திங்கள், 26 அக்டோபர், 2015


புத்தக விமர்சனம்

தலைப்பு: லண்டாய்
தொகுப்பு மற்றும் மொழிபெயர்ப்பு: ச.விஜயலட்சுமி
பதிப்பகம் : தடாகம்

'லண்டாய்' இங்கு மலாய் மொழியில் வழக்கத்தில் உள்ள ஒரு சொல்லாகும். செக்குத்தான, சறுக்கலான அல்லது வழுக்கலான இடம் என்று அதற்கு பொருள் கொள்ளலாம். ஆனால், ஆப்கானில் 'லண்டாய்' என்பது உயிரோடு சம்பந்தம் கொண்டதாக இருக்கிறது. தேவைபட்டால் பெண்ணின் உயிரோடு நெருக்கமாகவும், அதே பெண்ணின் உயிருக்கு உலையாகவும் லண்டாய் மாறி விடுகிறது.

இந்த நூற்றாண்டில் ஆப்கானில் இதைவிட வேறு பெரிய வன்முறை இருக்குமா என்று தெரியவில்லை.

‘மதவாத ஆணாதிக்கத்தின் போர் நிற்பதேயில்லை’ இப்படிதான் ச.விஜயலட்சுமி எழுதியிருக்கும் லண்டாய் மொழிபெயர்ப்பு புத்தகம் நம்மிடம் அறிமுகம் படுத்திக்கொள்கிறது. முதல் பக்கத்திலேயே நம் உளவியலை தூண்டி பார்க்கும் அளவுக்கு இந்த புத்தகத்திற்கு மதிப்புரையை ‘தி ஃப்ரண்ட்லைன்’-னின் ஆசிரியர் ஆர்.விஜயசங்கர் எழுதியுள்ளார் . 'லண்டாய்' குறித்தும் அதன் ஆழம் குறித்தும் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் அதன் வரலாறு தெரிந்துகொள்வது அவசியம் என்பதை உணர்த்தும் முகமாக கி.மு 298-ஆம் ஆண்டு தொடங்கி 1992-ஆம் ஆண்டு வரையிலான வரலாற்றில் இந்தப் படைப்புக்கு எது தேவையோ அதை தெளிவாகவும் சுறுக்கமாகவும் புத்தகத்தின் ஆசிரியர் கொடுத்திருப்பது இந்தப் படைப்புக்கே உண்டான தனிச் சிறப்பாக அமைந்திருக்கிறது. ஆப்கானின் எந்தச் சூழலிலிருந்து 'லண்டாய்' கவிதை கிடைக்கிறது அல்லது எந்தச் சூழலில் அந்த கவிதை எழுதப்பட்டது என அறியக்கிடைக்கும் போது அந்தக் கவிதையின் மேல் இருக்கும் வாசிப்பு சார் மனநிலையும் மாறுப்படுவதை மறுப்பதற்கு இல்லை. காரணம் 'லண்டாய்' என்பது கவிதையில் இலக்கணத்தையோ, அல்லது கவிதையில் பாகு பிரிப்பதோ அல்ல. அது வாழ்வியலோடு சம்பந்தப்பட்ட உணர்வையும் உரிமையும் சார்ந்த வரிகளாக இருக்கின்றன. தொடக்கத்திலிருந்து நமக்கு தெளிவாகவும் விளக்கமாகவும் விரங்களை திரட்டி தந்திருப்பது சிறந்த ஆவணத்திற்குறிய விடயம் என தாராளமாகச் சொல்லலாம்.
ஆப்கானின் பெண்களுக்கு 30 தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக இந்த புத்தகம் கூறுகிறது. ஒவ்வொன்றையும் வாசிக்கும் போது அபத்தம் அபத்தம் என நம் உள்ளமும் வெடிக்கிறது. 

போர் இருந்தாலும் இல்லையென்றாலும் இறந்து கொண்டும், உயிரிருந்தாலும் உரிமைகள் மறுக்கபட்ட உணர்ச்சிகள் உடுக்கப்பட்ட சடல நிலையில் வாழ்பவர்கள்தான் ஆஃப்கான் நாட்டுப் பெண்கள் என்று ஆர்.விஜயசங்கர் ஓரிடத்தில் குறிப்பிடுகிறார். அந்த இடத்திலிருந்தே நமக்கு 'லண்டாய்' கவிதைகள் அல்லது பாடல்களின் மேல் ஒரு வகை அச்சம் கௌவிக்கொள்கிறது.
குறிப்பாக வீட்டிற்கு வெளியே பெண்களுக்கு வேலை இல்லை என்பதுடன் விளையாடக்கூடாது என்பதும், உடைகளில் வண்ணங்கள் கூடாது என்று கூறுவதும் ஆண் மருத்துவரிடம் சிகிச்சை பெறக்கூடாது எனக்கூறுவதும் எத்தனை அபத்தமான அடுக்குமுறை. இதையெல்லாம் கேள்வி கேட்கும் முகமாக ஆப்கான் பெண்களுக்கு கையில் இருக்கும் ஒரே ஆயுதம் என 'லண்டாய்' பிரயோகிப்படுகிறது. 

நடைமுறை உரிமைகளை வலுப்படுத்தவும், மேலும் தொடரும் ஒடுக்குமுறைக்கு பதிலளிக்கும் வகையில் ஆப்கான் பெண் படைப்பாளிகள் தொடர்ந்து தங்களின் படைப்புகளின் மூலம் கருத்துகளை முன் வைக்கிறார்கள். அதற்காக தங்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லாததையும் அவர்கள் மதிக்கவில்லை. எதற்கும் துணிந்த போராளிகளாகதான் தங்களின் 'லண்டாய்' வரிகளை பாடுகிறார்கள்.

கட்டளையை பிறப்பிக்கும் தலிபான்களிடத்தில் நகப்பூச்சுக்கு விரல்களை பரிகொடுத்த பெண்கள் எங்கும் விரவிக்கிடக்கிறார்கள். ஆனால், வாய்மொழியாக வந்த லண்டாய் வரிகள் கடவுளுக்கே சாபம் விடுகிறது இப்படி...

'கடவுளே நான் சபதமிடுகிறேன்
பெண்களுக்கு எதிரான அநீதியை நீ நிறுத்தும் வரையில்
உன்னை மீண்டும் தொழுவதற்கு கையேந்த மாட்டேன்
நான் உன் குரானைத் தொட மாட்டேன்
உம்மை இறைவா என அழைக்கமாட்டேன்'

'லண்டாய்' என்பதற்கு மெல்ல கொல்லும் விஷமுள்ள சிறு பாம்பு என்றொரு அர்த்தமும் இருக்கிறது. ஒவ்வொரு பாடலும் மனசாட்சி உள்ள ஒவ்வொருவரையும் கொல்லும் விதத்தில்தான் இருக்கிறது.

'கிழவனோடு கலவிச் செய்வது,
கரும்புள்ளிகளைக் கொண்ட நோயுற்று வற்றிய மக்காச்சோளத்தைப் புணர்வது போல'
என்ற வரியும்
'தந்தையே! முதியவன் ஒருவனுக்கு என்னை விற்றுவிட்டாய் 
நான் உன் மகளாய் இருந்ததற்காகக் கடவுள் உன் வீட்டை அழிப்பார்'

என்ற வரியும் அந்த மாதிரியான உணர்வை ஊட்டக்கூடியதுதான். தலிபான்கள் ஆட்சியில் சொந்த வீட்டுப் பெண்களும் அவள் யாராக இருந்தாலும் சந்தேகக் கண் கொண்டுதான் பார்க்கப்படுகிறாள். எந்நேரமும் தம் வீட்டு ஆண்களால் வேவு பார்க்கப்படும் பெண்ணாகத்தான் அவள் இருக்கிறாள்.
பெண்களுக்கான ஒடுக்குமுறை என்பது எல்லா நாடுகளிலும் இருக்கத்தான் செய்கிறது. மலாய் மொழியில் ஓர் உவமை உண்டு. 'Orang dapur' (ஓராங் டப்புர்) அப்படி என்றால் அடுப்படி ஆள். பெண்ணை குறிக்கும் வார்த்தை அது. இஸ்லாமிய நாடான மலேசியாவில் ஆப்கான் நாட்டைக் காட்டிலும் பெரிய ஒடுக்குமுறைகள் இல்லை என்றாலும் உவமைகளில் அவர்களுக்கு கொடுத்திருக்கும் இடம் ஒன்றுதான்.

இந்த 'லண்டாய்' தொகுப்பில் என் வாசிப்பை நிறுத்தி அதிலிருந்து கடக்க முடியாமல் செய்த வரிகள் நிறைய இருக்கின்றன. ஆனால், இந்த வரி அதையும் கடந்து என்னை துன்புறுத்தியது என்று சொல்லலாம்.

'நான் பாலை வனத்தின் டுலிப் மலரைப் போன்றவள்
பூக்கும் முன்பே இறந்து விடுகிறேன்
பாலைவன மணற் சூறைக்காற்று நான் மலரும் முன்பே
என் இதழ்களை உதிர்த்து விடுகிறது'

17 வயது இளம் பெண் மீனா முஸ்காவின் வரிகள் இவை. போரில் உயிர்நீத்த தனது காதலனின் சகோதரனை மணக்க நிர்பந்திக்கும் போது மறுமொழி பேசாதவளாக லண்டாய் வழி தனது நிலைப்பாட்டை தெரிவிக்கிறாள் மிக ரகசியமாக. ஆமாம் அது மிக மிக ரகசியம்தான்.
இவர்களின் இந்த ரகசிய 'லண்டாய்' வரிகளை வானொலிக்காக பதிவு செய்பவர் ஷஹிரா ஷெரிப் என்ற பாராளுமன்றத்தைச் சேர்ந்த பெண். முன்னதாக ஷஹிரா ஷெரிப் 'மிர்மன் பஹீர்' என்ற அமைப்பை தோற்றுவிக்கிறார். அதில் 'லண்டாய்' கவிதைகளை வானோலியின் பதிவு செய்வதற்கு அறிவிக்கிறார். கவிதையை பாட விரும்புகிறவர்கள் தொலைபேசி வாயிலாக இந்த முயற்சியை தன் உயிருக்கு வரும் ஆபத்தையும் பொருட்படுத்தாது துணிகிறார்கள். அவர்களின் பாடல்கள் பதிவு செய்யப்படுகின்றன. சனிக்கிழமைகளில் இவர்கள் கூடி கவிதைகளை பரிமாற்றம் செய்துகொள்கிறார்கள். இந்த சந்திப்பிற்காக வீட்டை விட்டு வெளியே வருவதற்கு அவர்கள் பல பொய்களையும் அவர்கள் சொல்ல வேண்டியிருக்கிறது.

இந்த அமைப்பானது 100 உறுப்பினர்களை காபூலில் கொண்டுள்ளதாகவும், காபூலுக்கு வெளியே 300 உறுப்பினர்கள் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. மிக ரகசியமாக செயல்படும் இந்த அமைப்பு சுமந்திருக்கும் கதைகளும் இழப்புகளும் ஏராளம். மிர்ம பஹீர் அமைப்பின் உறுப்பினரான ஸர்மினாவின் தற்கொலையை விவரிக்கும் போதும், முஸ்காவின் நிலையை கூறும்போதும், 'மிர்மன் பஹீர்' அமைப்பின் தலைவியான எலிசா அங்கு சந்திக்கும் பிரச்னைகளும் அதனூடே செய்யும் பதிவுகளும் நம்மை திகிலுடன் பயணிக்க வைக்கின்றன.
கவிதை வாசிப்புக்கு தயார் நிலையையும், ஒரு நாவலுக்கான தொடக்க நிலையிலும் ஒருவித இழைப்பின்னல்களுக்கு இடையில் இருப்பதை நாம் உணர்வோம்.

'லண்டாய்' இரண்டு வரிகளில் இருபத்திரண்டு அசைகளில் பாடப்படுவதாகவும், இந்த வடிவம் எப்பொழுது தோன்றியது என அறிய முடியாத அளவிற்கு தொன்மை வாய்ந்தது எனவும் காலத்திற்கு ஏற்ப கருத்துகளால் தன்னை மாற்றி வருகிறது எனவும் கூறப்பட்டுள்ளது. ஆனால், பெரும்பாலும் பெண்களால் பாடப்பட்டதால் பெண்ணிய குரலாக அது ஒலிக்கிறது என இந்தப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தனிமை, போர், வீரம், வரலாறு, ஏகாதிபத்திய எதிர்ப்பு, துயரம், அவலம், சமூக பொறுப்புணர்வு, நம்பிக்கை என பல கோணங்களில் 'லண்டாய்' கவிதைகள் எழுதப்பட்டாலும் காமம் குறித்தும் காதல் குறித்து எழுதப்பட்ட கவிதைகள் அதிமுக்கியமானதாகவும், கவனத்திற்கு உட்படுத்தும் வரிகளாகவும் இருக்கின்றன..

நேற்றிரவு வரமுடியாத நீ துரதிஷ்டசாலி
கட்டிலின் உடைந்த மரக்காலை உனக்கு மாற்றாய் பயன் படுத்திக்கொண்டேன்
00
இங்கிருக்கும் எவனொருவனுக்கும் துணிவில்லையா?
என் உள்ளாடைக்குள் தீண்டப்படாது எரிந்து கொண்டிருப்பவற்றைக் காண..
00
நம் சிறுவயதில் நீ ஐஸ்கிரீம் சுவைத்ததைப் பார்த்திருந்த நான்
உன் நாவை சுவைப்பதற்காக மரணத்தை ருசிக்கவும் துணிந்து விட்டேன்
00
வாருங்கள்! இந்த கிராமத்து முட்டாள்களை விட்டுவிட்டு வாருங்கள்
பாலிவுட் சிகையலங்காரம் வைத்திருக்கும் காபூல்காரனைத் திருமணம் செய்வோம்
00
நான் பச்சை குத்தியிருப்பதைக் கத்தியக் கொண்டு வெட்டி எடுத்தாலும்
நான் மறுக்கமாட்டேன், காதல்வயப்பட்டிருக்கிறேன்...

இப்படியாக 'லண்டாய்' கவிதைகளை இந்தத் தொகுப்பில் ச.விஜயலட்சுமி தணிக்கை செய்யாமல் தந்திருக்கிறார். இந்தத் தொகுப்பில் மற்றும் ஒரு கவனத்திற்கு உட்படுத்த வேண்டியதாக, ஆப்கான் பெண்கள் சிலரை குறித்து பிபிசி செய்திகள் தந்திருக்கும் விடயங்கள் இருக்கிறது. அதுவும் மலாலா சோயா எனும் ஆளுமை குறித்தும் தற்கால பெண்களின் நிலை குறித்தும், அங்கு நிலவும் அரசியல் குறித்து பேசியிருப்பதும் எழுத்தாளரின் உழைப்பை காட்டுகிறது. கடமைக்காக ஒரு புத்தகத்தை தயாரிக்காமல், அதன் தேவைக்குறித்தும், முக்கியத்துவம் குறித்தும் பொறுப்போடு எழுதியிருப்பது பாராட்டுக்குறியது. 'லண்டாய்' கவிதைகள் உலகின் தொடர்பு எல்லைக்கு அப்பாற்பட்ட தொடர்புக்கு வைக்கப்படுள்ள ஆப்கான் பெண்களின் உலகத்துடனான ஒரே தொடர்பு என கூறப்படுவது மிகையில்லை.

ஒவ்வொறு கவிதைக்கு பின் உயிர் அச்சுறுத்தல் இருந்தும் ஆப்கான் பெண்களின் எழுத்தும் தைரியமும் மனவெளிப்பாடும் விமர்சிக்கவோ அல்லது கருத்துச் சொல்லவோ வார்த்தைகள் இல்லை எனக்கு. இந்த தொகுப்பில் நிறைவான பல விஷயங்கள் இருந்தாலும், கவிதைகளுக்கான தரவை எங்கிருந்து பெற்றார் என்ற விவரத்தையும் ஆசிரியர் இணைத்திருக்கலாம். மேலும், புத்தகத்திற்கு பயன்படுத்தியிருக்கும் ஓவியங்களில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாமோ என்ற எண்ணம் வந்தாலும், இந்தப் புத்தகத்திற்கு ஓவியங்களும் படங்களும் அத்தனை அவசியமானது என்று சொல்வதற்கு இல்லை. தடாகம் வெளியீடாக வந்திருக்கும் இந்தப் புத்தகத்தின் அட்டைப்படம் சிறப்பான தேர்வு.
கவிதை என்பது ஆயுதம்; கவிஞர் என்பவர் போராளி என வாழும் இந்தப் பெண்களைப் பற்றிய பதிவுகள் வெளியுலகத்திற்கு தெரியாமல் மறைக்கப்பட்டு வருவது பெரும் சோகம். ஆனால் லண்டாயும் மனித வெடிகுண்டுக்கு சமமான ஒன்றுதான் என ஆப்கான் பெண்கள் இன்றும் நிரூபித்து வருகிறார்கள்.


-யோகி
நன்றி
ஆக்காட்டி, அக்டோபர் 2015  மாத இதழ் (பிரான்ஸ்)

1 கருத்து: