ஞாயிறு, 22 மே, 2016

நான் எனக்காக என்ன செய்து வைக்க வேண்டும்- திருமா


மரணம் வாழ்வின் எதார்த்தம்; ஆம்,மறுப்பதற்கில்லை. ஆனால், மனதுக்கு பிடித்தவர்களின் அல்லது நெருக்கமானவர்களின் மரணம் ஏன் தொடர்ந்து மனதையும் சிந்தனையையும் தொந்தரவு செய்துக்கொண்டே இருக்கிறது? அதை ஏன் அத்தனை எளிதாக வாழ்வின் எதார்த்தம் என கடந்து போக முடியவில்லை? உடன் பழகியவர்கள் அல்லது  ரத்த சொந்தங்களின் பிரிவு இவ்வாறு இருக்க, பல கடல்கள், மலைகள் தாண்டி இருக்கும் தோழர்களின் திடீர் மரணத்தை எப்படி எதிர்கொள்வது? எல்லா மரணங்களையும் ஒன்றுபோல எடுத்துக்கொள்ளத் தெரியவில்லை.
திருமாவளவன் எனும் ஆளுமை எனக்கு எப்படி அறிமுகமானார் என்பது யோசித்துப் பார்க்கிறேன், நியாபகத்திற்கே வர மறுக்கிறது. அதை நியாபகப் படுத்தி இப்போ நான் என்ன செய்யப்போகிறேன்? ஆனால், அவருடனான சில அலைபேசி உரையாடல்கள், கவிதை விவாதங்கள் ஒரு மழைச்சாரல் போல அவ்வப்போது  என்னை நனைத்துவிட்டு போகின்றன.  
ஒரு முறை எங்களின் நண்பர் பா..சிவம் குறித்த அஞ்சலி பதிவை நான் எனது அகப்பக்கத்தில் பதிந்திருந்தேன். “எனக்கு சிவம் என்றொரு பெயர் இருக்கிறது. எனக்கு நெருக்கமானவர்களுக்கு அது தெரியும். உங்களின் அஞ்சலி கட்டுரை எனக்கு எழுதியது போல ஓர் உணர்வு” என்ற குறுஞ்செய்தி திருமாவளவனிடமிருந்து  எனது முகநூல் உள்பெட்டிக்கு வந்தது. எனக்கு அது ஆச்சரியத்தை தந்தது. அது தொடர்பாக அவர் முன்பே எழுதிய ஒரு பதிவை எனக்கு அனுப்பி வைத்தார்

அவர் எழுதிய பெயரில் என்ன இருக்கிறதுஎன்ற பதிவில் இப்படி ஒரு பத்தி வருகிறது.
நான் பிறந்தபோது அப்பா எனக்கு கருணாகரன் என்று பெயர் வைத்தார். ஆனால், ஊரிலை எல்லாரும் சிவம் என்டுதான் என்னைக் கூப்பிடுவினம்கணேசையர்தான்  வீட்டிலே சிவம் என்டு அழைக்க சொன்னவர்.
என்று  அந்த பதிவு நீள்கிறது. எங்களின் இந்த தொடக்க உரையாடலுக்குப் பிறகுதான் திருமாவுடைய ஒரு நேர்காணல்  மலேசியாவில் செயற்பட்டு வரும் வல்லினம்’ இலக்கிய குழு தயாரித்த பறை என்ற இதழில் வந்திருந்தது. என்னை பொறுத்தவரை அது அவரது முக்கியமான நேர்காணலாக இருந்தது. இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் கருணாகரன் அந்த நேர்காணலை சரியான நேரத்தில் செய்திருந்தார்.  கருணாகரன் மற்றும் திருமாவளாவன்  என்ற இரு  ஆலுமையை எனக்கு அடையாளம் காட்டியது அந்த  நேர்காணல்.

நேர்காணல் தொடர்பாகவும்  அவரின் கவிதைகள் தொடர்பாகவும்  எனக்கு எழுந்த வினாக்களை முகநூலின் உள்பெட்டியில்  முதல் நாள் கேள்வியாக திருமாவிடம்  கேட்டு வைப்பேன். மறுநாள் அதற்கான பதில் வரும். 

இரு வெவ்வேறு நாடுகளில் காலநேர மாற்றத்தில் பல உரையாடல்கள் இப்படியாகத்தான் சாத்தியமாகின. சில வேளைகளில் அறிதாக  இருவரும் ஒரே நேரத்தில் இணையத்தில் பேசிக்கொள்ள வாய்ப்பு அமையும்.  அந்த நேரங்களும் நாட்களும் மிகவும் சுவாரஸ்யமானவை எனலாம்.  கவிதைகள் குறித்த உரையாடல்களே எனக்கும் அவருக்கும் அதிகம் நடக்கும்.  முரண்படுவதும் உடன்படுவதுமாக நிறைய விஷயங்கள்  கவிதைகளில் நடந்தது அந்தக் காலங்களில்தான் .  உரிமையோடு  இலக்கிய சண்டை போட்டுக்கொள்ளும் அளவுக்கு குரு-சிஷ்யன்  போல கருத்து மோதல்கள் நடந்தன.
அந்த உரையாடல்  எனக்கு  இலங்கை  அல்லது யாழ்ப்பான இலக்கியம் குறித்த புரிதலையும் அவருக்கு மலேசிய தமிழ் இலக்கியம் குறித்த  விவரங்களையும் அறித்துக்கொள்ள உதவியது எனலாம்.   என்னுடைய ‘யட்சி’ கவிதை தொகுப்பில் சில கவிதைகளை திருமாதான் திருத்தி கொடுத்திருக்கிறார் என்பதை இந்த நேரத்தில் பதிவு செய்வது ஏக பொறுத்தமாக இருக்கும் என நான் நம்புகிறேன்.   
ஒரு முறை எங்களுக்குள் இருக்கும் இலக்கிய சம்பாஷனைகள் குறித்து பேசிக்கொண்டிருந்தபோது   கவிதை அல்லது இலக்கியத்தில் திருமா முக்கியமானவர் அல்ல என்று  மலேசிய பிரபலம் ஒருவர் கூறினார்.  இலக்கியத்தில் யார் முக்கியம்- முக்கியமில்லாதவர் என்பதை  தீர்மானிக்கும் பிரம்மாக்களுக்கு,  பதில் சொல்வதற்கு இன்னும் நான் அவதாரம் எடுக்கவில்லை என்பதாலும்  இனி எப்போதும் எடுக்கப் போவதும் இல்லை என்பதாலும் இவ்விவரத்தை குறித்து நான் மேலும்  அந்த பிரம்மாவிடம் விவாதிக்கவில்லை.

நெற்கொழு தாசன் செய்த ஒரு நேர்காணலில் “கவிதையை  திருமாவளவன் தேர்ந்தெடுத்ததற்கு என்ன காரணம்? என்று கேட்டிருப்பார்.    
“தொண்ணூறுகளுக்கு பிற்பாடு இனியும் நாட்டில்  இருந்தால் உயிர் என் உடலில் தங்காது என்றுணர்ந்த போது போரை மறுத்தோடி ஊரை விட்டு வந்தவன் நான். புதிய புலம் எனக்கொரு போர்க்களமாக இருந்தது, வாழ்வின் துயர், உறைபனியின்  கொடுங்குளிர், பணியின் சுமை இவை எல்லாவற்றையும் விட என்னைப்போல ஓடிவந்து சகமனிதர்களின் போக்கு  எல்லாம் சேர்ந்தபோது நான் தனித்து விடப்பட்டிருந்ததாக உணர்ந்தேன். “
இந்தக் காலக்கட்டத்தில் எழுத்தை தெரிவு செய்தேன்.  தனது எழுத்து மீது இருந்த திருப்தியின்மை அல்லது போதாமை மேலும் கவிதை மீதான தேடலை உருவாக்கியது.  அதன் தொடர் செயற்பாடானது கவிதையே தன் முதற்தெரிவாகக் கொள்ளக்காரணமாக அமைந்தது.

 நான் கவிதா  மனோபவத்தோடு வாழத்தலைப்பட்டேன் என்கிறார்.  இத்தனை தெளிவான பதிலையும் போர், புலம்பெயர்ப்பு, புதிய வாழ்வியல் என அடுக்கடுக்காக  வேதனைகளையும் சோதனைகளையும்  எழுத்தில் கொண்டு வருபவர்  அல்லது கொண்டு வந்தவரின் இலக்கிய ஆலுமையை யார் திராசில் வைத்து எடை அளக்க தகுதியானவர்? தெரியவில்லை எனக்கு.

திருமா இதுவரை 4 தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். இறுதியாக வெளிவந்த அவரது 5-வது தொகுப்பு  வெளியீடு செய்ய விடாமலே அவரை  நோய்க் கொண்டு சென்றுவிட்டது. ஆனால், காலனுக்கு கொஞ்சம் இரக்கம் உண்டுதான் போல. அவரது தொகுப்பை காண்பதற்கு அவருக்கு அவகாசத்தை வழங்கியிருந்தான்.

கவிஞர் திருமாவளவனுக்கு உடல் வருத்தம் இருப்பது, பலருக்கு தெரியாத ஒன்று. கருப்பு பூனையாக அவரின் உடலில் அவரின் கவிதைகளிலும் இடம்பிடித்த அந்த நோய்யானது சில வேளைகளில்  வருத்தத்தின் குறியீடாகவும் சில வேளைகளில் கொண்டாட்ட நிலையில் வந்துபோகும் பூனையாகவும் கையாண்டிருப்பார். 

‘மெல்லக் கழிந்தது
நிலவற்ற இரவுப் பேய் மழை பொழியும்
ஒரு புதிய காலையில் விழித்தேன்
உறைப்பனித் தடம் அழித்து
மேச்செடுக்கிறது நிலம்
இலையுதிர் காலத்திருந்து
மனிக்கீழ் உறைந்து
அழுகிய இலைகளின் நாற்றத்தைப் பூசி
கொண்டாடித் திரிகிறது காற்று
கண்களை இறுக மூடி அகந்திறந்தேன்
மனசின் அடிஆழத்தூள் உறங்கிக்கிடக்கிறது
என் கருப்புப் பூனை..’
-திருமாவளவன்

கவிதையில்  பங்குபெற்ற அந்த  கருப்புப்பூனையைப் பற்றி  விவாதிக்கும்போதுதான் அவருக்கு  இருக்கும் வருத்தத்தைப் பற்றி எனக்கு சொல்ல வேண்டியதாயிற்று.  ஆனால், எந்த நிலையிலும் அவர் அனுதாபத்தை தேடுபவராகவும் அவர் மீது யாரும் இரக்கம் காட்டுபவராகவும்  திருமாவளவன் விரும்பியதே இல்லை. 

இயற்கையிலேயே அவருக்கு இருக்கும்  திமிர் அவர் மரணிக்கும் வரை கூடவே இருந்தது என்றுதான் சொல்ல தோணுது . ஆம்,  2015-ஆம் ஆண்டு  ஆகஸ்ட்  மாதத்திலிருந்து அவரின் உரையாடல்கள், முகநூல் வருகை என அனைத்தும் முடங்கி போனது.  அதை  நான் செப்டம்பர் மாதம் வாக்கில் அனுமானிக்க தொடங்கி, அவரின் வீட்டுற்கு  தொலைபேசியின் வழி அழைத்தேன். அவரின் மகள் என்று நினைக்கிறேன். அலைபேசியை எடுத்து   விசாரித்தார்.  திருமாவிடம் அலைபேசியை கொண்டு போயும் கொடுத்தார்.  அன்றுதான் அவருடைய நோயின் தீவிரம் விளங்கியது எனக்கு.

2015-ஆம் ஆண்டு திருமாவின்  பிறந்தநாளின் போது  அவர் ஒரு விவரத்தை சொன்னார். அதாவது அவரின் கவிதை தொகுப்பு விரைவில் வெளிவரும் என்றும் அதை செப்டம்பரில் யாழ்ப்பாணத்தில் வெளியீடு செய்த பிறகு மலேசியா சிங்கப்பூர் என பயணம் செய்து அதை வெளியீடு செய்ய விரும்புவதாக சொன்னார்.  அந்த பயணச் செலவுதான் அவரின் பிறந்தநாள் பரிசாக பிள்ளைகள் வழங்கவுள்ளார்கள்  என்று சொன்னார்.  தனது சொந்த மண்ணின் மீதான காதல் அந்த கலைஞனின் மூச்சில் இறுதிவரை கலந்து இருந்தது.

யாழ்பாணத்திலிருந்து புலம்பெயர்ந்த அவர் திரும்பவும் இலங்கைக்கு  ஓரு முறையும் செல்லாதது  இறுதி நாள் வரை  அவர் இறுதயத்தில்  ஓர் ஆராத காயம்போல  தங்கிவிட்டது.  தன் தொந்த மண், வாழ்ந்த வாழ்கை, வளர்ந்த வீடு, விளையாடியா வீதி என்று  திருமா எனும்  கவிதையாளன்  அனைத்தையும் பதிவு செய்து வைத்திருக்கிறார்.
2015 அக்டோபர் 5-ஆம் தேதியோடு அவர் இந்த  வலி நிறைந்த உலகத்திடமிருந்தும் தன் நிறைவேறாத ஆசைகளுடன் திருமா விடைபெற்றுக்கொண்டார்.  யாரும் எதிர்பார்க்காத ஒன்றுதான்.  
திருமாவளவன்  கல்லரை தோட்டம் என்ற கட்டுரையில்  இப்படி எழுதியிருக்கிறார்…

நான் எனக்காக என்ன செய்து வைக்க வேண்டும்? எரித்துவிடுங்கள். என் நினைவாக ஏதாவது ஒரு பூக்காவில் நிழல்தரு தருவொன்றை நாட்டுங்கள். வேண்டுமாயின் அடியில் இரு கல்லிருக்கையை போட்டு வையுங்கள். என் நினைவு வரும்போது ஒரு ஐந்து நிமிடம் இருந்துவிட்டுப் போங்கள். நான் பறவைகளோடு பேசிக்கொண்டிருப்பேன். “
உறங்கிக்கொண்டிருக்கும் அந்த தோட்டத்தில் ஒரு நாள் இளைபாரனும். அதுதான் அவருக்கு நான் செய்யும் அஞ்சலியாக இருக்கும் என தோனுது.

குறிப்பு: கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி  திருமாவுடைய  61 வயது பிறந்தநாள்.  அவருக்கான ஒரு அஞ்சலி கட்டுரையை அவர் போன நாளிலிருந்து எழுதுவதற்காக முயன்று தோற்று போனேன்.  அவருடைய பிறந்தநாளில்தான் அதை எழுதி முடித்திருக்கிறேன். இது அவரின் பிறந்தநாள் பரிசு என அவரின் ஆத்மாவுக்கு தெரியும்.
-யோகி

(நன்றி ஆக்காட்டி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக