செவ்வாய், 2 ஜூன், 2015

மௌனம் உறைந்த தேசம் 19

சிதைந்த கட்டடச் சுவரில் சாம்பற் பறவை

தொடர் 19

ஜன்னல் ஓரம் காற்று என் முகத்தில் அறைந்து கொண்டே வந்தது. ஜன்னலுக்கு வெளியே நெல்வயல், தென்னை மரங்கள், மலைகள் இவற்றுக்கு மத்தியில் போரில் பாதிக்கப்பட்ட வீடுகள், கடைகள் என என்னைத் தாண்டிப் போய்க்கொண்டே இருந்தது.
நாங்கள் இறங்க வேண்டிய இடத்தில் ஓட்டுநர் இறக்கி விட்டார். அது புலோலி பருத்திதுறை. ரவியின் (றஞ்சியின் துணைவர்) மாமா எங்களுக்காகக் காத்துக்கொன்டிருந்தார்.
அவர் அங்கிருக்கும் தனது வண்டியில் அவர்களின் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அழகான வீடு. வீட்டைச்சுற்றிலும் தோட்டம் கிணறு என யாழ்ப்பாண மண்வாசனை மாறாத வீடு. போர்ச் சூழலுக்குப் பிறகு எதார்த்த வாழ்கைக்குத் திரும்பியிருந்தாலும் தினமும் முனுமுனுப்பதற்குப் போர்க் குறித்த ஏதாவது விஷயங்கள் அவர்களிடத்தில் இருக்கவே செய்கிறது. ரவியின் சகோதரிகளில் ஒருவர் போர்க் காலக்கட்டத்தில் பாதுகாப்பு வளையம் என்று சொல்லக்கூடிய, சிங்கள அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்திருந்த save zone- னில் இருந்தவர் என்பது கூடுதல் தகவலாகும்.
நாங்கள் அவரிடம் அந்தச் சூழல் குறித்து அதிகம் கேட்டுக்கொள்ளவில்லை. வெந்தப் புண்ணில் எத்தனை முறைதான் ஈட்டியைப் பாச்சுவது. அந்த வலியை எத்தனைமுறைதான் கீறிவிட்டு கேட்டு மகிழ்வது. எனக்கு அதில் கொஞ்சமும் உடன்பாடு இல்லை. தொலைகாட்சிகளும், வானொலிகளும், முகநூல் பதிவுகளும், செய்தி ஊடகங்களும், சேனல் 4-வும் இதற்கு மேல் பார்ப்பதற்கு நெஞ்சில் திராணி இல்லை என்ற அளவுக்குப் போர்ச் சூழலையும், அப்பாவி மக்களையும் காட்டிவிட்டனர். இன்னும் எதைப் புதிதாகக் கேட்டுத் துன்பப்பட. அல்லது துன்பம் படுவதுபோல் பாசாங்கு செய்ய. போதும், அந்த மனங்கள் சாந்திப் பெறட்டும். அந்த ரணங்கள் அப்படியே உறங்கட்டும். எழுப்ப வேண்டாம்.
ரவியின் சகோதரியும் எதையும் பெரிதாக விவரிக்கவில்லை. அவர் சிரித்த முகத்தோடு எங்கள் வருகையை ரசித்துகொண்டிருந்தார். குறிப்பாக றஞ்சியையே பார்த்துக்கொண்டிருந்தார். அந்தப் பரிபாஷைக்குப் பல அர்த்தங்கள் இருக்கலாம். நான் அர்த்தப் படுத்திக்கொண்டது ஒன்றுதான். ரவியை றஞ்சியிடத்தில் அவர் தேடிக்கொண்டிருக்கலாம். ஒரே சகோதரனைக்கொண்டிருக்கும் நானும் அப்படிதானே.
ரவியின் மாமா புலோலி பருத்திதுறையில் இருக்கும் ஒரு கல்விச்சாலையில் ஆசிரியராக இருக்கிறார். போர்ச் சூழலின் போது அரசுப் பள்ளிகள் எதிர்கொண்ட சவால்கள், ராணுவமும் புலிகளும் பள்ளிக்கூடங்களை எப்படிப் பயன்படுத்திக்கொண்டன, புலிகள் காலக்கட்டத்தில் இருந்த கல்வி முறை, அதன் பிறகு வந்த சிங்கள அரசின் கல்விமுறை மாற்றம் என அவர் விவரிக்கத் தொடங்கிய வேளையில் நாங்கள் கொழும்புப் போவதற்கான வாகனம் வந்து சேர்ந்தது. புலோலி பருத்திதுறையை ஒட்டியிருக்கும்  தொண்டமான் ஆற்றிலிருந்து பயணித்தால் 45 நிமிடங்களில் ராமேஸ்வரத்தில் இருக்கலாம் என அவர் கூறிய வேளையில், யாழ்பாணத்தவர்கள் தங்கள் உடைமைகளையும், உறவுகளையும் இழந்து உயிரைக் காப்பாற்றிக்கொள்ள இந்த நதிவழியே கடந்து ராமேஸ்வரம் போனதையும், அப்படிப் போகும்போது, சிங்கள அரசின் கழுகுப் பார்வையில் சிக்கி உயிரைவிட்டவர்களை நினைத்துப் பார்க்காமல் இருக்கமுடியவில்லை.

நாங்கள் கொழும்பு செல்வதற்கு நேரத்தை விரயமாக்காமல் கிளம்பவேண்டியிருந்தது. ஆதலால் புலோலி பருத்திதுறையில் அதிக நேரம் இருக்கவில்லை. மதிய உணவுச் சாப்பிட்டச் சிலநிமிடங்களில் கிளம்பினோம். றஞ்சி, முன்கூட்டியே நாங்கள் போர் நடந்த முக்கிய இடங்களைக் காண வேண்டும் என்பதையும், விஷயம் தெரிந்த ஆள் ஓட்டுநராக இருந்தால் நல்லது என்ற விவரத்தையும் முன்கூட்டியே சொல்லியபடியால் ரவியின் மாமா அப்படியொரு ஆளையே எங்களுக்காக ஏற்பாடு செய்திருந்தார்.
புலிகள் பயன்படுத்திய போர் வாகனம்
அவர் பெயர்க் கோபி. முழு நேரமாக இந்தப் பயண வழிகாட்டியாகவும் வாகனச் சேவையும் வழங்குகிறார். புலோலி பருத்திதுறையிலிருந்து, பரந்தன், ஆனையிறவு, முரசு மோட்டை, விசுவமடு, புதுகுடியிருப்பு, முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு, போன்ற இடங்களை எங்களைக் காணச்செய்து, பின் கொழும்பில் பத்திரமாகச் சேர்க்கவேண்டிய மிகப்பெரிய பொறுப்பை அவர் ஏற்றியிருந்தார்.

நான் இங்குக் கோபியைப் பற்றிக் கொஞ்சம் விவரித்துதான் ஆகவேண்டும். காரணம் கோபியில்லாமல் வேறுயாரும் அந்தப் போர்ப் பூமியை அத்தனை தெளிவாகக் காட்டியிருக்க முடியுமா எனத் தெரியவில்லை. கோபிக்குச் சிங்களம் தெரிந்திருந்தது. சந்தேகத்துடன் கேள்விகேட்கும் யாருக்கும் கொடுப்பதற்காகச் சரியான பதிலைக் கோபிக் கொண்டிருந்தார். அவரின் பேச்சுத்திறமையின் வழி எல்லா இடங்களிலும் நட்பையும் வளர்த்து வைத்திருந்தார். காட்டு மிருகங்கள் நடமாட்டம் குறித்த விவரங்களையும் அவர் அறிந்துவைத்திருந்தார். அனைத்தையும் 100 சதவிகிதம் அறிந்திருந்தாரா என்பது தெரியாது. ஆனால், அடிப்படை அவருக்குத் தெரிந்திருந்தது. நகைச்சுவை உணர்வோடு பேசக்கூடியவர். அந்த நகைச்சுவையில் நாட்டின் அரசியல் இருந்தது, கோபம் இருந்தது, வலி இருந்தது. தனக்கான பாணியில் சிரிக்க வைத்து நகர்ந்துக்கொண்டே போகிறார் கோபி.

ரவியின் சகோதரிகளுடன் நாங்கள்
எனது முதல் பார்வையில் ஒரு கோமாளிபோல் ரம்பம் போடும் பேர்வழியாகத் தெரிந்தவர், நேரம் ஆக ஆகத்தான் அவரின் ஆற்றலை அறிய முடிந்தது. போகும் பாதைப் பொல்லாத பாதை என எங்களுக்குத் தெரியும். அதை அவ்வளவு சுலபமாக்கிய பெருமை நிச்சயமாகக் கோபியைச் சேரும். எங்களின் இந்த நீண்டப் பயணத்தில் எல்லா இடத்திலும் இறங்கிப் பார்ப்பதற்கான சூழல் அமையவில்லை. சில இடங்களில் கோபி வாகனத்தை மெதுவாகச் செலுத்த வெளியிலிருந்தே பார்வையிட்டுக்கொண்டோம். விஜியா எல்லாத்தையும் தனது வீடியோ கேமராவில் பதிவு செய்துக்கொண்டிருந்தார். நான் புகைப்படக் கருவியில் படம் எடுத்துக்கொண்டே வந்தேன். றஞ்சி அந்த இடங்களைக் குறித்து விளக்கிக்கொண்டு வந்தார். இடையிடையே கோபியும் விளக்கம் கொடுத்தார். அதிகமாகக் காடுகளே இருந்தன.  ஆமாம், அதுதானேபுலிகளின் அரண்மனைஎன்று யாழினிச் சொன்னது எனக்கு நினைவுக்கு வந்தது.

நாங்கள் முரசுக் மோட்டை, விசுவமடுத் தாண்டி புதுகுடியிருப்பு போகும் வழியில் புலிகளை வெற்றிகொண்டதன் நினைவு சின்னமாக, சிங்கள அரசு அமைந்திருக்கும் தளத்திற்கு முன் கோபி வண்டியை நிறுத்தினார். ஒற்றைச் சிலை, அதன் அருகில் புலிகள் பயன்படுத்திய போர் வாகனம். அதை அருகில் போய் நாங்கள் பார்க்கவில்லை. சாலையின் எதிர்புறத்தில் இருந்தவாறே பார்வையிட்டோம். நான் புகைப்படம் எடுத்தேன். அருகில் இருக்கும் அறிவிப்புப் பலகையில் எம்மாதிரியான தகவல் இருக்கும் என்பதை யூகிக்க முடிந்தது.
வரலாறுத் தெரிந்தவர்களால் சகித்துக்கொள்ளமுடியாத எழுத்துகள் அவை.

(தொடரும்)




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக