ஞாயிறு, 21 ஜூன், 2015

‘ஆனி ஃபிராங்க் டைரிக் குறிப்புகள்’

நாட்குறிப்புப் படிப்பது என்பது பொதுவாகவே நிறையப் பேருக்குப் பிடித்த விஷயமாகவே இருக்கிறது. அதுவும் அடுத்தவரின் நாட்குறிப்பு என்றால், அதில் இருக்கும் அந்தரங்கத்தைப் படிக்க ஆர்வப்படுவது ஒரு போதையைப் போன்றது. கிட்டதட்ட நிர்வாணத்தை எட்டிப்பார்க்கும் ஒப்பீடுதான். பதின்ம வயதில் டைரி எழுதும் பழக்கம் கொண்டிருந்த நான், பலமுறை அது ரகசியமாகத் திருடப்பட்டு, வாசிக்கப்பட்டுப், பின் விமர்சீக்கப்பட்ட அனுபவத்தைப் பெற்றிருக்கிறேன். என் நிர்வாணம் பல வேளைகளில் குடும்பச் சட்டசபையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த அறுவெறுப்பின் காரணமாகவே நான் டைரி எழுதும் பழக்கத்தை விட்டொழித்தேன். களவாடப்பட்ட என் டைரிகள் எங்கு இருக்கிறது என்பது எனக்கும் தெரியாத ஒரு புதிர். அது இப்போதும் இருக்கும் என்றே நம்பிக்கையெல்லாம் அறுந்துபோய் வெகு காலமும் ஆகிவிட்டது.

அண்மையில் மேற்கொண்ட இந்தியப் பயணத்தில் எனக்குக் கிடைத்த புத்தகம் ‘ஆனி ஃபிராங்க் டைரிக் குறிப்புகள்’.  ஜூன் 12 1942 முதல் 1 ஆகஸ்ட் 1944 வரை தனது 13-வது வயதில் ஆன் என்ற சிறுமி எழுத தொடங்கிய டைரிக் குறிப்புகள்தான் புத்தக வடிவமாகக் கிடைத்தது. யூதச் சிறுமியான ஆனி இரண்டாம் உலகப்போரின் போது தனது ரகசிய மறைவிடத்திலிருந்து அதை எழுதியுள்ளார். சுமார் 70 மொழிகளில் இந்த நாட்குறிப்பு மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இந்த நாட்குறிப்பைத் தமிழில் உஷாதரன் என்பவர் மொழிபெயர்த்துள்ளார். ‘எதிர் பதிப்பகம் அதை 2011 ஆம் ஆண்டு வெளியிட்டது.

ஓர் இளம்பெண்ணின் நாட்குறிப்பு என்றதைப் பார்த்தவுடன் அதை வாசிக்க அப்பவே மனம் விரும்பத்தொடங்கியது. மேலும், ‘70 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட என்பதோடு ‘இரண்டாம் உலகப்போரின் குறிப்புகள் உள்ளடங்கிய போன்ற வரிகள் எனக்கு புத்தகத்தின் மீது ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தன. 328 பக்கங்கள் கொண்ட புத்தகத்தைப் பயணத்தின் ஊடே படிக்கத்தொடங்கி மலேசியாவில்தான்  முடித்தேன். ஆனின் சிரித்த முகம் கொண்ட அட்டைப் படமும், அவள் கையப்பமும் கையெழுத்தும் கொண்ட பின்னட்டையும் இந்தப் புத்தகத்திற்குப் பலமாக அமைந்திருக்கிறது.

1942 ஜூன் 12-ஆம் தேதி தனது 13-வது வயதில் ஆனிற்குப் புதிய நாட்குறிப்புப் பரிசாகக் கிடைக்கிறது. அன்று இரவே அவள் அதில் ஒரு குறிப்பை எழுதி வைக்கிறாள்.
அதைனைத்தொடர்ந்து அவள் அதனுடன் தொடர்ந்து உறவாடத் தொடங்குகிறாள். தனது டைரிக்கு ‘கிட்டி எனப் பெயரிடுகிறாள். அவளின் நாட்குறிப்பு இவ்வாறு தொடங்குகிறது

இதுநாள்வரை நீ என் உண்மையான நண்பனாக இருந்து எனக்குப் பெரும் ஆறுதலாக விளங்குகிறாய். நான் உன்னைக் கிட்டி என்று பெயரிட்டு அழைக்க விரும்புகிறேன். இதுபோன்ற நாட்குறிப்புகளை எழுதுவது எனக்கு மிகவும் பிடித்த விஷயமாக இருக்கும் என்பதை உனக்குக் கூற விரும்புகிறேன். நான் தொடர்ந்து என் நினைவுகளை உன்னிடம் பதிவு செய்கின்ற மகிழ்ச்சிகரமான நேரத்திற்காகக் காத்திருக்கிறேன். நீ என்னிடம் உள்ளதே எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது..’
-ஆன்
நெருங்கிய தோழமையோடு ஒரு நாட்குறிப்பை அனுகும் பாங்கு, உண்மையில் மேற்கத்திய கலாச்சாரத்திலேயே சாத்தியப்படுகிறது அல்லது தொடங்குகிறது என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. இந்த வரிகளே எந்த ஓர் இடையூறும் இல்லாமல் நம்மை வாசிப்புத் தலத்திற்குள் புத்தகம் கொண்டு செல்கிறது.
ஆனின் அப்பா முன்னாள் ராணுவ அதிகாரியாவார். ஒரு காலக்கட்டத்தில் அவர் ஜெர்மனியிலிருந்து நெதர்லாந்துக்கு (ஹொலந்து) தப்பிச்செல்கிறார். ஆம்ஸ்டர்டாம் நகரில் குடியேறுகிறது 4 பேர் கொண்ட அவர்களின் குடும்பம். அங்குதான் ஆன் தனது 13-வது வயது நிறைவுப் பிறந்தநாளைக் கொண்டாடுகிறாள் ஆன். பிறந்தநாள் பரிசுகளில் அவளுக்கு ஒரு டைரியும் கிடைக்கிறது.
ஆன்னுக்கு டைரி கிடைத்த ஒரு மாதம் மட்டுமே அவள் வெளியுலகோடு தொடர்புடையவளாக இருந்திருக்கிறாள். அதன் பிறகு, நெதர்லாந்தும் நாஜிகளின் வசம் விழ, தான் தங்கியிருந்த வீட்டின் புத்தக அலமாரிக்குப் பின் இரகசிய அறையை அமைத்து அங்கேயே நிரந்தரமாகத் தங்குவிடுகின்றனர் ஆனின் குடும்பத்தினர். பின்னர் அவளின் அத்தைக் குடும்பமும் அவர்களோடு தஞ்சம் அடைகிறது.

இவர்களோடு ஆனின் டைரிக் குறிப்பும் வளர்கிறது. கிட்டதட்ட 70 சதவிகிதம் ஆன், தனது சொந்த விருப்பு வெறுப்புகளையே அதில் பதிவு செய்திருக்கிறார். அதிலும் குறிப்பாக அவர்களின் உணவுப் பற்றாக்குறை, பிறந்தநாள் கொண்டாட்டம், தனது அத்தை மகனின் மீது கொண்ட ஈர்ப்பு, அப்பாவிடம் உள்ள நெருக்கம், அம்மாவிடம் உள்ள வெறுப்பு ஆகியவையே தொடர்ந்து பதிவு செய்யப்படுகிறது.

திருடர்களின் அட்டகாசம் குறித்தும், அதனால் ஏற்படும் சங்கடங்கள் குறித்தும் அவ்வப்போது டைரிகுறிப்புகளில் ஆன் குறிப்பிடும்போது, நாமும் சங்கடத்தில் ஆட்கொள்ளப்படுவதை உணர நேரிடுகிறது. குறிப்பாக ஆள் நடமாட்டத்தை உணரும்போதெல்லாம் அவர்கள் குறிப்பிட்ட மணிநேரத்திற்குக் கழிப்பறையைப் பயன் படுத்துவது உள்ளிட்ட சில விஷயங்களில் ஈடுபடுவது கட்டுப்படுத்திக்கொள்கிறார்கள்.
புத்தகத்தின் 300-வது பக்கத்திற்கு மேல், சில பக்கங்களில் போர் பற்றிய தீவிரத்தை ஆன் கொஞ்சம் பதிவு செய்திருக்கிறாள். மற்றபடி ஒரே இடத்தில் ஹிட்லரின் நண்பரான முசோலினி ராஜினாமா செய்ததைத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றபடி ஹிட்லரைப்பற்றியும், நாஜிகளைப் பற்றியும் ஆன் அவ்வளவாகக் குறிப்பிடவில்லை.

அதற்கு, ஆன்னின் வயதும் ஒரு காரணமாக இருக்கலாம். 13 வயது நிரம்பிய ஒரு சிறுமியிடமிருந்து இந்த அளவுக்குப் பதிவு இருப்பதே பெரிய விஷயம் என்றே தோன்றுகிறது. தான் ஒரு எழுத்தாளர் ஆகனும் என்ற ஆன்னின் எதிர்கால ஆசை அதற்குக் காரணமாக இருக்கலாம்.
சில இடங்களில் இரண்டாம் உலகப் போர் பற்றிய வரிகளில் நமக்கு நடந்துமுடிந்த இனஅழிப்பின் கொடூரத்தை ஞாபகப்படுத்துகிறது. ‘ஆம்ஸ்டர்டாமின் பல பகுதிகள் முழுக்கக் குண்டு வீசி அழிக்கப்பட்டுவிட்டது. பிணங்களை முழுக்க வெளியே இழுத்துப் போடவே பல நாட்கள் தேவைப்படும்.’

இப்படியான மனதை ஸ்தம்பிக்கும் வரிகள் பல இடங்களில் வந்தாலும் கூட இந்தப் புத்தகம் என்னை அந்த அளவுக்குத் திருப்தி படுத்தவில்லை என்றே தோன்றுகிறது. தட்டையான மொழிபெயர்ப்பு, சில இடங்களில் குழப்ப நிலையில் இருக்கும் வாக்கிய அமைப்பு, அங்காங்கு கண்ணில் படும் எழுத்துப்பிழை போன்றவற்றோடு, எனக்கு இந்தப் புத்தகத்தில் எடுத்துக்கொள்ளும் அளவுக்கு விஷயம் போதவில்லை என்றுதான் தோன்றுகிறது.
ஆனாலும், சில வாக்கியங்கள் மனதில் நிற்கும்படியாக இருக்கின்றன.
‘சிந்தை மிக உயர்ந்ததெனில், மனிதர்தம் செயல்களோ மிக அற்பம்
இப்படியான சிந்திக்கக்கூடிய சில நல்ல வரிகளை இந்தப் புத்தகம் கொண்டிருந்தது என்னைத் தொடர்ந்து வாசித்து முடிக்கும் நிலை வரையில் கொண்டு சென்றது.

ஆன்னின் குடும்பமும் அவளின் அத்தை குடும்பமும் அவர்களோடு ஆனின் வீட்டில் வேலை செய்த மையீப் என்ற டச்சு பெண்மணி உட்பட 8 பேர் அந்த ரகசிய மறைவிடத்தில் வாழ்ந்தனர். நாஜி ராணுவம் 1944 ஆகஸ்ட் 4-ஆம் தேதி அந்த ரகசிய வீட்டை கண்டுபிடித்து மையீப்பை மட்டும் விட்டுவிட்டு மீதி அனைவரையும் பிடித்துச் சென்றது. அவர்கள் அனைவரையும் சித்திரவதை முகாமில் அடைத்துவைத்து நச்சுவாயு கூடத்திற்குப் பலியாக்கினார்கள் நாஜி அதிகாரிகள். சிறுமிகளான ஆன்னையும் அவளின் சகோதரியான மார்கரெட்டையும் தனிகூடத்தில் அடைத்து வைத்து அவர்களின் தலையை மொட்டையடித்து, நிர்வாணப்படுத்திச் சுமார் 8 மாதங்களாக வைத்திருந்தனர். பெர்ஜன் – பெல்சன் நகர முகாமில் 1945-ஆம் ஆண்டுப் பரவிய உயிர்கொல்லி நோயில் மார்கரெட் பலியாகச், சில நாட்களிலே ஆன்னும் டைபஸ் பசிக்கு பலியானாள்.
ஆன்னின் குடும்பத்தில் அவளின் தந்தை மட்டுமே உயிர் தப்பினர். இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்த பிறகு, விடுவிக்கப்பட்ட அவர் தனது இருப்பிடத்திற்குத் திரும்பும்போது ஆன்னின் டைரி மட்டுமே அவரை வரவேற்றது. (மையீப்தான் அதைப் பத்திரப்படுத்தி வைத்திருந்தார்) தனது மகளின் உணர்வுபூர்வமான எழுத்து வடிவத்தைப் படித்து மனமுறுகினார் அந்தத் தந்தை. எழுத்தாளராக வேண்டும் என்ற தனது மகளின் கனவை நிறைவேற்ற முடிவு செய்ததின் முயற்சி ‘The Diary Of A Young Girl’ என்ற புத்தகமாக உயிர் பெற்றது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக