திங்கள், 26 அக்டோபர், 2015

வலி எனக்கு மட்டும் அல்ல


என் சாம்பல் பறவையை போல
சுதந்திர இறகு கொண்டவன்
என் முதல் குழந்தை..
என் பாரதியைப் போல 
தடித்த மீசை அவன்
பிறக்கும் போதே இருந்தது..
பதின்மவயதில் எனக்கு
மயக்கத்தை கொடுத்த
கண்ணனைப் போல
நீல நிறம் அவனுக்கு
என்னவனைபோல
இயற்கை விரும்பி அவன்
என் துணைவனின்
தூரிகையில்தான்
அவனின் முதல் விளையாட்டு
தொடங்கியது...
என் நண்பனைப்போல
கண்ணியமானவன்
போலி வாக்குறுதிகள்
அவன் அறியாதது...
யட்சியின் அவிழ்ந்த கூந்தலில்
தன் முகம் மறைந்து விளையாடும்
யட்சன் என் மகன்..
இப்படியான கற்பனையில்
வளர்ந்த என் குழந்தையை
ஏன் பிரசவிக்கவில்லை
என்று கேட்கும்போதுதான்
மலட்டு வயிற்றில்
அவன் உதைப்பதை
யாரும் பார்க்காதவாறு
தடவி கொள்கிறேன்...
வலி எனக்கு மட்டும் அல்ல...
-யோகி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக