வியாழன், 13 ஏப்ரல், 2017

வரலாற்றை தேடி 2

குடிசெட்லு எனும் இடத்தில் இருக்கும் கோயிலுக்கு செல்லும் வழியில் திவ்ய தரிசனம் போல எங்களுக்கு பூம் பூம் மாடுகள் தரிசனம் கிடைத்தது. அலங்கரித்த 4 மாடுகளுடன் சில இளைஞர்கள் திருப்பதியிலிருந்து  கால் நடையாக  வேறொரு கோயிலுக்கு போய்க்கொண்டிருந்தனர்.  பூம் பூம் மாடுகளை கண்டதும் தோழர் பெரியசாமி வண்டியை நிறுத்தினார். பெரிய பெரிய மணி சத்தத்துடன் அசைந்து அசைந்து வந்த மாடுகள்  பார்க்க பரவசம் ஏற்படுத்தக் கூடியதாக இருந்தது எனக்கு.

தமிழ் நாட்டிலிருந்து எல்லா கலை கலாசாரத்தையும் பின்பற்றும் நாங்கள் (மலேசியர்கள் ) இந்த பூம் பூம் மாடு கலையை மட்டும்  தவறவிட்டது எப்படி என்று தெரியவில்லை. பூம் பூம் காரர்கள் எங்களை கடந்து செல்லும்போது, அவர்களுக்காகத்தான் நிற்கிறோம் என அனுமானித்து  அக்காவை ஆசிர்வாதம் செய் என மாட்டிடம்  சொல்ல   தன் தவாக்கட்டையால் என் உச்சி தலையை தொட்டு ஆசிர்வாதம் செய்தது ஒரு  பூம் பூம் மாடு. ( அதன்  பெயரும் அதன் நடத்துனர் பெயரும் நினைவில் இல்லை).
ஆசிர்வாதத்திற்கு காணிக்கை தர வேண்டியிருந்தது. தோழர் பெரியசாமிதான் கொடுத்தார். அடுத்த வந்தவரும் காணிக்கை கேட்டார்.  சில விவரங்களை  அறிய வேண்டும் என்றேன் அவரிடம்.  அதற்கு ஒப்புதல் தெரிவித்தவரிடம் பூம் பூம் மாடு மற்றும் அவர்களின் பாரம்பரியம்  குறித்த விவரங்களை கேட்க தொடங்கினேன்.

பார்வைக்கு குருவிக்காரர்கள்  போன்றும் நரிக்குறவர் கள் போன்றும் இருக்கும் உங்களுக்கு  அடையாளமே அந்த பூம் பூம் மாடுதான். அந்த பாரம்பரியம் இன்னும் இருக்கிறதா? என்று கேட்டேன்.

இன்று எந்த பாரம்பரியமும் பூம் பூம் மாட்டுக்காரர்களுக்கு இல்லை என்றாலும் சிலர் இன்னும் எங்களின் பாரம்பரியத்தை இழுத்து பிடித்து காப்பாற்றி வரத்தான் செய்கிறோம்.  பூம் பூம் மாட்டுக்காரர்களின் பூர்விகம் மதுரையில் உள்ள சத்தி மங்கலத்தில் தொடங்குகிறது. பழங்குடிகள் பாரம்பரியத்தில்  ஆதியன் இனத்தைச் சேர்ந்தவர்களே பூம்பூம் மாட்டுக்காரர்களாக இருக்கிறார்கள். கன்றிலிருந்தே மாட்டை, வித்தை கட்டிட பழக்கப்படுத்தி அதன் மூலம் மக்களை ஈர்கிறோம். மேலும் வித்தை காட்ட பயன்படுத்தும் மாட்டை விவசாயத்திற்கு பயன்படுத்த மாட்டோம்.
எங்களை நாங்கள் எந்த அளவுக்கு அலங்காரம் செய்துகொள்கிறோமோ அதை விட பல மடங்கு மாட்டை அலங்காரம் செய்வோம்.  'நல்ல காலம் பொறக்குது' என்று மனதார ஆசிர்வாதம் வழங்கும் எங்களுக்குதான் என்றும் விடிந்தபாடில்லை என்று அந்த இளைஞர் கூறினார்.

கட்டளைக்கு அடி பணிய வைக்கும்  யுத்திதான் என்றாலும் பூம் பூம் மாட்டிடம் இறை பத்தியோடே அவர்கள் நடந்து கொள்கிறார்கள். திமில் பெருத்த அந்த மாடுகள் தலையாட்டி பொம்மை போல செயல்படுவது  ஒரு மாதிரியான மனநிலையை ஏற்படுத்தவும் செய்தது எனக்கு. இரண்டு முறை பூம் பூம் மாட்டிடம் 
ஆசிர்வதிக்கபட்ட யோகி,  தேவதையான தருணத்தை தோழர் பெரியசாமி வாஞ்சையுடன் பார்த்து கொண்டிருந்தார். அன்றைய தினத்தின் சிறந்த நேரம் அது.

தொடர்ந்து நாங்கள் குடிசெட்லுவிலுள்ள ஸ்ரீ தேவி - பூதேவி ஸ்ரீ பிரசன்னா திம்மராய சுவாமி கோயிலுக்கு சென்றோம்.  அந்த கோயிலுள்ள சில நடு கற்கள் மிக முக்கியமான  சிறப்பு வாய்ந்தது என தோழர் பெரியசாமி முதல் நாளே கூறியிருந்தார்.

அந்த கோயிலுக்கு வெளியில் பாதுகாப்பாக வைக்க பட்டிருக்கும் அந்த நடுகல் தொகுப்பு ஒரு சீரியல்  போல கதை சொல்கிறது. அதன் விவரம் அறிய தோழர் மனோன்மணியை தொடர்பு கொண்டு பேசிய பொது ஒரு வரலாற்று கதையை சில நிமிடங்களில் சொல்லி முடித்தார். சில புகைப்படங்களை எடுத்து அவருக்கு  அனுப்பி உடனுக்குடன் அதன் விவரங்களை கேட்டு  அறிந்து கொண்டேன்  (நன்றி தோழர் மனோ )

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிடைத்திருக்கும் பல நடுகல்களிலும் கல் பதுக்கைகளிலும் மிருகங்களிடம் போராடி வீர மரணம் அடைந்த பதிவும், கையில் ஆயுதங்களுடன் உடன் குடுவையுடன் பெண்கள் இருக்கும்  பதிவும் சாதாரணமாக காண கிடைக்கின்றன.  பல இடங்களில் காண கிடைக்கும் புலி குத்துபட் டான் கல் இங்கேயும் இருக்கிறது.  ஆனால் புலி சுட்டுப் பட் டான்  கல் மிக அறிதான ஒன்று. மேலும் பெண் 'உடன் கட்டை' ஏறும் சித்திர நடுகல்லும்  இங்கு இருக்கிறது.

பதிவுகளையும் நடு கல்லிற்கு பின்னால் இருக்கும் ஒரு வாழ்க்கையையும் தாண்டி  தற்போது கடவுள்களாக வணங்க தொடங்கியிருக்கும் மக்களுக்கு அது குறித்த தெளிவையும் வரலாற்றையும் யார் சொல்ல போகிறார்கள்? மஞ்ஞலும் குங்குமமும் எத்தனை தூரம் நடு கற்களை காப்பாற்றும்?  இப்படியான கேள்விகள்  ஒரு விசை பந்து போல சுவரில் அடித்து பின் எறிந்தவரிடமே வருகிறது.

எனது மூன்று நாள் ஓசூர் பயணத்தில் ராஜா ஜி நினைவு இல்லத்தையும் கெலவரப்பள்ளி அணையையும்  பார்த்தேன். கெலவரப்பள்ளி அணையிலிருந்து சூரிய அஸ்தமனம் பார்ப்பது தனி அனுபவம். விண்ணிலும் தரையிலும்  இரண்டு சூரியனை ஒரே நேரத்தில் காணும் காட்சி அலாதியானது; அற்புதமானது. தோழர் பெரியசாமியின் மகன் தனக்கு ஏற்படும் சின்ன சின்ன சந்தேக கேள்விகளுடன் மலேசியா இந்தியாவுடனான  வேறுபாட்டை  கேட்டு கொண்டே எங்களுடன் பயணித்தது இந்த பயணத்தின் நிறைவு அழகு எனக்கு.

மறுநாள் என் காலை பாண்டிசேரியில் விடிவதற்கு காத்து கொண்டிருந்தது.   

1 கருத்து: