செவ்வாய், 14 ஜூன், 2016

தீராத காமம்

காமம் 1
காளி கோயிலில் பலியிட்டஆட்டின் கண்களிலிருந்து
பிரியும் உயிரைப்போல
துளிர தொடங்குகிறது
காமம்...

காமம் 2
சிதையில்
வெந்து மீந்த
அஸ்தியைப்போல
சாம்பலாய்
ஆறிக்கொண்டிருக்கிறது
காமம்...

காமம் 3
தட்டாணின்
உடல்நுனியில்
கட்டிய நூலில்
அறுந்து விழும் -அதன்
சிறு பாகம் போல
அறுந்து விழுகிறது
ஒரு துண்டு
காமம்...

காமம் 4
பூக்கும் வியர்வை
துளிகளைப்போல
தெறித்து அடங்குகிறது
காமம்....

காமம் 5
தாழையைக்
கழிக்கும்போது
எழும்
பச்சை வாசனையைப் போல
மனம் எங்கும்
மணம் பரப்பிக்கொண்டிருக்கிறது
காமம்...

காமம் 6
ஓவியனின்
பிழையான ஓவியம்போல
தன்னை தானே
திருத்திக்கொண்டிருக்கிறது
காமம்...

காமம் 7
தலைப்பிரட்டைகளை
கண்ணாடி குடுவையில்
மிதக்கவிட்டு
பார்த்துக்கொண்டிருக்கிறாள்
காமத்தை

காமம் 8

வான்கோ-வின் முடிக்கப்படாத 
ஓவியங்களைப் போல
ஒவ்வொரு கலவியிலும்
முழுமைபெறவிடாமல் மிச்சத்தை வைத்துவிடுகிறது
காமம்

காமம் 9

அவன் பெண்ணாகவும்
அவள் ஆணாகவும்
கடக்கும் தருணத்தில்
விழித்துக்கொள்கிறது
காமம்..

காமம் 10
 மகுடிக்கு மயங்கும்
பாம்பைப்போல
ஆட்டிவைக்கிறது 
காமம்...

(நன்றி படிகம் கவிதை இதழ், ஜூன் 2016)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக