சனி, 7 மே, 2016

வெறுப்பு என்ற வார்த்தையில் எனக்கு நம்பிக்கையே இல்லை- ஓவியர் ஜெகன்நாத்தின்

ஓவியர் ஜெகன்நாதன் ராமசந்ரம் மிகவும் ஆற்றல் வாய்ந்த ஓவியர் எனப் பெயர் பெற்றவர். இவர் கோலாம்பூரில் பிறந்து வளர்ந்தவர். சிறுவயதிலிருந்தே ஒரு வங்கி ஊழியராகத்தான் வேண்டும் என்பது இவரது கனவாக இருந்தது. 

17 வயது இருக்கும். அந்தோணியன் என்ற புத்தகக்கடைக்கு தற்காலிக வேலைக்காக நேர்முகத்தேர்வுக்குச் சென்றார். அங்கு அவருக்கு 24 கேள்விகள் கேட்கப்பட்டன. அவரால் 10 கேள்விகளுக்கு கூட பதில் சொல்ல முடியவில்லை. மனம் உடைந்து போன அவர் நம்பிக்கையிழந்து வெளியில் வந்தார். அன்றுதான் பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தில் ஓவியர் எஸ். சந்திரனின் ஓவியக் கண்காட்சியை எதிர்பாராத விதமாகக் கண்டவர், அவர் வாழ்கையையே புரட்டி போட செய்தது. அதோடு அவரின் வங்கி கனவும் முடிவுக்கு வந்தது. 1982-ஆம் ஆண்டு இந்தியாவுக்குச் சென்று முறையாக ஓவியம் பயின்றார். ஆனால், அது அவருக்குத் திருப்திகரமாக அமையவில்லை. இரண்டு வருடங்கள் இந்தியாவின் பல இடங்களுக்குச் சென்று அனுபவக்கல்வியும் பெற்றார். பின் 1984-ஆம் ஆண்டு மலேசியாவுக்குத் திரும்பி வந்தார் ஜெகன்.
அண்மையில் மலேசிய இந்திய தொழிற்முனைவர்களுக்கான ஆங்கிலச் சஞ்சிகையில் அவரின் நேர்காணல் வந்திருந்தது. அந்தச் சஞ்சிகை ஓவியர் ஜெகநாத்தின் படத்தையே முகப்பு அட்டையாக அச்சிட்டு வெளியிட்டிருந்தது, மலேசிய ஓவியர்களுக்குப் பெருமை தரும் விஷயமாகும். அந்த நேர்காணலில் பல கேள்விகள் அவரிடம் கேட்கபட்டன. ஓவியங்கள் வர்த்தக ரீதியில் எப்படி வெற்றியடைகின்றன என்பதைக் குறித்தான பல கேள்விகள் அந்த பேட்டியில் இருந்தாலும் எனக்குத் பிடித்தச் சில கேள்விகள் அதில் கேட்கப்பட்டிருந்தன.
அதில் சில.. *உங்களுடைய ரொல் மாடல் யார்? -Desmond Morris எக்காலத்திலும் என்னுடைய குருவாக இருக்கிறார். என்னுடைய ரோல் மாடலாக Nikola tesla இருக்கிறார். கலீல் ஜிப்ரான், தாகூர், ரூமி, ராமானுஜம், என் மகள் மற்றும் நிலா. *நீங்கள் வெறுப்பது ? - வெறுப்பு என்ற வார்த்தையில் எனக்கு நம்பிக்கையே இல்லை. ஆனால், மக்கள் தேவையில்லாத விஷயங்களைப் பேசுவது கஷ்டமாக இருக்கிறது. மேலும், நிகழ்காலத்தை நினைக்காமல் கடந்த காலத்தைப் பற்றியே பேசுபவர்களையும் நான் விரும்புவதில்லை. 

*இந்தியர்களிடம் உங்களுக்குப் பிடித்த அம்சம் என்ன? -ஆதியிலிருந்தே மிக ஆழமான இடத்தை அறிவியல் ரீதியாக இந்தியர்கள் கொண்டிருக்கிறார்கள். அதை உண்மையில் நான் பெரிதும் மதிக்கிறேன். ஆனால், மூட நம்பிக்கைகளில் கண் மூடித்தனமாக இருப்பது விரும்பத்தகாததாக இருக்கிறது. *காதலை எப்படி நீங்கள் வரையரை செய்கிறீர்கள்? -உங்களைவிட மற்றவர் அதிகமான மகிழ்ச்சியை உணரும்போது அங்குக் காதல் மேலோங்குகிறது.... *உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன? -இக்கணத்தை வாழ்வதே என் இரகசியம் அவருடைய வண்ணங்களான ஓவியங்கள் ஏற்படுத்தும் தாக்கம் எனக்குக் கொஞ்ச நஞ்சமில்லை. விநாயகரை ஓவியமாகத் தீட்டியிருப்பார் ஜெகன். எப்பவும் விருப்பமான ஓவியமாக அது எனக்கு இருக்கிறது. மேலும், நான் தேடி முடிக்காத வண்ணங்களை அது கொண்டிருக்கிறது. தன்னுருவத்தையும் ஓவியங்களில் கொண்டு வருகிறார் ஜெகன்.

ஓவியர் ஜகனின் ஓவிய அனுபவத்தில் மறக்கமுடியாத சம்பவம் ஒன்று இருக்கிறது. அதாவது அவர் ஓவியம் வரைய தொடங்கிய மூன்றாவது வாரத்தில் சஞ்சய் காந்தி இறந்து போகிறார். அவரின் மறைவு ஓவியர் ஜகனை நிலைக்குழையச் செய்தது. காரணம் அவர் மறைவிற்கு ஒரு வார இடைவெளியில்தான் சஞ்சய் காந்தியை ஓவியமாக வரைந்து ஒரு பத்திரிக்கைக்கு தந்திருந்தார். அவரின் மறைவு ஜெகனை அதிர்ச்சிக்குள்ளாக்கியதில் ஆச்சரியமில்லை. 
ஒரு முறை மரணத்தின் வாசலையும் தொட்டுவிட்டு வந்திருக்கிறார் இவர். இப்படியான திருப்பங்களும், அதிர்ச்சிகளும், ஆச்சரியங்களும் இவரின் வாழ்வில் அதிகம். அவரின் ஓவியங்களை நான் இரு முறை நேரில் பார்த்து அதிசயித்திருக்கிறேன். ஆனால், அவருடன் ஒரு முறைகூடப் பேசியது இல்லை. அவர் மேல் நான் கொண்டிருக்கும் பிரமாண்டம் சிதறாமல் இருப்பதற்கு அவருடன் பேசாமல் இருப்பதுதான் சிறந்த வழி என்றும் தோன்றுகிறது. இது என்ன சிறுபிள்ளைத்தனம் எனத் தோணலாம். சிறுபிள்ளைத்தனம்தான். எளிதில் நண்பர்களாகிவிடுபவர்கள் மத்தியில் நான் அதிகம் உரிமை எடுத்துக்கொள்பவளாக இருக்கிறேன். ஓவியர் ஜகநாதன் என்பவர் அந்த உயரத்தில் இருந்துக்கொண்டே என்னைப் பார்த்து சிரிக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக