திங்கள், 29 ஜூன், 2015

மீனாவின் ‘சித்திரம் பேசேல்’


சித்திரம் பேசேல்ஔவையின் ஆத்திச்சூடியில் வரும் வரியாகும். இதைத்தான் கட்டுரையாளர் மீனா தனது புத்தகத்திற்குப் பெயராகச் சூட்டியுள்ளார். சமீபத்தில் நான் படித்த புத்தகங்களில் இந்தப் புத்தகம் என் வரையில் முக்கியமானதாக இருக்கிறது.

மீனா என்றப் பெயரை இந்தப் புத்தகம் படிக்கும் வரையில் நான் அறிந்ததே இல்லை. 2013-ஆம் ஆண்டு வாங்கி வைத்திருந்த புத்தகத்தை இப்போதுதான் வாசிக்கக் கையில் எடுத்திருக்கிறேன். காலதாமதம்தான். ஆனால், புத்தகத்தில் இருக்கும் விஷயமும் எழுத்து நடையும், அதன் அழகியலும் எந்தக் காலத்திலும் விவாதத்திற்கும், கலந்துரையாடலுக்கு உட்படுத்தும் தரத்தோடு பதிவாகியுள்ளது.
சித்திரம் பேசேல்மீனாவின் முதல் புத்தகமாகும். 2013-ஆம் ஆண்டு எதிர் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. கட்டுரைகள், விமர்சனங்கள், ஊடக அவதானிப்புகள் என மீனா தீராநதி, உயிரெழுத்து மேலும் இணையதளத்தில் எழுதி வெளியிட்ட மொத்தம் 27 கட்டுரைகள் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.

இந்தப் புத்தகத்தில் மீனா எழுதிய முன்னுரையைப் படிக்கும்போது, 2000-ஆம் ஆண்டிற்க்குப் பிறகுதான் , மீனா இலக்கியப் பிரபஞ்சத்திற்குள் வந்தது தெரியவருகிறது. ஆனால், கட்டுரைகளை வாசிக்கும்போது அதன் எழுத்துநடையும் அவர் பயன்படுத்தும் மொழியாற்றலும் பண்பட்ட எழுத்தின் தரம்கொண்டதாக அமைந்திருக்கிறது.
எழுத்தை ஒரு சவாலாகவே தான் எடுத்துகொண்டதாக மீனா ஓரிடத்தில் குறிப்பிட்டுள்ளார். அதற்கு அவர் வைக்கும் காரணம் பெண் எழுத்தாளர்கள் சிந்திக்ககூடிய விடயமாக எனக்குப் பட்டது. மீனா இப்படிக் கூறுகிறார்,

 பெண்கள் கவிதைகளைத் தாண்டி வேறொன்றும் எழுதமாட்டார்கள்; உடல், காமம் வேட்கை இவைகளைக் கடந்து எதுவும் பேசமாட்டார்கள்; அரசியல், விமர்சனம் என இயங்கிக் கொண்டிருந்த பெண்களும் இப்போது தேங்கி விட்டார்கள்என்பதாகவே அவை இருந்தன. வாழ்க்கையே ஒரு சவாலாகிப் போனபின்பு இந்த விமர்சனங்களையும் ஒரு சவாலாகவே எடுத்துக்கொண்டேன்
-மீனா

 ஒரு வீம்புக்குச் சவால் எடுத்துக்கொண்டேன் என மீனாக் கூறவில்லை. அதற்கான உழைப்பை 90 சதவிகிதம் கொடுத்திருக்கிறார். குறிப்பாக அவர் தனது விமர்சனக் கட்டுரைகளை முன்வைக்கும் போது அதற்கான தரவுகளைத் திரட்டி மிகக்காந்திரமாகவே முன்வைக்கிறார்.
இந்தக் கட்டுரைத் தொகுப்பில் நான் மீனாவை மதிக்கும் விதமாக இரண்டு கட்டுரைகள் இருந்தன. அந்தக் கட்டுரைகளில் அவரின் பொறுப்புணர்ச்சி மட்டுமல்ல, ஓர் எதிர் விமர்சனத்தை வைக்கும்போது அதில் இருக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பையும் பார்த்தேன். தனக்கு உவப்பில்லாத அல்லது இந்தக் கூற்றை இப்படி அணுகி இருக்கக்கூடாது என்று மீனா எண்ணிய கட்டுரைக்கு அவர் வைத்த எதிர்விமர்சனம் என்னை வெகுவாகக் கவர்ந்திருந்தது. அதுவும் அவர் விமர்சனம் வைத்தது முக்கியப் பெண் எழுத்தாளர்களான அம்பை மற்றும் வாஸந்தி மீது. காஷ்மீர்ப் பிரச்னைக் குறித்துத் தனது எதிர்வினையைத் தெரிவித்ததற்காக அம்பைக்கும், இந்தியச் சூழலில் வரலாற்றுப் பெண் ஆளுமைகள் குறித்துத் தீராநதியில் பேசியதற்காக வாஸந்திக்கும் தனது எதிர்வினையை மிகத் தைரியமாகப் பதிவு செய்திருக்கிறார் மீனா. இந்தக் கட்டுரைகளை நான் படித்து முடித்தபோது ஓர் எதிர்வினையை எப்படியாற்ற வேண்டும் என்பதைத் தெரிந்துக்கொண்டேன்.

இந்தக் கட்டுரைத் தொகுப்பில், பாலியல் கலகம்: நொறுங்கும் கலாச்சாரம் என்ற கட்டுரையும், ராதிகா சாந்தவனம் எனும் கட்டுரையும் என்னை வெகுவாகக் கவர்ந்தக் கட்டுரையாகும். குறிப்பாகப் பெண்கள் வெளிப்படையாகப் பேசு மறுக்கும் விஷயமாகப் பாலியல் இருக்கிறது. அதைப் பெண்கள் பேசக்கூடாத, அப்படியே பேசினால் அதில் அவர்களின் சுயவாழ்க்கையை நோக்கக்கூடிய விடயமாக இருப்பதால்தான் அதைப் பேசப் பெண்கள் சங்கடப்படுகின்றனர். மீறிப் பேசியவர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் விமர்சிக்கப்படுவது இன்றும் தொடரும் விடயமல்லவா..
ஆனால், மீனா மிக அழகாக அதைப் பேசியிருக்கிறார். குறிப்பாக ராதிகா சாந்தவனம் கட்டுரையில் பலமரபுக் கூறுகளை உடைத்துக் காட்டியிருக்கிறார். ராதைக்கும் கண்ணனுக்குமானக் காதலை மட்டுமே பார்த்துச் சிலாகித்து, அதன் கற்பனைகளில் காதல் வளர்த்தவர்களுக்கு ராதையின் ஊடலும், அதன் நீட்சியாக அவள் கண்ணனிடம் காட்டும் கடுமையும், கண்ணன்ராதை ரசிகர்களை அதிரவைக்கும் செய்தியாகும்.

18-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட காவியமானராதிகா சாந்தவனம்எனும் நூல் கவிதை வெளிப்பாடும், சொற்செட்டும் பாலியல் விவரணைகளும் கொண்டுள்ள ஒரு படைப்பாகும். இன்றைய பெண்ணிய உடல்மொழிகளுக்கு எல்லாம் முன்னோடி என மீனா அந்தக் காவியத்தைக் குறிப்பிடும் வேளையில், அவசியம் படித்தறிய வேண்டும் எனவும் கூறுகிறார்.
18-ஆம் நூற்றாண்டில் தஞ்சையை ஆண்டப் பிரதாபசிம்மனின் அரசவை நர்த்தகியாக இருந்தவர் முத்துப்பழனி. அவர் இயற்றிய இக்காவியத்தைத் தேவதாசி மரபில் உதித்த இன்னொரு அறிஞரும் கலைஞருமானப் புட்டலஷ்மி நாகரத்தினம்பாள் 1911-ஆம் ஆண்டு முழுமையாக மறுபதிப்புச் செய்தார் என்ற தகவலோடு அது தடைசெய்யப்பட்ட விவரங்களையும் ஓர் ஆவணப் பதிவாக மீனா நமக்குத் தந்திருக்கிறார். அந்தக் காவியத்தில் இடம்பெற்ற கவிதைகளில் சிலவற்றை இந்தப் பதிவில் இடம்பெறச் செய்திருப்பது முக்கிய விடயமாகும்.

 அவர் எழுத வந்தக் காலக்கட்டங்களில்  நடந்த முக்கிய விடயங்களையும் அதன் முக்கியத்துவமறிந்துத் தன் பார்வையை மீனாப் பதிவு செய்திருக்கும் விதம் ஒரு சமூதாய அக்கறை உள்ள எழுத்தாளருக்கு இருக்க வேண்டிய பொறுப்புணர்ச்சியோடு வெளிப்பட்டிருக்கிறது. இதை மீனாவிடமிருந்து நான் கற்றுக்கொள்ளவேண்டிய விஷயமாகக் கருதுகிறேன்.

மீனாவை நான் பார்த்ததில்லை. அவரின் எழுத்தைகூட இந்தப் புத்தகத்தின் மூலம்தான் முதன் முதலாக வாசித்திருக்கிறேன். ஒருவருக்குத் தாராளமாகப் பரிந்துரைக்கூடிய அல்லது பரிசளிக்கக்கூடிய புத்தகமாக நான்சித்திரம் பேசேல்பரிந்துரைசெய்வேன். அதோடு மீனாவின் அடுத்தப் புத்தகத்தையும் எதிர்பார்க்கும் ஒரு வாசகியாகவும் நான் காத்திருக்கிறேன்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக