வெள்ளி, 29 ஜனவரி, 2021

இந்த மலாயா மண்ணில் அரசியலில் பெண்கள் ஈடுபடுவதை தொடக்கி வைத்தவர்கள் இந்தியப் பெண்கள் தான்- டான்ஶ்ரீ தேவகி கிருஷ்ணன்


பரபரப்பான பிரிக்பீல்ட்ஸ் வட்டாரம். பரபரப்பாகிவிட்ட வாழ்கையை வாழப் பழகிக்  கொண்டவர்களின் மத்தியில் ஜாலான் பெர்ஹாலாவில் அமைதியான அழகான வீடு. வீட்டின் வளாகத்தைச் சுற்றி பராமரிக்கப்பட்டுவரும் பூங்கா, அதற்கு மத்தியில் பகவான்  கிருஷ்ணனின் உருவச்சிலை. அந்த இல்லத்திற்கு  பிருந்தாவனம் என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள்.  நேர்காணல் செய்யப்போன எங்களை மலர்ந்த முகத்துடன் பிரந்தாவனத்திற்கு வரவேற்றார் டான்ஶ்ரீ தேவகி கிருஷ்ணன்

இலங்கைத் தமிழின் மணம்வீசும் அவரின் பேச்சில், இன்னும் அத்தனை தெளிவு இருக்கிறது. 92 வயது; வயோதிகம் அவரை நெருங்குவதற்கே தயங்குகிறது என்பதைப் போல உடலில் புதுத் தெம்புடனும், மனதில் உறுதியும், வார்த்தையில் தெளிவும் கொண்டு நம்முடைய  பேட்டிக்குத் தயார் நிலையில் இருந்தார் டான்ஶ்ரீ தேவகி கிருஷ்ணன்.  மலேசிய வரலாற்றில்  முதன்முதலாக அரசியல் வேட்பாளராக விண்ணப்பித்து வெற்றிப்பெற்ற முதல் பெண் என்பதுடன், டான்ஶ்ரீ விருது பெற்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமைக்குறியவர். அவருக்குப் பிறகு இந்தியப் பெண்கள் எவரும் அவ்விருதை இன்னும் பெறவில்லை.


'சிட்டி மதர்’ ( City Mother)  என்று மலேசிய மக்களால் அன்போடு அழைக்கப்படும் டான்ஶ்ரீ தேவகியை, மெர்டெக்கா தினத்திற்காக சிறப்பு நேர்காணல் செய்ததில் ‘நம் நாடு” மகிழ்ச்சி கொள்கிறது. அதற்கு முன் டான்ஶ்ரீ தேவகி கிருஷ்ணனைப் பற்றிய சில வரிகள் இலங்கையைப் பூர்வீகமாகக்கொண்ட டான்ஶ்ரீ தேவகி, நெகிரி செம்பிலான், போர்ட்டிக்சனில்  தனது6 உடன் பிறப்புகளில் இரண்டாவதாக பிறந்தவர். தகப்பனார் தபால் மாஸ்டராகவும், தாயார் தமிழ்ப்பள்ளி ஆசிரியையாகவும்  இருந்தார்கள். ஆரம்பப்பள்ளியைச் செந்தூல் சென்மேரிஸ் பள்ளிக்கூடத்தில் தொடங்கிய இவர் பிற்காலத்தில் இடைநிலைப்பள்ளிப் படிப்பை  முடித்துக்கொண்டு ஆசிரியரானார்.  திருமணத்திற்குப் பிறகு தன் கணவரின் ஆதரவோடு அரசியலில் புகுந்த  இவருக்கு அடுத்தடுத்து கிடைத்ததெல்லாம் வெற்றி, வெற்றி, வெற்றிமட்டும்தான்.

ம.இ.காவின் ஆயுள் உறுப்பினரான இவர், இன்னும் சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகிறார். இதுவரை ஊடகங்களில் பேசாத விஷயங்களை  டான்ஶ்ரீ தேவகி கிருஷ்ணன் நம்மோடு மனம் திறக்கிறார்.



*சுதந்திர காலகட்டத்திற்கு முன்பு பெண்களின் பங்காளிப்பு அரசியலிலும், நாட்டிற்காக பங்களிப்பதிலும் எப்படி இருந்தது?

 -இந்தியப் பெண்களைப் பொறுத்தவரை, அவர்களுக்கு அவ்வளவாக எந்த விஷயத்திலும் விழிப்புணர்வு இல்லை. அப்போது நடந்துக்கொண்டிருந்தது வெள்ளையனின் ராஜ்சியம். 90 சதவிகிதப் பெண்கள் தோட்டப்புறங்களில்தான் வாழ்க்கையை நடத்தினர். நகர்புறத்தில் வாழ்ந்தப் பெண்கள் கல்வியில் கவனம் செலுத்தினார்களே  தவிர, வேலைக்குக் கூடப் போக அனுமதிக்கப்படவில்லை.  ஆசிரியர், தாதி, மருத்துவர் என மிகக்குறைவான எண்ணிக்கையில் பெண்கள் வேலையில் இருந்தனர். அரசாங்கத்தில் பெண்கள் வேலை செய்வதற்குப் பெற்றோர்கள் அனுமதிக்கவில்லை. ஆனால், இந்தியப் பண்போடும் கலாச்சாரத்தோடும் வளர்த்தனர். அவர்களுக்கு அரசியல் தெரிந்திருக்கவில்லை.  என்னுடைய காலக்கட்டத்திலேயே  3  பெண்கள்தான் தேர்தலில் போட்டியிட முன்வந்தார்கள்.

அதாவது நான், திருமதி ராமச்சந்திரன் மற்றும் திருமதி சோமசுந்தரம் ஆகியோர்தான் தேர்தலில் போட்டியிட முதல் அடியை எடுத்து வைத்தோம். திருமதி சோமசுந்தரம் அம்னோ கட்சியை பிரதிநிதித்து  தேர்தலில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.  அந்த தேர்தலில்  வெற்றி பெற்றது நான் மட்டும்தான்.  அதன் அடிப்படையில் பார்த்தால் இந்த மலாயா மண்ணில் அரசியலில் பெண்கள் ஈடுபடுவதை  தொடக்கி வைத்தவர்கள் இந்தியப் பெண்கள்தான் என்பதில் நாம் பெருமை கொள்ள வேண்டும். அதே நேரத்தில் பெண்களை மீகப்பலவீனமானவர்கள் என்ற ஆரோக்கியமற்றச் சிந்தனயை சில ஆண்கள் கொண்டிருந்த காரணத்தினால், பெண்களைப் பொது வெளியில் இயங்க அனுமதிக்கவில்லை.



 *டத்தோஶ்ரீ ச.சாமிவேலு மாதிரி திறமையான ஓர் இந்தியத் தலைவர் ம.இ.கா விற்கு அமையவில்லையே?

-உண்மை. அது மறுப்பதற்கில்லை. பதவியில் இருக்கும்போது  பிரச்னை உள்ளவர்கள் என்னைச் சந்திக்கலாம் என சாமிவேலு, ஒரு நாளை நிர்ணயித்து மக்களை நேரடியாகச் சந்தித்து வந்தார்.  மக்களை நேருக்கு நேர் சந்தித்து தீர்வை ஏற்படுத்திய தலைவர் அவர். இன்றும் அந்தச் செயல்முறை இருக்கத்தான் செய்கிறது. ஆனால், தலைவர்கள்தான் அங்கு இல்லை.

*ம.இ.கா சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி நினைவுக்கூற முடியுமா?

-நேத்தாஜியின் இந்திய சுதந்திரக் கட்சி தீவிரமாக செயல்பட்டுக்கொண்டிருந்தபோது, மலாயாவிருந்து இந்தியர்கள் பலர் அதில் பங்கு கொண்டனர். அதன் பிறகு அவர்களில் சிலர்தான் ம.இ.காவை தோற்றுவிக்கவும்  காரணமானார்கள்.   ம.இ.கா 1954-ஆம் ஆண்டு அரசியல் கட்சியாக உறுமாறியது. அதற்கான சட்டத்திட்டங்கள் இந்தியாவில் பேச்சுவார்த்தை நடத்தி , அனுபவம் வாய்ந்த தலைவர்களால் வரையப்பட்டன. 1955-ல் துன் வீ.தி.சம்பந்தன் ம.இ.கா-வின் தேசியத் தலைவராக வந்தார்.  அதன் பிறகு ஒற்றுமை அடிப்படையிலேயே நாட்டின் சுதந்திரப் பேச்சுவார்த்தை நடந்தது. சீனர்களின் பிரதிநிதியாக  தான் சேக் லோக், இந்தியர்களின் பிரதிநிதியாக துன்.வீ.தி.சம்பந்தன், மலாய்க்காரர்களின் பிரதிநிதியாக துங்கு அப்துல் ரஹ்மான் ஆகியோர் சுதந்திர ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர் என்பது வரலாறு.


*மலேசியப் பெண்களுக்கு சுதந்திர விழிப்புணர்வு இருக்கிறதா?

-அரசியலில் பெண்களுக்கு விழிப்புணர்வு வேண்டும் என்பதை தொடக்கிவைத்ததே நாந்தான். விலாயா தோற்றம் காணாத காலக்கட்டத்தில் சிலாங்கூரில் முதல் மகளிர் தொகுதியை நான் தொடங்கினேன். வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், பெண்களை கட்சியில் சேர்க்கவும், கிளைகளைத் திறக்கவும் நிறைய வேலைகளை செய்திருக்கிறேன்.  நாங்கள் நேரடியாக பெண்களைச் சந்திக்கையில், அவர்களுக்கு விழிப்புணர்வு  ஏற்படுத்தும் வகையிலும் அவர்களுக்கு இருக்கிற உரிமையைப் புரியவைக்கவும் உரை நிகழ்த்தியுள்ளேன்.  அந்த வகையில் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டது என்றுதான் கூறுவேன்.  நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்தப் பெண்ணாக டாக்டர் லீலா ராமன் இருந்தார். அதன் பிறகு டத்தின் கோமளா இருந்தார். அவருக்குப் பிறகு யாரும் நாடாளுமன்றத்தில் இல்லை. அதேபோல் செனெட்டராக டான்ஶ்ரீ ஜானகி ஆதிநாகப்பன் இருந்தார். இப்படித்தான் நமது பெண்கள் அரசியலில் பிரவேசிக்கத் தொடங்கினர். இப்போதுள்ள பெண்களும் ஆண்களும் அரசியலில் மிகத் தெளிவாகவே இருக்கின்றனர். செயல்படவும் செய்கின்றனர்.  


*தொடக்கத்தில் இருந்த கட்சியின் அசைக்கமுடியாத வலு இப்போது இல்லையே? கட்சிக்குள்ளேயே நிறைய உட்பூசல்கள் இருப்பதற்கு காரணம் என்ன? ஒரு மூத்த தலைவியாக உங்களின் கருத்து என்ன?

-கட்சியின் தலைமையைக் கருதி தலைவர் சிலக்காரியங்களை மேற்கொள்ள நேரிடலாம். குறிப்பாக பதவியை விட்டு சிலரை நீக்க நேரிடும்போது, அது பெரிய பிரச்னையாக வெடிக்கிறது. அதற்கு ஐ.பி.எப் கட்சியையே ஓர் உதாரணமாக கொள்ளலாம். இப்படி ஏற்பட்ட பிளவுகளுக்கு ஜாதியும் ஒரு காரணமாகிறது. அந்த ஜாதி குழு, இந்த ஜாதி குழு என்று கட்சியின் அங்கத்தினர் சிதறிகிடக்கின்றனர்.  தலைவர் எந்த ஜாதியோ அந்த ஜாதி கொண்டவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கூட்டமைக்கின்றனர். அரசியலில் சமூக வேற்றுமை என்ற பேச்சே இருக்கக்கூடாது. பிறகு மதம், சமூதாயம் குறித்த வேற்றுமையையும் கட்சியிலிருந்து துடைத்துவிட்டு, ஒரே மதம், கட்சியில் எல்லாரும் ஒரு தாய் மக்கள் என்ற கொள்கையைக் கொண்டால்தான் கட்சியை காப்பாற்ற முடியும்.

*நாட்டு மக்களுக்கு நாட்டின் மீது பாசம் உள்ளதா?

-நாட்டின்மீது பாசம் இருக்கிறதா என்பதைவிட நாட்டு மக்களிடத்தில் பாசம் என்ற உணர்வே இல்லை என்று தோன்றுகிறது.  சொந்தக் கட்சிக்குள்ளும் எதிர்கட்சிக்களுக்கிடையிலும் ஏர்படும் சண்டைகள் அதை உறுதிசெய்கின்றன. மேலும், பலருக்கு கட்சியிலும் பாசம் கிடையாது.  கட்சியில் லாபகரமாக ஏதும் கிடைத்தால்தான் பாசம் வருகிறது. இல்லையேல் கட்சியை துறந்து சொல்லிக்கொள்ளாமல் சென்று விடுகின்றனர்.  எனது அனுபவத்தில் நான் நிறைய இதுபோல் பார்த்திருக்கிறேன். அதோடு, எதற்கெடுத்தாலும் பத்திரிகையில்  அறிக்கை விடுவதையும் கட்சிக்காரர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும். கட்சி இரண்டு படுவதற்கு பத்திரிகை அறிக்கைகளும் ஒரு காரணமாகும்.   குடிமகனின் ரத்தத்திலும் தாய்நாட்டின் மீதான பாசம் கலந்திருக்க வேண்டும். அந்தப் பாசத்தை நாட்டின் கொடியின் மீதும் காட்ட வேண்டும்.



 *மலேசியத் திருநாட்டில் உங்களை கவர்ந்த விஷயம் எது?

இந்த நாட்டில் பலைன மக்களும் பற்பல மதங்களும் இருக்கின்றன. ஆனால், எந்த நாட்டிலும் இல்லாத ஓர் ஆச்சரியம் நம் நாட்டில் இருக்கிறது. நாம் ஒன்று பட்டு வாழ்கிறோம். மற்ற இனத்தின் மொழியையும், பண்பாட்டையும், பள்ளிகூடத்தையும் பாதுகாக்க அரசாங்கமே உதவி செய்கிறது. எந்த நாட்டில் இந்தச் சலுகை இருக்கிறது? இந்தக் கூற்றை இங்கு மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் நான் சொல்லியிருக்கிறேன். அதை சொல்வதற்கு நான் பெருமையடைகிறேன்.

 *உங்கள் அனுபவத்தில் 7 பிரதமர்களை நீங்கள் சந்தித்துவிட்டீர்கள். உங்களைக் கவர்ந்த பிரதமர் யார்?

-கண்டிப்பாக துங்குதான் எனக்கு பிடித்த பிரதமர். அவருடைய நாட்டின் நிர்வாகம் மிகச்சிறப்பாக இருந்தது. அவர் செல்வந்த குடும்பத்தில் பிறந்திருந்தாலும் படிப்படியாக தன்னை அரசியலில் வளர்த்துக்கொண்டார்.  அதற்காக உழைத்திருக்கிறார்.  ‘MEN WITH EVERYBODY’- யாக வாழ்ந்து காட்டியவர். இனத்தைச் சார்ந்து அவர் பழகியதே இல்லை.  மிகவும் நல்ல மனிதர்.  சிலகாரணங்களுக்காக அவர் இந்தப் பிரதமம் பதவியே வேண்டாம் என்று தூக்கிப்போட்டார். அதன் பிறகு அரசாங்கம் அவருக்கு ஒரு வீடு கொடுத்தது. அந்த வீட்டில் அவர் வசித்துவந்தார்.  அவருக்குப் பிறகு  துன் அப்துல் ரசாக் இரண்டாவது பிரதமரானார். ஆனால், முக்கியத் தலைவர்கள் தலைநகர் வரும்போது துங்குவை சந்தித்தப் பின்னே, துன் அப்துல் ரசாக்கை  சந்திக்கச் செல்வர்.  இதை தவறு என்று உணர்ந்த  துங்கு தீவிரமான முடிவை எடுத்து பினாங்கிற்குச் சென்றுவிட்டார்.  இப்படி தன்னலம் கருதாது, நாட்டையும் நாட்டின் மக்கள் நலனை மட்டுமே கருதிய தலைவர் துங்குதான்.


*துங்குவுடனான நட்பில் உங்களுக்கு மறக்க முடியாத சம்பவம் உண்டா?

-நிறைய இருக்கிறது. அவர் தோழமையோடு பழகக்கூடியவர். நான் அவரைப் பார்ப்பதற்காக பினாங்குச் செல்லும் போதெல்லாம் அவரும் அவர் மனைவியும்  இன்முகத்தோடு வரவேற்ப்பார்கள். அவருக்கு மிகவும் பிடித்த உணவு  ‘கத்தரிக்காய் கருவாட்டுக் கறி’.  “கத்தரிக்காய் கருவாட்டுக் கறி வேண்டும்” என்று தமிழிலேயே கேட்பார். இந்த நினைவுகள் இன்னும் என் மனதில் இருக்கின்றன.

 நன்றி: 'நம் நாடு' பத்திரிக்கை 2014.  


குறிப்பு:  இந்த நேர்காணல் சுதந்திர தினத்திற்காக 2014 -ஆம் ஆண்டு எடுக்கப்பட்டு 31/8/2014 ஆம் தேதி நாளிதழில் பிரசுரிக்கப்பட்டது.  நான் டான்ஶ்ரீ தேவகி கிருஷ்ணனை இரு முறை நேர்காணல் செய்திருக்கிறேன். இரண்டாவது நேர்காணலும் பத்திரிக்கையில் வந்தது. ஆனால்,அதன் பதிவு தற்போது கையில் இல்லை. 

 

 

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக