சனி, 22 நவம்பர், 2014

கட்டங்களில் அமைந்த உலகு ...5

முகங்கள்

அன்றாட வாழ்க்கையில் வந்து போகும் மனிதர்கள் அனைவரையும் பட்டியலிட முடியாது. சிலர் பட்டியலிடாமலேயே பதிந்துவிடுவார்கள். பதிந்துவிடுபவர்கள் எல்லோருமே நல்லவர்களாகவும், வல்லவர்களாகவும், அழகானவர்களாகவும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதற்கு எதிரானவர்களும் அதைவிடவும் ஆழமாக பதிந்து விடுவது உண்டு.

என் புத்தியில் அத்தனை சுலபமாக யாரும் பதிந்துவிட முடியாது. அப்படியே நான் யாரையாவது ஞாபகம் வைத்திருந்தாலும் எவ்வளவு நாளைக்கு அவர் என் பதிவில் இருப்பார் என்பது தெரியாது. நேற்று புதிதாக பார்த்த முகத்தை இன்று மறுபடியும் எங்கேயாவது பார்க்க நேர்ந்தாலும் இவரை எங்கேயோ பார்த்து இருக்கிறோமே எங்கே என்று அவர் முகம் வந்த திசையை நோக்கி ஓட ஆரம்பித்து விடுவேன். இது ஏதாவது நோயா? இல்லை நோய் முற்றிவிட்டதா என்ற குழப்பம் சமீபகாலமாக வந்து போகிறது. ஆனால் 10 வருடத்துக்கு மேலாகியும் என்னால் மறக்க இயலாத சில முகங்களில் இரு முகங்கள் முக்கியமானவை. அவை நான் பெரிய மருத்துவமனையில் பாதுகாவலர் வேலை பார்த்த போது அறிமுகமான முகங்கள்.

24 மணிநேரமும் அமளியுடன் இருக்கும் பெரிய மருத்துவமனையில் பல தரப்பட்ட முகங்களுக்கிடையில் மறக்க முடியாத அந்த இருமுகங்களும் தன்னை எனக்கு எப்போதும் நினைவுபடுத்திக்கொண்டே இருக்கின்றன.

பயில்வான்

என்னுடைய பாதுகாவலர் அலுவலக எதிர்ப்புறம் சிறிய அறை ஒன்று இளநீல தடித்த திரையால் மூடி இருக்கும். உள்ளே என்ன நடக்கிறது என்பதை தெரிந்துக்கொள்ள எப்பவுமே நான் ஆர்வம் கொண்டதில்லை. நோயாளிகளும் மருத்துவர்களும் பிரவேசிக்கும் அறைக்குள்ளே பெரிதாக என்ன நடந்துவிடப் போகிறது என்ற அலட்சிய எண்ணமே பல விஷயங்களை தெரிந்துக்கொள்ள முடியாமல் போய் விட்டது.

திரையின் வர்ணத்தை போன்ற உடையணிந்த ஒரு உருவம் 'வணக்கம் யோகி' என்று ஒரு நாள் போகிற போக்கில் நின்று பேசியது. என் பெயர் சொல்லி அழைத்த உருவத்தை ஆச்சரியமாகப் பார்த்தேன். பயில்வானைப்போன்ற உருவம். கண்கள் மட்டுமே தெரிந்தது. மற்ற அனைத்துமே மூடி இருந்தது. அவர் என்னைப் பார்த்து புன்னகைப்பதை கண்கள் வழி தெரிந்துகொண்டேன். அவர் பெரிய உடல்வாகுடன் இருந்ததால் பயில்வான் என்றே நான் அவருக்கு பெயர் சூட்டி இருந்தேன். எப்படி என் பெயர் உங்களுக்கு தெரியும் என்றேன். அது கஷ்டம் இல்லை என்றார். ஏன் இப்படி ஓர் உடை என்றேன். என் வேலைக்கு இதுதான் சீருடை என்றார். அப்படி என்ன வேலை என்றேன். திரைமூடி இருந்த அறையைக்காட்டி அதுக்குள்ளே வடை சுடுகிறோம் என்று நினைத்தீர்களா என்றார். உள்ளே நடப்பதை தெரிந்துக்கொள்ள அப்போதுதான் ஆசை துளிர்விட்டது. திரும்பவும் கேட்டேன். பழுதடைந்த உடல் பாகங்களான விரல், கை, கால் போன்றவற்றை அறுக்கும் இடம் அது என்றார். உடலை கூறு போடும் அவரை பார்க்க கசப்பாக இருந்தது. ஐய்யோ என்று பார்த்தேன். எப்படி அறுப்பீர்கள் என்றேன். அனைத்துக்கும் மிசின் இருப்பதாக சொன்னார். வெட்டிய பாகங்களை என்ன செய்வீர்கள் என்றேன். இந்தியர்களும் சீனர்களும் வெட்டிய பாகங்களை மீட்டுக் கொள்ள மாட்டார்கள். ஆனால் மலாய்க்காரர்கள் சிறிய துண்டாக இருந்தாலும் அதை பெற்றுக்கொள்கிறார்கள். அதை என்ன செய்வார்கள் என்றேன். ஒரு உடலை அடக்கம் செய்யும்போது செய்யக்கூடிய சடங்குகளை செய்து புதைப்பார்கள் என்றார். இவை இது வரையிலும் எனக்கு தெரியாத புது விசயங்கள். அவர் பதிலைச் சொல்ல சொல்ல நான் கேள்விகளை கேட்டுக்கொண்டே இருந்தேன். உரியவர்கள் பெற்றுக் கொள்ளாதப் பாகங்களை என்ன செய்வீர்கள் என்றேன். அவற்றை ஒரே புதைக்குழியில் கொட்டி புதைத்து விடுவோம் என்றார். உருப்புகளை அறுக்கும் போது அச்சமாகவோ அருவருப்பாகவோ இருக்காதா என்றேன். உயிர்களை காப்பாற்ற அச்சம் தவிர்க்க வேண்டும் என்றார். அவரின் பதிலில் இருந்த நேர்மையும் பொறுப்பறிந்து செய்யும் தொழில் பத்தியும் என்னைத் தூண்டி  விட்டு ஏதோ செய்தது.

அன்று முழுக்க ஊனம் அடைபவர்களைப்பற்றியும் துண்டிக்கப்பட்ட பாகங்களைப்பற்றியுமே சிந்தனை ஓடிக்கொண்டிருந்தது. உடல் பாகங்கள் துண்டிக்கப்பட்ட யாரைப்பார்த்தாலும் இவர்கள் வாழ்ந்திட சிலர் அச்சம் தவிர்ப்பதை நினைத்துக் கொள்கிறேன். கூடவே பயில்வானும் நினைவில் வந்துவிடுவார்.


அப்துல் கனி

இரண்டாவது நபரின் பெயர் அப்துல் கனி. சரவாக் மாநிலத்தைச் சேர்ந்த மலாய்க்காரர். 23 அல்லது 24 வயது இருக்கும். Orthopedic என்று சொல்லக்கூடிய சிகிச்சை அறையில் நரம்பு சம்பந்தப்பட்ட நோயினால் சிகிச்சை பெற்றுவந்தான். எனக்கு தெரிந்தவரையில் அவனின் உறவினர்களோ நண்பர்களோ பெற்றோர்களோ யாருமே அவனை வந்து பார்த்ததில்லை. தினமும் மணிக்கு ஒரு தடவை ரோந்து பணிக்கு போவதால் அவனை தினசரி சந்திக்கும் ஒரே ஆள் நானாக இருந்தேன். ஆரம்பத்தில் மெல்லிய புன்னகையோடு ஆரம்பித்து 'ஹைய்' என்று முன்னேறி அரட்டை அடிக்கும் அளவுக்கு எங்களின் தினசரி சந்திப்பு நட்பாக மாறியிருந்தது. ஆனால் அவன் அளந்துதான் சிரிப்பான். எப்போதும் ஒரு சோகம் இருக்கும் அவன் முகத்தில். அவனை சார்ந்தவர்கள் யாருமே வராததால் ஏற்பட்ட ஏக்கம் என நினைத்துக்கொண்டேன். நான் ரோந்துக்கு போகாத நாட்களில் என்னை தேடிக்கொண்டு அலுவலகம் வந்து விடுவான். ஓர் இந்திய பெண்ணிடம் இந்தளவுக்கு நட்பு பாராட்டுவது எனக்கு கொஞ்சம் நம்பிக்கை இன்மையும் குழப்பத்தையும் கொடுத்தது. விடுமுறையில் நான் கம்பத்துக்கு போய் திரும்பும் வேளையில் அவன் வெறுமையை உணர்வதாகச் சொல்வான்.

அவனுக்கும் மருத்துவமனையில் விடுமுறை கிடைக்கும். நோயாளிகளின் சீருடையான பச்சை சட்டையும் லுங்கியும் விடுமுறைகளில் அணிந்துக்கொள்ள மாட்டான். அதே தருணத்தில் மருத்துவமனை வளாகத்தை விட்டும் எங்கும் போக மாட்டான். 2 லிருந்து 4 நாட்கள் வரை நீடிக்கும் விடுமுறையில் எங்காவது ஒரு மூலையில் இருப்பான். உறவினர் அல்லது நண்பர்கள் வீட்டுக்கு போக வேண்டியதுதானே என்றால் எல்லோருமே சரவாக்கில் இருப்பதாக சொன்னான். போய் வரும் விமானச் சேவையை சேமித்தால் மருத்துவச் செலவுக்கு உபயோகப்படும் என்பான். தலையை வடபுரமும் இடபுரமும் ஆட்டிவிட்டு சளித்துக் கொண்டு போவேன். இவன் இப்படி இருக்கிறானே என்று யாராவது விசாரித்தால், எல்லா கேள்விகளுக்கும் சிரிப்பையே பதிலாக அளித்தான். அந்தச் சிரிப்பே சொல்லிவிடும், அவன் எதையோ மறைக்கிறான் என்று.

குறிப்பிட்ட நாளில் அவனுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்படும். அந்த நாட்களில் அவனால் சரியாகவே பேசவே முடியாது. துவண்டு போய் இருப்பான். கை ஜாடையில் ஏதாவது பேச முயற்சி செய்வான். எனக்கு கொஞ்சம் சங்கடமாக இருக்கும். அவனின் சிரிப்பை போலவே நான் சின்னதாக சிரித்துவிட்டு போவேன்.
ஒருமுறை வீட்டின் விஷேசத்துக்கு 4 நாள் விடுப்பு வாங்கிக்கொண்டு கம்பத்துக்கு கிழம்பினேன். கனி என்னை எதிர்பார்ப்பான் என்ற படியால் அவனிடம் சொல்லிவிட்டு விடைபெற அவனை பார்க்க போனேன். நான்கு நாட்கள் விடுமுறை என்றதும் சிறிது நேரம் பேசிவிட்டு போ என்றான். விடுமுறையின் காரணத்தை கேட்டான். பேச்சின் இடையில் உன் கையை பிடித்துக்கொள்ளட்டுமா என்றான். சட்டென்று என்ன சொல்வதென தெரியவில்லை. கையை பிடிப்பதால் என்ன வந்து விடப்போகிறது. பிடித்துக்கொள் என்றேன். கையை இருக்கமாக பிடித்துக் கொண்டான். என் அப்பா இறந்தபோது எனக்கு ஆறுதல் கூறியவர்களின் கையை அப்படித்தான் பற்றிக்கொண்டேன். அந்த நிமிடம் அந்த சம்பவம் நினைவுக்கு வந்து போனது. சில நிமிடங்கள் வரை என் கையை விடாமலே பேசிக்கொண்டிருந்தான். ஏன் இப்படி நடந்துக்கொள்கிறான்? அதிசயமாக; என்னை காதலிக்கிறானோ? மதம் மாறச் சொல்வானோ, சூனியம் ஏதாவது வைத்துவிட்டால். ஐய்யோ கடவுளே ஏன் என் புத்தி இப்படியெல்லாம் யோசிக்கனும். இவன் இப்படி கையை பிடித்திருப்பதை யாராவது பார்த்து விட்டால், வீண் பழி சுமக்க நேரிடும். இதை நீட்டிக்க கூடாது” என்றெல்லாம் எண்ணியபடி ஒரு உறுதியோடு அங்கிருந்து கிழம்பினேன்.

விடுமுறைக்கு போயிருதேன் என்பதைத் தவிர கனியின் நியாபகம் என்னை பிந்தொடர்ந்துக்கொண்டே இருந்தது. விடுமுறை  முடிந்து வருகையில் அவனுக்கு ஒரு பரிசு வாங்கி வந்தேன். ஒற்றை புறா பறப்பதை போன்ற கண்ணாடிச் சிலை அது. பக்கத்தில் பேனா வைப்பதற்கு ஒரு இடம் இருக்கும். உள்ளங்கை அளவிலான சிறியச் சிலை. அதை கொடுப்பதற்காக Orthopedic போனேன். அவன் இருந்த அறை காலியாக இருந்தது. அறையை மாற்றி இருப்பார்களா என்ற குழப்பத்தோடு பெயர் பலகையை பார்த்தேன். அவன் பெயர் இல்லை. தாதியைக் கேட்டேன். தாதி வேறொரு நோயாளியின் அறிக்கையை தீவிரமாக எழுதிக்கொண்டிருந்தாள். நான் கனி எங்கே என்றேன்? என்னை பார்த்து விட்டு மீண்டும் கண்களை அறிக்கையில் பதித்து விட்டு அவன் இறந்துவிட்டான் என்றாள். ஒரு கணம் எனக்கு தொண்டையில் இருந்து பேச்சே வரவில்லை. தலையில் ஆணி அடித்ததைப்போல ஒரு வலியை உணர்ந்தேன். உணர்ச்சிவசப்படுவது நன்றாக தெரிந்தது. வேலையில் கவனம் செல்லவில்லை. கடைசியாக அவனைப் பார்த்ததும் பேசியதும் மீண்டும் மீண்டும் கண்முன் ஓடிக் கொண்டிருந்தது.
அவனுக்கு நான் ஆசையாக வாங்கி வந்திருந்த பரிசை எங்கேயோ தவறவும் விட்டிருந்தேன்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக