றிலேயே காயங்களுக்கான மரபணு சிகிச்சை ஒன்றின்போது அவருக்கு அம்மருந்து செலுத்தப்பட்டதாகவும் விளக்கமளித்தார். அதோடு, ‘dexamethose' மருந்தை காயங்களுக்காக அளிக்கப்படும் சிகிச்சைகளில் பயன்படுத்த அனுமதியுண்டு. இம்மருந்து 10 நாள்கள் மட்டுமே உடலில் நீடித்திருக்கும். ஆனால் சொங் வேயின் உடலில் அதற்கும் மேற்பட்ட காலம் அம்மருந்து நிலைத்திருந்ததற்கான காரணம் உறுதியாகத் தெரியவில்லை என்று கூறியிருந்தது, லீயின் அபிமானிகளுக்கும் கேள்விக்குறியாக அமைந்தது.
டத்தோ லீ தனது பயிற்றுனரான
ரசிட் சிடேக்வுடன்
அதனைத்தொடர்ந்து டத்தோ லீக்கு நெருக்கமானவர்களில் ஒருவரான முன்னாள் தேசியப் பூப்பந்து வீரர் ரசிட் சிடேக் அதிர்ச்சிதரும் தரும் தகவல் ஒன்றை வெளியிட்டார். அதாவது  தடை செய்யப்பட்டிருந்த குறிப்பிடப்பட்டிருக்கும் ஊக்க மருந்தை உலகின் முதல் நிலை வீரரான டத்தோ லீ சோங் வேய் நீண்ட காலமாக பயன்படுத்தி வந்ததாகவும், மலேசிய, பூப்பந்து சங்கத்தைச் சேர்ந்த பல அதிகாரிகளுக்கு லீ சோங் வேய் அம்மருந்தைப் பயன்படுத்துவது தெரியும் எனவும்  இது நீண்ட காலமாக நடந்து வரும் விஷயம் என்றும் பகிரங்கடுப்பத்தினார்.
டத்தோ லீ தனது பயிற்றுனரான
மிஸ்புன் சிடேக்வுடன்
நாட்டின் மூத்த வீரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் மற்றும் இளம் வீரர்களுக்கும்கூட இவ்விஷயம் லேசாக தெரியும் என்றாலும், முதல் நிலை ஆட்டக்காரர் என்ற காரணத்திற்காக வாய் மூடி இருந்தனர் என்று ரசிப் சிடேக்கூறியிருந்தது மலேசியப் பூப்பந்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனால், இது குறித்து டத்தோ லீயின் தரப்பிலிருந்து சரியான பதில் வரவில்லை என்பதையும் நாம் கொஞ்சம் சிந்தித்து பார்க்கவேண்டிதான் உள்ளது.
இதற்கிடையில், டத்தோ லீ மீது  இருமுறை மேற்கொள்ளப்பட்ட ஊக்கமருந்து பரிசோதனைகளில், சோங் வேய் அம்மருந்து பயன்படுத்தியதற்கான அறிகுறிகள் காணப்பட்டது உறுதிப் படுத்தப்பட்டது என பூந்துபந்து சம்மேளனம் அதிகாரப்பூர்வத் தகவலை வெளியிட்டது. மேலும், டத்தோ லீ விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளார், என உலகப் பூப்பந்து கூட்டமைப்பு (பிடபள்யஃஎப்) தெரிவித்தது.  தன்மேல், விழுந்த பழியைத் துடைப்பதற்குத் தவறிய டத்தோ லீ நிலைகுலைந்துதான் போனார். இந்நிலையில்தான் கடந்த வாரம் தனது நிலைப்பாட்டை வெளிபடுத்தினார் டத்தோ லீ சொங் வேய்.
“நான் மருத்துவர்களை முழுமையாக நம்பினேன். தற்போது காலம் கடந்து யோசிப்பதில் எந்தப் பயனும் இல்லை. நம் உடலில் செலுத்தப்படும் மருந்து குறித்து விளையாட்டாளர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். நம் உடலில் செலுத்தப்படும் மருந்து குறித்து எவ்வளவு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதற்கு நானே ஓர் உதாரணம். நான் மருத்துவம் அறியாதவன்; பூப்பந்தில் எத்தனை இறகுகள் இருக்கும் என்பதும், களத்தில் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதை மட்டுமே அறிந்தவன் நான்” என்று டத்தோ லீ தெரிவித்துள்ளார்.
தேசிய அணியில் டத்தோ லீ சோங் வேய்க்கு அடுத்து சிறந்த இளம் ஒற்றயர் ஆட்டக்காரர்களை மலேசியப் பூப்பந்து சங்கம் கண்டறிய வேண்டிய கடப்பாட்டினை தற்போது கொண்டுள்ளது.  உண்மையில், இந்தத் தேடலை பல ஆண்டுகளுக்கு முன்பே  பூப்பந்து சங்கம் மேற்கொண்டிருக்க வேண்டும் . இதுகுறித்து பல தடவை வலியுறுத்தப்பட்டுவிட்டது என்பதும் மறுப்பதற்கில்லை. பூப்பந்து என்றால், ஒற்றையர் பிரிவில் டத்தோ லீயையும், இரட்டையர் பிரிவில் கூ கின் கீட்- தான் புன் ஹியோங்    ஆகியோர் நாட்டிற்கு பதக்கத்தை வென்று தருவார்கள்ன் என்பது மலேசியாவின் எதிர்பார்ப்பாக அவர்கள் மேல் திணிக்கப்பட்டுள்ளது.  இந்த எதிர்பார்ப்பும்  நம்பிக்கையும் அவர்களை எந்த அளவுக்கு மன உளைச்சலுக்கும்,  தர்ம சங்கடத்திற்கும் ஆளாக்கும் என்பது நமக்குச் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.
கூ கின் கீட்- தான் புன் ஹியோங்
தற்போது டத்தோ லீயின் மீதான தடை நீடித்தால், அவர் என்ன செய்யப்போகிறார்? என்பதுதான் பலரின் கேள்வியாக இருக்கிறது. அதற்கும் அவரே பதிலளித்துள்ளார். அதாவது, தொடர்ந்து தனக்கு விளையாடுவதற்கு தடைவிதிக்கப்பட்டால், கவர்ச்சியான தோற்றம் கொண்டதால் நடிப்பு துறைக்கு செல்ல வாய்ப்பு இருப்பதாகக் கூறினார். டத்தோ லீ எத்தனை மன உளைச்சலுக்கு உள்ளாகியிருந்தால் இப்படி கூறியிருப்பார்? உண்மையில் நடிக்கத் தெரியாத மனிதர் டத்தோ லீ.












சனி, 22 நவம்பர், 2014

கட்டங்களில் அமைந்த உலகு ...5

முகங்கள்

அன்றாட வாழ்க்கையில் வந்து போகும் மனிதர்கள் அனைவரையும் பட்டியலிட முடியாது. சிலர் பட்டியலிடாமலேயே பதிந்துவிடுவார்கள். பதிந்துவிடுபவர்கள் எல்லோருமே நல்லவர்களாகவும், வல்லவர்களாகவும், அழகானவர்களாகவும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதற்கு எதிரானவர்களும் அதைவிடவும் ஆழமாக பதிந்து விடுவது உண்டு.

என் புத்தியில் அத்தனை சுலபமாக யாரும் பதிந்துவிட முடியாது. அப்படியே நான் யாரையாவது ஞாபகம் வைத்திருந்தாலும் எவ்வளவு நாளைக்கு அவர் என் பதிவில் இருப்பார் என்பது தெரியாது. நேற்று புதிதாக பார்த்த முகத்தை இன்று மறுபடியும் எங்கேயாவது பார்க்க நேர்ந்தாலும் இவரை எங்கேயோ பார்த்து இருக்கிறோமே எங்கே என்று அவர் முகம் வந்த திசையை நோக்கி ஓட ஆரம்பித்து விடுவேன். இது ஏதாவது நோயா? இல்லை நோய் முற்றிவிட்டதா என்ற குழப்பம் சமீபகாலமாக வந்து போகிறது. ஆனால் 10 வருடத்துக்கு மேலாகியும் என்னால் மறக்க இயலாத சில முகங்களில் இரு முகங்கள் முக்கியமானவை. அவை நான் பெரிய மருத்துவமனையில் பாதுகாவலர் வேலை பார்த்த போது அறிமுகமான முகங்கள்.

24 மணிநேரமும் அமளியுடன் இருக்கும் பெரிய மருத்துவமனையில் பல தரப்பட்ட முகங்களுக்கிடையில் மறக்க முடியாத அந்த இருமுகங்களும் தன்னை எனக்கு எப்போதும் நினைவுபடுத்திக்கொண்டே இருக்கின்றன.

பயில்வான்

என்னுடைய பாதுகாவலர் அலுவலக எதிர்ப்புறம் சிறிய அறை ஒன்று இளநீல தடித்த திரையால் மூடி இருக்கும். உள்ளே என்ன நடக்கிறது என்பதை தெரிந்துக்கொள்ள எப்பவுமே நான் ஆர்வம் கொண்டதில்லை. நோயாளிகளும் மருத்துவர்களும் பிரவேசிக்கும் அறைக்குள்ளே பெரிதாக என்ன நடந்துவிடப் போகிறது என்ற அலட்சிய எண்ணமே பல விஷயங்களை தெரிந்துக்கொள்ள முடியாமல் போய் விட்டது.

திரையின் வர்ணத்தை போன்ற உடையணிந்த ஒரு உருவம் 'வணக்கம் யோகி' என்று ஒரு நாள் போகிற போக்கில் நின்று பேசியது. என் பெயர் சொல்லி அழைத்த உருவத்தை ஆச்சரியமாகப் பார்த்தேன். பயில்வானைப்போன்ற உருவம். கண்கள் மட்டுமே தெரிந்தது. மற்ற அனைத்துமே மூடி இருந்தது. அவர் என்னைப் பார்த்து புன்னகைப்பதை கண்கள் வழி தெரிந்துகொண்டேன். அவர் பெரிய உடல்வாகுடன் இருந்ததால் பயில்வான் என்றே நான் அவருக்கு பெயர் சூட்டி இருந்தேன். எப்படி என் பெயர் உங்களுக்கு தெரியும் என்றேன். அது கஷ்டம் இல்லை என்றார். ஏன் இப்படி ஓர் உடை என்றேன். என் வேலைக்கு இதுதான் சீருடை என்றார். அப்படி என்ன வேலை என்றேன். திரைமூடி இருந்த அறையைக்காட்டி அதுக்குள்ளே வடை சுடுகிறோம் என்று நினைத்தீர்களா என்றார். உள்ளே நடப்பதை தெரிந்துக்கொள்ள அப்போதுதான் ஆசை துளிர்விட்டது. திரும்பவும் கேட்டேன். பழுதடைந்த உடல் பாகங்களான விரல், கை, கால் போன்றவற்றை அறுக்கும் இடம் அது என்றார். உடலை கூறு போடும் அவரை பார்க்க கசப்பாக இருந்தது. ஐய்யோ என்று பார்த்தேன். எப்படி அறுப்பீர்கள் என்றேன். அனைத்துக்கும் மிசின் இருப்பதாக சொன்னார். வெட்டிய பாகங்களை என்ன செய்வீர்கள் என்றேன். இந்தியர்களும் சீனர்களும் வெட்டிய பாகங்களை மீட்டுக் கொள்ள மாட்டார்கள். ஆனால் மலாய்க்காரர்கள் சிறிய துண்டாக இருந்தாலும் அதை பெற்றுக்கொள்கிறார்கள். அதை என்ன செய்வார்கள் என்றேன். ஒரு உடலை அடக்கம் செய்யும்போது செய்யக்கூடிய சடங்குகளை செய்து புதைப்பார்கள் என்றார். இவை இது வரையிலும் எனக்கு தெரியாத புது விசயங்கள். அவர் பதிலைச் சொல்ல சொல்ல நான் கேள்விகளை கேட்டுக்கொண்டே இருந்தேன். உரியவர்கள் பெற்றுக் கொள்ளாதப் பாகங்களை என்ன செய்வீர்கள் என்றேன். அவற்றை ஒரே புதைக்குழியில் கொட்டி புதைத்து விடுவோம் என்றார். உருப்புகளை அறுக்கும் போது அச்சமாகவோ அருவருப்பாகவோ இருக்காதா என்றேன். உயிர்களை காப்பாற்ற அச்சம் தவிர்க்க வேண்டும் என்றார். அவரின் பதிலில் இருந்த நேர்மையும் பொறுப்பறிந்து செய்யும் தொழில் பத்தியும் என்னைத் தூண்டி  விட்டு ஏதோ செய்தது.

அன்று முழுக்க ஊனம் அடைபவர்களைப்பற்றியும் துண்டிக்கப்பட்ட பாகங்களைப்பற்றியுமே சிந்தனை ஓடிக்கொண்டிருந்தது. உடல் பாகங்கள் துண்டிக்கப்பட்ட யாரைப்பார்த்தாலும் இவர்கள் வாழ்ந்திட சிலர் அச்சம் தவிர்ப்பதை நினைத்துக் கொள்கிறேன். கூடவே பயில்வானும் நினைவில் வந்துவிடுவார்.


அப்துல் கனி

இரண்டாவது நபரின் பெயர் அப்துல் கனி. சரவாக் மாநிலத்தைச் சேர்ந்த மலாய்க்காரர். 23 அல்லது 24 வயது இருக்கும். Orthopedic என்று சொல்லக்கூடிய சிகிச்சை அறையில் நரம்பு சம்பந்தப்பட்ட நோயினால் சிகிச்சை பெற்றுவந்தான். எனக்கு தெரிந்தவரையில் அவனின் உறவினர்களோ நண்பர்களோ பெற்றோர்களோ யாருமே அவனை வந்து பார்த்ததில்லை. தினமும் மணிக்கு ஒரு தடவை ரோந்து பணிக்கு போவதால் அவனை தினசரி சந்திக்கும் ஒரே ஆள் நானாக இருந்தேன். ஆரம்பத்தில் மெல்லிய புன்னகையோடு ஆரம்பித்து 'ஹைய்' என்று முன்னேறி அரட்டை அடிக்கும் அளவுக்கு எங்களின் தினசரி சந்திப்பு நட்பாக மாறியிருந்தது. ஆனால் அவன் அளந்துதான் சிரிப்பான். எப்போதும் ஒரு சோகம் இருக்கும் அவன் முகத்தில். அவனை சார்ந்தவர்கள் யாருமே வராததால் ஏற்பட்ட ஏக்கம் என நினைத்துக்கொண்டேன். நான் ரோந்துக்கு போகாத நாட்களில் என்னை தேடிக்கொண்டு அலுவலகம் வந்து விடுவான். ஓர் இந்திய பெண்ணிடம் இந்தளவுக்கு நட்பு பாராட்டுவது எனக்கு கொஞ்சம் நம்பிக்கை இன்மையும் குழப்பத்தையும் கொடுத்தது. விடுமுறையில் நான் கம்பத்துக்கு போய் திரும்பும் வேளையில் அவன் வெறுமையை உணர்வதாகச் சொல்வான்.

அவனுக்கும் மருத்துவமனையில் விடுமுறை கிடைக்கும். நோயாளிகளின் சீருடையான பச்சை சட்டையும் லுங்கியும் விடுமுறைகளில் அணிந்துக்கொள்ள மாட்டான். அதே தருணத்தில் மருத்துவமனை வளாகத்தை விட்டும் எங்கும் போக மாட்டான். 2 லிருந்து 4 நாட்கள் வரை நீடிக்கும் விடுமுறையில் எங்காவது ஒரு மூலையில் இருப்பான். உறவினர் அல்லது நண்பர்கள் வீட்டுக்கு போக வேண்டியதுதானே என்றால் எல்லோருமே சரவாக்கில் இருப்பதாக சொன்னான். போய் வரும் விமானச் சேவையை சேமித்தால் மருத்துவச் செலவுக்கு உபயோகப்படும் என்பான். தலையை வடபுரமும் இடபுரமும் ஆட்டிவிட்டு சளித்துக் கொண்டு போவேன். இவன் இப்படி இருக்கிறானே என்று யாராவது விசாரித்தால், எல்லா கேள்விகளுக்கும் சிரிப்பையே பதிலாக அளித்தான். அந்தச் சிரிப்பே சொல்லிவிடும், அவன் எதையோ மறைக்கிறான் என்று.

குறிப்பிட்ட நாளில் அவனுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்படும். அந்த நாட்களில் அவனால் சரியாகவே பேசவே முடியாது. துவண்டு போய் இருப்பான். கை ஜாடையில் ஏதாவது பேச முயற்சி செய்வான். எனக்கு கொஞ்சம் சங்கடமாக இருக்கும். அவனின் சிரிப்பை போலவே நான் சின்னதாக சிரித்துவிட்டு போவேன்.
ஒருமுறை வீட்டின் விஷேசத்துக்கு 4 நாள் விடுப்பு வாங்கிக்கொண்டு கம்பத்துக்கு கிழம்பினேன். கனி என்னை எதிர்பார்ப்பான் என்ற படியால் அவனிடம் சொல்லிவிட்டு விடைபெற அவனை பார்க்க போனேன். நான்கு நாட்கள் விடுமுறை என்றதும் சிறிது நேரம் பேசிவிட்டு போ என்றான். விடுமுறையின் காரணத்தை கேட்டான். பேச்சின் இடையில் உன் கையை பிடித்துக்கொள்ளட்டுமா என்றான். சட்டென்று என்ன சொல்வதென தெரியவில்லை. கையை பிடிப்பதால் என்ன வந்து விடப்போகிறது. பிடித்துக்கொள் என்றேன். கையை இருக்கமாக பிடித்துக் கொண்டான். என் அப்பா இறந்தபோது எனக்கு ஆறுதல் கூறியவர்களின் கையை அப்படித்தான் பற்றிக்கொண்டேன். அந்த நிமிடம் அந்த சம்பவம் நினைவுக்கு வந்து போனது. சில நிமிடங்கள் வரை என் கையை விடாமலே பேசிக்கொண்டிருந்தான். ஏன் இப்படி நடந்துக்கொள்கிறான்? அதிசயமாக; என்னை காதலிக்கிறானோ? மதம் மாறச் சொல்வானோ, சூனியம் ஏதாவது வைத்துவிட்டால். ஐய்யோ கடவுளே ஏன் என் புத்தி இப்படியெல்லாம் யோசிக்கனும். இவன் இப்படி கையை பிடித்திருப்பதை யாராவது பார்த்து விட்டால், வீண் பழி சுமக்க நேரிடும். இதை நீட்டிக்க கூடாது” என்றெல்லாம் எண்ணியபடி ஒரு உறுதியோடு அங்கிருந்து கிழம்பினேன்.

விடுமுறைக்கு போயிருதேன் என்பதைத் தவிர கனியின் நியாபகம் என்னை பிந்தொடர்ந்துக்கொண்டே இருந்தது. விடுமுறை  முடிந்து வருகையில் அவனுக்கு ஒரு பரிசு வாங்கி வந்தேன். ஒற்றை புறா பறப்பதை போன்ற கண்ணாடிச் சிலை அது. பக்கத்தில் பேனா வைப்பதற்கு ஒரு இடம் இருக்கும். உள்ளங்கை அளவிலான சிறியச் சிலை. அதை கொடுப்பதற்காக Orthopedic போனேன். அவன் இருந்த அறை காலியாக இருந்தது. அறையை மாற்றி இருப்பார்களா என்ற குழப்பத்தோடு பெயர் பலகையை பார்த்தேன். அவன் பெயர் இல்லை. தாதியைக் கேட்டேன். தாதி வேறொரு நோயாளியின் அறிக்கையை தீவிரமாக எழுதிக்கொண்டிருந்தாள். நான் கனி எங்கே என்றேன்? என்னை பார்த்து விட்டு மீண்டும் கண்களை அறிக்கையில் பதித்து விட்டு அவன் இறந்துவிட்டான் என்றாள். ஒரு கணம் எனக்கு தொண்டையில் இருந்து பேச்சே வரவில்லை. தலையில் ஆணி அடித்ததைப்போல ஒரு வலியை உணர்ந்தேன். உணர்ச்சிவசப்படுவது நன்றாக தெரிந்தது. வேலையில் கவனம் செல்லவில்லை. கடைசியாக அவனைப் பார்த்ததும் பேசியதும் மீண்டும் மீண்டும் கண்முன் ஓடிக் கொண்டிருந்தது.
அவனுக்கு நான் ஆசையாக வாங்கி வந்திருந்த பரிசை எங்கேயோ தவறவும் விட்டிருந்தேன்.





செவ்வாய், 18 நவம்பர், 2014

எனக்கு நான்



அத்தியாயங்கள் என்னைப்
பலவாறாக கிழித்துப்போட்டிருந்தன
குழந்தையில்,
சிறுமியில்,
குமரியில்,
திருமதியில்- என
அத்தியாயங்கள் கிறுக்கப்பட்டு
மிகவும்
விகாரமாகப்
பயமுறுத்தியிருந்தன

கொஞ்சம் பாசம்
அதிகமான கண்டிப்பு
அர்த்தமில்லாத அர்த்தங்கள்
கொஞ்சம் ஆசிர்வா(வ)தம்
மற்றும் ஏகப்பட்ட முரண்களுடன்
எழுதிவிட்டிருந்த அத்தியாயங்களில்
ஒரு பைத்திய நிலைக்குப் போயிருந்தேன்

நிறைவு அத்தியாயத்தை
நல்ல வேளையாக எழுதிவைக்கவில்லை
நானே அவ்வத்தியாயத்தை எழுதிவிட்டு
முன் அத்தியாங்களை மௌனமாக
கிழிக்க துவங்கினேன்

திங்கள், 17 நவம்பர், 2014

“நான் தோல்வி அடைந்தவன்”

“நான் தோல்வி அடைந்தவன்”. ஆம், இப்படித்தான் கூறினார் ஹிண்ட்ராஃப் இயக்கத்தின் தலைவர் பி.உதயகுமார். இந்நாட்டில் இந்தியர்களுக்காக நடந்த மிகப் பெரிய போராட்டம், பேரணி எனப் பட்டியலிட்டால் நிச்சயமாக ஹிண்ட்ராஃப் பேரணிக்குத்தான் முதல் இடம் கிடைக்கும். அந்த அளவுக்கு இந்திய மக்களிடத்தில் பெரிய மாற்றத்தையும் திருப்பு முனையையும் அந்தப் பேரணி ஏற்படுத்தியது. 

நாடு சுதந்திரம் அடைந்த 50 வருட வரலாற்றில் ஹிண்ட்ராஃப் ஏற்படுத்திய பேரலை, நாட்டில் நடந்த பொதுத்தேர்தலிலும் மாபெரும் மாற்றத்தைக் கொண்டுவந்தது என்றால் அது மிகையில்லை. ஹிண்ட்ராஃப் எந்த ஒரு கட்சியையும் சாராத அமைப்பு என தன்னை அடையாளப்படுத்துகிறது. ஆனால், நான் தோல்வியடைந்தவன் என்று கூறிய பி.உதயகுமார், எனது தோல்வி மக்களிடத்தில் விழிப்புணர்வை மட்டுமல்ல, எனக்கும் நல்ல பாடத்தைக் கற்றுக்கொடுத்தது என்று ‘நம் நாடு' அலுவலகத்துக்குச் சிறப்பு வருகை புரிந்த அவர் தெரிவித்தார். 

தான் சிறையில் இருந்தபோதும் நீதிமன்றத்தில் வழக்கு நடந்தபோதும் ‘நம் நாடு' பத்திரிகை நடுநிலையாக இருந்து செய்திகளை வெளியிட்டது. அதற்கு நான் நன்றி கூற கடமைப் பட்டுள்ளேன் என்று கூறியவர், நமது நேர்காணலுக்கும் தயார் நிலையில் வந்திருந்தார். அவரிடம் பல கருத்து பரிமாற்றங்க்களும் கேள்விகளும் கேட்கப்பட்டது. அதிலிருந்து சில கேள்விகள் உங்களுக்காக 

* நீங்கள் கலந்துகொண்ட முதல் போராட்டத்தைப் பற்றி நினைவு கூற முடியுமா?

- நான் 1984-ஆம் ஆண்டு லண்டனுக்கு வழக்கறிஞர் படிப்புக்காகச் சென்றேன். 1985-ஆம் ஆண்டு அங்கு High Park Corner என்ற இடத்திலிருந்து Trafalgar Square வரை ஒரு பேரணி நடந்தது. அங்குத்தான் தென் ஆப்பிரிக்காவின் தூதரகம் இருந்தது. சுமார் 1,500 பேர் பேரணியில் ஈடுபட்டிருந்தனர். காரணம் தென் ஆப்பிரிக்க மக்களை வெள்ளையர்கள் அடிமைகளாக நடத்துகிறார்கள் என்ற காரணத்திற்காக அந்தப் பேரணி நடந்தது. அங்கு நடக்கும் எந்தப் பேரணியிலும் ஆதரவாக மலேசியர்கள் கலந்துகொள்ள மாட்டார்கள். ஆனால், நானும் எனது நண்பர் ஒருவரும் அந்தப் பேரணியில் பங்கெடுத்தோம். அதுவே எனது முதல் போராட்டமாக கொள்ளலாம். மனதில் பதிந்த இந்தச் சம்பவம்தான் பின்னாளில் ஹிண்ட்ராஃப் போராட்டம் நடப்பதற்கு வித்திட்ட நாள். ஒரு போராட்டத்தில் உள்ள தார்மீகத்தையும் உணர்ந்துகொண்ட நாள் அது. அதாவது வெள்ளையர்கள் கருப்பர்களை அடிமைகளாக நடத்துவது தவறு என்று போராட்டத்தில் ஈடுபட்ட 99 சதவிகிதத்தினர் வெள்ளையர்கள்தான். இனவாதத் தனம் இல்லாத ஒரு பேரணி அது. ஜனநாயக அடிப்படை என்பது அதுதானே.

* 2007-ஆம் ஆண்டு நடந்த போராட்டத்திற்கு முன்பும், இப்போதும் ஹிண்ட்ராஃப்பின் ஆதரவு குறித்து கொஞ்சம் விளக்குங்கள்?

- 2007-ஆம் ஆண்டுக்கும் முன்பு ஹிண்ட்ராஃப்  சந்திப்பு என்று ஒரு குறுஞ்செய்தியை நான் அனுப்பினால், ஒரு மணி நேரத்தில் பல ஆயிரம் குறுஞ்செய்திகள் பகிரப்பட்டு 50 பேர் எதிர்பார்க்கும் இடத்தில் 200 பேர் கூடிவிடுவார்கள். அப்படி இருந்தது ஹிண்ட்ராஃப்பின் ஆதரவு. இப்போது அப்படி யாரும் வருவதில்லை. ஆனால், தனிப்பட்ட முறையில் யாரும் ஹிண்ட்ராஃப்பின் ஆதரவாளர்கள் என்றுதான் கூறிக்கொள்கிறார்கள். இதை உறுதிப்படுத்தும் விதமாக நான் விடுதலை பெற்ற ஒரு வாரத்தில் ஒரு சம்பவம் நடந்தது. நான் கடைக்குச் சென்றிருந்தபோது என்னை அடையாளம் கண்டுவிட்ட μர் இளைஞர் குழு என்னை நெருங்கி நலம் விசாரித்து உபசரணை செய்தது. நான் லண்டனுக்குச் செல்ல விருப்பதை அறிந்திருந்த அவர்கள் நீங்கள் இங்கேயே இருந்து சேவை செய்யலாமே, நீங்கள் ஏன் வெளிநாட்டிற்குச் செல்ல வேண்டும் என்று கேட்டனர். அவர்களிடமும் நான் இங்கேயே இருந்து சேவை செய்தால் உங்கள் பங்கு என்னவாக இருக்கும் என்று கேட்டேன். அவர்களின் பதில் மௌனமாகவே இருந்தது. மக்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கு. ஆனால், பங்களிக்கத்தான் மாட்டேன் என்கிறார்கள்.

* ஹிண்ட்ராஃப் அமைப்பின் வெற்றி என்ன? 

- 1. நவம்பர் 2007-ஆம் ஆண்டுக்கு முன்பான காலகட்டத்தில் இருந்த இந்தியர்களின் நிலையும், விழிப்புணர்வும் வேறு. இப்போது இருப்பது வேறு.

2. 2007-ஆம் ஆண்டுக்கு முன், தடுப்புக்காவலில் இரு வாரங்களுக்கு ஒரு மரணம் பதிவு செய்யப்பட்டது. அதில் 20% இந்திய இளைஞர்களாக இருந்தனர். கடந்த 10 ஆண்டுகளில் போலீசின் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியானவர்கள் 635 பேர். (இதில் μப்ஸ் சந்தாஸ் நடவடிகையில் இறந்தவர்கள் சேர்க்கப்படவில்லை)

3. 10 நாள்களில், ஒரு கோயில் உடைப்பு நடந்தது.

4. இந்தியர்கள் மீதான அதிகாரிகளின் அராஜகம்.

நான் மேற்கூறிய அனைத்தும் நவம்பர் 2007-ஆம் ஆண்டுக்குப் பிறகு 95% குறைந்துள்ளன. இந்திய மக்களிடத்தில் பெரிய மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. அவர்கள் கேள்வி கேட்கத் தொடங்கி விட்டனர். இவை அனைத்தும் ஹிண்ட்ராஃப்பின் வெற்றி என்பதில் நான் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். இருந்தாலும் எம்மக்களிடத்தில் பிரச்னைகள் இன்னும் நிரந்தரத் தீர்வு இல்லாமல் இருப்பது வருத்தமளிக்கிறது. 8% இந்திய மக்களுக்கு 70% பிரச்னை என்பது ரொம்ப அதிகம். எங்கு இருக்கிறது நடுநிலை?


* சிறையில் உங்களால் மறக்க முடியாத சம்பவம் என்ன?

- சிறைக்கு அதிகாரி ஒருவர் வந்தார். அவர் என்னைத் தாக்க மட்டும்தான் இல்லை. மற்ற எல்லாவகையான உளவியல் பிரச்னைகளையும் தந்தார். நம்மால் ஒரு கைதியாக எதையும் செய்ய முடியாது. இப்படிச் சிறுகச் சிறுக ஒவ்வொரு தடவையும் நான் பல பிரச்னைகளை சந்தித்தேன். அதை ஊடகங்கள்தான் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தன. சிறையில் எனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்குத் தற்போது வழக்குப் போட்டுள்ளேன். அதன் விசாரணை தற்போது நடந்துகொண்டிருக்கிறது.


* மக்கள் உங்களிடம் அடிக்கடி கேட்கும் கேள்வி என்ன?

- அடுத்த உங்களின் திட்டம் என்ன? இதுதான் அனைத்து மக்களின் கேள்வியாக உள்ளது. இந்தியர்கள் மட்டுமல்ல பிற இனத்தவர்களும், என்னை அறிந்த வெளிநாட்டவர்களும் ஊடகத்தார்களும்கூட இதே கேள்வியைத்தான் என்னிடத்தில் கேட்கின்றனர். நான் சிறையில் இருக்கும்போதுகூட, ஹிண்ட்ராஃப் ஆதரவாளர்கள் என்று கூறிக்கொள்பவர்களும் என்னைப் பார்த்து இதே கேள்வியைத்தான் கேட்டனர். இது உண்மையில் நியாயமான கேள்விதான். ஒரு போராட்டவாதியிடம் மக்கள் எதிர்பார்க்கும் ஒரு கேள்விதான் இது. ‘சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்' என்கிறது சிவபுராணம். 

அதுபோல, அடுத்து நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்பவர்கள், உங்களுக்கு உறுதுணையாக நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை ஒருவர்கூட கேட்கமாட்டேன் என்கிறார். ஆக மக்களின் சிந்தனை எப்படி இருக்கிறது என்றால், ஒரு போராட்டவாதி அதிசயத்தை நிகழ்த்திக்காட்ட முடியும் என்று நினைக்கிறார்கள். செய்ய முடியாததை எல்லாம் என்னால் செய்ய முடியும் என்று நினைக்கிறார்கள். இது ஒரு கண்மூடித்தனமான நம்பிக்கையாகும். நான் ஒரு தனி மனிதன். இந்தத் தனி மனிதனால் அரசாங்கத்தையே கவிழ்க்க முடியும் என்று நம்புவது மக்களின் அறியாமையைக் காட்டுகிறது. மக்கள் ஆதரவு என்னவோ இருக்கத்தான் செய்கிறது. என்னைச் சந்திக்கும், நான் பார்க்கும் அனைவரும் தன்னை ஹிண்ட்ராஃப் ஆதரவாளர்கள் என்று கூறுகிறார்கள். ஆனால் பங்களிப்பவர்கள்தான் குறைவாக இருக்கிறார்கள்.

* மலேசியாவில் ‘சத்து மலேசியா' கோட்பாடு குறித்து உங்கள் விளக்கம் என்ன?

- இங்கு ‘சத்து மலேசியா' கோட்பாடு தலைப்பு செய்தியாக மட்டும் இருப்பதாக நான் உணர்கிறேன். இந்த நாட்டின் குடிமகனாக சிறைச்சாலை தவிர வேறு எங்கேயும் நான் ‘சத்து மலேசயா' கோட்பாட்டைப் பார்க்கவில்லை. மலாய், சீனர், இந்தியர் என்று எல்லா குற்றவாளிகளையும் ஒரே மாதிரிதான் நடத்துகிறார்கள். ஒரே சலுகையைத்தான் தருகிறார்கள். எனது பார்வையில் ‘சத்து மலேசியா' என்ற கோட்பாட்டை அங்குதான் பார்த்தேன். வெளியில் ‘சத்து மலேசியா' கோட்பாடு இல்லாததால்தான், அதை விளம்பரப்படுத்துகிறார்கள். சம உரிமைகளும், சம வாய்ப்புகளும் இல்லாத ஒரு கோட்பாடு ‘சத்து மலேசியா' ஆகாது. அதற்காக எல்லாரும் சிறையில் இருக்க முடியாதே.


* அரசாங்கத்தின் மீது உங்களுக்கு ஏன் இவ்வளவு கோபம்?

- நமது நாடு 1957-ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்தது. அதன்பிறகு யாரும் ‘சத்து மலேசியா' கோட்பாடுகளை வரையறுக்கவில்லை. ஆனால், அனைவரின் ரத்தத்திலும் அது இருந்தது. ஆனால், கடந்த 50 வருடங்களாக அது இல்லை. நடைபெற்றிருக்கும் சம்பவங்கள் அரசாங்கத்தின் இனவாத தன்மையைத்தான் காட்டின. அது என்னை வெகுவாகப் பாதித்தது. பாதிப்பு, செயலாக இயங்கின; இயக்கம் போராட்டமாக வெடித்தது;  போராட்டம் மாற்றத்தைக் கொண்டுவந்தது.


* அரசாங்கம்தான் இந்தியர்களுக்கும் மானியம் வழங்குகிறதே?

- அரசாங்கம் மானியம் வழங்குகிறதுதான். ஆனால், கணக்கு வழக்கு (odit) காட்டுவதில்லையே.2012-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் 100 மில்லியன் தமிழ்ப்பள்ளிகளுக்காக மானியம் ஒதுக்கப்பட்டது. ஆனால், 2012-ஆம் ஆண்டின் இறுதி மாதத்தில் 100 மில்லியன் வெள்ளி மானியம் வழங்கப்பட்டதற்கான ஆதாரமும் கணக்கும் எங்கே? நாம் எங்குச் சென்று அதைச் சரி பார்ப்பது? μர் அரசியல் பார்வையாளராக நான் எப்படி அதை நம்புவது? ஒரு செய்தியில் படித்தேன். அரிசி உள்ளிட்ட சில பொருள்களின் விலை ஏறிவிட்டதால், அரசு சொன்ன வெ.100 மில்லியனைக் கொடுக்க முடியவில்லை என்று. ஆனால், பட்ஜெட்டில் வெ.100 மில்லியன் கொடுப்பதாக பதிவு செய்யப்பட்டுவிட்டதே. இதை நன்கு படித்தவர்கள் உட்பட அரசு சாரா இயக்கம் வரை யாருமே கேள்வி எழுப்பமாட்டார்கள். காரணம் பாதிக்கப்பட்டது இந்திய சமுதாயம்தானே. இந்த அலட்சியம் இன்னும் தொடர்ந்து வருவது நமது சாபக்கேடுதான்.

* அப்படி என்றால் அரசாங்கத்திடம் எம்மாதிரியான கோரிக்கையை வைக்க வேண்டும்?

- நாம் ஒவ்வொன்றாக கேட்டுக்கொண்டிருதால், உலகம் அழிந்தாலும் கோரிக்கை முடியாமல் இருக்கும். நாம் இந்த நாட்டின் சிறுபான்மை பட்டியலில் இருக்கிறோம். ஆதலால் நமக்குச் செய்வது அரசாங்கத்திற்கு அத்தனை சிரமமான காரியம் அல்ல. நமது நாட்டில் 524 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. ஏன் அந்த 524 பள்ளிகளிலும் பாலர்பள்ளியை அமைக்கக்கூடாது. இந்தியர்களுக்கென்று பாலர் பள்ளிகள் மிகக்குறைவு. சில தமிழ்ப் பள்ளிகளில் பெர்மாத்தா பாலர் பள்ளியை அரசு அமைத்துள்ளது. இதனைத்தொடர்ந்து பிரதமரின் துணைவியாரான டத்தின்ஸ்ரீ சித்தி ரோஸ்மாவுக்கு ஒரு கடிதம் எழுதினேன். உங்கள் கோரிக்கையின் பேரில் ஒவ்வொரு பாலர் பள்ளியாக கட்டித்தருவதைவிட ஒட்டுமொத்தமாக எல்லாத் தமிழ்ப்பள்ளிகளிலும் பாலர் பள்ளியை அமைப்பதற்கு ஆவணம் செய்யலாமே என்று. அதற்கு அவரிடமிருந்து பதில் கடிதமும் வந்தது. ஆனால், தற்போது இருக்கும் பாலர்பள்ளிகள் குறித்த விவரம்தான் இருந்ததே தவிர, நான் பரிந்துரைத்த கோரிக்கைக்கான பதில் இல்லை. சிலாங்கூர் அரசாங்கமும் இப்படிதான் நடந்துகொள்கிறது.  இப்படி நாம் ஒவ்வொன்றாகக் கேட்டுப் பெற்றுக்கொண்டிருந்தால், இன்னும் பல  ஜென்மங்கள் கேட்டுக்கொண்டுதான் இருக்கவேண்டும். நமக்குத் தேவை முழுமையான தீர்வுதான்.


நீங்கள் பக்காத்தான்  கட்சியை ஆதரிப்பவர் என்று பரவலாக ஒரு பேச்சு உள்ளதே?

-நான் தேர்தலில் போட்டியிடும்போது, பிரச்சாரங்களில் மக்களைச் சந்தித்து, நீங்கள் யாருக்கு வாக்களிக்க போகிறீர்கள் என்பது உங்கள் விருப்பம். ஆனால், மாற்றத்தைக் கொண்டு வாருங்கள் என்று கூறியிருந்தேன். பெரும்பான்மையான இந்தியர்கள் பக்கத்தானுக்குதான் வாக்களித்தார்கள்.  நான் கடும்தோல்வி அடைந்தேன். அந்தக்  காலக்கட்டத்திலும் சரி, இப்போதும் சரி, மக்கள் பிரச்னை என்று சொல்லும்போது நான் அவர்களை  லிம் கிட் சியாங், அன்வார் இப்ராஹிம் மற்றும் அடி அவாங்கைப் போய்ச் சந்தித்துப் பிரச்னையைக் கூறுங்கள் என வழியுறுத்துகிறேன். காரணம், பக்கத்தானில் 89 நாடாளுமன்ற அதிகாரிகளும், 229 சட்டமன்ற உறுப்பினர்களும் இருக்கின்றனர். அது ஒரு பெரிய குழுவாகும். அவர்களால் மக்களின் பிரச்னையைத் தீர்க்க முடியும். மக்களும் அதை நம்பிதானே அவர்களுக்கு வாக்களித்துள்ளனர். இதை கூறுவதால் நான் எப்படி பக்காத்தான் ஆதரவாளர் ஆவேன்?


*உங்களது போராட்டத்தில் மக்கள் சக்தி தலைவர்  டத்தோ தனேந்திரன் எப்படி இணைந்தார்?

-ஹிண்ட்ராஃப் போராட்டத்தின் ஒரு வாரத்திற்கு முன்புதான் நான் முதல்முறையாக தனேந்திரனைச் சந்தித்தேன். ஒரு வாரத்திற்குப்பிறகு  ஐ.எஸ்.ஏ சட்டத்தில்  4 வழக்கறிஞர்களைக் கைது செய்தவுடன்  ஹிண்ட்ராஃப்பை வழி நடத்துவதற்கு ஆள் இல்லாமல்போனது. அப்போது வேதமூர்த்தியும் லண்டனில் இருந்தார்.  அந்த நேரத்தில் தனேந்திரன் என்னை தொலைபேசி வழி தொடர்புகொள்ளும்போது, நாங்கள் வரும்வரை நீங்கள்தான்  ஹிண்ட்ராஃபைப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். அவர்  தேசிய ஒருங்கிணைப்பளராக எப்படிச் செயல்பட்டார் என்பதை இப்போது வரலாறு சொல்கிறது. 


*ஹிண்ட்ராஃப்பிற்கு ஒரு தலைவர் தானே இருந்தார். பிறகு ஏன் 5 தலைவர்களை நியமித்தீர்கள்?

-1990-ஆம் ஆண்டு தொடக்கம் 2006-ஆம் ஆண்டுவரை ஹிண்ட்ராஃப்பிற்கு ஒரே தலைவராக நான் மட்டுமே இருந்தேன். எனது தலைமைத்துவத்தில்தான் எல்லாத்  திட்டங்களும் செயலாக்கம்  கண்டன.  இரண்டாவது நிலை தலைவராக நான் யாரையும் நியமிக்கவில்லை. 

2006-ஆம் ஆண்டுதான் வழக்கறிஞர் வேதமூர்த்தி ஹிண்ட்ராஃப்பில்  தீவிரமாக ஈடுபடத் தொடங்கினார்.  போராட்டத்திற்கு 3 மாதங்கள் இருக்கும்போதுதான்  கணபதிராவ், மனோகரன் மலையாளம் என 2 வழக்கறிஞர்கள் இணைந்தார்கள். அப்போது ஹிண்ட்ராஃப் தீயாய் வேலை செய்துகொண்டிருந்தது.  25 நவம்பர் போராட்டத்தை முன்னெடுத்த நாள், அன்றும் நானே தலைவராக இருந்தேன். ஆனால், போராட்டத்தில் ஈடுபட்ட  வழக்கறிஞர்கள் 13 டிசம்பர் 2007-ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்ட போது  போலீஸ் தலைவர் டான்ஸ்ரீ மூசா முதல் முறையாகப் பத்திரிகையில் செய்தி வெளியிட்டார். ஹிண்ட்ராஃப் தலைவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர் என்று. எல்லா பத்திரிகைகளும்  அதைத் தலைப்பு செய்தியாக்கிப் பிரசுரித்தன. அன்று தொடக்கம் ஹிண்ட்ராஃப்பிற்கு 5 தலைவர்கள் என மக்களும் முடிவு செய்தனர். 

*நீங்கள் 13-வது பொதுத்தேர்தலில் ஏன் போட்டியிட்டீர்கள்?

-நான் முன்பே எனது ஒரு புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறேன். இந்த மலேசியாவில் இந்தியர்கள்  வாழவேண்டும் என்றால், இந்தியர்களுக்கென ஒரு பெரும்பான்மை கட்சி இருக்க வேண்டும்.  அதாவது வாக்காளர்களின் பெரும்பான்மையை அடிப்படையாகக் கொண்டு அதை முடிவு செய்ய வேண்டும். அதை உருவாக்கினால்தான் நமக்கு ஒரு விடிவு காலம் பிறக்கும் என்பதை நான் ஆய்வுப்பூர்வமாகக் கண்டடைந்தேன். அதன் அடிப்படையில்தான் நான் கிள்ளான் அண்டலாஸில் போட்டியிட்டேன். ஆனால், அது எனக்கு மாபெரும் தோல்வியைத்தான் கொடுத்தது.  ஆனால், இப்போதும் ஒன்றும் தாமதமாகவில்லை. இந்தியர்கள் பல இடங்களில் வசிக்கின்றனர். அவர்கள் ஓட்டுப் போடுவதற்கு ஒரே இடத்தைத் தேர்வு செய்து  வாக்களிக்கவேண்டும்.  இந்தியர்களுக்கு மட்டுமான ஒரு பெரும்பான்மை இருந்தால், நமக்கு வேண்டியதை நாமே செய்துகொள்ளலாம். அதற்குத் தகுதியான ஆளை மக்களே தேர்வு செய்யவேண்டும். ஆனால், இதை மக்களுக்குத் தெரியப்படுத்தத்தான் நான் தேர்தலில் நின்றேன் என்பதை இங்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன்.  ஒன்று அந்தச் சலுகையை அரசாங்கம் வழங்க வேண்டும் அல்லது நாமே உருவாக்க வேண்டும். இந்திய பெரும்பான்மைதான் நமது விடிவு காலத்தை உறுதி செய்யும்  என்பதை நான் இப்போதும் நம்புகிறேன். 


*ஹிண்ட்ராஃப் கூட்டணியில் எப்படிப் பிளவு ஏற்பட்டது?

-ஒரு கூட்டணியை உடைப்பதற்கு இரண்டு வழிகள் உள்ளன. பெண்ணைக் கொண்டும், பணத்தைக் கொண்டும் ஒரு கூட்டணியை உடைக்கலாம். எங்களிடத்தில் பெண்களும் போராட்டவாதிகளாகவே இருந்தனர். மக்களிடம் வசூலித்த பணம் இருந்தது. அதைக்கொண்டே எங்கள் கூட்டணியை உடைக்க   போலீஸ் உளவாளி  ஒருவர் நியமிக்கப்பட்டார். அவரின் பெயரைக் குறிப்பிடக்கூடாது என நீதிமன்ற ஆணை இருப்பதால், நான் அவரின் பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை.  எங்களுக்கு நம்பிக்கையான அந்த உளவாளி, தனது உளவாளி வேலையைச் செம்மையாகச் செய்து  ஹிண்ட்ராஃப் கூட்டணியின் பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தி மிகச் சுலபமாக உடைத்தார். 


*நீங்கள் தேசிய முன்னணி விதித்த நிபந்தனையை ஏற்றுக்கொண்டுதான் விடுதலை பெற்றதாகச் சொல்கிறார்களே?

-நான் இருமுறை சிறைக்குச் சென்றது உட்பட 13 தடவை போலீஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ளேன். சிறையில் முழு தண்டனையும் அனுபவித்துத்தான் விடுதலை ஆயிருக்கேன். இப்போதும் நான் தேசிய முன்னணியைத் தற்காத்துப் பேசியது இல்லை. பிறகு எப்படி நான் தேசிய முன்னணியை ஏற்றுக்கொண்டேன் என்று சொல்கிறார்கள்?















சனி, 15 நவம்பர், 2014

இருக்கலாம்






















இறுதி சந்திப்பில்
யாருக்காவது
பேசுவதற்குச் சுவாரஸ்யமான
சம்பவம் இருக்கலாம்
சொல்லத் தவிக்கும் ஆதங்கங்கள்
தண்ணீரற்ற மீனின் துடிதுடிப்பாய்
கண்ணியில் மாட்டிக்கொண்ட
பறவையின் படபடப்பாய்
அகால மரணமடைந்த
காதலின் துயரமாய்
அந்த சந்திப்பு அமையலாம்
உயிரை உறிஞ்சும் ஆழ்முத்தத்தில்
ஒரு சொட்டு கண்ணீரில்
இதழ் விரியாத சிரிப்பில்
ஒரு கை அசைவிலும்
அந்த சந்திப்பு முடியலாம்
அல்லது
அங்கிருந்தும் தொடங்கலாம்

செவ்வாய், 11 நவம்பர், 2014

உலக வரைபடத்தில் ஒரு கண்ணீர்த்துளி




 
சாத்தான்
ஆசிர்வதித்து அனுப்பிய பெட்டியில்
ஒரு நாட்குறிப்பு இருந்தது

நாள் குறிப்பின்
ஒரு பக்கத்தில்
தேவதைகளில் அழிவைப்பற்றி குறிப்பிட்டிருந்தது

அடுத்த சில பக்கத்தில்
கடவுள்களின் துர்மரணங்களை சித்தரித்திருந்தது

அடுத்தடுத்த பக்கங்களிலும்
சாத்தான் அழிவுகளையே கோடிகாட்டியிருந்தது

அழிவுகளின் ஓலங்களை தாளமுடியாமல்
நாட்குறிப்பை மூடும்போது
மனிதமும் அழிந்திருந்தது

நாட்குறிப்போடு சாத்தான்
பிணங்களையும் பெட்டிக்குள் கிடத்தி
போதி மரத்தின் கீழ் புதைத்தது

பிறகு சிரித்து
எது நடந்ததோ

அது சரியாகத்தான் நடந்தது என்றது.

புதன், 5 நவம்பர், 2014

கனவுகள் கலைத்த சொற்கள்



ஒரு கவிதைக்காக
பல மாதமாக 
முயற்சித்து வருகிறேன்
திடீரென
ஒரு கவிதை நடுநிசியில்
உதிக்க
அதன் வரிகளை
என் போர்வையின்
அடியில்
எழுதி வைத்தேன்
காலையில்
போர்வையில் தேடினால்
கவிதை வரிகள்
கட்டிலில் சிதறிக் கிடந்தன
கனவுகள் 
சொற்களை 
கலைத்துப் போட்டிருக்கலாம்
வரிகளை அடுக்கி 
கவிதையைத் தேடலானேன்


செவ்வாய், 4 நவம்பர், 2014

யோகியின் நேர்காணல்

2012-ஆம் ஆண்டு நான் தீவிரமாக இயங்கிக்கொண்டிருந்த காலக்கட்டம். மலேசிய இலக்கிய உலகில் யோகி ஓர் ஆணா அல்லது பெண்ணா என்ற குழப்ப நிலை பல வாசகர்களுக்கு இருக்க நான் என் வழிபார்த்து போய்க்கொண்டிருந்தேன். நண்பர் பால முருகன் அவரின் அநங்கம் சிற்றிதழுக்கு எனது நேர்காணலை பலமுறை கேட்டிருந்தார். நான் தொடர்ந்து மறுத்து வந்திருக்கிறேன். காரணம், எனக்கே தெரியவில்லை. ஆனால், தினக்குரல் நாளேட்டின் ஞாயிறு பதிப்பு ஆசிரியரிடமும் நல்ல சினேகம் உண்டு. அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர் அவர். அவர்மேல் மரியாதையும் உண்டு. என்னால் மறுத்துக்கூற முடியவில்லை. 2012-ஆம் ஆண்டு வெளிவந்த எனது இரண்டாவது நேர்காணல் இது.


நவீன பெருவெளியில் ஒரு கவிக்குயில்...!

சந்திப்பு: தினக்குரல் ஞாயிறு பதிப்பு ஆசிரியர் ராஜ சோழன் (2012)


யோகி என்று படைப்புலகில் அடையாளம் காணப்படும் இவர், நவீன இலக்கிய வெளியில் தன்னை நிலையாக நிறுத்திக்கொண்டவர். இலக்கிய தாகம் கொண்டு எழுத வந்த இவர் ஆரம்ப காலங்களில் பத்திரிகை துறையில் நிருபராகவும் பணியாற்றியுள்ளார். கவிதை, கதை,  கட்டுரை என எழுதிக்கொண்டிருக்கும் இவரின் பத்திகள் ‘துடைக்கப்படாத ரத்தக் கறைகள்' என்ற நூல் வடிவில் வல்லினம் பதிப்பகம் மிக சமீபத்தில் வெளியிட்டுள்ளது. வாழ்வின் நகர்த்தலில் தான் கண்டடைவதை மிக எதார்த்தமாக பகிர்ந்துக் கொண்டுள்ளார்.துணிச்சலான பெண் படைப்பாளி இவர். ஓவியர் சந்துரு இவரது கணவர் என்பது இலக்கிய வட்டம் அறிந்த ஒன்று. இணையத்தில் துரிதமாக எழுதிக் கொண்டிருக்கும் இவரை இணைய வழி நேர்காணல் கண்ட போது...


-வணக்கம் யோகி, நாட்டின் முன்னணி வகிக்கும் நவீனத்துவ பெண் கவிஞரில் நீங்களும் ஒருவர். நீங்கள் எத்தனை ஆண்டு காலமாக இலக்கியத் துறையில் இருக்கிறீர்கள்?

2005-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இதயம் இதழில் ‘பாரசம்' என்ற பகுதியில்  வெளிவந்த ‘கருணையோடு கொல்வீர்' என்ற கவிதையின் வழிநான் என்னை மலேசிய இலக்கியத்திற்குள் அறிமுகம் செய்துக்கொண்டேன். ஆனால், 2006-ஆம் ஆண்டு கவிஞர் மனுஷ்யபித்திரன் மலேசிய வருகைக்குப் பின் நவீன இலக்கியத்தில்  பரிச்சியம் ஏற்பட்டது. அதுவரையிலும் நவீன இலக்கியத்தை நெருங்க முடியாமல் விழுந்திருந்த முடிச்சுகள் அவரின்  இலக்கிய உரை தகர்த்தெரிந்தது.  அந்த நிகழ்வுக்கு பின் நான் எழுதிய ‘மகாத்மாவின் ஓவியம்' என்ற கவிதையே எனது முதல் நவீன கவிதையாக கொள்வேன். அது காதல் என்ற மலேசிய சிற்றிதழில் பிரசுரம் கண்டது. 

-இலக்கியத்திற்குள் உங்கள் நுழைவு  தற்செயலாக ஏற்பட்டதா அல்லது ஏற்கெனவே திட்டமிடப்பட்டதா? 

தற்செயலாக ஏற்பட்டதுதான். நான் கம்பத்தில் வசிக்கும் வரை எனது பெயர் அச்சில் ஏறும் பத்திரிகையில் பிரசுரம் ஆகும் என நான் நினைத்துக் கூட பார்த்ததில்லை. என் அப்பாவின் கண்டிப்பு அசூரத்தனமாக எங்களை ஆட்டிப் படைத்திருந்தது. அவரின் மறைவிற்குப் பின் பிழைப்புக்காக வந்த பட்டண வாழ்கைதான்  எதார்த்தத்தைக் கற்றுக் கொடுத்து என்னை அடையாளப் படுத்தவும் செய்தது. 

-உங்கள் குடும்பத்தைப் பற்றி?

அம்மாவும் அப்பாவும்  ஆரம்பக் கல்வியே முறையாக கற்காதவர்கள்.செம்பனை மர தொழிலாளர்கள். என் உடன் பிறந்தவர்கள் என்னையும் சேர்த்து  4 பேர். நடுதர வசதி கொண்ட குடும்பம்தான். அப்பாவின் ஊதியம் வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருக்கும். இந்நிலையில் எங்களில் ஒருவராவது அரசாங்க வேலைக்கு  சென்றுவிட வேண்டும் என அப்பா லட்சியம் கொண்டிருந்தார். ஆனால், நாங்கள் இடைநிலை பள்ளியை முடிக்கும் முன்பே அவர் இறந்துவிட்டார். அதன் பிறகு ஏற்பட்ட காலமாற்றத்திடம் மிகவும் சிரமம்பட்டு போராடி வந்திருக்கோம். ஓவியர் சந்துருவும் நானும் 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டோம்.  அழகான வாழ்கை அமைதியாக நகர்கிறது. 

-குடும்ப சூழல் காரணமாக உங்கள் கல்வியை இடையிலேயே நிறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டபோது ஒரு பெண்ணாக எப்படி ஏற்றீர்கள்?

இந்திய சமுதாயத்திற்கு கல்வி எத்தனை முக்கியம் என்பதைச் சொல்லி தெரிவதல்ல. நம்மிடம் எந்த பலமும் இல்லாதபோது கல்வி மட்டுமே ஒரு கருவியாக நம் சமுதாயத்திற்கு பலமாக இருக்கிறது. அதை நிறுத்தும் சூழல் ஏற்பட்டபோது ஒரு பெண்ணாக கேள்விக்குறியாகதான் நின்றேன். நாளை என்பது நம் கையில் இல்லாதபோது நான் மட்டும் விதிவிலக்கா என்ன? ஆனால், நான் என் பொறுப்பில் இருந்து பின்வாங்கவில்லை. எதையும் சந்திக்கும் ஒரு அசட்டு தைரியம் அப்போதும் சரி இப்போதும் சரி மாறாமல் என்னோடு பயணிபுட் வருகிறது. என்னுடைய பலமும் பலவீனமும் அதுதான் என்று நினைக்கிறேன்.

-கவிதை என்பதை நீங்கள் எப்படியாக பார்க்கிறீர்கள்?

ஒரு கதையோ, அல்லது நாவலையோ, நான்கே வரிகளில்  அல்லது அதைவிடவும் குறைவான வார்த்தைகளில் அல்லது சில வரிகளில் சொல்வதற்கு கவிதையால் மட்டுமே சாத்தியப்படும். உதாரணத்திற்கு கனிமொழியின் ஒரு கவிதை.

“எந்நாடு போனாலும்
தென்னாடு உடைய சிவனுக்கு
மாதவிலக்கு பெண்கள் மட்டும் 
ஆவதே இல்லை”

இந்துத்துவ அடிப்படையில் பெண்களுக்கு இழைக்கப்படும் ஒடுக்கு முறையை நேரடியாக பேசும் கவிதை இது. அதைவிடவும் குறைவான சொற்களில்  நகுலனின் ஒரு கவிதையை பார்க்கலாம்.

“இருப்பதற்கு என்றுதான் வருகிறோம்
இல்லாமல் போகிறோம்”

தத்துவாத்தமாகவும்  யதார்த்தமாகவும் இருக்கும் இந்த கவிதைக்குள்  நகுலனின் பல கதைகளோ அல்லது நாவல்களோ விரிந்து திரியலாம். ஆனால், நகுலன் அதை கதையாகவோ அல்லது நாவலாகவோ வடித்திருந்தால் கவிதையில் இருக்கும் அழுத்தம்   இருந்திருக்குமா தெரியவில்லை. அந்த வகையில் யதார்த்தத்தின் வெளியாகவே நான் கவிதையை பார்க்கிறேன். தனக்கு நிகழ்வது கவிதையாக மாறும்போது அது பொதுவான குரலில் ஒலிக்கும் எனவும் நம்புகிறேன்.

-ஒரு கவிஞராக உலா வருவது மகிழ்ச்சியை தருகிறதா? நீங்கள் எழுதிய கவிதைகளில் உங்களுக்கு பிடித்தது?

ஒரு படைப்பாளியாக இருக்கவே நான் என்றும் விரும்புகிறேன். எழுத்தில் இருக்கும் வீரியமும் தெளிவும் உரையில் அளிக்க முடியாது என்று நம்பும் பெண்நான். வாய்மையே வெல்லும் என்பதிலும் முரண்படவில்லை. இரண்டும் வெவ்வேறு தளங்கள் அவ்வளவே. நான் எழுதும் ஒவ்வொரு கவிதையும்  எழுதுவதற்கு குறைந்தது ஒரு மாதம் அவகாசம் எடுத்திருக்கும். எதுவுமே குறைந்த நேரத்தில் எழுதப்படவில்லை. குறைந்த நேரத்தில் என்னால் எழுதவும் முடியாது. மேலும்  நிகழ்ந்து என்னை  பாதித்தே அவை கவிதை வடிவம் பெறுகின்றன. ஆதலால் எல்லாமும் எனக்கு பிடித்த கவிதைதான். இவைகளில் ‘ஒரு நாள் கடவுளுடனும் மிருகத்துடனும் வாழ நேர்ந்தது' என்ற கவிதையும், ‘என் மரணத்தை நானே சம்பவிக்க' என்ற கவிதையும் என் மனதிற்கு மிக அருகில் இருக்கும் கவிதைகள். 

-நவீன கவிஞராக தாங்களின் கவிதைகள் புது மொழியினை கொண்டுள்ளது. யாருடைய கவிதைகளை உங்களின் முன்மாதிரியாக  வைத்துள்ளீர்கள்? 

ஆரம்ப நிலையில் கவிஞர் மனுஷ்யப்புத்திரனின் கவிதைகளில் ஓர் ஈர்ப்பு இருந்தது. அவரின் கவிதை  நவீனக் கவிதைகளாக இருந்தாலும் புரிந்துக்கொள்வதற்கு மிகவும் எளிமையாகவும் முன்மாதிரியாகவும் இருந்தன. அடுத்து கோகுலக் கண்ணன் கவிதைகளை குறிப்பிடுவேன். ஆனால், எனக்கென்று இருக்கும் பாணியில் இயங்குவதையே நான் பெரிதும் விரும்புகிறேன். ஒருவரின் பாணியை காப்பியடிப்பதும், ஒருவர் கவிதையை அங்கு கொஞ்சம் இங்கு கொஞ்சமாக மாற்றி  தனது பெயரை இட்டுக்கொள்வதும் நமக்கு நாமே செய்துக்கொள்ளும் துரோகம்.

-தமிழக கவிஞர்களாகிய மாலதி மைத்திரி, குட்டி ரேவதி, சல்மா, சுகிர்தராணி போன்றோரின் கவிதைகள் உடல் மொழியினை கொண்டிருப்பதை நீங்கள் ஆதரிக்கீன்றீர்களா?

பெண் உடல் என்பது ஆண்கள் துய்க்கப்படும் ஒரு பொருளாகத்தான் இதுநாள் வரையிலும் இருந்து  வருகிறது. ஆணுக்கும் தாய்மை உணர்வு வேண்டும் என தொடர்ந்து கூறி வருபவர் மாலதி மைத்திரி. கவிதை என்பது ஆண்பால், பெண்பால் கடந்து இயங்க வேண்டும் என தமிழச்சி தங்க பாண்டியன் கூறிவருகிறார். ஆணாதிக்க சிந்தனைகளை மதிப்பீடுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என சல்மா தன் கருத்தை முன் வைக்கிறார். ஆணிடமிருந்து பெண் உடலை மீட்டெடுக்கும் போராட்டத்தை பாலியல் கவிதைகள் என்று சர்ச்சைக்குள்ளாக்குகிறார்கள் என்று சுகிர்தராணி ஆதங்கப்படுகிறார். சககால படைப்பாளரான எஸ்.ராமகிருஷ்ணனால்,  குட்டி ரேவதி ‘சண்டை கோழி படத்தில் கீழ்த்தரமாக விமர்சிக்கப்பட்டார்.  இந்நிலையில் பெண்ணியம் பேசுவதும் பெண் மொழியும் அவசியம் என்றே படுகிறது. தனக்கு விதிக்கப்பட்டுள்ள வாழ்க்கையைத்தானே பெண் எழுத்து மொழிப்படுத்திக் கொள்கிறது. அதை நான் ஆதரிக்கிறேன். 

-மறைக்கப்பட வேண்டியதை வெளிப்படையாக காட்டுவது  நல் இலக்கியமாகுமா?

அதை அத்தனை குறுகிய பார்வையில் பார்ப்பது அறமாகாது. ஆணாதிக்கப் பார்வையில் பல மாதிரியான விமர்சனங்களால் பெண் கவிஞர்கள் தாக்கப்படுகிறார்கள். தன் விடுதலை வேண்டியும் பெண் உடல் கொண்டாட வேண்டிய ஒன்று என்ற வழியுறுத்தலும் மலிவான விஷயமோ மலிவான இலக்கியமோ கிடையாது. அதன் வலியை சுறுக்கென்றும் நச்சென்றும் சொல்ல கவிதையால் மட்டுமே சாத்தியப்படுகிறது. இரட்டை அர்த்தம் உள்ள வரிகளாளும் ஆபாச வார்த்தைகளாளும்  திரப்படங்களில் வரும்  பாடல்களும் கவிதைகளும் ஆண் கவிஞர்களால் எழுதப்பட்டிருந்த போதிலும்  யாரும் அதை சட்டை செய்யதது ஏன்? ஆண் என்ற காரணத்தினாலா? இது என்ன இலக்கிய தார்மீகம்?

-நவீன கவிதைகள் பல சமையங்களில் புரியாத மொழியை அதாவது ஒரு  இருண்மையைக் கொண்டிருப்பதாக  சொல்லப்படுகின்றதே?

மேலை நாடுகளில் நவீனத்துவம், பின் நவீனத்துவம், அதி நவீனத்துவம் என இலக்கியம் அடுத்தடுத்த கட்டத்துக்கு பயணித்துக்கொண்டிருக்கிறது. நான் இன்னமும் பழைய பாட்டையே படிக்கொண்டிருக்கிறோம். ஒரு கவிதை புரியக்கூடாது என்ற நோக்கத்தில் யாரும் புனைவது இல்லை.  யாருக்கும் புரியாத கவிதையால் ஒரு கலைஞனுக்கு என்ன நன்மை இருக்கப்போகிறது? தொடர் வாசிப்புக்குப் பிறகு அந்த இருண்மை அகலலாம். அப்போதும்  புரியவில்லை என்றாலந்தக் கவிதை அந்த வாசகனுக்கானதில்லை என கவிஞர் மனுஷ்யப்புத்திரன் கூறியதை இங்கே முன்வைக்கிறேன். சில கவிதைகளில் சில வரிகள் இயல்பாகவே இருண்மை கட்டமையலாம்.அது ஒரு கவிஞனின் மன ஓட்டத்தின் வெளிபாடே ஆகும். ஆனால், நவீனக்கவிதை புரியாத மொழி எசூழ் வரையருப்பது வாசகனின் மனத்தடையே முதல் காரணம் என நினைக்கிறேன். 

-சமீபத்தில் வெளியீடுக் கண்ட உங்களது ‘துடைக்கப்படாத ரத்தக் கரைகள்' என்ற தொகுப்புக்கு வரவேற்ப்பு எப்படி உள்ளது?

புத்தகத்தை படித்தவர்கள் நல்ல மாதிரியான விமர்சனத்தையே முன் வைக்கின்றனர். அது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. மற்றபடி வரவேற்க்கவும் வணிக  நோக்கத்துக்காகவும் அது எழுதப்படவில்லை.

-‘வரைபவனின் மனைவி' என்ற  கவிதையினை சிறப்பாக எழுதி இருந்தீர்கள். ஓவியரின் மனைவி என்பது ஒரு பெண் படைப்பாளியான உங்களுக்கு மகிழ்ச்சியினை தரவில்லையா?

நான் ஒரு படைப்பாளியாக இருந்த போதுதான் ஓவியர் சந்துருவை மணம் செய்துக்கொண்டேன். இன்னமும் அதே படைப்பாளியாகத்தான் இருக்கிறேன். எனக்கென ஒரு தனித்த அடையாளம் இருக்கையில் சந்துருவின் ஆளுமையை  எதற்காக நான் பங்கிட்டுக் கொள்ள வேண்டும்? ஒரு படைப்பாளரான எனக்கு அதில் என்ன சந்தோஷம் இருந்திடப் போகிறது? நான் நானாக வாழ்வது எவ்வளவு முக்கியமோஎனது அடையாளமும் அவ்வளவு முக்கியம். என நினைக்கிறேன். ஓவியரின் துணைவியாக அவரின் முன்னேற்றத்திற்கு உடன் இருப்பதில் நான் மகிழ்ச்சி கொள்கிறேன். அதேபோல் என் ஆளுமையை வைத்து என் துணைவரை அடையாளப்படுத்துவதையும் நான் மறுக்கிறேன்.

ஆர் :
ஒரு படைப்பாளிக்கு நெஞ்சுரம் வேண்டும். எந்த

சக்திக்கும் வளைந்துக் கொடுக்காத படைபாளிக்கு எதிர்ப்புகள் முளைப்பது ஆச்சரியமல்ல. எந்த எதிர்ப்பையும் கண்டுக்கொள்ளாமல் தன் கொள்கைப் பிடிப்பிலிருந்து  விட்டுவிலகாது நடைப்போட்டு துணிச்சலாய் பேசுவதில் யோகி வலிமை நிறைந்த பெண் என தெரிகிறத. இவரது இலக்கியம் பிறரை ஒரு கணம் திரும்பி பார்க்க வைக்கிறது. நல் இலக்கியத்தை உயர் கல்வி கற்றவரால்  மாத்திரமே  தரமுடியும் என்பதல்ல. கலை மனம் கொண்டவர்களால் மாத்திரம்தான் தர இயலும் என்பதை யோகியில் எழுத்துகள் நிரூபிக்கின்றன. ஆயினும் சொற்களில் மட்டுமல்ல, சொல்ல முடியாத விஷயத்தைக் கூட முகம் சுழிக்காமல் சொல்ல தகுந்த வளத்தினை தனக்குள் கடலென கொண்ட நம் தமிழ் மொழியில் பெண்மொழி என்று உடல் சார்ந்த உணர்வினை பார்வையில் வைக்கும் போக்கு நம் நாட்டு சூழலில் அவசியமா? இருப்பினும்  உண்மையொளி உள்ள எந்த எழுத்தும் வெல்வது நிச்சயம். யோகி வெல்வார்?!





 

சனி, 1 நவம்பர், 2014

அந்த நாளில்

நான் தனித்திருந்த அந்த நாளில்
மழை பெய்து கொண்டிருந்தது
நான் ரசித்துக்கொண்டிருந்தேன்
மழையோடு பேசிக்கொண்டிருந்தேன்
மழையோடு விளையாடிக்கொண்டிருந்தேன்
மழையில் குளித்துக்கொண்டிருந்தேன்
மழை என்னை தழுவிக்கொண்டிருந்தது
நான் தனித்திருக்கும் இந்த நாளிலும்
மழை பெய்துக்கொண்டிருக்கிறது
நான் கதவடைத்து
அந்த நாளை நினைத்துக்கொண்டிருக்கிறேன்

-யோகி
(2010, மௌனம் )


எனது இந்த கவிதைக்கு கெடா மாநில எழுத்தாளர் நண்பர் கே.பாலமுருகன் அவரின்   இணைய தளத்தில் எழுதிய விமர்சனம்

நவீன கவிதைகளில் இன்றளவும் அதிகமாகப் புனையப்படும் பேசுபொருளாக தனிமை இருக்கிறது. எத்துனைமுறை உதறினாலும் அறுந்து விழ முடியாத ஓர் உறுப்பு போல ஆகிவிட்டது தனிமை. அதை விழுங்கிக் கொள்வதன் மூலமே உளப்போராட்டங்களைக் கரைக்க முடியும் என்கிற அளவிற்கான சமரசங்கள் தேவைப்படுகின்றன. தனிமையைப் பற்றி மிக அருமையாகச் சொல்லக்கூடிய கவிதைகளில் தனிமை அகத்திற்கு வெளியே வைத்துப் பேசப்பட்டதில்லை, தனிமையின் கொடூரத்தை, இன்பத்தை, ஏதுமற்ற உணர்வை அகத்தின் குறியீடாகத்தான் பேசப்பட்டிருக்கின்றன.

யோகியின் இந்தக் கவிதை தனிமையைபற்றிதாக இருந்தாலும், அது தனிமையை உடைத்துக் கொண்டு மேலும் ஒரு தனிமைக்குள் அடைப்படுவதை பற்றி நம்மிடம் சொல்கிறது. கவிதையின் முதலிலேயே, ‘நான் தனித்திருந்த நாளில்என்பது மிகத் தெளிவாக இது தனிமையைக் குறிக்கிறது எனத் தெரிந்துகொண்டாலும் கவிதையின் இறுதியில் தனிமைக்கான அடுத்த வளர்ச்சி மையப்பாத்திரத்தை மேலும் தனிமைப்படுத்துவதையும் புரிந்துகொள்ள வேண்டும். (இதற்கு மாறாகவும் புரிந்துகொள்ளலாம்).

நான் தனித்திருக்கும் இந்த நாளிலும்
மழை பெய்துகொண்டிருக்கிறது
நான் கதவடைத்து
அந்த நாளை நினைத்துக்கொண்டிருந்தேன்.”-யோகி


முதலில் அவள் உணர்ந்த தனிமையில் ஒரு மழை இருந்தது, அதனுடன் அவள் விளையாடினாள், அந்த மழை தன்னைத் தழுவுவதாகக் கற்பித்துக் கொண்டாள். ஆனால் மற்றொருநாளில் அதே மழை பெய்து கொண்டிருக்கிறது, அவள்  தன்னைத் தனிமையின் தனிமைக்குள் தனிமைப்படுத்திக் கொள்கிறாள்.
யோகி தனிமைக்கென சில குறிப்புகளைக் கவிதையில் தருகிறார். இது தனிமையின் அடர்த்தியைக் காட்டக்கூடியது.


 மழை பெய்து கொண்டிருந்தது
நான் இரசித்துக்கொண்டிருந்தேன்
மழையோடு பேசிக்கொண்டிருந்தேன்”-யோகி

மழையோடு பேச என்ன இருக்கிறது? தன்னை ஆக்கிரமிக்கும் தனிமையிலிருந்து தப்பிக்க முயலும் செயலாக இதைக் கருதலாம் போல. அல்லது தனிமையைத் தானே விரும்பி ஏற்றுக் கொண்ட பின், தனிமை பழகிவிடுகிறது. அதிலிருந்து மீள இயலாமல் அதற்குள்ளே தொலைந்துவிடக்கூடிய குறிப்புகளாகவும் இதைப் புரிந்துகொள்ளலாம். தனக்குப் பிடிக்காததையும் பிடித்தது போல காட்டிக் கொள்ள எத்துனை வீரியமான நாடகத்தைக் காட்ட வேண்டியிருக்கிறது? இரசனை, ஆர்வம், சுதந்திரம் எனத் தனிமைக்கு ஆயிரம் கற்பிதங்களை உருவாக்கிப் பார்த்தும் கடைசியில் அகம் தோற்று தனிமை தன்னை பலப்படுத்திக் கொள்கிறது.

நான் கதவடைத்து
அந்த நாளை நினைத்துக்கொண்டிருந்தேன்.”-யோகி


இது கொஞ்சம் சவால்தான். எத்துனைத் தூரம் தனிமை தன்னை வலுப்படுத்தும் என்பதற்கான ஆதாரம். அதை மேலோட்டமாகச் சிக்கனமாக மட்டுமே யோகி காட்டியிருக்கிறார். இதற்கு மேலும் இந்தத் தனிமையை உணர்த்துவதற்குச் சொல் சிக்கனத்தை ஏற்படுத்த முடியுமா? நகுலன் இதைச் செய்திருக்கிறார்.
 
எனக்கு யாரும் இல்லை
நான்கூட” – நகுலன்

இதுவும் மிகக் கொடூரமான தனிமையின் வலியையும் நிதர்சனத்தையும் சொல்லிவிட்டு மௌனமாக நகரும் கவிதைத்தான். யோகி மேலும் முயன்றால் இன்னும் நல்ல கவிதைகளைத் தர முடியும். அதற்கான மொழி அவரிடம் உள்ளது. இதுதான் தனிமையைப் பற்றிய பேசிய மலேசியாவின் சிறந்த கவிதை என்றெல்லாம் நான் சொல்ல வரவில்லை, மேலும் இந்தக் கவிதைத்தான் யோகியின் கவிதை உச்சம் எனவும் நான் அடையாளப்படுத்தவில்லை. இது யோகியின் ஒரு கவிதை பற்றிய பார்வை மட்டுமே.

நம் அகத்தின் சலனங்களை மேலும் வலுவாகக் கலைத்தன்மையுடன் சொல்வதற்குக் கவித்துவமான பாய்ச்சல் கொண்ட மொழிநடை தேவைப்படுகிறது என நம்புகிறேன். நவீன கவிதைகள் ஏன் புரிவதில்லை என்கிற கேள்விகளுக்கு என்னிடமிருந்து ஒரே பதில்தான், இவை யாவும் முதலாம் ஆண்டு கட்டுரைகள் அல்ல, கொஞ்சம் முயற்சியும் ஆர்வமும் மூலை உழைப்பும் இருந்தால், கட்டாயம் எந்தப் பிரதியையும் புரிந்துகொள்ள முடியும்.

நன்றி பாலமுருகன்.
http://bala-balamurugan.blogspot.com/2010/10/blog-post.html