செவ்வாய், 5 ஜூலை, 2016

புன்னகையல்ல.. அது தன்னம்பிக்கை

அமிலத்  (அசிட்) தாக்குதலில் தப்பிய டான்  ஹீய் லின், தற்போது வியக்கதக்க அளவில் உலகை நம்பிகையிடன் எதிர்கொள்ள தொடங்கியிருக்கிறார். முன்பு அவருக்கு அவசியமாயிருந்த முகமூடியும் கருப்புக் கண்ணாடியும் தற்போது தேவையில்லாமல் வீதிகளில் வலம் வருகிறார்.  23 வயதாகும் டான், மற்ற இளம் பெண்களைப்போல  தோழிகளுடன் வெளியில் செல்வதும், படம் பிடிப்பதும் என மிக எதார்த்தமாகவே  தனது இயல்பு வாழ்கைக்கு திரும்பியிருக்கிறார். சூரிய வெளிச்சத்தை சுகமாய் டான் 
அனுபவிப்பதாகவும் , வாழ்கையை முழுமையாக அனுபவித்து வாழ விருப்பம் கொண்டிருப்பதையும் அவர் வெளிப்படுத்தினார்.

என்னைப் பொது இடங்களில்  விநோதமாகவும் அல்லது அருவறுப்பாகவும்  பார்ப்பவர்களைக் குறித்து இனி எனக்குக் கவலை  இல்லை எனக்கூறும் டானுக்கு  நேர்ந்தகொடுமையை மலேசியர்கள் பலர் மறந்திருக்கலாம்.  பலருக்கு அவர் குறித்து தெரியாமலும் இருக்கலாம்.

டான் –னுக்கு நடந்தது என்ன?

டான் மலேசியாவின் பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்தவர். அக்டோபர் 2009-ஆம் ஆண்டு வீட்டில், தனது சொந்தத் தந்தையின் அமிலத் தாக்குதலுக்கு ஆளானார்.  அந்தக் தாக்குதலில் டான்னின் தாயும் அமில வீச்சுக்கு இலக்காகி பரிதாபமாக  உயிரிழந்தார்.  டான் அந்தத் தாக்குதலில்  இடது கண் பார்வையை இழந்ததுடன், உடலெங்கும் கோரமான தழும்புகளுக்கு ஆளானார்.  அதன் பிறகு தனது இயல்பு வாழ்க்கைக்குள் டான் செல்லவே மிகவும் சிரமப்பட்டார்.

சில உதவிக்கரங்கள் மூலம் தென்கோரியாவில்  
அவ்வப்போது செய்து கொண்ட முகத்தை முறைப்படுத்தும் அறுவை சிகிச்சைகள் அவருக்கு தன்னம்பிக்கையை மீட்டுத் தந்தன. 
கடந்த ஆண்டு 7-வது முறையாக முகமாற்று சிகிச்சையை ஒரு தன்னார்வ இயக்கத்தின் உதவியுடன்  மேற்கொண்டார்.


ஐந்து ஆண்டுக்கு முன்பு தனக்கு நடந்த அந்த பயங்கரச்  சம்பவத்தினால் , பித்துநிலையில் இருந்தவரை மெல்ல கவுன்சிலிங் வழங்கி இயல்பு நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளார்.  17 வயதில் அமில தாக்குதலினால்  மனதளவிலும் உடலளவிலும் நிலைக் குழைந்து போன டானை  அதிலிருந்து மீட்டெடுக்கும் முயற்சியாக  அவரின் கல்வியை தொடர ஊக்கப்படுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக  இடைநிலை பள்ளிகளுக்கான  எஸ்.பி.எம் தேர்வை டான் எழுதினார்.  தொடர்ந்து அவர் மேற்கல்வி தொடர பல கல்லூரிகளிலுருந்து அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

முகமாற்று அறுவைச் சிகிச்சைக்கு முன்பு, தனக்கு நடந்த கசப்பான சம்பவங்கள் குறித்து மக்களிடம் பேசும்போது தர்மசங்கடமாகவும், தன் முகத்தை கண்ணாடியில் பார்க்கவும் அல்லது புகைப்படம் எடுக்கவும் விரும்பியதில்லை என தெரிவித்தார். ஆனால், தற்போது எந்தச் சங்கடமும் எனக்கு இல்லை. என மனதிற்குள் இருந்த அந்த சங்கடப் பேயை  விரட்டி விட்டேன் என புன்னகையுடன் கூறுகிறார்.

அகவுண்ட்  துறையில்  பட்டப்படிப்பு முடித்திருக்கும் டான் தனது பட்டமளிப்பு விழாவுக்காக காத்துக் கொண்டிருப்பதாக புன்னகைக்கிறார்.  அது வெறும் புன்னகையல்ல; அதுவே தன்னம்பிக்கை என்பது நமக்கு சொல்லித் தெரியதேவையில்லை. 

-நன்றி ஊடறு
ஜூலை 3 2016

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக