ஞாயிறு, 9 ஏப்ரல், 2017

கமலா தாஸின் 'என் கதை'

 கமலா தாஸின் என் கதை வாசித்து கொண்டிருக்கிறேன் என்றதும் கமலா தாஸ் ஒரு விலை மாது   தானே  என்று குறைந்தது மூன்று பேராவது சொல்லியிருப்பர்.
ஓர் ஆணுக்கு, ஆணுக்கும் பெண்ணுக்குமுள்ள உறவுகள் குறித்த புரிதல் அவ்வளவுதான்.  "அவர் விபச்சாரம் செய்யவில்லை.  தனக்கு  உண்மையாக இருந்திருக்கிறார்.  பெண்மையின் உண்மைக்கு விபச்சாரம் என்று  இந்த சமுதாயம் பெயர் வைக்குமேயானால்  அது விபச்சாரமாகவே இருந்து விட்டு போகட்டும்" என்றேன் நான் .

உங்களுடையது அல்லாத சுகங்கள் எனக்கு இல்லை. உங்களுக்குத் தெரியாத வேதனைகள் எனக்கு இல்லை..
நானும்
'நான்' என்ற பெயரால் அறியப்படுகிறேன்.
இப்படித்தான் தொடங்குகிறது கமலா தாஸின் என் கதை.

கமலா தாஸின் மரணத்தின் போது அஞ்சலி பதிவு எழுதியிருக்கும் ஜெயமோகன்,    "தாழ்வுனர்ச்சியினால் விளைந்த அணையாத காம இச்சை கமலா தாஸ் கொண்டிருந்தார் என அவரது சுயசரிதை மற்றும் குறிப்புகள் காட்டுகின்றன என்றும் அவரின்   தோற்றம் காரணமாக புறக்கணிக்கப்படும் பெண்ணின் ஏமாற்றப்பட்ட காமம் அது என்றும்  அந்த இச்சையையே அவர் விதவிதமாக வெளிப்படுத்தினார். அல்லது அது ஒருவகை வன்மம்" என பதிவிடுகிறார். அதே வேளையில் காமத்தை மென்மையாக எழுதுவதில் கமலா  ஒரு சாதனையாளர்  என்றும் கூறுகிறார்.

திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவுகள் ஆண்-பெண் இருபாலருக்கும் சந்தர்ப்ப  விதத்தில் அமைந்தாலும் அதை பேசுவதற்கு யாரும் துணிவதில்லை. குறிப்பாக பெண்கள்  அதுகுறித்து பேசும்போது எத்தகைய பார்வையை அவள் எதிர் நோக்க வேண்டியிருக்கும் என்பதை இந்த சமூகம் நன்றாகவே  காட்டியிருக்கிறது. எதார்த்தத்தை நேசிக்கும் யாருக்கும் கமலா தாஸின் என் கதை பிடித்து போகவே செய்யும்.

ஒரு பெண்ணின் அக வாழ்க்கையை அதன் சோகத் தனிமையுடனும் உண்மை அன்புக்கான அதன் தீராத வேடிக்கையுடனும் தன்னையே கடக்கும் அதன் விழைவுடனும் அதன் ஒழுங்கினத்தின் நிறங்களுடனும் அதன் கொந்தளிக்கும் கவிதையுடனும் இந்த அளவு உண்மையுணர்வுடன் முழுமையாக வெளிப்படுத்திய  ஒரு இந்திய சுயசரிதையை என்னால் நினைத்துப் பார்க்கவே முடிவதில்லை என்று மலையாள கவிஞர் சச்சிதானந்தன் இந்த நாவல் குறித்து கூறியிருக்கும் வரிகளில் நான் முழுமையாக உடன் படுகிறேன்.

இந்த சுயசரிதையை எழுதி 41 ஆண்டுகள் கடந்திருந்தாலும் ஒரு வாசகனாக அதை முதல் முதலில் வாசிக்கும்போது எந்த அலங்கார பூச்சும் இல்லாத இசையாக என்னுள்  மீட்டி செல்கிறது. நிர்மாலயா மொழிபெயர்ப்பு 'என் கதைக்கு' பெரிய பலம்.

''நீ என்னை கல்யாணம் பண்ணிக்குவியா" அவர் கேட்டார்.
நீங்க என்னைக் காதலிக்கிறீர்களா நான் கேட்டேன். அதற்குப் பதிலளிக்காமல் முத்தங்களால் என்னை மொய்த்தார், பதிலளிக்க இயலாத எத்தகைய கேள்வியையும் இதைப் போன்ற எல்லை மீறிய பாச வெளிப்பாட்டின் மூலம் தீர்வு கண்டுவிட முடியுமென்று அன்றுமுதல் இன்றுவரை கருதி வந்தார். நான் எப்போதும் காமத்தை நேசமென்று தவறுதலாக எண்ணி விடுவதுண்டு. எனது தவறை புரிந்து கொள்வதற்குள் காலம் கடந்து விடுகிறது.
(பக்கம் 83)

காமத்தை நேசமென்று கருதி ஏமாறும்  மனோபாவம் இன்றும் பெண்கள் மத்தியில் ஒரு கண்ணாமூச்சி விளையாட்டைப் போல ஒளிந்து விளையாடி கொண்டிப்பது  தவிர்க்க முடியாத ஒன்றாக இருப்பது  ஏன்?  என்ற  கேள்வி என்னுள் எழுகிறது. விடை இல்லாத கேள்விகள் இப்படித்தான் ஆண்டுகள் கடந்தும் கேள்வியாகவே நிற்கும் போல.

1970- களில் குமுதத்தில்  மொழிபெயர்த்து வந்த இந்த  கட்டுரை தொடர்  கமலா தாஸ் மீது எத்தகைய மதிப்பீட்டை வைத்திருக்கும் என்பது சொல்வதற்கில்லை. கமலா தாஸின் வாழ்க்கையில் கார்லோ என்பவரின் தொடர்பு குறித்து குறிப்பிடும் காலம், விவாதிக்க கூடிய இடமாக உள்ளது. அவை முகாரி ராகத்திற்கு ஒப்பானது.

வேறோர் ஆணின் விரல் அடையாளங்கள் பதிந்த கைகளுடன் வீட்டுக்கு திரும்பி வரும்போது தாஸேட்டன் என்னை மூர்க்கனாக கட்டியணைப்பார். எனது வாழ்க்கை இரண்டாக பிளந்தது. ஒன்றை மட்டும் ஏற்றுக்கொண்டு அடுத்ததை கைவிட எனக்கு தைரியம் வரவில்லை என்கிறார் கமலா.
தாஸேட்டன் காலடிகளை தாங்குவதற்கான நிலமாக இருந்தார். கார்லோ தலைக்கு நீழல் தரும் மரமாக இருந்தார். என்ற வரி கமலா தாஸின் நிலையை வெகுவாக விளக்கி கூறுவதாக இருக்கிறது,
காதலுக்கும் காமத்திற்கும் உள்ள நூலிழை  வித்தியாசத்தை இதை விட எளிமையாக கூற முடியுமா?

கமலா தாஸை குறித்து வாசிப்பவர்களுக்கு அவரைப்போல வெளிப்படையாக தனது அந்தரங்கத்தை பேசமுடியும் என்று உறுதியாக கூறிவிட முடியாது. சமுதாயம் என்கிற திருட்டு கிழவி உருவாக்கிய கசாப்புக்கூடமே ஒழுக்கநெறி என்கிறார் கமலா தாஸ்.
இந்த சுயசரிதை பல இடங்களில் ஒரு டைரி குறிப்புகள் போல பேசிவிட்டு வேறொரு இடத்திற்கு சென்று விடுகிறது. பின் தொடங்கிய இடத்திற்கே வருகிறது. இன்னும் கொஞ்சம் அழுத்தம் கொடுத்து எழுதியிருக்கலாமோ என தோன்றுவதையும் என்னால் தவிர்க்க முடியவில்லை.

மரண படுக்கையிலிருந்து பேச தொடங்கும் கமலா தாஸ் நேசிக்கத் தெரிந்த ஒரு ஆண்மகனை நான் இன்றுவரை கண்டதில்லை என்கிறார். ஆம். கமலா தாஸை விபசாரி எனும் கூறுபவர்களை நான் அப்படிதான் பார்க்கிறேன்.  

கமலா தாஸ் எனக்கு அறிமுகமானது அவர் மரணத்தின் போதுதான். 2009 ஆம் ஆண்டு அவர் மரணித்தபோது எழுந்த அவர் குறித்த சர்சசைகள் நெற்றியை சுருக்கும் விதத்தில் இருந்தது.  இந்து சமயத்திலிருந்து இஸ்லாமிய  மதத்திற்கு மாறியவர் இறுதி நாட்களில் மீண்டும் இந்து மதத்திற்கு மாற நினைத்ததாகவும் பின் ரகசியமாக மிரட்டலுக்கு ஆளானதனால் மீண்டும் மதம் மாறும் உத்தேசத்தைக் கைவிட்டார். ஏன், மதம் பற்றிய பேச்சையே கைவிட்டார் என்று ஜெயமோகன் குறிப்பிட்டிருக்கிறார்.

1999-ஆம் ஆண்டு இஸ்லாமியத்திற்கு மாறினார் கமலாதாஸ்.  அப்போது அவருக்கு 65 வயது. அன்றிலிருந்து  மாதவி குட்டி மற்றும் கமலா தாஸ்  ஆகிய பெயர்களுக்கு விடை கொடுத்து கமலா சுரையா என குறிப்பிட தொடங்கினார்.  ஒரு நேர்காணலில்
"இஸ்லாம் மதத்துக்கு நீங்கள் மாறிய பிறகு, நிறைய எதிர்ப்புகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறீர்களே?" என கேட்கப்பட்டது.

"நான் என் வாழ்நாள் முழுவதுமே எதிர்ப்புகளை எதிர்கொண்டுதான் வருகிறேன்.  உண்மையைத் தீவிரமாகப் பேசுகிற யாரும் எதிர்ப்புகளைச் சந்தித்தாக வேண்டும். எனக்கு இஸ்லாம் பிடித்திருக்கிறது. அது சொல்கிற வாழ்க்கை எனக்குத் திருப்தியாக இருக்கிறது"
என்று பதில் கொடுத்திருந்தார்.

'சிதம்பர நினைவுகள்' என்ற புத்தகம். பாலசந்திரன் சுள்ளிக்காடு 'சிதம்பர ஸ்மரண' என்று மலையாளத்தில் எழுதியதை கே.வி சைலஜா தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.  அந்த புத்தகத்தில் பாலன் சுராயாவை  திருவனந்தபுறத்தில்  சந்தித்ததைப்பற்றி கூறியிருக்கிறார்.

பார்ப்பதற்கு ராஜகுமாரியின் கம்பீரம். நெருப்பின் உட்கரு நிறமுள்ள புடவை உடுத்தியிருந்தார். அவிழ்ந்து தொங்கவிடப்பட்டிருந்த கார்மேகக் கூந்தல். நெற்றியில் பெரியதாக சிவப்பு செந்தூரம். கழுத்திலும், காதிலும், கையிலும், காலிலும் வெள்ளி ஆபரணங்கள். ரத்ணாபரணங்கள். இடுப்பை அலங்கரிக்கும் பெரிய வெள்ளி சாவிக்கொத்து. முகத்தில் ராஜ குடும்பத்தின் தேஜஸ். அவருடைய கண்களில் அகங்காரம் குடிகொண்டிருந்தது. ஏதோ பகவதி அருள் வந்தவளின் கண்களைப் போல ஒரு பளிங்கு மின்னல் அதில் நிரந்தரமாய் இருந்தது. என்று கமலாதாஸின் தோற்றத்தை வர்ணித்தவர், பின் அவரின் உபசரனைக்குப் பிறகு வள்ளுவநாட்டில் ஏதோ சொந்தக்காரரின் வீட்டிற்குப் போனது போல இருந்தது என்கிறார். பிறகு சொந்தக்காரர்கள்கூட அந்த அளவுக்கு அன்புடன் நடந்துகொண்டிருக்கமாட்டார்கள் என்கிறார்.

கமலா தாஸை சந்தித்துவிட்டு திரும்பி நடக்கும்போது, கடவுளே இவ்வளவு  சாந்தமும், தயாள குணமும், பிரியமுமான, இந்த பாவப்பட்ட பெண்தானா நெருப்பு வார்த்தைகளைக் கொண்டு உலகை உலுக்கும் கலகக்காரியாக இருக்கிறாள் என்றும் பாலன் குறிப்பிட்டுள்ளார்.

கமலா  சுரையாவாக தனது இறுதி காலத்தை முடித்திருக்கும் கமலா தாஸ் இன்னும் சர்சசைகள் முரண்பாடுகள் எழுப்ப கூடியவராகவே இருக்கிறார்.
முடிக்க படாதா சுயசரிதை இந்த புத்தகம் மட்டுமல்ல கமலா தாஸும்தான்  என எனக்கு எனோ இன்னும் தோன்றியபடியே இருக்கிறது.

1 கருத்து: