புதன், 13 ஜூலை, 2016

மலேசிய புத்தகங்கள் அறிமுகமும் பார்வையையும்

ஏன் வாசிக்க வேண்டும் என்பது, ஏன் மூச்சு விட வேண்டும் என்று கேட்பதற்கு ஒப்பான கேள்வியாகத்தான் எனக்குப் படுகிறது. கண்டதை எல்லாம் கற்பது ஒரு ரகம், தேர்ந்தெடுத்து வாசிப்பது மற்றொரு ரகம். அண்மையில் நண்பர் ஒருவர் எழுப்பிய கேள்வி இப்படி இருந்தது? நீங்கள் ஒரு நாவலை எதற்காக வாசிக்க வேண்டும்? ஒரு நாவலில் நீங்கள் தெரிந்துக்கொள்வது என்ன? நான் யோசிக்கவே இல்லை, ஒரு நாவலில் இன்னொருவரின் வாழ்க்கையைப் பக்கத்தில் இருந்து நான் பார்த்துக் கொண்ருக்கிறேன். அந்த நாவலை வாசிப்பதின் வழி எங்கோ ஓர் எல்லையில் எப்படியோ வாழும் ஒருவனின்
வாழ்க்கையை நானும் வாழ்ந்து கொண்டிருப்பேன். புத்தகத்தில் வரும் ஏதாவது ஒரு கதாப்பாத்திரமாக என்னையும் அறியாமல் மாறி போவதும் உண்டு. அந்தத் தற்காலிக வாழ்க்கையில் நான் காதலித்துகொண்டிருப்பேன், முரண்படுவேன், அழுவேன் இன்னும் என்னென்னவோ அந்தக் கதை போகும் போக்கில்.

200 ஆண்டுகளுக்கும் மேலாக மலேசிய தமிழர்களுக்கு மலேசிய மண்ணில் ஒரு பாரம்பரியம் உண்டு. நாங்கள் சஞ்சிக்கூலிகளாகப் பஞ்சம் பிழைக்க வந்தவர்கள்தான். எங்களின் மூதாதையர்கள் படிப்பாளிகள் அல்ல. காட்டிய இடத்தில் என்ன என்று தெரியாமலே கை நாட்டு போட்டு கொண்டிருந்தவர்கள்தான். எங்களுக்கான கல்வியும் எழுத்து பாரம்பரியமும் மிகத் தாமதமாகவே பெறப்பட்டது.

மலேசியாவில் முதல் தமிழ்புத்தக வெளியீடு எது என்பதற்கான உறுதியான ஆதாரம் எதுவும் பெறமுடியவில்லை. தமிழ்நாட்டு தரவுகளையே நம்பி உள்ளூர் பத்திரிக்கைகளில் படைப்புகள் பிரசுரம் ஆகிக்கொண்டிருந்தன. (இன்னும் தமிழ் நாட்டின் கட்டிங் செய்திகளை நம்பித்தான் மலேசிய தமிழ் பத்திரிக்கைகள் காலம் ஓட்டிக் கொண்டிருப்பது மறுப்பதற்கு இல்லை. )

‘அக்கரையை நம்பிக் கொண்டிருப்பதைவிட இங்கேயும் எழுத்தாளர்களை உருவாக்கினால் என்ன என்ற புதிய சிந்தனையின் வெளிப்பாடுதான் 1950-ஆம் ஆண்டு அறிஞர் சுப.நாராயணனும் (கந்தசாமி வாத்தியார்) பைரோசி நாராயணனும் (வானம்பாடி) தமிழ் நேசனில் தொடங்கிய கதை வகுப்பு. வாரந்தோறும் நடத்தப்பட்ட இந்தக் கதை வகுப்பில் நாடுதழுவிய அளவில் அதிகமானவர்கள் பங்கெடுத்துக் கொண்டனர். இவர்களில் அதிகமானவர்கள் தமிழாசிரியர்கள்.
இவ்வாறு இலக்கிய குரிசில் மா.ராமையா குறிப்பிட்டுள்ளார்.
 (http://www.tamilnetmalaysia.net/mallithistory.htm )

அதன் பிறகு வாரம் ஒரு சிறுகதை என மலேசிய படைப்பாளர்களிடமிருந்து தமிழ்ப்பத்திரிக்கையில் பிரசுரிக்கப்பட்டது. குறிப்பாகத் தமிழ்நேசன் நாளிதழ் அந்த முயற்சியை முன்னெடுத்து வெற்றியையும் கண்டது.
அதன் முன்னும் பின்னும் மலேசிய எழுத்தாளர்காளிடத்தில் இருந்து அவர்களுடைய புத்தகம் வெளியீடு கண்டுள்ளது. ஆனால், அவற்றுல் பல புத்தகங்கள் சரியான முறையில் ஆவணப் படுத்தாமலேயே முடங்கிப் போய்விட்டன. அதற்குப் பலக்காரணங்களைக் கூறலாம். முறையாகப் பதிவு செய்யாதது, ISBN இலக்கு இல்லாதது, குறைந்த எண்ணிக்கையில் புத்தகத்தைப் பதிப்பித்து மறுபதிப்புச் செய்யாமல் கைவிடப்பட்டது உள்ளிட்ட காரணங்கள் அவற்றுள் அடங்கும்.
சில மலேசிய புத்தகங்கள் மலேசிய வாழ்வியலை பதிவு செய்யாமல் தமிழ்நாட்டுச் சூழலோடு ஒத்துப்போகக்கூடியவையாக இருந்தாலும், சில புத்தகங்கள் மலேசிய தமிழர்களின் தோட்ட வாழ்கையையும் செம்மன் சாலையையும், ரப்பர் தோட்டத்தையும், அதன்பிறகு வந்த வாழ்கையையும் பேசுக்கூடியவையாக இருக்கின்றன.

மேலும், மலேசிய அரசியல், சமூகவியல், முரண்பாடுகள்  தொடர்பான விடயங்களை  கட்டுரை வடிவமாகவும் கவிதை வடிவமாகவும் இன்னும் படைப்பாளர்களின் எண்ண ஓட்டத்திற்கு ஏற்றவாறு படைக்கின்றனர். மிக தீவிர பார்வையில் ஆய்வு செய்து ஆதரங்களை திரட்டி ஆக்கப்பூர்வமாக படைக்கும் படைப்புகள் முக்கியத்துவம் பெறும் அதே வேளையில் பலரால் விமர்சிக்கவும் படுகிறது.

அந்தவகையில் மலேசிய படைப்புகளில் முக்கியத்துவம் பெற்ற அதே வேளையில் கவனிக்கப்படக்கூடிய சில புத்தகங்களையும் அதன் ஆசிரியரையும் ஒவ்வொரு வாரமும் அறிமுகம் செய்துவைக்கும் அரிய வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது.

பாரபட்சமின்றி நேர்மையான முறையில் அதுகுறித்து எழுத உத்தேசித்துள்ளேன். வாய்ப்பு வழங்கிய தினமலர் பத்திரிக்கைக்கு எனது நன்றி.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக