செவ்வாய், 20 அக்டோபர், 2015


ஆம் நானேதான் அவள்...
அன்று தாய் 
ஈன்ற முயல்குட்டியாக
என் முதல் ஜனனம் தொடங்கியது

கரு நிற குட்டியாக 
நான் அத்தனை அழகாக
துள்ளிகுதித்து வளர்ந்திருந்தேன்

 தெடி பேர் பொம்மைக்கு 
உள்ளது போன்று முட்டை விழிகள்
முதல் தொடுதலிலே
யாரையும் தன் வசம் இழுக்கும்
உரோமம் 
சின்ன உடம்பு
குழந்தைகள்கூட தூக்கி விளையாடி மகிழ்ந்தார்கள்






அழகி... அழகி... அழகி

அழகு என்ற சொல்லை
கேட்டு கேட்டே அருவருத்தவள்
நான்

அன்றுதான்
அவன் பார்வையில்
 சிக்கினேன்

கண்களை உற்று
நோக்கியபடியே
மிக மென்மையாக - என்
தலையை  கொய்தெடுத்தான்...

ரத்தத்தை 
கோப்பையில் ஏந்தியவாறு
மது என ருசித்தான்

என் தோலை
உரித்து
இறைச்சியையும்
அத்தனை இன்பமாக புசித்தான்

அவன் காதலிக்கு என் கருந்தோலை
பரிசளித்தான்...

நீ பேரழகி
நீ பேரழகி  என்று 
பிதற்றினாள் அவள்...

கொய்த என் தலையில்
மீந்திருந்தது
மிச்ச உயிர்
இறுதியாக
கண்கள் மூடி திறந்துக்கொண்டது

ஆம்
நானேதான் அவள்...

(யோகி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக