செவ்வாய், 31 மே, 2016

அவளுக்கு ஜூடி என்று பெயர்

  "ஜூடியின் அருமை பெருமைகளை அறிந்த பி.பி.சி நிறுவனம், ஜூடியிடம் சிறப்பு நேர்காணல் செய்தனர். ஒவ்வொரு கேள்விக்கும் விதவிதமாய் குரைத்து தன் உணர்வுகளை பகிர்ந்துக்கொண்டாள் ஜூடி."
 யார் அந்த ஜூடி?


இரண்டாம் உலகப்போர் காலக்கட்டம். தென்கிழக்காசியாவில் பலநாடுகளை, தன் அதிகாரத்திற்கு கீழ் கொண்டு வந்திருந்தது ஜப்பான். நாடுகளை ஆக்ரமித்ததோடு அங்கே கொடுங்கோல் ஆட்சியை புரிந்தது.
ஜப்பானின் சர்வதிகார ஆட்சியினை முடிவுக்கு கொண்டு வர பிரிட்டன் தன் ராணுவக் கப்பல்களை அவ்வட்டாரத்தில் உலாவவிட்டிருந்தது.

அதிலே ஒன்று எச்.எம்.எஸ் இங்னாட் கப்பல். பெரும்பாலும்  பலகையால் செய்யப்பட்ட   இராணுவக்கப்பல் அது. அதற்கு பதிலாகத்தான் எச்.எம்.எஸ் 'கிராஸ் ஹோப்பர்' கப்பல் கொண்டு வரப்பட்டது. அந்தப் போர்க்கப்பலின் கேப்டன் ரியர் அட்மிரல். அவர் கோபக் கண்களோடு பார்க்க, ஒரு மூலையில் சிமிட்டாத கண்களோடு உட்கார்ந்திருந்தாள் ஜூடி. ஜூடியின் கண்களும் கேப்டன் ரியர்  கண்களும் சந்தித்துக்கொண்டன. ஒன்றும் பேசாமல் ஒரு முறைப்புடன் அவ்விடத்தை விட்டு நகர்ந்தார் கேப்டன் ரியர்.

அப்போது  'கிராஸ் ஹோப்பர்' சீனாவின் புகழ்பெற்ற 'யாங்சி' நதியின் முகப்பில் நங்கூரமிட்டிருந்தது. ரியர் தனது வீரர்களைத் தயார் நிலையில் இருக்கும்படி உத்தரவிட்டார். அவரின் உத்தரவுக்குப் பின்னால் ஜூடி தன் தலையைத் திருப்பி வானுயரப் பார்த்துவிட்டு வெறித்தனமாகக் குரைத்தது. இராணுவ வீரர்கள் அதை அமைதிப்படுத்த முயன்று தோற்றனர். தன்னுடைய உத்தரவை  ஜூடி மீரியதாக அதன்மேல் கடும் சினங்கொண்டார் ரியர்.
ஜூடியின் மீது தனது கோபத்தை காட்ட எத்தனித்த நொடியில், ஜப்பானிய போர் விமானம் ஒன்று 'கிராஸ் ஹோப்பர்'  பக்கத்தில் வந்துவிட்டது. மிகவும் தாழ்ந்த நிலையில் கிராஸ் ஹோப்பரை நெருங்கிய காரணத்தினாலோ என்னவோ விமானத்தின் கேப்டன்  'கிராஸ் ஹோப்பர்'  மீது தாக்குல் நடத்தாமல் விமானம் விபத்துக்குள்ளாவதிலிருந்து தவிர்க்க மீண்டும் மேலெழும்பி பறக்கலானார்.

ஜப்பான் விமானத்தின் வருகையை முன்னமே அறிந்துக்கொண்டு எச்சரிப்பதற்காகவே ஜூடி குரைத்திருக்கிறது என்பதை ரியர் உட்பட அனைவரும் உணர்ந்தனர். ஜூடி இப்படி ஒரு முறையில்ல பல தடவை இதுபோன்ற எச்சரிக்கையை செய்துள்ளாள் என்றும் அநேக பிரிட்டிஷ் படைவீரர்களின் உயிரை இக்கட்டிலிருந்து காப்பாற்றியுள்ளார் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

ஒரு முறை ஜூடி முதலையின் பிடியில் சிக்கியது. ஜூடியின் வாழ்க்கை வரலாறு அதோடு முடிந்ததென பலரும் நினைத்தனர். ஆனால், ஜூடி அந்த முரட்டு முதலையிடமிருந்து தன்னை மீட்டு தப்பித்தது,  ஐந்து வாரங்கள் காட்டில் திரிந்து 200 மைல்கள் அலைந்து திரிந்து, இறுதியாக ஜப்பானியர்களின் போர்க் கைதியாக சிக்கியது.

அத்தருணத்தில்தான், ஐந்து போர்விமானிகளில் ஒருவரான பிராங் வில்லியம்ஸின் கருணைப் பார்வை ஜூடியின்மீது விழுந்தது. அவரின் நேசத்துக்குறியவளாக ஜூடி மாறியது. கப்பலில் பல முகாம்களைச் சுற்றிவந்தது. பலவாறான தொல்லைகள், கெடுபிடிகளுக்கு நடுவே பிராங்கின் உதவியோடு இங்கிலாந்து வந்துச் சேர்ந்தாள் ஜூடி.

ஒரு சாதாரண நாய், திசைமாறித் திருந்து ஒரு போர்க்கப்பலில் தஞ்சமடைந்து, ஒரு போர் வீராங்கனைப்போல பல வேளைகளில், பல இராணுவ வீரர்களை ஆபத்திலிருந்து காப்பாற்றிய கடமைதனை மதித்தது பிரிட்டன் ராணுவம்.
ஜூடிக்கு கௌரவம் அளிக்க வேண்டும் என்று முடிவு செய்தது. ஜூடிக்கு 'டிக்கின்' பதக்கம் அணிவிக்கப்பட்டு கௌரவப்படுத்தியது.  1947-ஆம் ஆண்டு ராணுவத்திலிருந்து பணி ஓய்வு பெற்றார் பிராங்க் வில்லியம்ஸ். அவர் தனது மிச்ச வாழ்க்கையை டான்சானியாவில் கழிக்க விரும்பினார். அப்பொழுது தனது நேசத்திற்குறிய ஜூடியை உடன் அழைத்துச் சென்றார்.

1950-ஆம் ஆண்டு தனது உடலில் ஏற்பட்ட கட்டியின் காரணமாக ஜூடி உயிரிழந்தது. அப்போது அதற்கு வயது 14. ஜூடிக்கு அரசு விமானப்படையின் சீருடை அணிவிக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. ஜூடிக்காக அது அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் கல்லறை ஒன்றும் எழுப்பப்பட்டது.

ஜூடியின்  கதையை அனைவரும் அறிந்துக்கொள்ளும் நோக்கில், பிரிட்டிஷ் குழந்தைகள் தொலைக்காட்சியில் இடம்பெற்றது குறிப்பிடதக்கது. மேலும், 2006-ஆம் ஆண்டு லண்டன், இம்பீரியல் போர் விலங்குகள் அருங்காட்சியகத்தில் ஜூடியின் பதக்கங்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டன. 1937 ஆம் ஆண்டு பிறந்த ஜூடி பிப்ரவரி 17 -ஆம் தேதி 1950 ஆண்டு தனது வாழ்நாளை முடித்துக்கொண்டாலும் அதன் சாதனைகள் அவ்வப்போது நினைவுகூறப்பட்டே வருகிறது.


குறிப்பு:
1943-ஆம் ஆண்டு முதல்   Dickin பதக்கம் வழங்கப்பட்டது. தொடர்ந்து இதுவரை
நாய்கள், புறாக்கள், குதிரைகள் மற்றும் ஒரு பூனை உட்பட கிட்டத்தட்ட 100 விலங்குகளுக்கு அப்பதக்கம் (விருது) வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக