ஞாயிறு, 17 ஜனவரி, 2016

வனம் தேடும் சாம்பல் பறவை ! 2

பகுதி 2













நான் எதைப்பற்றியும் கவலைக் கொள்ளாமல் சந்தோஷ மூட்லயே இருந்தேன். எந்த டென்ஷனையும் யாரும் எனக்குக் கொடுக்கவில்லை. எனது ஒரே டென்ஷன் என் அலைபேசி வேலைச் செய்யவில்லை என்பது மட்டும்தான். நேசமணி அம்மா என்னை அவரது காரில் ஏற்றிக்கொண்டு பேருந்து நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். நான் காரைவிட்டு இறங்கிய மறுகணம் பேருந்து நடத்துனர் எந்த நிபந்தனையுமின்றி என்னைப் பேருந்தில் அள்ளிபோட்டுக் கொண்டு கிளப்பினார். 


நல்ல வசதியான பேருந்து. கால் நீட்டிப் போட்டு உறங்கிக்கொண்டே போகும் வசதி. அப்போதுதான் கைத்தொலைபேசி ஞாபகம் வந்தது எனக்கு. ஜெயராம் அண்ணா பஸ் ஏறியதும் தெரியபடுத்தும்படி எனக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். நான் மீண்டும் மீண்டும் அவரை அழைத்துக்கொண்டிருந்தேன். ஜெயராம் அண்ணாவுக்கு அழைப்பு இணையவே இல்லை. பேருந்து நிறுத்தி ஆட்களை இறக்கிய இடங்களைக் குறிப்பிட்டு அவருக்குக் குறுஞ்செய்திகள் அனுப்பிக் கொண்டிருந்தேன். அது அவருக்குச் சேர்கிறதா இல்லையா என்றுகூட எனக்குத் தெரியவில்லை. காரணம் அண்ணாவிடமிருந்து எனக்கு எந்தப் பதிலும் எனக்கு வரவில்லை. மீண்டும் ஒரு முறை அண்ணாவுக்கு அழைத்தேன். இம்முறை அலைப்பேசி இணைப்புக் கிடைத்தது. அவர் பதிலுக்கு அனுப்பும் எந்தக் குறுஞ்செய்தியும் டெலிவர் ஆகமறுக்கிறது என்றும் கோவைப் போப்ஸ் கல்லூரி என்று ஜெயராம் அண்ணா கூறிக்கொண்டிருந்தபோதே அலைபேசி நின்று போனது.

காலை 7 மணிக்கு எல்லாம் நான் கோவையில் இறங்கியிருக்க வேண்டும். ஆனால், காலை 8.30 மணிவரைப் பஸ்சில்தான் இருந்தேன். இறுதியாகப் போப்ஸ் கல்லூரியிடத்தில் காத்திருப்பதாக ஜெயராம் அண்ணாவுக்குத் தகவல் கூறும்படி சாகுலுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டுக் காலை நேரக் கோவையை வேடிக்கைப் பார்க்கத் தொடங்கினேன். கோலம் போடும் பெண்கள், டீக் கடையில் ஆண்கள், பேருந்துக்குக் காத்திருப்பவர்கள், குப்பையை மேய்ந்துக்கொண்டிருந்த மாடுகள் இப்படிக் கோவை பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. 
பஸ் நடத்துநர் அந்தக் கல்லூரி நிறுத்தத்தில் நிறுத்தினார். ஆனால் கல்லூரி இருப்பதற்கான அறிகுறித் தெரியவில்லை. சரியான நிறுத்தம் தானா என்பதை அறியப் பேருந்து நிறுத்தத்தின் ஓரத்தில் பூ வியாபாரம் செய்துக்கொண்டிருந்த அம்மாவிடம் கேட்டேன். அவர் சரியான இடம்தான் இங்கேயே உட்காருங்க என்றார். பூ வேணுமா என்றார். என்னிடம் 10 ரூபாய்கூட இந்தியப் பணமில்லை. வேணாம் என்று மீண்டும் வேடிக்கைப் பார்க்கத் தொடங்கினேன். என்னையும் சிலபேர் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தனர். குறிப்பாக ஆட்டோ ஓட்டுநர்கள். அதற்குள் ஜெயராம் அண்ணா என்னை அடையாளம் கண்டு வந்துவிட்டார். வெகுநேரம் அவர் எனக்காகக் காத்திருபதும் வேறொரு பேருந்தை விரட்டிப் பிடித்துத் திரும்பி வந்ததும் பின்னர்த் தெரிந்துக்கொண்டேன். 
ஜெயராம் அண்ணா மிகவும் அன்பானவர். அவருடைய சிரித்த முகம் கொஞ்சம்கூட மாறவில்லை. அவருடைய வீட்டிற்கு அழைத்துப்போனார். அவருடைய மனைவியை (அண்ணியை) அறிமுகம் செய்துவைத்தார். சம்பரதாய அறிமுகம்தான். பின் பேசப் பேச அந்தச் சம்பரதாயம் மாறியது. மிக இயல்பாக அந்த உரையாடல் மாதிரி மலேசிய வாழ்வியல் முறை, இஸ்லாமிய ஆட்சிமுறை, மலேசிய கல்விமுறை, வேலைக்காக வரும் தமிழ்நாட்டவர்கள் என ஒரு சங்கிலித் தொடர்மாதிரி மேலோட்டமாகப் பேசிக்கொண்டே போனோம். 
அண்ணிக் காலை உணவைத் தயார் செய்திருந்தார். இட்டிலி, தோசை, பொங்கல் எனக் களைகட்டியிருந்தது. என்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சாப்பிட்டேன். சுவையான காலை உணவு மட்டுமல்ல, டீயும். 
பேச்சின் போது அண்ணி எனது பூர்வீகம் குறித்துக் கேட்டார். தஞ்சாவூர் என்றேன். ஆனால், இன்றுவரை அங்கு இன்னும்போகவில்லை எனவும் கூறினேன். ஜெயராம் அண்ணா அவர் துணைவியார் இருவரும் தஞ்சாவூரைச் சேர்ந்தவர்கள் என்று பின்னர்தான் தெரிந்துக்கொண்டேன். 

அன்பான புரிந்துணர்வு கொண்ட குடும்பம். நான் ரொம்ப வசதியாகத் தரையில் உட்கார்ந்துக் கதை அளந்துக்கொண்டிருந்தேன். எனக்குப் பிடித்த இடத்தில் மட்டுமே நான் அப்படி  சௌகரியங்களுடன் இருப்பேன். திடீரென வந்த ஓர் அந்நிய நிலத்துப் பெண் ஒருவருக்குச் சொந்தமான வீட்டில் அத்தனை இயல்பாக நடமாடிக்கொண்டிருப்பது எந்தப் பெண்ணுக்குப் பிடிக்கும். அண்ணியை முதலில் அணைக்கும்போது அவர் அதை விரும்பாதது எனக்குத் தெரிந்தது. 

நண்பர் சாகுல் வந்த பிறகு, மீண்டும் ஓர் அறிமுக உரையாடல், இன்னும் பிற. அதன் பிறகு அந்தச் சந்திப்பின் ஞாபகமாகப்  ஜெயராமன் அண்ணன் குடும்பத்தோடு புகைப்படம் எடுத்துகொண்டு விடைபெற்றேன். சுமார் 4 மணி நேரம் அண்ணன் வீட்டில் இருந்தேன். விடைபெறும் முன் அண்ணியை மீண்டும் அணைத்தேன். இம்முறை அதில் ஓர் இறுக்கம் இருந்தது. 

நானும் சாகுலும் முதுமலை வனபயணத்தைத் தொடங்கினோம். இடையில் ஒரு நாள் ஊட்டியைச் சந்தித்துவிட்டு, மறுநாள் காலையில் முதுமலை வன அதிகாரியையும் சந்தித்துவிட்டு, வனத்தையும் அங்கு வசிக்கும் பூர்வக்குடிகளையும் சந்திக்கலாம் எனத் திட்டம். ஊட்டியை நோக்கிய பயணமும் அதைக்கடந்த தூரமும், "வா என்றும் என்னைக் காண் என்றும் அழைத்துக்கொண்டிருந்தாள்  வனதேவதை.


முன்னதாக சாகுலை குறித்து சொல்ல வேண்டும். நிறைய பேர் சாகுலை குறித்து சொல்லியிருக்கலாம். நான் பார்த்த சாகுலும் நீங்கள் பார்த்திருக்கும் சாகுலும் ஒன்றாக இருக்க வாய்ப்பில்லை.
எனக்கு நெருங்கிய நண்பண்கள் என சொல்ல இதுவரை யாரும் இருந்ததில்லை. முகநூல் வழியாக மட்டும் அறிமுகமாகியிருந்த சாகுல், இனி நான் செய்யப்போகும் இந்திய பயணங்களில் எல்லாம் அவரின்றி அமையுமா எனும் அளவுக்கு எங்களின் நட்பு மாறியிருந்தது. அதை பயணதின் அடுத்தடுத்த பதிவுகளில் சொல்கிறேன்.  
(தொடரும்)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக