வியாழன், 28 ஏப்ரல், 2016

முதல் கவிதை

சாத்தானின் ஓவியம்

சைத்தான் ஒன்று
என்னிடம் அனுமதி வாங்கிக் கொண்டே
என் உடலில் புகுந்தது
எதற்கோ முடிவைக் கட்டிவிட எண்ணி
தேடியதில்
விரலில் சிக்கியது பென்சில்
எதையோ கிறுக்கித் தள்ளியதில்
முழுமை அடைந்து வெளிபட்டது
ஒரு மகாத்மாவின் ஓவியம்
இமைகள் உடைந்துவிடும் அளவுக்கு
உயர்ந்தும் தளர்ந்தும்
தர்கம் செய்கிறது
சாத்தானின் சேட்டைகள்
வரைந்ததை அழித்த போது
மெல்ல மெல்ல
என் உடலைவிட்டு வெளியே வந்து
வானத்தில் பறந்தது சாத்தான்
என்னிடம் தோற்றபடி...
-யோகி (2006)
ஜூன் 2006-ஆம் ஆண்டு காதல் என்ற மலேசிய சிற்றிதழில் வெளிவந்தது இந்தக் கவிதை. இந்தக் கவிதையின் வழிதான் எனது இலக்கிய பயணம் அதாவது நவீன இலக்கிய வெளிக்குள் எனது பயணத்தை தொடங்கினேன்.

இந்தத் தெளிவு எனக்குள் வந்ததற்கு கவிஞர் மனுஷப்புத்திரனும் ஒரு காரணம். அதை சொல்வதற்கு நான் கடமைபட்டிருக்கிறேன். மலேசிய கவிஞர் அகிலன் லெட்சுமணனின் மூட்பு புத்தக வெளியீட்டிற்கு வந்திருந்த போதுதான் அவருடனான இலக்கியஉரையாடலில் பங்கெடுத்துக்கொள்ளும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது. எனக்கு நவீன இலக்கியம் தெரிந்திருக்கவில்லை. மனுஷின் கவிதைகள் வாசித்திருந்தும் அதை விளங்கிக்கொள்ளும் ஆற்றல் அப்போது இல்லை. சந்திப்பிற்குப் பிறகு, எனக்குள் போர்த்தியிருந்த திரை விளகியிருப்பதை உணர்ந்தேன். அன்றைய இரவே மீண்டும் கவிதைகளை வாசிக்கத் தொடங்கினேன். 

விளங்கவில்லை என்ற பேச்சுக்கே இடமில்லை. என் புரிதல் சரிதானா? மீண்டும் மனுஷின் உரையை கேட்பதற்கான வாய்ப்பு அமைந்தது. மூன்றாவது முறையும் அமைந்தது. கவிதைக்கு எப்படி மரியாதை கொடுக்க வேண்டும் என்பதை தேரிந்துக்கொண்டேன். மனதில் ஏற்பட்ட பாதிப்பை எழுத தோன்றியது. எழுத்து வரிகளாக வந்தது. வரிகள் கவிதையானது. கவிதை அச்சில் ஏறியது. இன்று வரலாறாக இருக்கிறது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக