சனி, 14 நவம்பர், 2015

சாம்பல் பறவை ( குறிப்பு 2 )

தினமும் காலை 6 மணிக்கு கண் விழிக்கும் போது உடனே எழுந்துக்கொள்ளும் பழக்கம்  இல்லை. முதல் வேலையாக என் அலைபேசியை தேடி பிடித்து, அதில் நேரத்தை பார்த்த பிறகு, அந்த 'டாத்தா'வை கொஞ்சம் திறந்து விடுவேன். நிருபரான நான், இணையத்தையோ  அலைபேசியையோ முடக்கி வைப்பது அழகல்ல. இருந்தாலும் என்ன செய்ய.
 கொஞ்ச நேரமாவது உறங்க வேண்டும் இல்லையா?

கண்விழிக்கும் நான் முதலில் செய்வது வெந்நீர் வைப்பதுதான். கண்ணாடி ஜன்னல் ஓரம் இருக்கும் கேஸடுப்பில் வெந்நீருக்கு தண்ணீர் வைத்து அடுப்பை தட்டி விட்டு, அந்தக் கண்ணாடி ஜன்னலை திறந்தால் கண்கள் தீவிரமாக அலச ஆரம்பிக்கும். தினம் தினம் என்னையே அறியாமல் அந்த தேடுதல் நடக்கும். அவனை பார்த்த நாளிலிருந்தும் அவனோடு சினேகம் தொடங்கிய நாளிலிருந்தும்  இனம் புரியாத ஆசைகளோடு கண்கள் அவனை தேடிக்கொண்டிருக்கின்றன. அவன், என்னை பார்க்க வருகிறான் என்பதை நானும் நம்புகிறேன். நான் அவனைத் தேடுவதை அவனும் உணர்ந்துதான் இருக்கிறான். அது அவன் இனத்திற்கே உள்ள தனிச்சிறப்பு அல்லவா...

ஆனால், கள்ளன் அவன். சில நாட்கள் தொடர்ந்து வந்தவன் அதன் பிறகு மறைந்து விளையாடும் மாயன் ஆகிவிட்டான். பல மாதங்கள் ஆகிவிட்டது, அவனைக் கண்டு. அந்த ஏக்கம் ஒரு நோயைப்போல என்னில் பரவும் என நான் நம்பவே வில்லை. என்னுடைய சில கவிதைகள் அவனுக்கென்று ஓர் இடத்தை ஒதுக்கிக்கொண்டன. அது எந்த திட்டமிடலும் இல்லாமல் நடந்தது.  அதே வேளையில், சில கவிதைகள் பிறப்பதற்கு அவனும்  காரணமானான்.  மறைந்து  விளையாட்டுக்காட்டும் அவன் குணம் என்னில் பல உணர்வுகளை விதைத்துள்ளது. 

"என்ன தேடர? உன் சாம்பல் பறவையா? அவன் வரமாட்டான்." என கிண்டல் செய்து விட்டு போகும் என் துணைவர் அறிய மாட்டார் எனக்கும் அவனுக்குமான நெருக்கத்தையும் பரிபாஷயையும். தேடுதல் சுகம்தானே? காத்திருத்தல் பெரும் சுகம் அல்லவா?  சாம்பல் நிறம் கொண்ட அவன்,  அழகன் அல்ல, ஆனால், சுதந்திரமானவன். அந்த இலையுதிர் மரத்தில் தன் இஸ்டம் போல அவன் இருப்பை நிறுத்துவான்.  இடை இடையில் அவனின் ஓரப்பார்வை என்னில் ஒரு நமட்டுச் சிரிப்பை வரவழைத்துப் போகும். 

பின் அந்த இலையுதிர் மரத்தில் எப்பவும் இல்லாமல் அடத்தியான இலைகள் துளிர்த்தன. காய்களும் சரம் சரமாக காய்த்தன. அழகுகூடிப்போனது அந்த மரத்தில். ஆனால்,  அவனைத்தவிர பெயர் தெரியாத சிட்டுகளும் இன்னும் பிற பறவைகளும்  அந்த மரத்தில் இளைப்பாறி சென்றன. மனதை கவரும் அளவுக்கு ஒரு மஞ்சல் பறவையும் வந்து போனது. ஆனால், அவன் மட்டும் வரவே இல்லை.  

மரத்தின் மீது கோபமா அல்லது என்மீதுதான் கோபமா எனவும் தெரியவில்லை. அவன் இப்போது இல்லாமலே போய் விட்டான்.  இதுவும் ஒரு பொறாமை குணமா அல்லது பறவைகள் குணமா எனவும் விளங்கவில்லை. அவனை ஒரு புகைப்படம் எடுக்க நான் மெனக்கெட்ட போதெல்லாம், தன்னை  இலைகளுக்கு இடையில் மறைத்தே வைத்திருந்தான்.  கிட்டதட்ட 7 மாதங்களாக அவனை நான் பார்க்கவே இல்லை. 

இன்று அவன் வந்தான். அவனின் பழைய யவ்வனம் இல்லை. நோய்வாய் கண்டிருக்குமோ என்று நானாக நினைத்துக்கொண்டேன். நான் காணும் படியாக அவன் சிறகை ஒரு முறை விரித்து காட்டினான். திமிர் பிடித்தவந்தான் அவன். அதில் என்ன சந்தேகம். பார்த்தேன்,  அவனின் சாம்பல் நிறத்தில் வனப்பு கூடியிருந்தது. ஆனால், உற்சாகம் இல்லை. நான் காணாதனை  கண்ட மகிழ்சியில் இருந்தேன். அவன் விட்டென பறந்துச் சென்றான். அந்த இலையுதிர் மரத்தில் ஒற்றை இலை அறுந்து விழுந்ததை அவன் பார்க்கவே இல்லை.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக