வியாழன், 28 ஜனவரி, 2016

வனம் தேடும் சாம்பல் பறவை ! 5

தொதவர் பழங்குடிகளைப் பற்றி தெரிந்துக்கொள்ளலாம் என்றாலும் இணைய வசதியில்லை. கொஞ்ச நேரம் கொண்டு வந்திருந்த புத்தகத்தை திறந்து வாசிக்கத் தொடங்கினேன். எப்படி உறங்கினேன் என்று தெரியவில்லை. கனவுகள் இல்லாத உறக்கத்திலிருந்து மறுநாள் விழித்தேன். ஊட்டியில் எனது காலை விடிந்தது சினிமாவில் வரும் காட்சிபோல இருந்தது. 

எனக்கு காப்பி குடிக்க வேண்டும் போல இருந்தது. தங்கியிருந்த அறையில் இருந்த தொலைபேசியை பயன்படுத்த தெரியவில்லை. பால்கனியில் நின்று ஊட்டியைப் பார்த்தேன். நேற்றைய இரவு வண்ண விளக்குகளால் ஒளிர்ந்த ஊட்டி, காலையில் குளித்து முடித்து அழகிய மங்கை என ஈரமாக இருந்தது.  அந்தச் சூழலில் என்னை படம் எடுத்துக்கொண்டால் நல்லா இருக்குமே என்று தோன்றியது. நாற்காலியை இழுத்து வெளியில் போட்டு அமர்ந்தேன். வெளிச்சம் பரவத் தொடங்கியது. குளித்துவிட்டு காலை பசியாற செல்லத் தயாரானேன். சாகுலை தொடர்புக்கொள்வதற்கான வசதியில்லை.  

அந்த தனிமை மேலும் சுதந்திரநிலையை என்னில் ஏற்படுத்தியிருந்தது. கண்ணாடியில் முகம் பார்க்க எனக்கு நானே அழகாகத் தெரிந்தேன். வெளியில் வந்தேன். சிற்றூண்டிச் சாலை இன்னும் திறக்கவில்லை. தங்கும் விடுதியை சுற்றியிருந்த பூங்காவை பார்த்து வரலாம் என கேமராவோடு கிளம்பினேன். காக்கைகள் பெரிய அளவில் வட்டமிட்டுக்கொண்டிருந்தன.  புதிதாக மலர்ந்திருந்த மலர்களில் பனி படர்ந்திருந்தது. அப்படியே நடந்துச் செல்கையில் ஊஞ்சல் கண்ணில் பட்டது. எனக்கு பிடித்த விளையாட்டு அல்லவா? 

ஊஞ்சலில் அமரும் வேளையில் சாகுலும் வந்து சேர்ந்தார். சாகுலை பார்த்தவுடன் பெரிய உற்சாகம் ஏற்பட்டது. சாகுல் ஊட்டி ரொம்ப அழகு என்றேன். காண்பது எல்லாம் ரசிக்க வைக்குது என்றேன். சாகுல் அனைத்திற்கும் ஒரு சிரிப்பையே பதிலாகத்  தந்தார். கூட்டமாக இருந்த காகங்களைப் பார்த்து உங்களுக்கு காகங்கள் பிடிக்குமா?  என்றேன். காகங்கள் உண்மையில் அறிவாளிகள். கூடி உண்கின்றன. சில சமயம் தன்னை தற்காத்துக்கொள்ளப் போராடுகின்றன.  அதன் கருமை நிறத்தில் உள்ள வசீகரம் வேறு எந்த கரும் பறவைக்கும் இருப்பதில்லை என்று கூறிக்கொண்டிருக்கையில், காகங்கள் மிகப் பெரிய துப்புரவுத் தொழிலாளி என்று சாகுல் கூறினார். காகங்கள் இல்லை என்றால் இந்த பூமி கழிவுகளில் மூழ்கி, மரணத்தின் விளிம்பில்தான் இருக்கும். காகங்களால்  இந்த பூமிக்கு செய்யும் மிகப்பெரிய உபகாரத்தை ஒருவரியில் சொல்வதற்கு இது தவிர வேறு  பொருத்தமான வரிகள் இருக்குமா என்று தெரியவில்லை. 

தொடர்ந்து நானும் சாகுலும் தங்கும் விடுதியில் காலை உணவை எடுத்துக்கொண்டு, சாகுலின் இயற்கை அங்காடிக்கு காய்கறிகளை கொள்முதல் செய்யும் ஒரு தோட்டத்தை நேரில் காணச் சென்றோம். மலையின் மேல் உள்ள காய்கறி தோட்டம் அது. சரிவான மலைப் பகுதி. மிகப் பெரிய தோட்டத்திற்கு மத்தியில் சின்னதாக ஒரு வீடு. இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் கொண்ட சின்னக் குடும்பம். எங்கள் வருகையை முன்கூட்டியே அவர்களுக்கு தெரியப் படுத்தி இருந்ததினால், எங்களுக்காக அவர்கள் காத்துக்கொண்டிருந்தனர். 

அந்தக் குடும்பத்தின் தலைவி மிக அழகான பெண். அழகான குரலில் உபசரித்தார். ஒரு புறம் தேயிலைத் தோட்டமும், மறுபுறம் பயிரிட நிலத்தை தயார் படுத்திக்கொண்டிருக்கும் நிலப்பரப்பு மத்தியில் நான் அவர்கள் வீட்டு வாசலில் அமர்ந்திருந்தேன். வெளிநாட்டில் இருந்து வந்திருக்கேன் என்று தெரிந்து கொண்டதும்  பெண் பிள்ளைகள்  என்னை அதிசயமாக பார்த்துக்கொண்டிருந்தார்கள். நான் அவர்களை சகஜநிலைக்கு கொண்டு வர விரும்பினேன். அவர்களை புகைப்படம் எடுத்தேன். 

முதலில் அந்தச் சின்ன பெண்களின் கொலுசு அணிந்த கால்களை படம் எடுத்தேன். அடுத்த அவர்களின் அம்மாவின் கால். இதுவரை பார்த்த கால்களிலேயே அவ்வளவு அழகான கால் பார்த்ததில்லை. உங்கள் கால்களை படம் எடுக்கிறேன் என்றதும், மண்ணாக இருக்கு கழுவிவிட்டு வருகிறேன் என்றார்.  அழகே அந்த மண் ஒட்டியிருப்பதுதானே என்றேன். அவருக்கு புரியவில்லை. புரியவேண்டிய அவசியமும் இல்லை. வெட்கம் தோய்ந்த முகத்துடன் நின்றார் அவர். கால்களை மட்டும் படம் எடுத்தேன். 

பின் அந்த அம்மா  தேநீர் கொடுத்தார். அதை தேயிலை தோட்டத்துக்கு மத்தியில் அமர்ந்து அருந்தியது புது அனுபவம். அந்த வீட்டுப் பையன் என் கேமராவையே பார்த்துக்கொண்டிருப்பதை வெகு நேரமாக அவதானிக்க முடிந்தது. சின்னக்குழந்தைகளின் ஆசை நாம் அறியாதது இல்லைதானே..

சின்ன வயதில் நான் பார்த்துப் பார்த்து ஏங்கிய விஷயங்கள் எத்தனை எத்தனை இருக்கும்? ஓர் ஏழை குழந்தைகளுக்கு கிடைக்கும் சின்னச் சின்ன  ஆசைகள்கூட பக்கத்தில் இருந்தும் கிடைக்காமல் ஏமாந்து போயிருக்கேன். குழந்தைகளின் ஏக்கத்தோடு விளையாடுவதற்குதான், வயது வந்த சிலருக்கு எத்தனை ஆவல்? என்னால் மற்ற சிறுவர்களின் உணர்வுகளை 100 சதவிகிதம் புரிந்துக்கொள்ள முடியுமா என்று தெரியவில்லை. ஆனால், ஓரளவு புரிந்துக்கொள்ள முடியும் தானே. "அக்காவை படம் எடுக்கிறாயா" என்றேன். எத்தனை உற்சாகம் அந்த சிறுவனின் முகத்தில். சரி அக்கா என்றான். அவனுக்கு படம் எடுக்க சொல்லிக் கொடுத்தேன். பிறகு அவனுடைய குடும்பத்தை படம் எடுக்க வைத்தேன். உங்கள் மகன் கெட்டிக்காரன். எவ்வளவு அழகாக படம் எடுத்திருக்கிறான் என்றேன். அந்த அம்மாவின் முகத்தில்தான் எத்தனை பெருமை. உண்மையாகவே சிறுவன் அழகாக படம் எடுத்திருந்தான். 
சிறுவன் எடுத்த புகைப்படம்

பிறகு,  வந்த வேலையை முடித்துக்கொண்டு புறப்பட்டோம். எனக்கு தொடர்ந்து அந்த குடும்பத்து நினைவே மனதில் ஓடிக்கொண்டிருந்தது. நிறைய பணம் இருக்கிறது. நில புலம் இருக்கிறது.  இன்னும் நிலம் வாங்குவதைப் பற்றித்தான் அவர்கள்  என்னிடமும் சொன்னார்கள். ஆனால், அவர்கள் தங்கியிருந்த வீடு ஒரு ஸ்டோர் ரூம் போல இருந்தது.   வீடு முழுவதும் அடைத்துக்கொண்டு பொருள்கள் இருந்தன. விவசாய குடும்பம் என்பதற்கு ஏற்றமாதிரி வீடு முழுவதும் மண் இரைந்து இருந்தது. விருந்தினர்கள் வந்துவிட்டால் அங்கு தங்குவது சிரமம்தான். இந்த வீடு தவிர வேறு வீடு வாங்கவில்லை என்று அவர்கள் கூறியிருந்தார்கள்.  

வீடு என்பது ஒரு மனிதனுக்கு என்னவாக இருக்கிறது என்ற கேள்வியும், தேவை, வசதி என்பது வகுத்துக்கொள்ளும் முறையில் விவசாயிகளும் பணக்காரர்களும் எப்படி வேறுபடுகிறார்கள் என்ற கேள்வியும் எனக்கு எழுந்தது.  இதுகுறித்து நான் சாகுலிடம் கேட்டுக்கொண்டே வருகையில் எங்களின் கார் தொதவர்கள் குடில் இருக்கும் பொட்டானிக்கல் கார்டன் கார் நிறுத்துமிடத்தில் நின்றது. 

(தொடரும்)





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக