ஞாயிறு, 22 மே, 2016

கொனாரில் ரம்லி

 ஓவியங்களைப் போலவே சில நிழல்படங்களும் மனதுக்கு தேடலை தருபவை. உலகப் புகழ்பெற்ற சில புகைப்படங்கள் வரலாற்றையே புரட்டிப் போட்டிருப்பது நாம் அறியாததல்ல. அது ஒருபுறமிருக்க கலைக்காகவும் அழகியலுக்காகவும்  படமெடுப்பது அண்மையக்காலமாக
 பெருகிக்கொண்டு வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.  என்றாலும், அதை முறைப்படி வெளிச்சம், வகை என்ற ரீதியில் மிகச்சிறந்த புகைப்படங்களை எடுப்பதற்கு புகைப்பட கலைஞர்கள் எடுக்கும் சிரத்தை அத்துறையில் இருப்பவர்களுக்குத்தான் தெரியும்.

தொடர்ந்து ஓவியக் கண்காட்சி, ஒடிசி நடன நிகழ்ச்சிகளை நடத்திவரும் சூத்ரா இல்லத்தில் அண்மையில் (மே 20) 'கோனாரில் ரம்லி' என்ற புகைப்படக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒரிசாவில் இருக்கும் கோனார்க் சூரியக் கோயிலில் நடனக் கலைஞரும் ஓவியருமான ரம்லி இப்ராஹிம்மை மாடலாக கொண்டு புகைப்படக் கலைஞரும் ஊடகவியலாருமான ஏ.பிரதாப் எடுத்த 16 புகைப்படங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டன.

ஏ.பிரதாப்பின் புகைப்படக் கண்காட்சியை நான் காண்பது இது இரண்டாவது முறையாகும். சென்னையைச் சேர்ந்த இவர் 'The Times Of India-வில் பிரதான புகைப்படக் கலைஞராக பணிச்செய்கிறார். 10 ஆண்டுகளாக புகைப்படக்  துறையில் அனுபவம் கொண்டிருக்கும் பிரதாப் வெகு நாட்களாக ரம்லி இப்ராஹிம்மை மாடலாகக் கொண்டு புகைப்படங்கள் எடுக்க வேண்டும் என்ற பேச்சு வார்த்தை இருந்ததாகவும் அந்த ஆசை 2015-ஆம் ஆண்டுதான் நிறைவேறியதாகவும் கூறினார்.


மிக எளிமையான ஆடை அலங்காரத்துடன் இந்தியாவின் அதிசயக் கோயில்களில் ஒன்றான கோனாரக் சூரியக் கோயிலில்  சில ஒடிசி நடன அடவுகளையும், நின்ற நிலையிலான காட்சிகளையும் ஒளி ஓவியமாக பிரதாப் பதிவு செய்திருக்கும் விதம் மிக அருமை. அதைவிடவும் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் அத்தனை படங்களும் கருப்பு-வெள்ளை நிறத்தில் எடிட் செய்யப்பட்டவையாகும். வர்ணங்களை கடந்து கோனாரக் கோயிலின் அழகும், கூடவே நடனத்தில் யானை சிங்கம் என அடவுகளை பிடித்தபடி ரம்லியும் எதுதான் அழகு என நம்மை திக்குமுக்காட வைக்கிறது.

கோனரக் கோயிலைக் குறித்து ரம்லி பலமுறை பேசியிருக்கிறார். ஒடிசி நடனத்தின் பிறப்பிடமான ஒரிசாவில் இருக்கும் அந்தக் கோயிலை சிலாகித்துப் பேசும்போது கேட்டுக் கொண்டே இருக்கலாம். எல்லாரும் ஒரு முறை கட்டாயம் அந்தக் கோயிலை நேரில் காணவேண்டும் என ஒரு முஸ்லிம் மலாய்க்காரரான ரம்லி சொல்லும்போது எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டதுதான் கலை எனும்கூற்று உண்மைதான் என நம்பத் தோணும். ஏ.பிரதாப் கேமராவில் சிக்கிய ரம்லியின் புகைப்படங்கள் சில...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக