வெள்ளி, 10 ஜூன், 2016

பத்தாங்காலி படுகொலையும் கண்ணாமூச்சி விளையாட்டும்

இரண்டாம் உலகப்போர் காலக்கட்டத்தில் மலேசியாவின் பத்தாங்காலி படுகொலைகள் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடந்துவந்தது. 1948-ஆம் ஆண்டு நடந்த அந்தப் பயங்கரப் படுகொலைகளின் விசாரணையை 2012-ஆம் ஆண்டுச் செப்டம்பர் மாதத்தோடு லண்டன் நீதிமன்றம் ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தது. அதாவது பத்தாங்காலி படுகொலைகள் பற்றிய விசாரணை தேவையில்லை என்று கூறியிருந்தது.

இரண்டாம் உலகப்போரின் போது மலேசியாவில் நடந்த இந்தப் படுகொலைகளுக்கு ஏன் 63ஆண்டுகள் விசாரணை நடைபெற்றது? அதன் பின்னணி என்ன? இந்த வழக்கில் நேரடி சாட்சியாளராகக் கம்யூனிஸ்ட் போராளியான சின் பெங் இருந்தார்.

1948-ஆம் ஆண்டு டிசம்பர் 12-ஆம் தேதி எப்போதும்போலத்தான் விடிந்தது. பிரிட்டிஷ் இராணுவத்தின் அட்டூழியங்கள் அதிகமாக இருந்ததால் பதட்டமும் அச்சமும் அதிகமாக இருந்தது. பத்தாங்காலியில் சுங்கைரிமோ ரப்பர் தோட்டத்தில் 26 சீன ஈயச்சுரங்க தொழிலாளர்கள் மற்றும் ரப்பர் தோட்ட தொழிலாளர்களை, கம்யூனிஸ்டுகள் என 2nd Battalion Scouts Guards சிறைப் பிடித்தனர். ஒரு கூடாரத்தில் பிடித்து அடைத்து இரவு முழுவதும் வைத்திருந்தனர். அதில் ஒருவர் தப்பிக்க முயன்றபோது சுட்டுக்கொல்லப்பட்டதாகப் பிரிட்டிஷ் இராணுவ வாக்குமூலத்தில் கூறப்பட்டது. அதே வேளையில் திட்டமிட்டு இராணுவத்தின் ஆயுதங்களைக் கைப்பற்ற நினைக்கையில் மீதமிருந்த 25 தொழிலாளர்களும் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என இராணும் கூறியது. அது பத்திரிக்கை செய்தியாகவும் வந்தது.

ஆனால், கம்யூனிஸ்டு இயக்கம் அதை மறுத்துக்கூறியது. அவர்கள் போராளிகள் இல்லை என்றும் அப்பாவி பொதுமக்கள்தான் என்றும் கூறியதுடன், இதன் உண்மை நிலவரம் அறிய மலாயா கம்யூனிஸ்டுக் கட்சி நிறுவனரும் அதன் தலைவருமான சின் பெங் இரகசிய குழு ஒன்றை பத்தாங்காலிக்கு அனுப்பினார்.

அப்பாவி மக்களைப் பிரிட்டிஷ் இராணுவத்தினர் கொன்றுவிட்டதாகப் பரவலான பேச்சுகள் எழுந்ததால் கூட்டரசு அரசாங்கம் ஜனவரி 2-ஆம் தேதி 1949-ஆம் ஆண்டுப் பத்தாங்காலியில் நடந்தது பயங்கரவாதிகளுக்கெதிரான சம்பவம். இதுகுறித்து மேற்கொண்டு எந்த விசாரணைகளும் தேவையில்லை என ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட்டது. மேலும், பத்தாங்காலியில் நடந்த சம்பவம் தொடர்பாக விளக்கமாக எழுதி அறிக்கையையும் தாக்கல் செய்தது.

அவ்வறிக்கையில்...
விசாரணையில் கிடைத்த தகவல்களின் படி ஆயுதம் தாங்கிய பயங்கரவாதிகள் அடிக்கடி சம்பந்தப்பட்ட இடத்தில் நடமாடியது தெரிய வருகிறது. அவர்கள் அங்கே ரப்பர் பயிரிடும் தொழிலாலர்களுக்காகக் காலையில் கொண்டுவரப்படும் உணவை அபகரிப்பது வழக்கமாக இருந்துள்ளது. சிறைப்பிடிக்கப்பட்டவர்கள் தப்பிப் போகாமல் இருக்க , இராணுப சார்ஜெண்ட் மூன்று பிரிவுகளாகப் பாதுகாவலர்களைப் பிரித்து நுழைவாயில்களில் நிறுத்தியிருந்தார். அதில் ஒருவர் இரவு தப்பிக்க முயன்றபோது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மற்றவர்களும் தப்பிக்க முயன்றபோது சுட்டுக்கொல்லப்பட்டார்கள். அவர்களை ஓடாமல் நிற்கும்படி மலாய் மொழியில் கட்டளையிட்டும் அதற்கு அவர்கள் அடிப்பணிய மறுத்துவிட்டதால், வேறுவழியில்லாமல் துப்பாக்கிப் பிரயோகம் செய்யும் நிலை ஏற்பட்டது.
எனக் கூறியிருந்தது.


ஆனால், மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் இரகசிய குழுவின் ஆய்வின் படி அது திட்டமிட்ட கொலை என்று முடிவெடுத்தது. சுட்டுக்கொல்லப்பட்டவர்களிடத்தில் எந்த ஆயுதமும் இல்லை. மேலும், அவர்கள் கம்யூனிஸ்டு கட்சியின் உறுப்பினர்களும் இல்லை. அவர்கள் சாதாரணத் தொழிலாளர்கள். அங்கே ஆற்றோரத்தில் அத்தாப்புக் குடிசைகளில் வாழ்பவர்கள். முதல்நாள் இரவு காவலில் வைக்கப்பட்டிருந்த அவர்கள் மறுநாள் காலையில் வெளியே அழைத்துவரப்பட்டு மூன்று பிரிவுகளாக்கி சுட்டுக் கொல்லப்பட்டார்கள். என்று தெரிவித்தது.

இராணுவத்துக்குத் தெரியாமல் இந்தப் படுகொலையிலிருந்து தப்பிய ஒருவர் இந்தக் கொலைகளைக் குறித்து வெளியில் சொன்னார். . மேலும், இராணுவம் மேற்கொண்ட இந்தக் கொலைச் சம்பவத்தை அங்கேயிருந்த கம்பத்துப் பெண்களும் நேரில் பாத்திருந்தனர். ஆனால், பிரிட்டிஷ் அரசாங்கம் அனைத்தையும் மறைத்து இந்தக் கொலைகள் பற்றிய பிரச்சாரத்தைத் திசை திருப்பியது மட்டுமல்லாது மலாயா கம்யூனிஸ்டுகளைப் பயங்கரவாதிகள் என முத்திரைக் குத்தியது.

காலனித்துவச் செயலாளர் Greed Jones இந்தப் படுகொலைகளை ஞாயப்படுத்தவும் பயங்கரவாதிகள்தான் கொல்லப்பட்டனர் என்றும் மலாயாவில் பிரிட்டிஷ் ராணுவம் ஞாயமாகத்தான் நடந்துக்கொள்கிறது என்றும் உலகுக்குக் கூறிக்கொண்டிருந்தார்.
பந்தாங்காலி படுகொலை பற்றிய ஆய்வறிக்கை பிரிட்டிஷ் அரசவைக்கும் சென்றது.
அப்படுகொலைகள் பற்றியச் பல செய்திகளும் நீதிமன்ற விசாரணைகளும் பத்திரிகைகளில் வந்த வண்ணமே இருந்தன.

'The People' என்ற பத்திரிகை ஒரு விசாரணையை மேற்கொண்டது. அதில் அப்போது மலாயாவில் பணியாற்றிய பதவி ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளைச் சந்தித்து உண்மைகளைக் கண்டறியும் பெரும் முயற்சியை எடுத்தது. 'டிசம்பர் 12-ஆம் தேதி 1948-ல் Scouts Guards Platoan பிரிட்டிஷ் படை திட்டமிட்ட படுகொலையைப் பத்தாங்காலியில் அப்பாவி மக்கள்மீது நிகழ்த்தியுள்ளது' இவ்வாறு 'The People' பத்திரிகை பிப்ரவரி முதல் தேதி 1970-ஆம் ஆண்டு முதல் பக்க செய்தியாக இப்படிப் பிரசுரம் செய்தது.

இச்செய்தி லண்டன் பத்திரிகையில் வந்த இரண்டாம் நாள் மலேசிய நிருபர்கள் ஜபார் பின் தாயிப் என்பவரை தேடி கண்டுபிடித்தனர். ஜபார் பின் தாயிப் பத்தாங்காலி படுகொலை சம்பவத்தின்போது சிறப்புப் போலீஸ்க்காரராகப் பத்தாங்காலி காவல்நிலையத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தார். இவரே பிரிட்டிஷ் இராணுவத்தினருக்கு வழிகாட்டியாகவும் இருந்தவர். அப்போது நடந்ததை ஜபார் இவ்வாறு விவரித்தார்.

"Scouts Guards இராணுவத்தினர் என்னைக் கைதான அந்த ஆண்களைப் பார்க்கவிடாமல் முகத்தை வேறுபக்கம் திருப்பச் சொன்னார்கள். நான் திரும்பியதும் தொடர்ந்து துப்பாக்கியிலிருந்து குண்டுகள் பாய்ந்தன. கம்பத்திலிருந்து பெண்களும் குழந்தைகளும் வீறிட்டலறினர். நான் திரும்பி பார்த்தேன். எங்கும் மனித உடல்கள் சிதறிக் கிடந்தன. 25 இறந்த உடல்களைத்தான் நானும் கணக்கெடுத்தேன்." என்று தெரிவித்தார். இறந்தவர்களின் அறிக்கையை 24 மணி நேரத்திற்குப் பிறகு அதிகாரிகளுக்கு ஜபார் தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சின் பெங்
இந்தப் படுகொலையின்போது அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய சோங் ஹோங் (chong hong). அப்போது அவருக்கு 45 வயது. துப்பாக்கிகள் வெடித்தபோது பயத்தில் மயங்கி விழுந்துவிட்டதாகவும் மயக்கம் தெளிந்து எழுந்து பார்த்தபோது பிரேதங்களுடன் பிரேதமாகத் தானும் இருந்ததாகக் கூறினார். துப்பாக்கிச் சூட்டின் சம்பவத்தின்போது என்ன நடந்தது என்பதைச் சோங் சொன்னது...
"இராணுவத்தினர் எங்களை எல்லாம் திரும்பி நிற்கச் சொன்னார்கள். பயத்தில் நாங்கள் நடுக்கத்துடன் நின்றோம். யாரும் திரும்பவில்லை. அவர்கள் உடனே துப்பாக்கி பிரயோகம் செய்தார்கள். நான் மயங்கி விழுந்துவிட்டேன். மயக்கம் தெளிந்த பிறகு கம்பத்துக்கு ஓடிப்போய் நடந்த விஷயங்களைச் சொன்னேன். பிறகு பத்தாங்காலி போலீஸார் என்னைக் கைது செய்து மூன்றுநாள் காவலில் வைத்தார்கள். என்னை எதற்குக் கைது செய்தார்கள் என்பதைக் கடைசிவரை கூறவேயில்லை. கொல்லப்பட்ட யாரும் இராணுவத்தினர் சொல்வதைப்போலத் தப்பிக்க முயற்சிக்கவில்லை."

இந்தப் படுகொலை சம்பவம் நடந்து 22 ஆண்டுகள் கழித்துப் பிபிசி தொலைக்காட்சி நிறுவனம் இது தொடர்பான குறும்படம் ஒன்றை தயாரித்தது. அந்த இராணுவத்தில் இருந்த மூன்று இராணுவவீரர்களின் வாக்குமூலத்தை அப்படம் பதிவு செய்தது. குறிப்பிட்ட மூவரும் சம்பவ இடத்தில் இருந்தார்களேயன்றி துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபடாதவர்கள். மேலும், பத்தாங்காலி கம்பத்தில் இருந்தவர்களையும் துப்பாக்கிச் சூட்டில் பலியான ஒருவரின் மனைவியையும் நேர்காணல் செய்திருந்தார்கள்.

2012-ஆம் ஆண்டு லண்டன் நீதிமன்றம் பத்தாங்காலி கொலைவழக்கை 'விசாரிக்கத் தேவையில்லை' என்று ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தது
தமக்கு ஏமாற்றம் அளிப்பதாகக் கொலையில் உயிரிழந்த சொங் யூன் என்பவரின் மகன் சொங் கூன் யிங் கூறியிருந்தார்.

இந்த வழக்கை மேல் முறையீடு செய்யப்போவதாக லண்டன் வழக்கறிஞர்கள் கூறியிருந்தனர். அதோடு கொலையை நிகழ்த்திய இராணுவ சிப்பாய்கள் சட்ட விரோதமாக அவர்களைக் கொன்றதை ஒப்புக்கொண்டனர் என்பதும் குறிப்பிடதக்கது. 65 ஆண்டுகள் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடும்
பத்தாங்காலி கொலை வழக்கும் இறந்தவர்களின் உயிருக்கும் இன்றுவரை இருட்டிலேயே இருக்கின்றன.


குறிப்புகள்:

1. சின் பெங், 2013-ஆம் ஆண்டுச் செப்டம்பர் 16-ஆம் தேதி தாய்லாந்தில் மரணமடைந்தார். சின் பெங் மலேசியாவிற்குள் நுழைய அரசாங்கம் தடைவிதித்திருந்தது. அதனால், அவர் பல ஆண்டுகள் தாய்லாந்திலேயே கழித்தார். தனது பிறந்த ஊரான சித்தியவானுக்கு வருவதற்கு அவர் மிகுந்த ஆசைக்கொண்டிருந்தார். மேலும், தம் பிரேதத்தைப் பிறந்த மண்ணில் புதைக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். மலேசிய அரசாங்கம் அவரின் அஸ்தியைக்கூடக் கொண்டு வருவதற்கு அனுமதிக்கவில்லை.

2. 'The People' பிரிட்டிஷ் பத்திரிகையின் ஞாயிறு பதிப்பின் பெயராகும்.
வியாட்னாம் போரின்போது அமெரிக்க இராணுவம் மேற்கொண்ட 'மை லாய்' படுகொலைகளையும் இந்தப் பத்திரிகை விவரங்களைச் சேகரித்து வெளியிட்டது.

(நன்றி நம்நாடு பத்திரிகை. 2012. தகவலுக்காக பகிர்ந்திருக்கிறேன்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக