ஞாயிறு, 7 ஜூன், 2015

மௌனம் உறைந்த தேசம் 21


சிதைந்த கட்டடச் சுவரில் சாம்பற் பறவை

தொடர் 21

நாங்கள் அங்கிருந்துக் கிளம்பினோம். ஒரு நீண்டப் பயணத்திற்குப் பிறகு, எங்களின் வண்டி வட்டுவாகல் பாலத்தைக் கடந்தது. பாலத்தை ஒட்டி ஓடிக்கொண்டிருக்கும் கடலில் எம்மக்களின் ஆத்மா இன்னும் மிதந்துக் கொண்டுதான் இருக்கும் என என் உள்மனம் கூறத் தொடங்கியது.

ஆம். நான் 2009-ஆம் ஆண்டின் போரின் இறுதிகாலங்களில் பத்திரிகைகளில் பரபரப்புச் செய்திகள் வந்துக்கொண்டிருந்தன. கிட்டதட்ட எல்லா நாடுகளிலும் யாழ்ப்பாணப் போர் பற்றிய செய்திகளைக் கண்முன் கொண்டு வர உலக ஊடகங்கள் தனது தளத்தில் முழு உழைப்பையும் போட்டுக்கொண்டிருந்தன.
வவுனியா வனத்தோடு சேர்கிறது வட்டுவாகல் கடல் நிலப்பகுதி.

சிங்கள இராணுவத்தால் அறிவிக்கப்பட்டிருந்த ‘save zone’  பாதுகாப்பு இல்லாதது என்றும் அது ஒருதந்திரப்பகுதி என்றும் என உணர்ந்தத் தமிழர்கள் தமது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள நடந்தே சென்று ராமேஸ்வர மண்ணில் தஞ்சம் அடையளாம் எனும் நோக்கில் இரவோடு இரவாகஅவர்கள் வட்டுவாகல் கடல்பகுதியில் இறங்கி நடந்த சில காட்சிகளும், பின் சிங்கள இராணுவத்தினரால்,  சுடப்பட்டுக் கரை ஒதுங்கப்பட்ட உயிரற்றவர்களின் உடல்களின் காட்சிகளும் இணையச் செய்திகள் மூலம் கிடைக்க, அதையும் நாங்கள் எங்கள் பத்திரிகையில் பிரசுரித்தோம்.
இப்படியாகத்தான் வட்டுவாகல் கடற்பகுதியைப் பற்றி எனக்குப் பரீட்சயம் இருந்தது. செய்தியிலும் இணையத்திலும் படித்த அந்தப் பகுதியை நேரில் பார்க்கும்போது, ஒருவிதத் தவிப்பு ஏற்படத்தான் செய்தது. எனக்கும் இந்த மண்ணுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லாமல் இருக்கலாம். ஆனால், எந்தச் சம்பந்தமும் இல்லாமலா  எனக்குத் தவிப்பு ஏற்படுகிறது? அப்பகுதியைக் கோபி ஒரு வட்டமடித்து, கடற்பகுதியைப் படம் எடுக்க ஏதுவாக வாய்ப்பினை ஏற்படுத்தி தந்தார். மூடுந்திலிருந்து இறங்காமலே எனக்கு அந்த வாய்ப்புக் கிடைத்தது.
வட்டுவாகல் கடற்பகுதியின் இன்னொரு சோகம் சுனாமியின் போது ஏற்பட்டச் சேதமாகும். அதன் விழிப்புணர்வு வரைப்படத்தை அங்கு வைத்திருந்தனர். முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு, மாங்குளம், புளியங்குளம் என நாங்கள் பயணித்து வருகையில் நன்றாக இருட்டத் தொடங்கியிருந்தது. வவுனியா வனத்தைக் கடந்து போய்க்கொண்டிருக்கையில் சாலையில் வாகனங்கள் மிகக்குறைவாகத்தான் இருந்தன. ஆனால், சாலை நன்றாகவும் சீராகவும் அமைக்கப்பட்டிருந்தது. அடர்ந்த வனத்தின் காரணமாகக் கும்மிருட்டாக இருந்தது.  சாலையில் யானையின் எச்சம் கிடக்கிறது. அதன் நடமாட்டம் மிக அருகில் இருப்பது போன்ற உணர்வு இருக்கிறது எனக் கோபிச்சொன்னார்.

அவர் சொன்னதைப் போன்றே 3 யானைகள் சாலைக்கு மிக அருகில் இருந்தன. அதில் குட்டியானையும் இருந்தது. காட்டுயானைகள்.  அந்த இருட்டிலும் எப்படிக் கோபி யானையைப் பார்த்தார் என்பது தெரியவில்லை. நாங்கள் யாரும் மிகச்சரியாகப் பார்க்கவில்லை. வேனை வளைத்தார் கோபி. எங்களுக்குத் தைரியம் கொடுத்தவர் நன்றாகப் பாருங்கள் என்று வேனின் விளக்கை அணைத்தார். வேகத்தைக் குறைத்து மீண்டும் யானை நின்ற இடத்தை நோக்கி வாகனத்தைச் செலுத்தினார். காட்டு யானைகள். முறம் மாதிரியான காதுகளை அசைத்தபடி நின்றன. அவை மிகுந்த கோபத்தில் இருந்திருக்க வேண்டும். காடே அதிரும் படியான பிளிறலோடு சாலையை நோக்கி ஓடி வந்தது ஒரு யானை.  அது தாய் யானையாகத்தான் இருக்கக்கூடும். வேகத்தைக் கூட்டி வண்டியைச் செலுத்தினார்க் கோபி. அது ஒரு துணிகரச்செயல்தான். வண்டி வெகுதூரம் போயும்கூட அந்த யானையின் பிளிறல் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. ஏன்? இப்போதும்கூடக் கண்களை மூடி அந்தக் கணத்தை நினைக்கும் போது  யானைப் பிளிருவது என்னால் கேட்க முடியும்.

எங்களின் இந்தப் பயணத்தில் யாருக்கும் சந்தேகம் ஏற்படாதப் படி எப்படிச் சூசகமாக நடந்துக்கொள்ள வேண்டுமோ அவ்வாறு தனது அனுபவத் திறமையால் கோபி நடந்துக்கொண்டார். (அவரின் நன்மைக் கருதி அவை என்னென்ன என்பதை நான் இங்கே எழுதுவதைத் தவிர்க்கிறேன்.)

நான் மலையகத்தில் பெண்கள் சந்திப்பில் கலந்துகொண்டது தொடர்பாகவும், இலங்கைப் பயணத் தொடர்பாகவும் தோழி ஒருவர் நேர்காணல் செய்வதற்குக் கேள்விகள் அனுப்பி வைத்திருந்தார். (என்னால் அந்த நேர்காணலுக்கு ஒத்துழைக்க முடியவில்லை. அது வேறு விஷயம்) அவர் போர்ச் சூழல் குறித்தான 7 கேள்விகளை முன் வைத்திருந்தார். அதில் இரு கேள்விகள் இப்படி இருந்தது..

கேள்வி 1: ஈழ மக்களைச் சந்தித்தீர்களா?  போர்ப் பூமிக்குச் சென்றீர்களா?
பாதிக்கப்பட்ட பெண்கள் , குழந்தைகள், ஆண்கள் யாரையாவது சந்தித்தீர்களா? அவர்களுடன் கலந்துரையாடினீர்களா?

கேள்வி 2: இன்றைய அவதானிப்பின் படி ஈழத்து இளம் ஆண்கள் பெண்கள் பற்றி என்ன நினைகின்றீர்கள்?

இந்த இரண்டும் கேள்விகளுக்கும் ஒரே மாதிரியான பதிலைதான் கொடுக்க முடியும். நான் இங்கே இந்தக் கேள்வியைக் கொண்டு வருவதற்கு ஒரு காரணம்தான் இருக்கிறது. வேறு எந்த உள் நோக்கமும் இல்லை.


1. மலேசியாவிலிருந்து இலங்கைக்கு அதுவும் போர்ப் பூமிக்குப் போய்வந்திருக்கும் நான், அங்கிருந்த ஈழமக்களிடமிருந்து என்ன செய்தியைக் கொண்டு வந்திருக்கிறேன்?
2. யாரை எல்லாம் சந்தித்தேன்?
3. புலிகளின் இயக்கத்திலிருந்த யாரையாவது சந்தித்தேனா?
4. தலைவர் பிரபாகரன் குறித்த ஏதும் தகவல் தெரிந்ததா?
5.அல்லது தலைவரைக் குறித்து யாழ்ப்பாணத்தவர்கள் என்ன சொல்கிறார்கள்? அதாவது அவர் இருக்கிறாரா அல்லது இறந்துவிட்டாரா?


இப்படியான தகவலை அறிய விரும்புவதுதான் (மலேசியாவிலும்கூட) பலரின் நோக்கமாக இருக்கிறது. இது ஓர் அரசியல் அல்லது வியாபார யுத்தி என்றுகூடச் சொல்லலாம். இந்தக் கேள்விகளுக்கு மிகவும் கவனமாகப் பதில் சொல்லவும் வேண்டியிருக்கிறது. ஆனால், அதைவிடவும் பாதிக்கப்பட்ட மக்களை இதைவிட வேறு எப்படித் துன்பப்படுத்திப் பார்க்கமுடியும்? மீண்டும் அவர்களை அழ வைத்து அந்தக் கொடூரத்தைக் கண்முன் கொண்டு வந்து மீண்டும் ஒரு போரை நடத்திப் பார்க்கும் எண்ணம், எந்த மனிதாபிமானத்தைப் பேசப்போகிறது?

இணையமும் சேனல் 4-வும் நமக்குச் சொல்லாத தகவல்களா? இறுதிக் கட்டப் போரின் போது வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த விடுதலைப் புலிகளையும், பின் அவர்களின்சடலங்களையும் பார்த்தவர்கள்தானே நாம். பாதுகாப்பு வளையத்தில் எம் மக்கள் பசியோடும், துயரத்தோடும் தஞ்சம் புகுந்திருக்க, ஈவு இரக்கமின்றிக் குண்டு மழைப் பொழிந்து அவர்களின் உயிரோடு விளையாடிய விளையாட்டை, இதயத்தைக் கிழற்றி வைத்துப் பார்த்தவர்களில் நானும் ஒருத்தி

தானே. உண்மையில் நாம் அனைவருமே எல்லாவற்றையும் பார்த்தச்சாட்சிகள் தானே? பிறகு என்ன? அவர்களிடத்தில் கேள்விக் கேட்பது? நீ என்ன செய்தாய் அவர்களுக்கு? என நமக்கு நாமே முதலில் கேள்விக் கேட்டுக்கொள்வதுதான் உத்தமம்.

இப்படியான அனுபவங்களோடு நாங்கள் கொழும்பு வந்து சேர்ந்தோம். நீண்டப் பயணம். நாங்கள் ரொம்பவும் களைத்துப் போயிருந்தோம். விடிந்தால் கொழும்பில் கொஞ்சம் நினைவுப் பொருள்களை வாங்கிக்கொள்ளலாம் எனத் திட்டமிருந்தது.

எனக்கு உறக்கம் கொள்ளவில்லை. சுமார் 6 நாட்கள் தோழிகளுடனான நட்பு, சந்திப்புகள், பயணங்கள், அனுபவங்கள் என எல்லாம் ஒரு காட்சிபோல் ஒன்றன்பின் ஒன்றாக ஓடத்தொடங்கியது. அப்படியே உறங்கியும் போனேன்…

(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக