வியாழன், 4 ஜூன், 2015

மௌனம் உறைந்த தேசம் 20

சிதைந்த கட்டடச் சுவரில் சாம்பற் பறவை

தொடர் 20
நாங்கள் முரசுக் மோட்டை, விசுவமடுத் தாண்டிப் புதுகுடியிருப்பு போகும் வழியில் புலிகளை வெற்றிகொண்டதன் நினைவு சின்னமாக, சிங்கள அரசு அமைந்திருக்கும் தளத்திற்கு முன் கோபி வண்டியை நிறுத்தினார். ஒற்றைச் சிலை, அதன் அருகில் புலிகள் பயன்படுத்திய போர் வாகனம். அருகில் போய் நாங்கள் பார்க்கவில்லை. சாலையின் எதிர்புறத்தில் இருந்தவாறே பார்வையிட்டோம். நான் புகைப்படம் எடுத்தேன். அருகில் இருக்கும் அறிவிப்புப் பலகையில் எம்மாதிரியான தகவல் இருக்கும் என்பதை யூகிக்க முடிந்தது.

 வரலாறுத் தெரிந்தவர்களால் சகித்துக்கொள்ளமுடியாத எழுத்துகள் அவை. அங்கிருந்து மிக அருகில்தான் ஆனையிறவு என்ற இடமிருக்கிறது. அந்த இடத்தை மிக முக்கியமான வரலாற்று நிகழ்வை ஆவணப்படுத்தியிருக்கிறது சிங்கள அரசு. நான்கு கைகள் சேர்த்து இலங்கை வரைபடத்தைக் கையில் ஏந்தியிருப்பது போன்று ஒரு நினைவுத் தூபியை எழுப்பியுள்ளார்கள். அதில் இலங்கையின் தேசிய மலரான மலர்ந்த நீலோற்பவ மலரையும் செதுக்கியுள்ளார்கள்.

அத்தனை கசப்பாகவும், அத்தனை போலியாகவும் இருந்தது அந்த நினைவுத் தூபி. எங்கள் யாருக்கும் அந்த இடத்தில் கொஞ்ச நேரமும் நிற்கப் பிடிக்கவில்லை. மனம் அத்தனை இறுக்கமாக இருந்தது. அந்த நினைவுத் தூபியை சுற்றிலும் தெரிவிக்கப்பட்டிருக்கும் குறிப்புகளில் எந்த நேர்மையையும் பார்க்க முடியவில்லை. நாங்கள் 10 நிமிடங்கள் கூட அங்கு நிற்கவில்லை. எங்கள் இறுக்கமான நிலையைக் கோபி அறிந்துகொண்டவார ஒரு தகவலைச் சொன்னார்.
“இலங்கை கடல்களால் ஆனது. இப்போ அதைக் கையில் ஏந்திவிட்டார்கள். ஏற்கெனவே சீனாவிற்கு விற்றுவிட்டார்கள். இன்னும் வெளிநாட்டவர்களுக்கு ஏலம் விடப் போகிறார்கள். அதைத்தான் மறைமுகமாக இந்தத் தூபிச் சொல்கிறது.”

கோபித் தனது நகைச்சுவை பாணியில் இவ்வாறு கூறிவிட்டு நகர்ந்து போய்க்கொண்டே இருந்தார். எங்களுக்குச் சிரிப்பு வந்தது. இறுக்கம் கொஞ்சம் தகர்ந்தாலும் அவர் சொல்வதை ஆழ்ந்து யோசித்தால் அதிலிருக்கும் அரசியல் புரியும். நாங்கள் அந்த இடத்திலிருந்து கிளம்பும் நேரம் சில சிங்களப் புத்த துறவிகள் பயணிகளுடன் அங்கு நுழைந்தார்கள். எங்களை மருந்துக்கும் அவர்கள் ஏறிட்டுப் பார்க்கவில்லை. அதைப்பற்றி எங்களுக்கும் எந்தக் கவலையும் இல்லை. வரலாறுகள் சுத்தமாகத் துடைத்தொழித்து, தங்கள் வசதிக்கு ஏற்றவாறு மாற்றியெழுதியிருக்கும் அந்தத் தூபியில் உவப்பாக எது இருந்திடப் போகிறது ? மனசாட்சியுள்ளவர்கள் உண்மையை அறிவார்கள்தானே . அவர்கள் சிங்களவர்களாக இருந்தால் என்ன? தமிழர்களாக இருந்தால் என்ன?

 தொடர்ந்து நாங்கள், புதுகுடியிருப்பில் இருக்கும் போர்த் தொல்பொருள்காட்சியகத்திற்குச் சென்றோம். சாலையிலிருந்து பார்க்கும் போதே ஒருவகை அச்சமூட்டுபவையாக அது இருந்தது. கோபி மிகமிக மெதுவாகத் தனது வாகனத்தைச் செலுத்தினார். நான் வெளியிலிருந்தே அந்த மியூசியத்தைப் படம் எடுத்தேன். அதற்கு எதிர்புறம் ராணுவப் பதிவுக் கூடம் இருந்தது. அது குளிர்பானம் அருந்தும் கடையும்கூட. கோபி, மிக இயல்பாக ராணுவ அதிகாரியைப் பார்த்துச் சிங்களத்தில் எதையோ கேட்டார்.
 பிறகு, அந்த மியூசியத்தைப் பார்க்க அனுமதி இருக்கிறது.. கட்டணம் எதுவும் இல்லை.. பார்த்து முடித்த பிறகு, இங்கே ஏதாவது குளிர்பானம் அருந்தலாம் எனக்கேட்டுக்கொண்டார்.

 நாங்கள் புலிகள் போருக்காகப் பயன்படுத்திய சில ஆயுதங்களையும், நீர்முழ்கிக் கப்பல்களையும் பார்த்தோம். அதைப்பற்றி என்னால் வார்த்தையில் சொல்லமுடியவில்லை. எப்படி, அத்தனை அதிநவீன நீர்முழ்கி வாகனங்களைச் சிங்கள அரசின் கழுகுப்பார்வையை மீறிக் கொண்டு வந்திருப்பார்கள். பீரங்கிகள், கடல் குண்டுகள், விமான இயந்திரங்கள் எனப் பறுமுதல் செய்யப்பட்ட சில பொருள்கள் அங்குக் காட்சியாக வைத்திருந்தனர். மிகவும் வெறுமை நிறைந்ததாக இருந்தது அந்தப் போர் மியூசியம்.
 அதன் அருகில் புலிகளை வெற்றிக்கொண்ட கொண்டாட்டத்தைக் குறிக்கும் முகமாகச் சிங்கள இராணுவன் ஒருவன் கையில் துப்பாக்கி ஏந்தி, இலங்கைக் கொடியை நாட்டியிருக்கும் படியாகச் சிலையையும் அமைத்திருக்கிறார்கள். சகிக்க முடியாத காட்சி அது.

 போர் ஒரு நாட்டின் வரலாற்றைப் பேசக்கூடியது. பெறப்படும் ஆவணங்களே அதற்குச் சாட்சியானவை. அந்த ஆவணங்களை எப்படி வைத்திருக்க வேண்டும்? இன்னும் 100 ஆண்டுகள் கழித்து இந்த நாட்டின் வரலாற்றைப் பேசும்போது நடந்துமுடிந்திருக்கும் போர் அதனால் ஏற்பட்டிருக்கும் இழப்புகளும், காயங்களும், வடுக்களும், மரண ஓலங்களும் சொந்த நாட்டு மக்களுக்கே தெரிய வேண்டும் இல்லையா? அதற்கு இந்தச் சிங்கள அரசு என்ன செய்திருக்கிறது?

 நான் இங்கே சொல்வது கொஞ்சம் அதிகபிரசங்கித் தனம் என்றே நினைக்கிறேன். காரணம், மாவீரர்கள் கல்லறையைப் பார்க்க முடியாமல் இடித்த அரசுதானே அது? புலிகளின் தலைவன் வாழ்ந்த வீடுகூடப் போர்க் குணத்தைத் தூண்டிவிடும் எனப் பயந்துதானே அதையும் இடித்துத் தரைமட்டமாக்கியது. இந்த அரசிடமிருந்து எந்த வரலாற்று ஆவணங்களைப் பாதுகாக்க வேண்டும் எனக் கேட்கவோ சொல்லவோ முடியும். அபத்தம் அல்லவா அது?

 நாங்கள் அங்கிருந்துக் கிளம்பினோம். ஒரு நீண்டப் பயணத்திற்குப் பிறகு, எங்களின் வண்டி வட்டுவாகல் பாலத்தைக் கடந்தது. பாலத்தை ஒட்டி ஓடிக்கொண்டிருக்கும் கடலில் எம் மக்களின் ஆத்மா இன்னும் மிதந்துக் கொண்டுதான் இருக்கும் என என் உள்மனம் கூறத் தொடங்கியது.

 (தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக